முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம்.

ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார்க்கத் தலைப்படுகிறோம். பின்னால் "நான் அப்பவே நெனச்சேன் இது ஒண்ணும் சரியில்லையேன்னு" என்று இவர்களைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி இருப்போம்.

***

சமுதாயமும் சுற்றங்களும் உருவாக்கித் தரும் ஏதோ பிம்பங்களைத் தனதென்று உருவகித்துக் கொண்டு, அதன் போதையில் சிக்குண்டு, அதை மிகவும் போற்றி வளர்த்த பிறகு, நம் சுவாபாவிகமான சில செயல்கள் அந்தப் பிம்பங்களை உடைக்கும் போது வலி உண்டாகிறது - சொறிந்து கொள்ளும் போது இன்பமளிக்கும் ரணம் இன்னும் வளர்ந்து பின்னால் வேதனை தருவது போல. இந்தப் பிம்பங்கள் நம்மைச் சுற்றியொரு பெரும் சுவரெழுப்புகிறது. இந்தச் சுவர்களை இடித்து வெளிவருவது கடினமானது. பல தருணங்களில் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிச் செயலைத் தியாகம் பண்ணவேண்டியுள்ளது - இதுவும் சில சமயங்களில் வேதனை தருவது.

"நீங்கள் உருவாக்கிக் கொண்ட என் பிம்பங்களுக்கு நான் ஒரு வகையிலும் பொறுப்பேற்க முடியாது" என்று ஒரு அட்டையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு உலவ வேண்டுமென்று தோன்றுகிறது.


(நன்றி: ஆதவன் - பிம்பச்சிறை, பிம்பச்சிதைவு உள்ளிட்ட சில வார்த்தைப் பிரயோகங்களுக்காகவும் அவைகளின் பாதிப்பிற்காகவும்)


கருத்துகள்

ROSAVASANTH இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. அதை சொல்வதற்காக அல்ல இந்த பின்னூட்டம். ஒரு சந்தேகம்.

துவக்கத்தில் ஆதவன் பெயர் வருகிறதே. பயன்படுத்திய வார்த்தைக்காக அவருக்கு நன்றி சொல்கிறீர்கள், பதிவு உங்களுடையது என்று நினைக்கிறேன்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Eswar,

// I ain't them //
Yeah, right!

ரோசா,

ஆதவன் எழுதியது என்று அர்த்தம் வரும் குறிப்பை இப்போது மாற்றிவிட்டேன்.
வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், வழக்கம் போல அருமையான பதிவு. எல்லாவற்றையும், எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் அடைத்தே தீருவது என்ற வகைப்படுத்தல் நோய்க்கு நம்மில் பெரும்பாலானோர் ஆட்பட்டிருக்கிறோம். இப்போது சிறுபிள்ளைத்தனமாக தோன்றும் இந்த பொதுப்படுத்தல்/வகைப்படுத்தலை நானும் செய்திருக்கிறேன்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Sudarshan,

// எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் அடைத்தே தீருவது என்ற வகைப்படுத்தல் நோய்க்கு நம்மில் பெரும்பாலானோர் ஆட்பட்டிருக்கிறோம். //

இதைத்தான் சொல்லவந்தேன் - நீங்கள் இன்னும் எளிதாகச் சொல்லிவிட்டீர்கள்.

நன்றி.
மணியன் இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் கூறுவது மிகச் சரி.மற்றவர்கள் நம்மை வகைப்படுத்தலைத் தவிர நாமும் சூழலின் தாக்கத்தால் அந்த வகைப்படுத்தலில் அடங்குகிறோம். சினிமா நடிகர்களுக்கு ஒருவித பிம்பச் சிறை என்றால் மக்களுக்கு தங்கள் பிறப்பினால்,மொழியால், மதத்தால்,தேசத்தால் மற்றும் இன்னபிற வகைபடுத்தலால் பிம்பச்சிறை. அதனை உடைத்துக் காணும் கருத்துக்கள் தெளிவானவை.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மணியன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Suresh இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவை படித்தவுடன் சிறுவயது ஞாபகம் வந்தது.

நீ ரஜினி ஃபேனா? என்று கேட்பார்கள்? இல்லை என்று சொன்னால் உனக்கு எதுக்கு கமலை பிடிக்கும் என்று அடுத்த கேள்வி வரும்.

நாம் எப்போதும் ஏதாவது வகுப்பை சார்த்து தான் அறியப்படுகிறோம்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சுரேஷ்,

எல்லாம் இருக்கட்டும். ஆனா ரஜினி ஃபேன் இல்லைன்னு நீங்க சொல்லியிருக்கக் கூடாது.

:-)
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பில் கண்ணன்,

தேவையான ஒரு பதிவு !!! எதையும்/எவரையும் வகைப்படுத்துதலை வியாதி என்பதை விட நம் வாழ்வின் ஓர் அங்கம் என்றே
கூறலாம் !! மலையாளிகள் என்றால் இப்படி, குறிப்பிட்ட சாதிக்காரர்கள் (அல்லது ஊர்க்காரர்கள்) என்றால் இப்படி, என்று ப்ரொக்ராம்
செய்து கொண்டு வாழ்வதிலிருந்து சிரமப்பட்டால் தான் வெளியே வர முடியும் என்று தோன்றுகிறது.

//நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்ப ட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார்க்கத்
தலைப்படுகிறோம்.பின்னால் "நான் அப்பவே நெனச்சேன் இது ஒண்ணும் சரியில்லையேன்னு" என்று இவர்களைப் பற்றிப்
பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி இருப்போம்
//
மிகச் சரி!

சிறிது காலமாக என் வலைப்பதிவு பக்கம் தங்களை காண முடிவதில்லை !!! எனது சமீபத்திய பதிவுகளை படித்தீர்களா ? சமயம்
கிடைக்கும்போது பார்க்கவும். நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா,

பின்னூட்டத்திற்கு நன்றி.

இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன், படித்துவருகிறேன்.

பிகு: நிஜமாகவே நான் அன்பு இல்(லாக்) கண்ணன் தானா? :-)
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,

I refuse to get into "WORD PLAY" with you on this count ;-)

More seriously, "அன்பில்" சரியான வார்த்தைப் பிரோயகமா, இல்லையா ?

என்றென்றும் அன்புடன்
பாலா
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
பிரோயகமா = பிரயோகமா
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா,

அன்பில் = அன்பு + இல் (லா)

என்று நினைக்கிறேன்.

(என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்)

நீங்கள் கூற விழைந்தது 'அன்பின்' என்றும் 'அன்பில்' ஒரு typo என்றும் நினைத்தேன்.
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,
நன்றி !!! I was using the word without thinking :-(
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Anonymous,

// உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது //
தெரியும் - ஆனால்...

நன்றி.
Suka இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்..

எதையோ தேடப் போய் இங்கே வந்து முடிந்தது..

பதிவு பழையாதாகினும் பின்னூட்டமிடாமல் செல்ல மனமில்லை..

வெகு அருமையான பதிவு.. பிம்பச் சிறைகளைப் பிழக்க முயல்வோரும் அதனாலேயே தனியொரு அடையாளத்தைப் பெறுவதைத் தவிர்க்க முடிவதில்லை.


வாழ்த்துக்கள்
சுகா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...