முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோபச் சுழற்சி

மனத்திற்கு ஒப்புதலில்லாத நிகழ்வு ஒன்று கண்முன்னே நடக்கிறது. இந்நிகழ்வுகளை வருமுன் காக்க முடியாது - வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் எதிர்பாராத பல தருணங்களின் சேர்க்கை தானே. இந்நிகழ்வு மனத்திற்குச் சோர்வு தருவதுடன் தன் வயமின்றி நடக்கும் இவைகளைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்த ஒரு இயலாமை குடி கொள்கிறது.

இயலாமை கோபமாக வெளிப்படுகிறது. கோபம் அறிவுக்கு ஒரு கும்மாங்குத்து வைத்து, அதை மயக்கமடையச் செய்கிறது. தாற்காலிகமாய் மனத்தை அறிவு பிரிகிறது.

இந்நிலையில் கோபத்தின் பிடியில் மனத்திற்குப் பித்துப் பிடிக்கிறது. உள்மனத்தின் எல்லாச் சிறுமைகளையும் மீட்டு அது மனத்திரையில் காட்டுகிறது. அறிவின்றி ஏதேதோ அர்த்தமற்ற சூளுரைகளைச் செய்து, மீண்டும் இந்நிலைக்கு ஆளாவதில்லை என்று உறுதி கொள்வது போல் நடிக்கிறது. சிறுமைகள் எண்ணத்தில் வலம் வந்த பிறகு, அதன் காரணமாக எழும் சுய பரிதாபத்தில் மனம் அமிழ்கிறது. எல்லாத் தவறுகளையும் சாட்டின்றி ஒப்புக்கொள்வதுடன் 'இந்தச் சிறுமைகளின் வடிவமே நான்' என்று இறுமாப்புக் கொண்டு உறுதியடைவது போலவும் பாசாங்கு செய்கிறது. இப்படியான ஆட்டத்தில் மனச் சோர்வு உடற்சோர்வையும் உண்டாக்குகிறது.

அறிவு மெல்ல மயக்கம் தெளிந்து மனத்திடம் மீள்கிறது. மனது அமைதி கொண்டு நடந்ததை நிதானமாக எண்ணிப்பார்த்து, அதற்கு ஒரு வலைப் பதிவு வடிவம் தருகிறது. கை தட்டச்சி முடிக்கிறது.

மீண்டும் ஒரு/பல கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுக்காய்/நிகழ்வுகளுக்காய் காத்திருந்து தொடர்கிறது இருப்பு.

கருத்துகள்

NambikkaiRAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு! தொடருங்கள்!.
நானும் இப்போது என்பகுதியில் சுயமுன்னேற்ற தொடர் ஒன்று எழுத ஆரம்பித்துள்ளேன்.
இளங்கோ-டிசே இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், இந்தப்பதிவை வாசித்தளவில் உங்கள் மனதுக்கு கனமான விடயம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது என்பது புரிகிறது.
//மனது அமைதி கொண்டு நடந்ததை நிதானமாக எண்ணிப்பார்த்து, அதற்கு ஒரு வலைப் பதிவு வடிவம் தருகிறது.//
நீங்கள் அதிலிருந்து மீண்டு சற்று இயல்புக்கு வந்திருப்பதை வாசிக்கையில் நிம்மதி படர்கிறது.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி positiveRama.
// நானும்... //
(இது சுயமுன்னேற்றக் குறிப்பெல்லாம் இல்லை - ஒரு சுய புலம்பல் தான்)

//இப்போது என்பகுதியில் சுயமுன்னேற்ற தொடர் ஒன்று எழுத ஆரம்பித்துள்ளேன். //
நல்லது. படிக்கிறேன்.

டிசே, கனமானதொன்றும் இல்லையானாலும் பாதிப்பில் கனக்குறைவில்லை. உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி.
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
குரங்கே கோபமா?

:-) உங்களச் சொல்லலே :-)
Suresh இவ்வாறு கூறியுள்ளார்…
மன ஓட்டத்தை ஆழ்ந்து உற்று நோக்கி அதை இப்படி எழுத்தாக்குவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல...அது உங்களுக்கு நன்றாக சாத்தியமாக இருக்கிறது. என் குரு பாலகுமாரனின் நடையை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன்.

வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...