முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறே புஸ்தகங்ஙள், ச்சில ரிக்காடுகள், குறச்சு கள்ளு - ஒரு ஸாயான்னம்!


பக்கத்துவீட்டு மலையாளி நண்பர் நூல் வெறியர். பிடித்த நூலாசிரியரின் படைப்புகளையெல்லாம் தேடித்தேடி வாங்கிப் படித்துவிடுவார். அதிலும் தாட்டியான உறைப் பதிப்புகளை (Hard cover edition) வாங்கிச்சேர்ப்பவர். அப்படியான சேமிப்புகளில் அண்மைக்காலமாக பழைய வைனைல் ரெக்கார்டுகளை வாங்கிச்சேர்க்க ஆரம்பித்திருக்கிறார். 

ஒரு மாலை நேரம் அவர் வீட்டுக்கு பியருடன் புத்தகங்களை வேடிக்கை பார்க்கவென நானே கேட்டு அழைப்பு வாங்கிக்கொண்டேன். போனதற்கு உடனே ஒரு .பி. சிங்கரின் புத்தகம் இனாமாகக் கிட்டியது (அதே புத்தகத்தின் ஹார்டு கவர் பதிப்பை அவர் வாங்கிவிட்டார்). லேசில், இல்லை, எப்படியானாலும் புத்தகங்களை இரவல் தருவதில்லை என்றும், பழைய புத்தகங்களை வாங்கிய பழைய புத்தகக் கடையிலேயே திரும்ப விற்றுவிடுவது என்றும் கறாராக இருப்பவரிடமிருந்து வந்த புத்தகம் அரியதுதான். அன்றைய புதிய அறிமுகமாக The Limerick என்ற புத்தகத்தை கல்கத்தாவில் பழைய புத்தகக் கடையில் வாங்கியதையும், அங்கிருந்து வரும் வழியில் சிலர் அதைப்பற்றி விசாரித்ததையும் சொன்னார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அதுகாறும் பிரசுரமாயிருந்த லிமரிக்குகளின் தொகுப்பு அது. அதன் தொகுப்பாசிரியரான Legman எழுதிய Rationale of the dirty joke என்ற கடின அட்டைப் புத்தகங்களையும் ( இரண்டு தொகுதிகள்) காட்டினார். 

இரண்டாவது பியருக்கப்புறம் பேச்சு இசையில் போய் முடிய, அவர் படுக்கையறையில் நுழைந்துவிட்டேன். அங்கேதான் 33 மற்றும் 45 ஆர்பிஎம் களில் ஓடக்கூடிய (இரண்டையும் சேர்த்து வைத்தால் 78 ஆம்) ரெக்கார்ட் பிளேயரை குழந்தை மாதிரிப் போர்த்தி வைத்திருந்தார். (‘ஶ்ரீரங்கத்து தேவதைகளில் ஸ்பரிங் தெறிக்குமளவிற்கு சாவி கொடுத்த கிராமபோன் அசந்தர்ப்பமாக  நினைவுக்கு வந்துபோனது)

தனது புதிய பொழுது போக்காக, பழைய மலையாளத் திரைப்படங்களின் வைனைல் ரெக்கார்டுகளை தேடித்தேடி வாங்கி, அவற்றை குறுவட்டுகளில் பகர்ந்து அப்புறம் அவற்றை மீண்டும் விற்றுவிடுவதாகச் சொன்னார். படுக்கையில் நான்கைந்து ரெக்கார்டுகளை கைமுறுக்கு சுற்றி எண்ணெயில் போடுமுன் துணியில் பரத்திவைத்திருப்பது போல வைத்திருந்தார் - துடைத்து அவை அன்றிரவு வட்டுகளில் ஏறவேண்டியன. பேச்சு மும்முரத்தில் பளேயரிலிருந்து ஒரு கருவட்டை எடுத்து என்னிடம் பிடித்துக்கொள்ளச் சொல்லித்தந்தார். புஷ்பாஞ்சலி பிரசாதமாக அதை வாங்கவேண்டி இரு கைகளையும் ஏந்திக்கொண்டேன். உடனே வட்டுகளை எவ்வாறு பிடித்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறினார் (மையத்தில் கைபடாதவாறு இரண்டு ஓரங்களில் கைவைத்து)

அந்த ரெகார்டுகளின் ஒலி நயம் பற்றி அவரிடம் சிலாகித்தேன். குரலின், மற்றும் இசைக்கருவிகளின் உண்மையான ஒலிக்கு மிக அருகில் அது இருப்பதையும், கேட்கும்போது முழுமையாக, நிறைவாக அது ஒலிப்பதையும் நான் சொன்னவுடன் எனக்கு இன்னொரு பியர் கிடைத்தது. சில பாடல்களை எனக்குப் போட்டுக்காட்டினார். சலில் சௌத்ரி, தேவராஐன் என பல பாடல்கள். அன்றைக்குக் கேட்டஏழு ராத்ரிகளில்காடாறு மாஸம்யேசுதாஸின் வெண்ணெய்க் குரல் இன்னும் என்னைப் படுத்துகிறது. 

தெருவில் உறங்ஙும் நிழலுகள் - ஞங்கள்
தடவில் கிடக்கும் மோஹங்ஙள்

என்ற வரிகளும்...




அவரும் யேசுதாஸின் பரம விசிறி. நான் சும்மாயிருக்காமல் யேசுதாஸ் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் இளம் மாணவனாக இசையின் ஆரம்ப பாடங்களைக் கற்றுக்கொண்டது பற்றிச் சொன்னேன். உடனே அவர் வெகுண்டெழுந்தார். 

யேசுதாஸ் பற்றிய மிகப் பிரபலமான பொய்ப் பரப்புரை இதுதான் என்றார். யேசுதாஸ் செம்பையிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டதன் மூலமே இசையின் அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும், அதற்கப்புறமே சினிமாவில் பிரபலமானதாகவும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் செம்பையிடம் வருமுன்னரே சினிமாவில் பாட வந்துவிட்டதாகவும், இந்த வரலாறு எற்கெனவே வலுவாக ஆவணப்படுதப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தாலும் திடீரென்று குடித்த பியரெல்லாம் வடிந்து தூக்கத்தினின்றும்  கலைந்தெழுந்ததுபோல் ஆயிற்று. எவ்வளவு இயல்பாக இவற்றை வரிந்துகொள்கிறோம்? இயற்கையிலேயே நல்ல இசைவளம் பெற்று, கடின உழைப்பால் மேலுக்கு வந்த கலைஞனை ஒரு பெட்டிக்குள் அடைக்கும் இந்தத் திரிசமனத்தை யார் செய்தது?! மரபிசை ஞானம் உள்ளதாலேயே அக்கலைஞன் நன்றாகப் பாடுவதாகக் கதைகட்டி விடுவது எதற்காக? "மேல்"சாதி இந்துவாகப் பிறக்காத ஒருவனின் பாட்டில் தவிர்க்க இயலாமல் திளைத்து, அதனால் ஏற்படும் வயிற்றெரிச்சல் / குற்றவுணர்வினால் அவனைப்புனிதப்படுத்தும்முயற்சியா? அப்படிப் பிறக்காத ஒருவனுக்கு இசைஞானம் இருக்கமுடியாது என்ற தடித்தனமா? பிறப்பால் கிறித்துவரானாலும் குருவாயூர், சபரிமலை, மற்றும் மூகாம்பிகை குறித்துப் பாடியதாலேயே அவரை வெகுவாக ஏற்றுக்கொண்டனரா? (இளையராஜாவுக்கும் இந்த மரபிசை-ஞானப் பூச்சு வேலை நடந்தது) இவையெல்லாம் மிகைப் படுத்தப் பட்டதாகத் தெரிந்தாலும் உருவாக்கப்பட்ட பிம்பங்களின் தாக்கம் பாடல்களைக் கேட்கும்போது தலைக்காட்டுவது தவிர்க்க முடியாதது. 

இந்தப் புனிதப் படுத்துதலுக்கு நானும் இரையானது என்னை சற்றே உலுக்கியது. இவ்வளவு பீற்றிக்கொள்ளும் நான் கூகிளில் இதைத் தேடித்தெரிந்துகொள்ள எவ்வளவு நேரமாகியிருக்கும்? சரியென்று தெரியாதவொன்றை மற்றவர்களுக்கு வேறு போதனை - எல்லாம் ஒருபுடுங்கித்தனத்தின் வெளிப்பாடு தானே? நான் மிகவும் வெறுக்கும் செயல்களான, எதிரிலிருப்பவனைச் சல்லீசாகஎடைபோடுதல், வாய்க்குவந்தபடிஅடித்து விடுதல்என்பன என்னிடமிருந்தேயல்லவா வந்தது?!

மீண்டுமொருமுறைகாடாறு மாஸம்போடச்சொலிக்கேட்டேன்.

விளக்குகள் கொளுத்தாத்த வீதிகள் - நிங்ஙள்
விளிச்சாலும் மிண்டாத்த தெய்வங்ஙள்

- மறுபடியும் பாடல் வரிகள் அவன் தெய்வக்குரல் மூலம் மனதைப் பிசைந்தது, ஏளனம் செய்தது. 



ஆனாலும் நிறைவுடன் அன்றிரவு வீடு திரும்பினேன். அன்றிலிருந்து யேசுதாஸை மீண்டும் வேறுவிதமாகக் கேட்கவாரம்பித்தேன். இன்றைக்குமேகம் கருக்குது மழைவரப் பாக்குதுகேட்டவுடன்எப்பேர்ப்பட்ட கலைஞன் இவன்என்று ஏதோ உணர்ச்சிப் பெருக்கில் அழுகை வர, அதை அடக்கப்போய் முகம் கோணியதில் இவள் மீண்டும் தலையிலடித்துக் கொண்டாள். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் கவிதை