முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூர் டயரி - 2

கடைசியில் நானும் ஒரு அகலப்பாட்டை (Broadband) இணைப்புக்கு மனுப்போட்டுவிட்டேன். ட்ராயின் (TRAI) விதிமுறைப்படி குறைந்தபட்சமாக 256 Kbps திறன் உள்ள இணைப்பே அகலப்பாட்டை இணைப்பு. ஆனால் இந்தச் சேவை வழங்கிகள் 48 Kbps திறனையே அகலப்பாட்டை என்று கூவி விற்கிறார்கள். இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கு டயல்-அப் (Dial-up) முறையில் முக்கி முக்கி 10 Kbpsஇற்கும் குறைவான திறனை அனுபவித்தவர்களுக்கு 48 கொடுத்தாலே ராஜபாட்டை.

பாரத் சஞ்சார் நிகமின் (BSNL) இணைப்புத்திறன் பற்றிப் பரவலாக நல்ல கருத்தே நிலவுகிறது. இப்போது மாதம் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு 256 Kbps என்ற திட்டம் வந்தபின்னால் தினமும் மூவாயிரம் மனுக்கள் அகலப்பாட்டை இணைப்புக்காய் இவர்கள் பெறுகிறார்கள்.

மொபைல் (Mobile) தொலைபேசி நிறுவனங்களில் இருந்து அகலாஇணைப்புச் (Fixed line) சேவை வழங்கிகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. இம்மாதிரி தரை (Land Line) இணைப்புக்களை மொபைல் இணைப்புக்கள் என்றோ எண்ணிக்கையில் மிஞ்சி விட்டன. அதுவும் அடிப்படையான தொலைபேசும் சேவைகள் மட்டுமல்லாமல், குறுஞ்செய்திகள், படக்குறுஞ்செய்திகள் (SMS, MMS) என்று பற்பல சேவைகள்களை மொபைல் இணைப்பு வழங்குகிறது. உங்களைக் கூப்பிடும் நண்பருக்குச் சாதா 'டிரிங் டிரிங்' சப்தத்தை விட மம்மதராசா கேட்பது சுகமாய் உள்ளது. இங்கே நிலவும் கடும் போட்டியில் இச்சேவைகள் எல்லாம் தரைவிலைக்குக் கிடைப்பதல்லாமல், எங்கும் எப்போதும் தொலைபேசியை எடுத்துச் செல்லும் வசதி வேறு!

நாடு முழுதும் செம்புக்கம்பிகள் பின்னி தரை இணைப்பின் முடிசூடா மன்னர்களாய்த் திகழும் BSNL/MTNL இற்கு இப்போது போட்டியின் உச்சத்தில் இணைப்புக்களைச் சந்தாதாரர்கள் திரும்பப்பெறும் நிலை. இப்போட்டியை வெல்வது எப்படி? சாதா செம்புக்கம்பிகள் கொண்டு மம்மதராசா சேவைகளைத் தோற்கடிப்பது எங்கனம்? விடை DSL என்கிற தொழில்நுட்பத்தில் இருக்கிறது.

இத்தொழில்நுட்பம் மூலம் 8 Mbps வரையிலான திறனைச் செம்பிலிருந்து பெறமுடியும்! இதன்மூலம் அகலப்பாட்டை எல்லா வீடுகளையும் குறைந்த செலவில் சேரும். இதற்காக "Broadband India:Recommendations on Accelerating Growth of Internet and Broadband Penetration" என்கிற பரிந்துரைகளை TRAI 2004ல் வெளியிட்டது. இதன்படி 2006ன் முடிவில் இந்தியாவில் 3.35 மில்லியன் அகலப்பாட்டை சந்தாதாரர்கள் சேரவேண்டும் என்று நிர்ணயித்துள்ளார்கள். இச்சேவையின் வழங்குமுறைகளில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது DSL வழி இணைப்புக்களே. இதன் மூலம் உங்கள் தொலைபேசிக் கம்பியை ஒரு சிறு கருவியுடன்(DSL Modem) வீட்டிலே இணைத்துவிட வேண்டும். இக்கருவி தகவலையும், குரலையும் பிரித்துக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. நாம் தொலைபேசிக்கொண்டே இணையத்தை மேயலாம்!

மேலும் TRAI BSNL இற்கு இன்னொரு கெடுபிடியும் விதித்தது. அதாவது, 2005 ஆம் ஆண்டிறுதிக்குள்ளாக ஒரு மில்லியன் DSL இணைப்புக்களை வழங்காவிட்டால், BSNL தனது செம்புக்கம்பிகளை இதர சேவை வழங்கிகளுக்கு (DSL சேவைக்காய்)உபயோகிக்க உரிமம் வழங்கவேண்டும் (Copper unbundling) என்பது. இதன் மூலம் போட்டி பெருகும், விலை இன்னும் குறையும். ஆனால் நாளொன்றிற்கு மூவாயிரம் வீதம் இணைப்புகளோடு BSNL செம்பைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றே தோன்றுகிறது.

சரி, இந்த DSL அகலப்பாட்டை தமிழ்மணம் மேய்வதற்கு மட்டுமா என்றால் இல்லை. இப்போது மூவழிச் சேவை என்கிற 'triple play' (telephone, internet, TV) சேவைகள் பிரபலமடைந்து வருகின்றன. DSL அகலப்பாட்டை கொண்டு சில சேவைகளும் நன்மைகளும்:
1. அதிவேக இணைய உலாவல், தரவிறக்கம்
2. IP TV என்கிற சேவை மூலம் அகலப்பாட்டையில் தொலைக்காட்சி பார்க்கலாம். (உங்கள் வீட்டிலிருக்கும் set-top பெட்டிகள் இணையம் மூலம் நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை, சானல்களை இறக்கிக் கொடுப்பதுடன், நீங்கள் பார்ப்பவைக்கே விலை கொடுக்க வேண்டியும் ஆகிவிடும். 500 ரூபாய் கேபிள் சந்தா இல்லை)
3. தேவைக்கு வீடியோ என்ற Video on Demand : சில தனியார் content வழங்கிகள் மூலம் நீங்கள் கேட்கும் ஒரு திரைப்படமோ, ராமாயணமோ, மெட்டி ஒலியோ பார்க்க முடியும். (இணைய சூப்பர் மார்க்கெட்டுகள் போல, நீங்கள் 'மாயாபஜார்' படத்தை ஒரு தளத்தில் shopping cartல் போட்டு check-out செய்தால், அப்புறம் உங்கள் set-top பெட்டிக்கு அந்தப் படம் நீங்கள் கேட்ட நேரத்தில் அனுப்பப் படும்)
4. முக்கியமாக, இம்மாதிரி சேவைகளை உபயோகிக்கும் போது, அடைப்படை தொலைபேசும் சேவை இலவசமாக வழங்கப் படலாம்! இதன் மூலம் BSNL தனது பழம்தின்று கொட்டைபோட்ட சந்தாதாரர்களை தக்கவைத்துக்கொள்வதுடன், புதிய தொலைபேசி இணைப்புக்களையும் வழங்கலாம்.

BSNL இன் DSL அகலப்பாட்டை மூலம் இதர நிறுவனங்களுக்கு IP-TV, VoD சேவைகள் வழங்கும் உரிமம் வரும் வருடங்களில் வழங்கப் படலாம் என்று தெரிகிறது. இம்மாதிரி அகலக்கால் வைக்கும் முன்னர், வாக்குறுதிப்படி குறைந்தபட்சமாக 256 Kbps அகலப்பாட்டை என்கிற அடிப்படை சேவையை இப்போது கொடுத்தாலே எனக்குப் போதும்.

கருத்துகள்

NambikkaiRAMA இவ்வாறு கூறியுள்ளார்…
thakalukku mikka nantri
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
PositiveRama,
Thanks
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
vurupadiyaana thagaval...

-RV

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...