முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விட்டு விடுதலையாகி...

...நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே!



தனிமனித சுதந்திரத்தின், உரிமையின் உண்மையான தேவையை உணர்ந்தவர்கள் பெண் விடுதலையின் இன்றியமையாமையையும் அறிவார்கள். ஒடுக்குமுறை என்பது உடல்வினை சார்ந்தது அல்ல - அது மனம் சார்ந்தது. அதற்கு எதிரான போராட்டம் ஒரு கருத்தாக்கத்திற்கு எதிரான போராட்டம். பெண்விடுதலை என்பது காலங்காலமாய் நம் சமூகத்தில் ஊறியிருக்கும் பெண்ணியல்புக் கருத்தாக்கங்களில் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுதலையடைவதே!



பெண்களுக்கென்று எழுதப்படாத வாழ்க்கை விதிமுறைகளை, கருத்தாக்கங்களை கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் அவர்கள் மீது திணிக்கிறோம். தனிமனித உரிமை மற்றும் சுதந்திரம் குறித்து நரம்பு புடைக்கப் பேசும்போது, அச்சுதந்திரம் மற்றும் உரிமைகள் பெண்களையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடுகிறோம். பிறப்பால் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்பதும் இப்படி வலிந்து திணிக்கப்பட்ட/படுகின்ற ஒரு சமூகக் கருத்தாக்கமே. கவனமாகப் பார்த்தால் இந்த இரண்டு ஒடுக்குமுறைகளுக்கும் வேராக ஒரு பொதுவான கருத்து வன்முறை தெரிகிறது.



ஒரு சமயம் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறையை தனிமனித சுதந்திரத்திற்கு எதிராகப் பார்ப்பவர்கள், வேறொரு சமயம் பெண்களை மனிதராகப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். ஒருவேளை மனிதர்களின் சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறை இருக்கும் வரை பேதம் பாராட்டும் போக்கு ஏதோ ஒரு வகையில் மனத்தில் ஒளிந்துகொண்டுதானிருக்கும் - என்றாவது கொடூரமாகத் தலைதூக்கும். ஆக, இவற்றில் ஒன்றை அடைந்து, இன்னொன்றை அடையாமல் இருப்பதில் உண்மையான சமவுரிமைச் சமுதாயம் காண்பதில் வெற்றி கிட்டாது.



சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நாகரீகமடைந்த (அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிற) சமூகத்தில் எவ்வளவு இகழ்வோ, அவ்வளவு இகழ்வு பெண்களுக்கு எதிரான வன்முறையும். இவ்விரண்டுக்கும் எதிரான போராட்டங்கள் தனிமனித உரிமை மற்றும் சுயமரியாதை என்கிற பொதுவான தேவைகளை முன்வைத்தது. இவற்றில் ஒன்றை ஆதரித்தும், இன்னொன்றைப் புறந்தள்ளியும் ஒழுகுபவர்கள் பொய்யர்களன்றி வேறில்லை.

முக்கியமானதொரு பின்குறிப்பு: பல காரணங்களினால் மேற்கூறிய கருத்தாக்கங்கள் சில என் மனதிலும் வேரூன்றியிருக்கின்றன. வெளிச்சத்தை நோக்கிய ஒரு பெரும்பயணத்தின் ஆரம்பநிலையிலேயே நானும் இருக்கிறேன். பெண்ணியம் பற்றிய சிலரின் எழுத்துக்களையும், தலித் இலக்கியங்களையும் இப்போதுதான் கடந்த சில வருடங்களாய்ப் படித்து வருகிறேன். அதன் வழியாக உலக நடப்புகளைப் புதிய கண் கொண்டு பார்க்கவும் பழகி வருகிறேன்.

கருத்துகள்

வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கண்ணன், அருமை.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுதர்சன்!
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், மிகவும் அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். தெரிந்தோ தெரியாமலோ இந்தக் கருத்துருவாக்கங்கள் என்னுள்ளும் எங்கோ மூலைகளில் பதிந்து கிடக்கலாம். சமீப காலங்களில் அவற்றை இனங்கண்டுகொண்டு உள்ளுக்குள்ளேயே நசுக்கி எறிந்து விட முயல்கிறேன். இந்தப் பயணம் நீங்கள் சொன்னது போல் இன்னும் தூரம் அதிகம்.

வலைப்பதிவுகளும், வாழ்க்கையும் கூட இந்தக் கல்விக்குப் பெரிதும் உதவுகின்றன. ஒரு சமுதாயப் புரட்சி என்றில்லாமல் இது ஒவ்வொருவரின் மனதுள்ளும் நடக்க வேண்டும். அதுவே உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும். அந்த வகையில் உங்களது இந்தப் பதிவும், இது சொல்லும் சுயபயணங்களும் முக்கியம்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு சமுதாயப் புரட்சி என்றில்லாமல் இது ஒவ்வொருவரின் மனதுள்ளும் நடக்க வேண்டும். அதுவே உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும்.//
மிகச்சரி, செல்வா.

நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...