முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விட்டு விடுதலையாகி...

...நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே!



தனிமனித சுதந்திரத்தின், உரிமையின் உண்மையான தேவையை உணர்ந்தவர்கள் பெண் விடுதலையின் இன்றியமையாமையையும் அறிவார்கள். ஒடுக்குமுறை என்பது உடல்வினை சார்ந்தது அல்ல - அது மனம் சார்ந்தது. அதற்கு எதிரான போராட்டம் ஒரு கருத்தாக்கத்திற்கு எதிரான போராட்டம். பெண்விடுதலை என்பது காலங்காலமாய் நம் சமூகத்தில் ஊறியிருக்கும் பெண்ணியல்புக் கருத்தாக்கங்களில் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுதலையடைவதே!



பெண்களுக்கென்று எழுதப்படாத வாழ்க்கை விதிமுறைகளை, கருத்தாக்கங்களை கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் அவர்கள் மீது திணிக்கிறோம். தனிமனித உரிமை மற்றும் சுதந்திரம் குறித்து நரம்பு புடைக்கப் பேசும்போது, அச்சுதந்திரம் மற்றும் உரிமைகள் பெண்களையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடுகிறோம். பிறப்பால் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்பதும் இப்படி வலிந்து திணிக்கப்பட்ட/படுகின்ற ஒரு சமூகக் கருத்தாக்கமே. கவனமாகப் பார்த்தால் இந்த இரண்டு ஒடுக்குமுறைகளுக்கும் வேராக ஒரு பொதுவான கருத்து வன்முறை தெரிகிறது.



ஒரு சமயம் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறையை தனிமனித சுதந்திரத்திற்கு எதிராகப் பார்ப்பவர்கள், வேறொரு சமயம் பெண்களை மனிதராகப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். ஒருவேளை மனிதர்களின் சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறை இருக்கும் வரை பேதம் பாராட்டும் போக்கு ஏதோ ஒரு வகையில் மனத்தில் ஒளிந்துகொண்டுதானிருக்கும் - என்றாவது கொடூரமாகத் தலைதூக்கும். ஆக, இவற்றில் ஒன்றை அடைந்து, இன்னொன்றை அடையாமல் இருப்பதில் உண்மையான சமவுரிமைச் சமுதாயம் காண்பதில் வெற்றி கிட்டாது.



சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நாகரீகமடைந்த (அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிற) சமூகத்தில் எவ்வளவு இகழ்வோ, அவ்வளவு இகழ்வு பெண்களுக்கு எதிரான வன்முறையும். இவ்விரண்டுக்கும் எதிரான போராட்டங்கள் தனிமனித உரிமை மற்றும் சுயமரியாதை என்கிற பொதுவான தேவைகளை முன்வைத்தது. இவற்றில் ஒன்றை ஆதரித்தும், இன்னொன்றைப் புறந்தள்ளியும் ஒழுகுபவர்கள் பொய்யர்களன்றி வேறில்லை.

முக்கியமானதொரு பின்குறிப்பு: பல காரணங்களினால் மேற்கூறிய கருத்தாக்கங்கள் சில என் மனதிலும் வேரூன்றியிருக்கின்றன. வெளிச்சத்தை நோக்கிய ஒரு பெரும்பயணத்தின் ஆரம்பநிலையிலேயே நானும் இருக்கிறேன். பெண்ணியம் பற்றிய சிலரின் எழுத்துக்களையும், தலித் இலக்கியங்களையும் இப்போதுதான் கடந்த சில வருடங்களாய்ப் படித்து வருகிறேன். அதன் வழியாக உலக நடப்புகளைப் புதிய கண் கொண்டு பார்க்கவும் பழகி வருகிறேன்.

கருத்துகள்

வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கண்ணன், அருமை.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுதர்சன்!
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், மிகவும் அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். தெரிந்தோ தெரியாமலோ இந்தக் கருத்துருவாக்கங்கள் என்னுள்ளும் எங்கோ மூலைகளில் பதிந்து கிடக்கலாம். சமீப காலங்களில் அவற்றை இனங்கண்டுகொண்டு உள்ளுக்குள்ளேயே நசுக்கி எறிந்து விட முயல்கிறேன். இந்தப் பயணம் நீங்கள் சொன்னது போல் இன்னும் தூரம் அதிகம்.

வலைப்பதிவுகளும், வாழ்க்கையும் கூட இந்தக் கல்விக்குப் பெரிதும் உதவுகின்றன. ஒரு சமுதாயப் புரட்சி என்றில்லாமல் இது ஒவ்வொருவரின் மனதுள்ளும் நடக்க வேண்டும். அதுவே உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும். அந்த வகையில் உங்களது இந்தப் பதிவும், இது சொல்லும் சுயபயணங்களும் முக்கியம்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு சமுதாயப் புரட்சி என்றில்லாமல் இது ஒவ்வொருவரின் மனதுள்ளும் நடக்க வேண்டும். அதுவே உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும்.//
மிகச்சரி, செல்வா.

நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...