சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew கவிதை மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதாக இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்ளுதல்’ என்ற தருணத்திலிருந்து. இயேசு மாத்தியூவைக் கைநீட்டி அழைக்கும் அந்தத் தருணமும், இருண்ட அறைக்குள் வெள்ளமென ஒளி பாய்வதை வர்ணத்தில் காட்டியிருக்கும் விதமும், ஓவியத்தின் வித்தையை எனக்குப் புரியவைத்தன.
![]() |
| By Gleb Simonov - Own work, CC0, https://commons.wikimedia.org/w/index.php?curid=166007596 |
இதேபோல நான் எதேச்சையாகப் படிக்க நேர்ந்த இன்னொன்று Lisel Mueller எழுதிய Monet Refuses the Operation என்ற கவிதை. Monet யின் திட்டுத்திட்டாக வர்ணம் பூசப்பட்ட ஓவியங்களின் மாயாஜாலம் அவரின் கண் கோளாறு காரணமாகவே நிகழ்ந்தது என்று (பகடியாக) நிறுவி, அதனால் தனக்கு கண்புரை அறுவைசிகிச்சை வேண்டாமென்று அவர் மருத்துவரிடம் கேட்பது போல் கவிதையை உருவாக்கியிருந்தாலும், Monet யின் ஓவியங்களை அந்தக் கவிஞர் எவ்வளவு ஆழமாக இரசித்திருக்கிறார் என்பதும் கவிதையில் வெளிப்படுகிறது. இதனால் Impressionist ஓவியங்களை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. அதிலும் இந்த வரிகள்:
…The world
is flux, and light becomes what it touches
ஒளி ஒரு பொருளின்மீது விழுந்து அதை வெறுமனே வெளிப்படுத்துவதில்லை; தான் தொடும் பொருளையே வேறொன்றாக மாற்றுகிறது என்பதையும், Monet யின் ஓவியங்களில் அது வர்ணங்களால் நிகழ்வதையும் இந்த வரிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. (ஆகா, எப்போதும் பயன்படுத்தும் தொடராக இருந்தாலும் இந்தப் பதிவோடு தொடர்புடைய கேள்வி வேடிக்கையாய் மனதுக்கு வருகிறது: வரிகள் படம் பிடிக்குமா?!)
![]() |
| By Claude Monet - art database, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=23750619 |
ஓவியம் போன்ற பிற கலைப்படைப்புகளோடு உரையாடும் இத்தகைய கவிதைகள் ekphrastic poems என்று அழைக்கப்படுகின்றன. கீழே இருப்பது மார்சல் துசாம்பின் Nude Descending a Staircase என்ற முன்கியூபிஸ சித்திரத்தை ஒட்டி (பகடியாக?) XJ Kennedy எழுதிய ஆங்கிலக் கவிதையின் என் தமிழ் மொழிபெயர்ப்பு.
இதற்குத்தான் இந்த நீள அறிமுகப் பீடிகை.
அடிகீழ் அடிவைத்து
பொன்னிற எலுமிச்சையாய்
பனியாய்ப் பொழியும் சதையாய்
கேசாதி பாதமாக
உள்ளும் புறமும்
எதையும் உடுக்காமல்
பகல் வெளிச்சத்தை ஊடுருவி
அவள் இறங்குகிறாள்.
சதா ஒன்றின்மேல் ஒன்றுரசும் தொடைகளை
படிக்கட்டுக் கைப்பிடியின் ஊடாக நாம் பார்க்கலாம்;
அவள் இதழ்கள் சற்றே பிளர்ந்து
அவளின் அங்கங்கள் கடந்துசெல்ல ஏதுவாக
சுழலும் காற்று மெல்லப் பிரிந்து கொடுப்பதை
அச்செடுக்கின்றன.
ஒற்றைப் பெண் அருவியாக
அவளின் நிதானமான இறங்குதலை
ஒரு பின்னங்கி போல அணிந்து பின்
கடைசிப் படியில் தயங்கி நின்று
தன் நடமாட்டங்களை ஓருருவாய்த்
திரட்டிக்கொள்கிறாள்.


கருத்துகள்