முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash


கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார்.


அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது. 


உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?" 


அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!"


வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?" 


மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு)


"இதையெல்லாம் சேர்த்து இத்தன பெரிய ஒண்ணா வாங்கிக்கோ" என்று ஆசிரியர் அவன் கையில் ஆறு அடி கொடுத்தார்.


---


வாழ்க்கையின் ஆரம்பங்கள் ரம்மியமாய் இருப்பதன் காரணம் சலனமற்ற வெள்ளை மனதின் இந்தக் கற்பனை தானே? மனதில் மலரும் ஆயிரம் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும்  ஆயிரம் பதில்களும் இருந்தன. குழந்தைகளுக்கு இன்னும் இருக்கின்றன. அந்த சாத்தியங்களை எல்லாம் வயதும், 'பக்குவமும்' பாழடித்து விடுகின்றன. 'அலகிலா விளையாட்டின்' களிப்பிடமாக இருக்கும் உலகம் சுருங்கிச் சுருங்கி சொற்களை நெருக்கும் அடைசலான அறையாக ஆகிவிடுகின்றது. 


மஜீதும் சுஹராவும் இருக்கும் உலகம் எவ்வளவு விசாலமானது! அங்கே ஒன்றும் ஒன்றும், இன்னும் பலவும் ஒன்றேயாக இருக்கும் சாத்தியம் இன்னுமிருக்கிறது. பஷீரின் இன்னொரு கதையில் கெட்டியோன் குருவி, கெட்டியோள் குருவியைக் கொத்தப்போகிறது. அப்போது ஆட்சேபம் தெரிவிக்கும் பூனையிடம் குஞ்ஞுப்பாத்திமா என்கிற இன்னொரு பத்து வயதுக்காரி அலுத்துக்கொள்ளுகிறாள்: "சொன்னாக் கேக்காது, பாரு". 


மொழி மனிதர்களுக்கே (அதிலும், ஆண்களுக்கே) ஆனது என்று அவள் வயதான பின்னால் தெரிந்து கொள்வாள், ஆனால் அவள் வயதில் குருவிகளும், பூனைகளும், மரங்களும் செடிகளும் மலையாளம் பேசும்.


இதுபோல் பேசும், உயிருள்ள உலகை நினைக்கும்போது, பாரதியையும் நினைத்துக்கொள்கிறேன். அவன் ஒரு துண்டுக்கயிற்றிடம் பேசியவன்.


மனிதர்களிடம் இந்தக் குழந்தை மனது எப்போதும் இருந்தாலும், அது அடக்கிவைக்கப்பட்டிருப்பதால் நமக்குத் தெரிவதில்லை. பாரதியிடம் அது அடக்கப்படாமலேயே இருந்திருக்கவேண்டும்.


"ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக்கயிறு

தொங்குகிறது.

ஒரு சாண்கயிறு.

இந்தக் கயிறு, ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.

பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும்.

கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை. ‘குஷால்’ வழியிலிருந்தது.

எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள்

அடிக்கடி வார்த்தைசொல்லிக்கொள்வதுண்டு.

“கயிற்றினிடத்தில் பேசினால், அது மறுமொழி சொல்லுமா?”

பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை." 


இவையெல்லாம்  'உம்மிணி பலிய ஒன்னு' என்ற பெரிய ஒன்றான உலகத்தின் நிதர்சனங்கள். 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...