முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருந்து

பெங்களூர் ஜெயநகர் மூன்றாம் பிளாக்கின் சாலைச் சந்திப்பில் (இங்கே எல்லாமே 'சர்க்கல்' தான்) நாகார்ஜுனாவுக்கும் மூலைப் பெட்டிக்கடைக்கும் நடுவே இருந்தது மஞ்சுநாதா (என்று நினைக்கிறேன்) ஃபார்மசி. பழைய பெயர்ப்பலகை. கடையினுள்ளே அப்போத்திக்கரிகள் காலத்து மேசை, கண்ணாடி/மரக்கூண்டுகளுக்குள் மருந்துகள் என்ற அமைப்பு. மேசையின் அருகிலே இருக்கையில் அறுபதை நெருங்கும் வயதுடையவர் என்று நாம் ஊகிக்கக்கூடிய பெரியவர். மெலிந்த தேகம், அதிக உயரமில்லை, வெளுத்த தலை முடி, சின்னதாக கிராப் வைத்திருப்பார். கையில் விரித்து வைத்த ப்ரஜாவாணி பத்திரிகையை படித்த வண்ணம் இருப்பார்.

ஒரு முறை அவசரமாக மாத்திரை வாங்க வேண்டியிருந்ததில் மருந்தகம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். இந்தக் கடை தென்பட்டது - வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறதே என்று கடையில் மருந்தின் பெயரைச் சொல்லிக்கேட்டேன். பத்திரிக்கையினின்றும் தலையை எடுத்து சிரித்துக் கொண்டே சொன்னார் "இங்கே கிடைக்காது (அருகில் உள்ள பெரிய) மருந்தகத்தில் கிடைக்கும்". அப்போதிருந்த அவசரத்தில் ஓடிவிட்டேன். ஆனால் அங்கே ஒரு மருந்தகம் இருப்பதை மனம் குறித்துவைத்துக் கொண்டது.

அப்புறம் மருந்து வாங்க வேண்டுமானால் அதே கடைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அடுத்த முறை போனபோது கடைக்காரர் வயதையொத்த ஒருவர் கடைக்குவெளியே மடக்கு நாற்காலி போட்டு உட்கார்நதிருந்தார். கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். மருந்தைச் சொல்லிக் கேட்டதற்கு இம்முறை வெளியே உட்கார்ந்திருந்த நண்பரே மருந்து அங்கு கிடைக்காதென்று சொல்லி அருகில் இருந்த பெரிய மருந்தகத்திற்கு வழிகாட்டினார்.

வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. அப்புறம் மருந்து வாங்க நேர்ந்தால் அந்தக்கடைக்கு முதலில் சென்று கேட்பதும் (இருக்காது என்று தெரிந்தும்) அப்புறம் வேறுகடையில் மருந்து வாங்குவதும் வழக்கமாயிருந்தது. அங்கே வசித்தவரையில் அந்தக்கடையில் எதுவும் வாங்கியதில்லை - எதைக் கேட்டாலும் புன்னகையுடன் இல்லையென்ற பதிலே வரும். இருந்தும் அங்கே மீண்டும் மீண்டும் செல்ல விருப்பம் இருந்தது.

மிகவும் விரைவாக எதையோ நோக்கி எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, அந்தக் கடையும் அங்கு சேரும் கடைக்காரரின் நண்பர் கூட்டமும் நவீன பெங்களூர் காட்சிக்கு முரணாகத் தோன்றியது. அருகிலிருந்த நாகார்ஜுனாவில் கூட சாரைசாரையாக மக்கள் வந்து அவசர கதியில் தின்று போய்க்கொண்டிருந்தனர். பெட்டிக்கடையிலும் டீ, சிகரட்டு என்று மனிதர்கள் வந்துபோய்க்கொண்டிருக்க, நடுவில் அந்த மருந்துக்கடை அமைதியாக ஆளரவமின்றி இயங்கிக்கொண்டிருந்தது.

மருந்துக்கடை பெரியவர் பற்றி எதுவும் தெரியாதானாலும் இப்படியாக அனுமானித்தேன்:
சாப்பாடு, இருப்பிடம், எளிய வாழ்க்கைக்கான வருமானத்தை அவர் சேமித்திருக்க வேண்டும். தினமும் கடையைத் திறந்து வைத்திருப்பது, ப்ரஜாவாணி படிப்பது, நண்பர்களுடன் அளவளாவிக்கொண்டு தேநீர் குடிப்பது என்பன தவிர்க்கமுடியாத பழக்கங்களாகி விட்டிருக்கவேண்டும். திரும்பி வராத பழையநாட்களின் வசந்தத்தையும், இளமைக் காலத்தின் உயிர்ப்பையும், நிறைவான, நிதானமான, வேட்கைகளற்ற வாழ்க்கையின் பழைய சுவடுகளையும்  இந்தப் பழைய மேசையும், மருந்து வாசம் கமழும் மரக்கூண்டுகளும், கடைக்கதவின் மரப்பட்டிகளும், மேசைமேல் பதித்த கண்ணாடிமூலம் தெரியும் பழைய ஒற்றை ரூபாய் நோட்டும் பெரியவருக்கு நினைவூட்டுவதாக இருக்கக்கூடும்.

இவரைப் பார்க்கப் பொறாமை மேலோங்கும் - எனக்கான பழைய மருந்துக்கடைக் கல்லா, மேசை நாற்காலி என்கிற விழைவும். கண்ணாப்புக் கட்டிய குதிரைபோல வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சிகளை மறந்து எதையோ நோக்கி ஓடுகிறோம். சன நெரிசலில், அவசரங்களுக்கு மத்தியில், ஒரு நிமிடம் நின்று நிதானித்துத் தேடினால் இந்த மருந்தகம் போன்ற எளிமை மிளிரும் ஒன்று கண்ணுக்குப் புலப்படலாம். அதைக் கண்டுகொண்ட பின்னர் வாழ்நாட்களில் உணரப்போகும் அமைதியை, மகிழ்ச்சியை பெரியவரின் சிரிக்கும் கண்கள் எப்போதும் உணர்த்தும்.

நான் அந்தப் பெரியவர் வாழ்க்கையையே காதலிக்கிறேன். நீங்கள் கேட்கும் மருந்து இங்கு கிடைக்காது; ஆனால் பூரண குணம் கிட்டும் வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள்

surimountain இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நன்று. படிப்பதற்கு மிகவும் சுவையாக இருந்தது. வாழ்த்துக்கள் (சொல்லலாம்தானே? ஒரே தகுதி வயதுதான். 67)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...