ஒருதலைராகம் வந்த நேரம் (கோவை கீதாலையா தியேட்டரில் 450 நாள் ஓடியது - அதனால், வந்த வருடம் என்று சொல்லவேண்டும்) படுத்த வாக்கில் இருக்கும் ஒலிநாடாக் கருவியை எங்கள் குடும்ப நண்பரொருவர் இரவல் தந்திருந்தார். கூடவே கொஞ்சம் நாடாக்களும் - அதிலே 60 நிமிடம் ஓடக்கூடிய நாடாவொன்றில் ஒன்றேகால் பக்கம் ஒருதலைராகம் பாடல்கள். மீதி முக்கால் பக்கத்தில் ஒருதலைராகம் நாயகன் சங்கர் நடித்து (பாசில் முதலில் இயக்கி, மோகன்லால் அறிமுகம் பெற்ற) பாடல்கள் பிரபலமடைந்த மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் பாடல்களைப் ‘பதிவு’ செய்திருந்தார்.
இரண்டுவார இரவலில் நாள்முழுதும் அதே நாடாவை தேய்த்திருக்கிறேன். வாசமில்லா மலரிது, ரீனா மீனா, கூடையில கருவாடு, குழந்தைபாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோவிலிலே, நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது என்று நாடாவில் வந்தபடி வரிசைக்கிரமமாகப் பாடுவேன் ("ஏண்டா உனக்கு வாயே வலிக்காதா?”). தொடரும் மலையாளப்பாட்டுகளை மனப்பாடம் செய்ய முடியவில்லை (மொழி அப்போது வசப்படவில்லை). ஆனால் மெட்டுகள் மனத்தில் அப்படியே தங்கிவிட்டன.
இன்றைக்கு ஏசியாநெட்டில் ஒரு நிகழ்ச்சியில் சங்கர். பழைய நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் "மஞ்சாடிக் குன்னில்" என்ற பாடலை இசைத்தனர். போத்தனூர், புளியமரத்தடி, கிரிக்கெட், செட்டிபாளையம் ரோட்டில் சாணி அள்ளியது, கோவில் வாசலில் சிதறுகாய் பொறுக்கியது, ஊர்க்கொட்டகை சினிமாவுக்காக ஒலிபெருக்கியுடன் வலம்வந்த குதிரை வண்டியின் பின்னாலே கோமண நீளமான நோட்டீசைப் பொறுக்க ஓடியது என்று பல அந்தக்கால நினைவுகள் வந்து மனத்திரையில் ஓடினாலும் இப்போது புரட்டிப்போட்டது யேசுதாசின் குரலும் பாடலின் இசையும்.
இப்படத்திற்கு (மஞ்ஞில் வி பூ) ஜெரி அமல்தேவ் (அறிமுகம்) இசையமைத்திருக்கிறார். எல்லாம் இரசிக்கும்படியான பாடல்கள். இப்போது விடுபட முடியாமல் இந்தப்பாட்டு 'லூப்'பில்:
ஜெரி அமல்தேவின் நௌஷாதிடம் internship செய்திருக்கிறார். (அப்போதைய) பம்பாயின் பாந்த்ரா கடற்கரைச் சாலையில் நடக்கப்போய் முன்னேற்பாடில்லாமல் நௌஷாத் வீட்டைக் கண்டுபிடித்ததை ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தின்போது சொன்னார் ஜெரி.
அந்த இரண்டு பாடல்கள்:
கருத்துகள்