முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மா ரமணன், உமா ரமணன்!

இரண்டு உன்னதமான கலைஞர்களை எப்படியோ ஒரே சமயத்தில் பெற்றிருப்பது உலகக் கிரிக்கெட்டிற்குக் கிடைத்த பேறு. இருவரும் சமீபத்தில் அவர்களின் துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அணுமுறையாலும், ஆடுவதின் இயல்பாலும், குணாதிசயங்களாலும் வேறுபட்ட இரண்டு தனித்துவமான ஆளுமைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறது மனது.

லாராவின் irregularity யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்திருக்கிறது. வீழ்ச்சியடைந்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அற்புதமான ஒரு ஆட்டத்தில் மீண்டு வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். சிறப்பாய் ஆடிய அநேக ஆட்டங்கள் இவர் அணியை வெற்றி பெற வைத்ததில்லை. இவர் ஆடிய 121 டெஸ்ட்களில் இவர் அணி 56 முறை தோற்றிருக்கிறது.

டெண்டுல்கர் ஒரு காலத்தில் குருவி தலையில் பனங்காய் போல இந்தியாவின் மொத்தச் சுமையையும் பலரின் எதிர்பார்புகளையும் தாங்கி இருந்ததில் அவர் ஆட்டம் பாதித்தது. சமீபத்திய உடலுபாதைகளால் அதிக ஓய்வு எடுக்கும்படி வந்ததும், மீண்டு வரும் முதல் ஆட்டத்திலேயே அவர் நன்றாக ஆடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் அவர் மனதில் இன்னும் கிலேசத்தை உண்டு செய்திருக்கும்.

"மார ஜனகன், குமார ஜனகன்..."

லாராவின் ஆட்டமுறை தனித்துவமானது. பந்து வீசப்படும் நேரத்தில் அதிகமாக குறுக்கே நகர்ந்து, மட்டை எங்கோ மேலிருந்து வந்து ("வாம்மா மின்னல்" என்கிற மாதிரி) பந்தைப் பளீரென்று அடிக்க, பந்து தடுப்பாளார்களை வெட்டிச் செல்லும். இவர் மட்டை சுழற்றும் பாங்கில் ஒரு பொறியும் துள்ளலும் இருக்கும் - க்ரீஸில் சட்டென்று குறுக்கே குதித்து இவர் வெட்டியாடுவதில் ஒரு நடன நளினமும், கம்பீரமும் ஒருசேரத் தெரியும். கை இருக்குமிடத்தே பார்வையும், பார்வை யிருக்குமிடத்தே மனதும், மனதிருக்குமிடத்தே பாவமும் என்பது போல ஒரு தாண்டவ வடிவாயெனக்குத் தோன்றும் அவர் ஆட்டம்.

பந்து வீசப்படும்போது சிறிதாக முதல் நகர்வு, அப்புறம் பந்துவீச்சின் திசை மற்றும் நீளத்திநை அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் கணித்து, அதற்கேற்ப அடுத்த நகர்வு என்று சிக்கனமான, நிதானமான அசைவுகள் ஸச்சினுடையது. நேரான மட்டையின் நடு செண்டரில் பந்து படும் அளவிற்குத் வெளித்திறந்து வரும் மட்டையடி பாணி . மட்டையைக் கவிழ்த்துத் துடுப்புப் போடுவது போல ஆடும் paddle sweep என்கிற தனித்துவமான ஷாட் உட்பட, கிரிக்கெட்டின் மொத்த மட்டையடி முறைகளும் இவரிடம் அனாயாசமாய் வெளிப்படும். நிதானமும் நேர்த்தியும், இலக்கணச் சுத்தமும் இயல்பாய் கைவரப்பெற்றவர்.

"மலைமேல் உறைபவன், பாற்கடல் அலை மேல் துயில்பவன்..."

தன் கலையிலே முற்று முழுதாக அமிழ்ந்துவிட்ட ஒரு கலைஞனின் வெளிப்பாடுகள் முற்றிலும் எதிர்பாராதவையாகவும், எதனாலும் வரையறுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாமல் இருப்பது போலவே தான் லாராவின் ஆட்டமும் எனக்குத் தோன்றுகிறது. நன்றாக அமைந்த பொழுதுகளில் பித்துப் பிடித்தது போல 100, 200,300, 400 என்று ஓட்டங்களைக் குவிக்கும் போது சாமானியர்களின் அறிவுக்கு எட்டாத உயரத்தில் தான் இருப்பதை ஒரு வெறியுடன் அவர் பறை சாற்றுவது போல இருக்கும். வேறு சில சமயங்களில் இந்த ஆளுமையைச் சந்தேகத்திற்கு இடமாகும் வகையில் அவர் ஆட்டமிழந்து விடுவதும் உண்டு. புல்லாங்குழல் மாலியின் கச்சேரிகள் பற்றி இப்படிச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் - லாராவின் சில இன்னிங்ஸ்களைப் பார்த்தால் இவ்வாறு சொல்வதை விளங்கிக் கொள்ள முடியும் போலவிருக்கிறது.

தான் செய்யும் வேலையில் மிகுந்த நேர்த்தியும், திறமையும், கடினமானவற்றையும் எளிதாக முடித்துவிடும் கைதேர்ந்த வித்தகர் ஒருவர் நமக்களிக்கும் ஆசுவாசத்தையும் தன்னம்பிக்கையையும் ஸச்சினிடம் அனுபவிக்கலாம். கிரிக்கெட் ஒரு வாழுமுறை - அதிலேயே லயித்து, அதையே சிந்திப்பதில், எல்லாக் கோணங்களில் இருந்தும் அவதானிக்கும் செஸ் அணுகுமுறை சச்சினுடையது.

பலம் பொருந்திய எதிரிகளையும் போட்டிகளையும் சம்பாதிப்பது திறமையின் ஒரு அடையாளம். ஸச்சின் மற்றும் லாராவை எதிரணியில் பெறுவதென்பது பந்துவீச்சாளர்கள் மட்டுமன்றி தடுப்புத் தரப்பில் இருக்கும் எல்லோரையும் தம்முடைய ஆட்டத்தரத்தை உயர்த்திக் கொள்ளச் செய்வதற்கு ஏதுவாகிறது!

லாராவும் டெண்டுல்கரும் ஏனோ அணித்தலைவர்களாக வெற்றியடைந்ததில்லை. லாரா தலைமையில் அவர் மட்டுமே ஆடிக்கொண்டிருந்ததும், ஸச்சின் அவர் தலைமையில் சரிவர ஆடாததும் தத்தம் அணிகளுக்கு சாதகமாக அமையவில்லை.

உலகிலேயே அதிக ரன்களும் அதிக சதங்களும் அடித்தவர்கள் என்கிற பெருமை எந்த விதத்திலும் அவர்கள் ஆளுமை குறித்த அளவுகோல்களாக முடியாது. MRF சின்னம் பொறித்த மட்டையை அடுத்துப் பெறும் தகுதியுடையவர் என்று தற்போது ஆடும் எவரையும் இந்த அளவில் வைத்துப் பார்க்க முடியவில்லை.

ஸச்சின் 50 சதங்களைக் குறிவைக்கிறாரா என்ற பேச்செல்லாம் பரவலாகத் தொடங்கியிருக்கிறது. இன்னும் 17 வயதுக் காரராக லிட்டில் மாஸ்டராகத் தான் எல்லோர் கண்ணுக்கும் தெரிகிறார். அவருக்கும் வயதாகிறது! லாராவுக்கு ஆஸ்திரேலியாவில் பிரிவுபச்சாரம் செய்தாகிவிட்டது. எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பது எவ்வளவு வேதனையான, முகத்திலறையும் உண்மை!

நெவில் கார்டஸ் (Neville Cardus) போன்றோர் காதலுற்ற நுட்பங்களும், அருமைகளும் மறைந்து இரைச்சலும் காட்டடியுமே கிரிக்கெட்டின் எதிர்காலமாகிவிடுமோ என்கிற நிலையில் இன்னும் இவர்கள் ஆட்டத்தை எவ்வளவுகாலம் பார்க்க முடியுமோ! இவர்கள் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தோம், இவர்கள் ஆட்டத்தில் உண்மையான மேதமையின் வெளிப்பாடுகளை நேரடியாய் உணர்ந்தோம் என்பவைகளே மீளும். நமக்குப் பின் வரும் சந்ததியினரிடம் நாம் கூறி மகிழவென்று சில அற்புத விஷயங்களைச் சேமித்து வைத்திருப்பது நல்லது தானே?

கருத்துகள்

SnackDragon இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக இருக்கிறது உங்கள் கட்டுரை. நன்றி.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கார்த்திக்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...