முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அளிவேணி



அளிவேணி (கருவண்டுகள் மொய்த்தாற்போலத் தோன்றும் கருஞ்சுருள்க் குழலாள்) - இவள் என் மனதுக்கு நெருக்கமானவள் - சுவாதித்திருநாள் இராம வர்மாவின் பல பதங்களில் உலாவருகிறாள். இவள் குழல் அடர்கரியநிறத்தது; கருவண்டுகளின் பொலிவிலானது. அல்லது, நான் கற்பனை செய்வது போல கருவண்டுக் கூட்டம் மொய்த்தாற்போலக் காணும் - அவளது சுருண்ட மயிர்கொண்ட நீள்குழல். அவள் அன்புருவானவள்,எழில் வடிவினள் கூட! ஆகவேதான் காதற்றலைவி அவளையே எப்போதும் நாடுகிறாள், தன் வருத்தம் சொல்ல. பாங்கி புவியளவு பொறையுள்ளவள், அன்புடனே எப்போதும் செவிசாய்க்கிறாள். அவள் தலைவியின் மரியாதைக்குரியவள் - மாநினி, மேதகி

இன்றும் விசனத்தோடே முறையிடுகிறாள். அந்தத் தாமரைக்கண்ணன் இவளைத் தவிக்கவிடுவதில் கிறக்கம் கொள்கிறான். ஒருவேளை இவள் தேன்மொழியாள், தன் தவிப்பை அழகான பாடலாக்குவதில் வல்லவள் என்பதால் இருக்கக்கூடும்.

“அளிவேணீ எந்து செய்வு? ஹந்த ஞானினி, மாநினி!
நளினமிழி ஸ்ரீ பத்மநாபன் இஹ வந்நீல்லல்லோ!!

இந்து உதயாம் நிசயும், இந்திந்திரா விராவவும்

மந்த மாருதனும், சாரு மலயஜா லேபனவும்

குந்த ஜாதி சுமங்களும், கோமளாங்கி, சகி - த்ரிலோக

சுந்தரன் வராஞ்ஞால், ஐயே, சொல்க, கிம்மே ப்ரயோஜனம்?”


இனியதோர் மங்கிய மாலைப்பொழுது, பால்நிலாப் பொழியக் காத்திருக்கிறது. இது “இந்து உதயாம் நிச”! பெரிய வண்டுகளின் (இந்திந்திரா) ரீங்காரம் (விராவம்) மட்டுமே கேட்கிறது. இளந்தென்றல் (மந்தமாருதம்) வீசுகிறது, அது மலையிலிருந்து சந்தன மரங்களின் மணத்தைச் (சாரு மலயஜாலேபனம்) சுமந்து வருகிறது - இங்கே முல்லை வகையினான பூக்ககளை (குந்த ஜாதி சுமங்கள்) அது தழுவிக்கொள்ளுகிறது.

இப்படி மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும் அமைதியும் தரும் சூழல்! என்னே இனிமை, என்னே மேன்மை!

என்னவிருந்தும் என் அழகுமேனியளே, பாங்கி, (கோமளாங்கி சகி) மூவுலகிற்கும் பேரழகன் (த்ரிலோக சுந்தரன்) வரவில்லலையானால் இவற்றினால் என்ன பயன் சொல்லு? (சொல்க, கிம்மே ப்ரயோஜனம்)


தமிழல்லாத மற்ற தென்னிந்திய மொழிகளில் ஊடாடுவதற்கு வடமொழி அறிவு பெரிதும் பயன்படும். ஒரு பொருளுக்கு நிகரான மலையாள மொழிச்சொல் தெரியவில்லையானால் தயங்கமால் அதற்கான வடமொழிச்சொல்லைப் பயன்படுத்தலாம். அது அங்கே சற்றும் நெருடலின்றிப் பொருந்தும். சுவாதியின் மொழி அத்தகைய மணிப்பிரவாளமானது. 

இப்பாடலின் சரணத்தில் வரும் பொருட்களை வடமொழியில் குறிப்பிட்டு, (தமிழ் போன்ற) மலையாள விகுதிகளால் நிறைவு செய்கிறார். எடுத்துக்காட்டாக,நிசா என்பது இரவைக்குறிக்கும் சொல். இந்து உதயாம் நிசயும் - என்று நிலவு உதிக்கும் இரவை உம் விகுதி சேர்த்து மலையாளமாக்குகிறார். அதேபோல சுமா என்பது மலர் - சுமங்களும் என்ற பன்மை விகுதி சேர்த்து மலர்களும் என்று  பாடுகிறார். எந்த மொழியும் தன்னளவில் நிகரற்ற அழகுள்ளது. சுமா, நிசா, இந்திந்திரா, என்ற சொற்கள் (தன்னளவில் மயக்கும் தன்மை கொண்டிருந்தாலும்) தம் தோற்றுமொழியினின்றும் விலகி இந்தவிகுதிகளால் நமக்கு நெருங்கியதாகிறது, நமதாகிப்போகிறது. 

இதற்கப்புறம்தான் இசை.

குறிஞ்சி என்ற இராகத்தில் இதற்கு மெட்டமைத்திருக்கிறார்கள். இதன் குழைவு பாடலின் பொருளுக்கு மிகப் பொருந்திவருகிறது. இரவும் பகலும் கலக்கும் பொழுதை இசையால் உணர்த்துகிறது -  'இந்து உதயாம் நிசயும்' . 'இந்திந்திரா விராவவும்' என்று வண்டுகளாய் ரீங்கரிக்கிறது. 'மந்த மாருதமாக' இதமாக வருடிக்கொடுக்கிறது. இயல்பான நெகிழ்வுத்தன்மையுடைய இது தேர்ந்த பாடகர்கள் குரலில் தேனாய்க் கரைகிறது. இந்தப்பாடலைத் தனதாக்கிக்கொண்டவர் இந்தத் தங்கக்குரலுக்குச்  சொந்தக்காரர்:



இதன் இசைத்தன்மை கெடாமல் சீர்சீராகத் (நார் நாராய்க் கிழித்தல் என்பது சந்தர்ப்பவசமாக நினைவுக்கு வருகிறது) தமிழில் மொழிபெயர்க்கும் ஆசை (கழுத்தை நெரிக்கும் அலுவலக வேலைப் பளுவிற்கு மத்தியில்) நிறைவேறியது:

அளிகுழலி  என்செய்வேன், அந்தோ நானினி - மேதகி!

முளரிவிழி பதும நாபன்  இன்னும் வரவில்லை அரோ!!


மிளிர் திங்கள் பொழியும் நிசியும், முரல் சோலை வண்டினங்களும்,
குளிர் மலைத் தென்றலும், நறுசெந் சந்தன விழுதும்,

கொடி முல்லைப்  பூவினங்களும், எழிலோய் பாங்கி - என் 
வடிவழகன் வராவிடில், ஐயே, என்னே பயன்கொல்?

சமையலில் கிள்ளிப்போட்ட கறிவேப்பிலை மணம் கையில் ஒட்டிக்கொள்வதைப்போல, கேட்டுமுடித்தும் இப்பாடல் வரிகளும், மொழியும், இசையும் கலந்தவொரு உணர்ச்சியாக மனதில் ஒட்டிக்கொள்ளுகிறது. குரங்குமனம் அதைப்பிடித்துத் தொங்குகிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...