முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அளிவேணி



அளிவேணி (கருவண்டுகள் மொய்த்தாற்போலத் தோன்றும் கருஞ்சுருள்க் குழலாள்) - இவள் என் மனதுக்கு நெருக்கமானவள் - சுவாதித்திருநாள் இராம வர்மாவின் பல பதங்களில் உலாவருகிறாள். இவள் குழல் அடர்கரியநிறத்தது; கருவண்டுகளின் பொலிவிலானது. அல்லது, நான் கற்பனை செய்வது போல கருவண்டுக் கூட்டம் மொய்த்தாற்போலக் காணும் - அவளது சுருண்ட மயிர்கொண்ட நீள்குழல். அவள் அன்புருவானவள்,எழில் வடிவினள் கூட! ஆகவேதான் காதற்றலைவி அவளையே எப்போதும் நாடுகிறாள், தன் வருத்தம் சொல்ல. பாங்கி புவியளவு பொறையுள்ளவள், அன்புடனே எப்போதும் செவிசாய்க்கிறாள். அவள் தலைவியின் மரியாதைக்குரியவள் - மானினி, மேதகி

இன்றும் விசனத்தோடே முறையிடுகிறாள். அந்தத் தாமரைக்கண்ணன் இவளைத் தவிக்கவிடுவதில் கிறக்கம் கொள்கிறான். ஒருவேளை இவள் தேன்மொழியாள், தன் தவிப்பை அழகான பாடலாக்குவதில் வல்லவள் என்பதால் இருக்கக்கூடும்.

“அளிவேணீ எந்து செய்வு? ஹந்த ஞானினி, மானிநி!
நளினமிழி ஸ்ரீ பத்மநாபன் இஹ வந்நீல்லல்லோ!!

இந்து உதயாம் நிசயும், இந்திந்திரா விராவவும்

மந்த மாருதனும், சாரு மலயஜா லேபனவும்

குந்த ஜாதி சுமங்களும், கோமளாங்கி, சகி - த்ரிலோக

சுந்தரன் வராஞ்ஞால், ஐயே, சொல்க, கிம்மே ப்ரயோஜனம்?”


இனியதோர் மங்கிய மாலைப்பொழுது, பால்நிலாப் பொழியக் காத்திருக்கிறது. இது “இந்து உதயாம் நிச”! பெரிய வண்டுகளின் (இந்திந்திரா) ரீங்காரம் (விராவம்) மட்டுமே கேட்கிறது. இளந்தென்றல் (மந்தமாருதம்) வீசுகிறது, அது மலையிலிருந்து சந்தன மரங்களின் மணத்தைச் (சாரு மலயஜாலேபனம்) சுமந்து வருகிறது - இங்கே முல்லை வகையினான பூக்ககளை (குந்த ஜாதி சுமங்கள்) அது தழுவிக்கொள்ளுகிறது.

இப்படி மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும் அமைதியும் தரும் சூழல்! என்னே இனிமை, என்னே மேன்மை!

என்னவிருந்தும் என் அழகுமேனியளே, பாங்கி, (கோமளாங்கி சகி) மூவுலகிற்கும் பேரழகன் (த்ரிலோக சுந்தரன்) வரவில்லலையானால் இவற்றினால் என்ன பயன் சொல்லு? (சொல்க, கிம்மே ப்ரயோஜனம்)


தமிழல்லாத மற்ற தென்னிந்திய மொழிகளில் ஊடாடுவதற்கு வடமொழி அறிவு பெரிதும் பயன்படும். ஒரு பொருளுக்கு நிகரான மலையாள மொழிச்சொல் தெரியவில்லையானால் தயங்கமால் அதற்கான வடமொழிச்சொல்லைப் பயன்படுத்தலாம். அது அங்கே சற்றும் நெருடலின்றிப் பொருந்தும். சுவாதியின் மொழி அத்தகைய மணிப்பிரவாளமானது. 

இப்பாடலின் சரணத்தில் வரும் பொருட்களை வடமொழியில் குறிப்பிட்டு, (தமிழ் போன்ற) மலையாள விகுதிகளால் நிறைவு செய்கிறார். எடுத்துக்காட்டாக,நிசா என்பது இரவைக்குறிக்கும் சொல். இந்து உதயாம் நிசயும் - என்று நிலவு உதிக்கும் இரவை உம் விகுதி சேர்த்து மலையாளமாக்குகிறார். அதேபோல சுமா என்பது மலர் - சுமங்களும் என்ற பன்மை விகுதி சேர்த்து மலர்களும் என்று  பாடுகிறார். எந்த மொழியும் தன்னளவில் நிகரற்ற அழகுள்ளது. சுமா, நிசா, இந்திந்திரா, என்ற சொற்கள் (தன்னளவில் மயக்கும் தன்மை கொண்டிருந்தாலும்) தம் தோற்றுமொழியினின்றும் விலகி இந்தவிகுதிகளால் நமக்கு நெருங்கியதாகிறது, நமதாகிப்போகிறது. 

இதற்கப்புறம்தான் இசை.

குறிஞ்சி என்ற இராகத்தில் இதற்கு மெட்டமைத்திருக்கிறார்கள். இதன் குழைவு பாடலின் பொருளுக்கு மிகப் பொருந்திவருகிறது. இரவும் பகலும் கலக்கும் பொழுதை இசையால் உணர்த்துகிறது -  'இந்து உதயாம் நிசயும்' . 'இந்திந்திரா விராவவும்' என்று வண்டுகளாய் ரீங்கரிக்கிறது. 'மந்த மாருதமாக' இதமாக வருடிக்கொடுக்கிறது. இயல்பான நெகிழ்வுத்தன்மையுடைய இது தேர்ந்த பாடகர்கள் குரலில் தேனாய்க் கரைகிறது. இந்தப்பாடலைத் தனதாக்கிக்கொண்டவர் இந்தத் தங்கக்குரலுக்குச்  சொந்தக்காரர்:



இதன் இசைத்தன்மை கெடாமல் சீர்சீராகத் (நார் நாராய்க் கிழித்தல் என்பது சந்தர்ப்பவசமாக நினைவுக்கு வருகிறது) தமிழில் மொழிபெயர்க்கும் ஆசை (கழுத்தை நெரிக்கும் அலுவலக வேலைப் பளுவிற்கு மத்தியில்) நிறைவேறியது:

அளிகுழலி  என்செய்வேன், அந்தோ நானினி - மேதகி!

முளரிவிழி பதும நாபன்  இன்னும் வரவில்லை அரோ!!


மிளிர் திங்கள் பொழியும் நிசியும், முரல் சோலை வண்டினங்களும்,
குளிர் மலைத் தென்றலும், நறுசெந் சந்தன விழுதும்,

கொடி முல்லைப்  பூவினங்களும், எழிலோய் பாங்கி - என் 
வடிவழகன் வராவிடில், ஐயே, என்னே பயன்கொல்?

சமையலில் கிள்ளிப்போட்ட கறிவேப்பிலை மணம் கையில் ஒட்டிக்கொள்வதைப்போல, கேட்டுமுடித்தும் இப்பாடல் வரிகளும், மொழியும், இசையும் கலந்தவொரு உணர்ச்சியாக மனதில் ஒட்டிக்கொள்ளுகிறது. குரங்குமனம் அதைப்பிடித்துத் தொங்குகிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க