முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew கவிதை மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதாக இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்ளுதல்’ என்ற தருணத்திலிருந்து. இயேசு மாத்தியூவைக் கைநீட்டி அழைக்கும் அந்தத் தருணமும், இருண்ட அறைக்குள் வெள்ளமென ஒளி பாய்வதை வர்ணத்தில் காட்டியிருக்கும் விதமும், ஓவியத்தின் வித்தையை எனக்குப் புரியவைத்தன.

By Gleb Simonov - Own work, CC0, https://commons.wikimedia.org/w/index.php?curid=166007596

இதேபோல நான் எதேச்சையாகப் படிக்க நேர்ந்த இன்னொன்று Lisel Mueller எழுதிய Monet Refuses the Operation என்ற கவிதை. Monet யின் திட்டுத்திட்டாக வர்ணம் பூசப்பட்ட ஓவியங்களின் மாயாஜாலம் அவரின் கண் கோளாறு காரணமாகவே நிகழ்ந்தது என்று (பகடியாக) நிறுவி, அதனால் தனக்கு கண்புரை அறுவைசிகிச்சை வேண்டாமென்று அவர் மருத்துவரிடம் கேட்பது போல் கவிதையை உருவாக்கியிருந்தாலும், Monet யின் ஓவியங்களை அந்தக் கவிஞர் எவ்வளவு ஆழமாக இரசித்திருக்கிறார் என்பதும் கவிதையில் வெளிப்படுகிறது. இதனால் Impressionist ஓவியங்களை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. அதிலும் இந்த வரிகள்:

…The world
is flux, and light becomes what it touches

ஒளி ஒரு பொருளின்மீது விழுந்து அதை வெறுமனே வெளிப்படுத்துவதில்லை; தான் தொடும் பொருளையே வேறொன்றாக மாற்றுகிறது என்பதையும், Monet யின் ஓவியங்களில் அது வர்ணங்களால் நிகழ்வதையும் இந்த வரிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. (ஆகா, எப்போதும் பயன்படுத்தும் தொடராக இருந்தாலும் இந்தப் பதிவோடு தொடர்புடைய கேள்வி வேடிக்கையாய் மனதுக்கு வருகிறது: வரிகள் படம் பிடிக்குமா?!)

By Claude Monet - art database, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=23750619
இவ்வாறான கவிதைகள் எனக்கு சித்திரத்தையும், அந்த உத்திகளையும் ‘விளக்குகின்றன’. இன்னும் பல கவிதைகளை சொல்லமுடியும் என்றாலும், இந்தப் பதிவுக்கு முன்னுரையாகவே இதை ஆரம்பித்தேன் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

ஓவியம் போன்ற பிற கலைப்படைப்புகளோடு உரையாடும் இத்தகைய கவிதைகள் ekphrastic poems என்று அழைக்கப்படுகின்றன. கீழே இருப்பது மார்சல் துசாம்பின் Nude Descending a Staircase என்ற முன்கியூபிஸ சித்திரத்தை ஒட்டி (பகடியாக?) XJ Kennedy எழுதிய ஆங்கிலக் கவிதையின் என் தமிழ் மொழிபெயர்ப்பு.

இதற்குத்தான் இந்த நீள அறிமுகப் பீடிகை.

அடிகீழ் அடிவைத்து
பொன்னிற எலுமிச்சையாய்
பனியாய்ப் பொழியும் சதையாய்
கேசாதி பாதமாக
உள்ளும் புறமும்
எதையும் உடுக்காமல்
பகல் வெளிச்சத்தை ஊடுருவி
அவள் இறங்குகிறாள்.

சதா ஒன்றின்மேல் ஒன்றுரசும் தொடைகளை
படிக்கட்டுக் கைப்பிடியின் ஊடாக நாம் பார்க்கலாம்;
அவள் இதழ்கள் சற்றே பிளர்ந்து
அவளின் அங்கங்கள் கடந்துசெல்ல ஏதுவாக
சுழலும் காற்று மெல்லப் பிரிந்து கொடுப்பதை
அச்செடுக்கின்றன.

ஒற்றைப் பெண் அருவியாக
அவளின் நிதானமான இறங்குதலை
ஒரு பின்னங்கி போல அணிந்து பின்
கடைசிப் படியில் தயங்கி நின்று
தன் நடமாட்டங்களை ஓருருவாய்த்
திரட்டிக்கொள்கிறாள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...