முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்பின் வழியது உயிர்நிலை

Photo by Magesh Babu (used with consent - https://flickr.com/mageshb)

இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் சிலர் ஆய்வாளர்களாக மாறியது நாமறிந்ததே. தியடோர் பாஸ்கரன் இந்திய அஞ்சல் பணியில் இருந்தபோதே திரைப்படங்களில் ஆர்வம் கொண்டு, தமிழ்த் திரைப்பட வரலாற்றை ஆய்வு செய்து முக்கியமான நூல்களை எழுதியவர்.

அதேபோல மதுரையில் தமிழிலக்கியம் பயின்ற (சங்க இலக்கிய + தொல்பொருள் ஆய்வு — கலம் செய் கோவே — இவர் ஆராய்ச்சி மிகவும் ஆர்வமளிக்கக்கூடியது) பாலகிருஷ்ணன் மதுரையிலிருந்து டில்லி கிளம்பும்போது திருவாசகமோ எதுவோ ஒரு தமிழ்ப்புத்தகத்தை மட்டுமே தமிழ் நினைவாக எடுத்துச் சென்றதாகவும், பின்னாளில் சிந்து சமவெளி மற்றும் தமிழ்ச் சங்க இலக்கியம் குறித்த ஆய்வுக்கு அதுவே தமிழார்வத்தூண்டுதலாக அமைந்தது என்பதாகவும் சொல்லியிருந்தார்.

கொஞ்சம் சிரமப்பட்டு இ ஆ ப தேறியிருந்தால் நாமும் இந்தமாதிரி ஏதேனும் செய்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது (“அவர்கள் அவ்வளவு பிழைப்புக்கெட்டு இருந்தார்களா?”)

இதையெல்லாம் இப்போது சொல்லக் காரணம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு இலக்கியம் அம்மொழிகளுக்கு, குறிப்பாக அவற்றின் தற்காலப் பயன்பாட்டிற்கு, என்ன வளம் சேர்த்துள்ளது என்பது குறித்து ஓர் ஆய்வை முன்னெடுக்கவேண்டும் என்ற உந்துதல்தான்.

வயதாக ஆக அறிவு முதிர்ச்சி ஏற்படுகிறதோ இல்லையோ, அனுபவப் பாடங்கள் நம்மை ஒருமாதிரிக் கனியச் செய்கின்றன. முன்னாட்களில் எதிலும் சிறக்க என்றிருந்த எத்தனங்கள் இப்போது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகின்றன.

எல்லா உயிரினங்களின் பாலும் அன்பும் கனிவும் காட்டுவதே அறிவு வளர்ச்சியின் முடி என்று புரியத்தொடங்குகிறது. ஒரே நேரத்தில் எளிதானதாகவும், முற்றிலும் இயலாததாகவும் இருக்கும் புதிரான இலக்கு அது.

இருந்தும் சொறிந்து கொள்ள அரிப்புகள் இன்னும் இருக்கின்றன. இத்தனை ஆர்வத்தோடு எதையும் கற்க முயன்றதில்லை — தமிழ் / மலையாளம் சார்ந்த மொழியியல் ஆர்வத்தையும், சூழலியல் கல்வியையும் சொல்கிறேன்.

ஒழுங்கு என்பதன் முக்கியத்துவம் காலம் கடந்து புரிகிறது.

---

(எல்லாவுயிரிடத்தும்) அன்பாயிருப்பதே அறிவு முதிர்ச்சியின் உச்சம் என்ற கருத்துடன் ஒன்றுகிறேன். மலையாள அறிஞர் எம் என் விஜயன் சொல்லுவார்: எல்லோரிடமும் இவ்வுலகுக்கு அளிக்கவென்று ஏதோ இருக்கிறது; அப்படிக் கொடுப்பதில்தான் வாழ்க்கை முற்றுப்பெறுகிறது. இதை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், அறிவுசார்ந்த ஏற்றத்தாழ்வு இன்றைய அறிவுச்சூழலில் மலிந்திருக்கிறது என்று சொல்லவே. ‘தேடிச்சோறு தினந்தின்று…வேடிக்கை மனிதர்’ வாழ்க்கையை மீற வேண்டும் என்றிருப்பது நல்ல நோக்கமே. அப்படித் ‘தன் விழிப்புணர்வு’ இருப்பதே நம்மை ‘வேடிக்கை மனிதரி’னின்றும் வேறுபடுத்திவிடும்.

ஆனால், எளிய உள்ளம் படைத்தவர்களை ஏளனம் செய்வதற்காக பாரதி ‘தேடிச்சோறு’ எழுதவில்லை. தன்னுடைய விழிப்புணர்வை அப்பாடலின் வழியாக வெளிப்படுத்தினான் அவ்வளவே.

அறிவுமுதிர்ச்சியின் அறிகுறியும் அன்பே. எல்லோரையும் கட்டித்தழுவி முத்தம் கொடுக்கவேணுமென்பதில்லை. தன்னைவிட எளிதாய்ச் சிந்தித்துச் செயல்படும் மனிதனிடம் நாம் காட்டக்கூடிய அன்பு என்ன? குறைந்தபட்சம் அவனிடம் நம் அறிவுமேட்டிமையைக் காட்டாமல் இருப்பது; (அப்படிக்காட்டினாலும் அவன் அதனால் பாதிப்படைவதில்லை) அவனிடமும் உலகிற்குக் கொடுக்கவென்று ஏதோ இருக்கிறது என்று நினைவில் கொள்வது.

விஜயனின் பேச்சுக்கள் என்னை ஈர்ப்பதற்கு இந்தத் தன்னடக்கம் தரும், அன்பால் மட்டுமே வரும் அறிவுச்செம்மையே காரணம். யாரையும் புண்படுத்தாமல் பேசவும் புறவுலகில் இயங்கவும் ஒரு உண்மையான அறிவாளியால்தான் முடியும். இங்கே அன்பு உணர்ச்சியாக வெளிப்படுவதில்லை (தழுவல், முத்தம், கண்ணீர், இதர…) — அறிவினுள் ஒளிர்கிறது.

அறிவாளியாய் இருப்பதென்பது எல்லாம் தெரிந்திருப்பதல்ல. எல்லாம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று ஒவ்வொரு கணமும் உணர்ந்திருப்பதே.

நான் முன்னெப்பொழுதோ சொன்னது போல, அறிவுத்தேடலில் மீதமிருக்கும் வாழ்க்கையைச் செலவழிப்பதைவிட எப்போதும் எல்லாவுயிரிடத்தும் அன்போடிருந்து பழகவே விழைகிறேன். அறிவுச்சத்திற்கான குறுக்குவழி இதுவே. ஆனால், அது எளிமையான வழியல்ல!

வட மொழியின் கருணை, தயை, காருண்யம் என்று பல சொற்களாலும் விளக்கமுடியாத ‘kindness’ அன்பு என்ற தமிழ்ச்சொல்லில் கட்டுண்டுவிடுகிறது.

‘அன்புடைமை’ இப்போது புதுப் பொலிவில் துலங்குகிறது!

இலக்கியத்தை உண்மையில் ஊன்றிப்படித்தவன் அன்பு நிறைந்தவனாகவே இருப்பான். ஏனெனில், இலக்கியம் படிப்பதன் பயன் மனது செம்மையாதலும், சிந்தனை விசாலமாதலும் என்பது பொது அறிவு. அப்படி இல்லாவிடில் அவன் படித்ததினால் எந்தப் பயனையும் அடையவில்லை என்றுதானே கொள்ளவேண்டும்?

---

மற்ற உயிரினங்களைப் போலவே, உயிரினம் என்ற அளவில் எதையும் கொடுக்க வேண்டிய அவசியம் மனிதர்களுக்கும் இல்லை. பண்பும், கலாச்சாரமும், கல்வியும், ஒழுங்கும், மனிதர்களுக்கு சமூகத்தில் அவர்களுக்கான இடத்தை நிலைநாட்டுவதுடன், ஓரிடத்திலிருந்து மேலோரிடத்திற்குச் செல்லும் விழைவை அளிக்கின்றன.

இதிலே பெரும்பான்மைச் சமூகம் எதைக் கொண்டாடுகிறதோ, அதற்கே மிகுந்த செல்வாக்கு இருக்கிறது.

இயற்கையாக இன்னொருவன் தன் உணவுக்கும் துய்ப்பிற்கும் போட்டியாக வருபவன் என்ற கற்காலத்தினும் தொன்மையான நினைவிற்கு, எதிர் துருவமாக இருப்பது அன்பெனும் உணர்ச்சி. இது அறிவுமுதிர்ச்சியால் வருவது — இதை நான் சொல்லவில்லை. Illinois மாநிலத்தின் ஆளுநர் JB Pritzker Northwestern பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் இதைச் சொல்கிறார்

அதற்கடுத்த அறிவுமுதிர்ச்சி, சமூகச் செல்வாக்கு மிக்க வளத்தையும் அறிவையும் எப்படியேனும் அடைய வேண்டும், அப்படி அடைந்தவர்களையே ‘உயர்ந்தவர்கள்’ என்று வரிந்துகொள்ள வேண்டும் என்ற நவீன மிருக மூளையையும் வென்று, அன்பை முதன்மைப்படுத்துவதில் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...