முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது.


சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்…

உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது.

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை கொடுமையானது. அதைவிடக் கொடுமையானது நோய். இவற்றின் வலிகளைப் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. உறவுகளாலும் நட்பாலும் எந்நேரமும் சூழப்பட்டிருந்தாலும் துன்பத்தருணங்களில் தனித்தே உழல வேண்டியிருக்கிறது. ஆனாலும் மனித உறவுகளால் சில நேரம் மனது திடம் கொள்ளுகிறது. வாழ்க்கை சாவில் எப்போதும் முடிந்துவிடும் நிலையற்ற தன்மை இருந்தாலும், நோய்வாய்ப்படும் உடல் என்கிற சுமையை வைத்துக்கொண்டு, சொற்பமாகவே நிகழும் மகிழ்ச்சித் தருணங்களுக்கான நம்பிக்கையில் வாழ்வு உழல்கிறது. நல்ல நட்பினாலும் சில உறவுகளினாலும் இந்த அற்ப வாழ்வின் மீது பிடிப்பு ஏற்படுகின்றது.

“இன்னும் எத்தனை காலம் இந்த வண்டி ஓடும்?” என்பது, “வண்டி இந்த ஸ்டேஷன்ல எவ்வளவு நேரம் நிற்கும்?” என்பது போன்ற சாதாரண FAQ போல மனதில் நிற்கிறது.

 — -
அந்த அறையில் எங்கும் சிதறிக்கிடந்த காகிதங்களிலிருந்தே மீண்டும் நகுலனிடம் திரும்பினேன்.

நகுலனின் கவிதைகள் தவிர்த்த, கதை, கட்டுரைத் தொகுப்புகளை வாங்கிப்படித்திருக்கிறேன். “இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு” என்று இங்கிருந்து எப்படி எழுதவருகிறது என்று தோன்ற, அந்தக் கவிதையை இணையத்தில் தேடினேன். அகப்பட்டது எஸ். ராமகிருஷ்ணனின் பதிவொன்று: “நகுலனின் பத்துக்கவிதைகள்”. 

இதுவே கவிதை:

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

 — -

அந்தப் படத்தின் தனிமை மற்றும் துயர உணர்வுகளிலிருந்து விடுபட, இயல்பாகவே அவரது பிரதிகளில் தஞ்சம் புகுந்து ஒரு கட்டுரையை வாசித்தேன். 




இப்போது சில ஆண்டுகளாக ஆங்கிலக் கவிதைகளை அணுக்க வாசிப்பு (close reading) செய்யும் உத்தியைக் கற்று வருகிறேன். நகுலனின் தமிழ்க்கவிதை வாசிப்பும் அந்த close reading முறையிலேயே அமைந்துள்ளது என்பதைப் பரவசத்தோடு உணர்ந்தேன். நவீன தமிழ்க்கவிதையின் சில முன்னோர்கள் ஆங்கிலக் கவிதை வாசிப்பு வழியாகவும், ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்த அனுபவத்தின் வழியாகவும், தமிழில் புதிய வடிவங்களைத் தேடியது தற்செயல் அல்ல. இவ்வடிவம் தமிழில் வலுப்பெற்றதற்கு ஆங்கிலக் கவிதை வாசிப்பும் ஒரு முக்கிய வழியாக இருந்ததென்பதால் அதன் வாசிப்பு அணுகுமுறையும் அதே வழியில் இருப்பதில் வியப்பில்லை.

இதற்கு உதாரணமாக இந்தக் கட்டுரை (திரைச்சொட்டு இணைப்பில்). கவிதையில் ஒலியைக் கவனிப்பதும், ஒலி குறித்து எப்போதும் எழுதுவதும், இந்த அணுகலின் வெளிப்பாடு. ‘மழுது’, ‘மது’ என்று சீர் பிரிக்காத வெண்பாவைப் படிப்பதும் அதே அணுகுமுறைதான். இதைத் தெரிந்தே செய்தால் தமிழ்க்கவிதையின் செய்நேர்த்தி எப்படி மெருகூட்டப்படும்? “வடிவமே பொருளாக” என்ற உத்தியை இதனுடன் சேர்த்தால்? எப்படியானாலும், இப்படியான வாசிப்பு இன்னும் உவகை தருவதே. 

என் அவதானிப்பு என்னவென்றால், ஒலி என்பது கவிதையில் எவ்வாறு இயங்குகிறது என்று கவனிப்பது நவீன ஆங்கிலக் கவிதையின் வரையறுக்கும் அணுகுமுறைகளில் ஒன்று. ஆனால் நவீனத் தமிழின் ‘புதுக்கவிதை’ இதற்கு முற்றிலும் எதிரானதாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் நீங்கள் ஒரு சிற்றிதழ் எழுத்தாளராக இருந்திருந்தால், மரபார்ந்த தாளமும் தொடையும் இன்றும் பயன்படுத்தப்படும் நாடகப் பேச்சை நீங்கள் கவனமாகத் தவிர்க்க வேண்டியிருந்தது. ஏனெனில் தீவிர இலக்கிய வட்டங்களில் அது “மேடைக் கவிதை” என்றும் மலிவானது என்றும் பார்க்கப்பட்டது.

ஆனால் நகுலன், ஒரு கவிஞராகவும் விமர்சகராகவும், இந்த மேற்கத்திய நுண்ணுணர்வுகளைப் பயன்படுத்தி, அவற்றை பிரக்ஞைபூர்வமாகத் திருத்தி அகற்றும் தமிழ்க் கவிதைகளில்கூட ஒலியின் அம்சங்களைத் தேடுகிறார்.

நகுலன் போல அதைச் (அந்த வாசிப்பை) செய்தவர்களைக் கண்டதில்லை (இதைச் சொல்லுவது என் மிகவும் சொற்பமான வாசிப்பிலிருந்தே என்பதைச் சிட்டிகை உப்பாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தோற்றோர், நேசிப்போர், வெல்வோர்

  எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது! வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன். பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே. John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம். இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...