முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நா ஸொல்ல வர்றது என்னன்னா...

வார்த்தைகள் நைந்து நார்போலாகிவிட்டது தெரிந்ததே. இதன் காரணமாகவே இவைகளை உபயோகப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகிறது. உணர்த்த விரும்புதையெல்லாம் சொல்லில் அடக்கிவிடுவது எளிதானதாகத் தோன்றவில்லை.

இப்படி முயற்சி செய்து வார்த்தைகளைத் திக்கித் திணறிச் சேர்க்கிறேன். இதிலே ஒவ்வொன்றிலும் என் உழைப்புத் தெரியும். இவ்வார்த்தைக் கோர்வையில் ஒவ்வொரு வார்த்தை மட்டுமன்று, அதனிடையே இடும் மௌனக் கார்வைகளும், விசும்பல்களும், செருமல்களும் கூட எனக்குப் பொன் போன்றவை. அவைகளின் மூலம் நான் ஊடாடுகிறேன். எனக்கு இந்த ஊடாடல் அவசியம். இந்தச் செருமல்களை, விசும்பல்களை வெற்றை இட்டு நிரப்பும் நோக்கிலன்றி, என்னை உணர்த்தும் நோக்கிலே கவனமாகச் சேர்த்திருக்கிறேன். வார்தைகளால் சொல்லமுடியாததை இப்படிச் சொல்லவேண்டியுள்ளது. இவைகளையெல்லாம் கொண்டு நான் உணர்த்த வருவதை நீ புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். இந்த அவசியம் பொருட்டே, எனது கவனமும், உழைப்பும், வலியும்.

நீயோ, நான் இறுதியாக என்ன சொல்ல வருகிறேன் என்று அறிய விரும்புகிறாய். இது எனக்கு மிகுந்த அயர்ச்சியைத் தருகிறது.

என் வார்த்தைகளும், வார்தைகள் அல்லாதவையும் உணர்த்த முடியாததை ஒரேயொரு இறுதியான ஒற்றை வரியில் சொல்ல முடியும் என்று உனக்குத் தோன்றுகிறதா?

ஆயின், வார்த்தைகளை விரயம் செய்யாமலிருப்பது எப்படி என்று நீ எனக்குக் கற்றுத் தர வேண்டும்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

'அருமையாக இருக்கிறது' என்று வழமையான, கீறல் விழுந்த, தட்டையான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. :(

இடுகை முழுவதும் அப்படியே மனதில் இறங்கிவிட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ப்ளொக்கர் பீட்டாவுக்கு மாறிட்டீங்க போலிருக்கு. தமிழ்மணம் பதிவர் toolbar இடுவதற்கு உதவும் சுட்டி

http://blog.thamizmanam.com/archives/51

இந்த இடுகையை, புத்தகவாசத்துக்காக இங்க வந்தப்ப பார்த்தேன். இல்லைன்னா, அந்த வாசிப்பு அனுபவம் கிடைக்காமப்போயிருக்கும். :(
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மதி,

உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.

அப்புறம், நீங்கள் கொடுத்த சுட்டியைப் பார்த்து வேண்டிய மாற்றங்களைச் செய்துவிடுகிறேன்.

புத்தகவாசத்தில் என் இடுகைகளை இட்டமைக்கும் நன்றி :-)