முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெரி அமல்தேவ் - "மலரும் நினைவுகள்"

ஒருதலைராகம் வந்த நேரம் (கோவை கீதாலையா தியேட்டரில் 450 நாள் ஓடியது - அதனால், வந்த வருடம் என்று சொல்லவேண்டும்) படுத்த வாக்கில் இருக்கும் ஒலிநாடாக் கருவியை எங்கள் குடும்ப நண்பரொருவர் இரவல் தந்திருந்தார். கூடவே கொஞ்சம் நாடாக்களும் - அதிலே 60 நிமிடம் ஓடக்கூடிய நாடாவொன்றில் ஒன்றேகால் பக்கம் ஒருதலைராகம் பாடல்கள். மீதி முக்கால் பக்கத்தில் ஒருதலைராகம் நாயகன் சங்கர் நடித்து (பாசில் முதலில் இயக்கி, மோகன்லால் அறிமுகம் பெற்ற) பாடல்கள் பிரபலமடைந்த மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் பாடல்களைப் ‘பதிவு’ செய்திருந்தார்.

இரண்டுவார இரவலில் நாள்முழுதும் அதே நாடாவை தேய்த்திருக்கிறேன். வாசமில்லா மலரிது, ரீனா மீனா, கூடையில கருவாடு, குழந்தைபாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோவிலிலே, நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது என்று நாடாவில் வந்தபடி வரிசைக்கிரமமாகப் பாடுவேன் ("ஏண்டா உனக்கு வாயே வலிக்காதா?”). தொடரும் மலையாளப்பாட்டுகளை மனப்பாடம் செய்ய முடியவில்லை (மொழி அப்போது வசப்படவில்லை). ஆனால் மெட்டுகள் மனத்தில் அப்படியே தங்கிவிட்டன.

இன்றைக்கு ஏசியாநெட்டில் ஒரு நிகழ்ச்சியில் சங்கர். பழைய நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் "மஞ்சாடிக் குன்னில்" என்ற பாடலை இசைத்தனர். போத்தனூர், புளியமரத்தடி, கிரிக்கெட், செட்டிபாளையம் ரோட்டில் சாணி அள்ளியது, கோவில் வாசலில் சிதறுகாய் பொறுக்கியது, ஊர்க்கொட்டகை சினிமாவுக்காக ஒலிபெருக்கியுடன் வலம்வந்த குதிரை வண்டியின் பின்னாலே கோமண நீளமான நோட்டீசைப் பொறுக்க ஓடியது என்று பல அந்தக்கால நினைவுகள் வந்து மனத்திரையில் ஓடினாலும் இப்போது புரட்டிப்போட்டது யேசுதாசின் குரலும் பாடலின் இசையும். 

இப்படத்திற்கு (மஞ்ஞில் வி பூ) ஜெரி அமல்தேவ் (அறிமுகம்) இசையமைத்திருக்கிறார். எல்லாம் இரசிக்கும்படியான பாடல்கள். இப்போது விடுபட முடியாமல் இந்தப்பாட்டு 'லூப்'பில்:





ஜெரி அமல்தேவின் நௌஷாதிடம் internship செய்திருக்கிறார். (அப்போதைய) பம்பாயின் பாந்த்ரா கடற்கரைச் சாலையில் நடக்கப்போய் முன்னேற்பாடில்லாமல் நௌஷாத் வீட்டைக் கண்டுபிடித்ததை ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தின்போது சொன்னார் ஜெரி.  

இதை அறிந்த பிறகு ஜெரி (மஞ்ஞில் வி பூ - 1980)  மற்றும் நௌஷாத் (த்வனி - 1988) வெவ்வேறு காலகட்டத்தில் செய்த  இரு மலையாளப் பாடல்களின் ஒற்றுமையைக் கவனிக்கமுடிந்தது.  ஒற்றுமை என்று நான் சொல்லுவது மெட்டைக் குறித்த(மட்டும்)ல்ல - வாத்தியங்களின் தெரிவு மற்றும் வாத்தியச் சேர்க்கையில் (music arrangement) நௌஷாத்தின் நேர்த்தியை ஜெரி சரியாகக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்றுதான் கொள்ளவேண்டும். நௌஷாத்துடன் த்வனியில் ஜெரியே பணியாற்றியிருக்க வாய்ப்புள்ளது. ஜெரி சிறு வயது முதல் தேவாலயத்தின் சேர்ந்திசையைப் பாடி வந்தவர்; முறைப்படி இந்துஸ்தானி இசை பயின்றவர்; மேற்கத்திய இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அந்தக் கலவை உருசிகரமானது!

அந்த இரண்டு பாடல்கள்:




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...