முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Bus stop

ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன். இப்படி எங்கும் செல்லாமல், வரும் பேருந்துகளிலும் ஏறாமல் நேரம் ஓடுகிறது. இங்கே சில நேரம் நின்றுவிட்டால் ஒரு தொல்லை - இவ்வளவு நேரம் செலவு செய்த பிறகு காலியான பேருந்தில் போகவில்லையானால் காத்திருந்து நேரம் கடத்தியதில் அர்த்தமில்லை, அதனால் கடைசிப் பேருந்தானாலும் கூட்டமிருந்தால் ஏறுவதில்லை. ஒன்றும் பயனின்றி நடந்தே செல்ல முடிவு செய்கிறேன். நேரத்தோடு போகுமிடம் போய்ச்சேரும் நிர்பந்தம் எனக்கில்லை. கூட்டமிகுதியான பேருந்தில் ஏறமாட்டேன் என்ற பிடிவாதமே ஓங்குகிறது. ஒருவேளை பேருந்துகளில் ஏறுவதில்லை என்ற தீர்மானம் முதலிலேயே இருந்திருந்தால் பல நிமிடங்களை நிறுத்தத்தில் விரயம் செய்யாமல் நடக்கத் துவங்கியிருக்கலாம். ஆனால் காலியான பேருந்து ஒன்று வரும் என்கிற நப்பாசை விடுவதில்லை. இப்படி நடந்து போகும்போது ஒரு காலியான பேருந்து என்னைத் தாண்டிச் சென்றால் தப்பான முடிவெடுத்தலுக்கு மனது என்னைக் குற்றம் சொல்லி ஏளனம் செய்கிறது. நேரத்தோடு போகும் நிர்பந்தம் இல்லையானாலும், ஒன்றும் செய்யாமல் நேரவிரயம் செய்வது எனக்குச் சோர்வையே அளிக்கிறது.



அதே வண்டி நிறுத்தத்தில் ஒரு தீர்மானத்துடன் பலர் இருக்கிறார்கள். வரும் முதற் பேருந்தின் ஆட்கூட்டத்தில் அவர்களைத் திணித்துக் கொள்கிறார்கள். பின்னால் ஒரு காலியான பேருந்து வருமோ என்கிற எதிர்பார்ப்போ, வரப்போகும் ஒரு வாய்ப்பைத் தவறவிடும் கவலையோ அவர்களுக்கு இல்லை. போகுமிடத்தை விரைவில் அடைய அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாத அவர்களைப் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன். அவர்களுக்கு எது முக்கியம் என்பதில் அவர்கள் திண்ணமாய் இருக்கிறார்கள்.



இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது. நடப்புகளில் இருந்து விலகி இப்படிக் கற்பனைச் சிறகை விரித்துப் பறந்தால் இப்படியாகத்தான் தோன்றுகிறது.



ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்கென வந்திருக்கிறேன். போட்டியின் விதிமுறைகள் விசித்திரமானவை: இலக்கு எதுவென்று சொல்லப்படாது; எவ்வளவு நேரத்தில் போய்ச் சேரவேண்டுமென்ற விபரம் இல்லை; எப்படிச் செல்லவேண்டுமென்பதில் கட்டுப்பாடுமில்லை. பயணப் போட்டி என்பது மட்டும் தெரிகிறது. ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன்...

கருத்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
வீட்ல சொல்லி ஒரு பொண்ணு பாக்கச் சொல்லீட்டா எல்லாம் சரியாப் போயிடும்:-) :-) அப்புறம் அடிச்சுப் புடிச்சு ஓடுவீங்க இல்ல?
---
வழக்கமான உங்கள் இனிய எழுத்து நடை மிகவும் கவர்கிறது. கிளம்பிய இடத்திலேயே வந்து முடித்திருக்கும் சுழற்சியும் நன்றாக இருக்கிறது.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
செல்வா,

நல்லன விழைதலும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் இன்னும் எழுதுவதற்கு மட்டுமல்லாமல், பொதுவில் வாழ்க்கையிலும் பெரும் நம்பிக்கை பெற உதவுகிறது. சக மனிதரின் அங்கீகாரம் - எந்த வகையினதாய் ஆனாலும் - நம் மேல் நமக்கே மரியாதை வரச் செய்யும் ஒன்று.

தொடர்ந்த ஊக்கத்திற்காய் உங்களுக்கு நன்றி!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Nalla irukku kannan. Thanks
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கமணி,

நன்றி!
Ramya Nageswaran இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா எழுதியிருக்கீங்க கண்ணன்..

//இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது.//

எனக்கு இந்த எண்ணம் வேறு விதத்தில் தோன்றும்: இன்றைக்கு அதிமுக்கியமாக தோன்றும் பல விஷயங்கள் சில வருடங்களில் அர்த்தமற்று போகலாம் என்று...
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ரம்யா,

நன்றி. நீங்க சொல்றதும் சரிதான்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Good to see this community
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
The take off and landing on the same spot is excellent... Keep this as ur Style...

Continue...

Wishes...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பொருளுள் சிக்கிய மொழியை விடுவித்தல்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்: “வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.” இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள். ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேச...