முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Save Darfur!

ருவாண்டாவிற்குப் பிறகு, அதை விட பல மடங்கு கொடூரமான இனப்படுகொலைகள் சுடான் நாட்டின் டர்ஃபூர் பகுதியில் நடந்து வருகிறது. சுடான் அரசின் பின்பலத்தில் ஜஞ்சாவீத் என்ற கும்பல் கருப்பின சாதாரணர் மீது வன்முறையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாலியல் வன்முறைக்கும், ஆண்கள், சிறுவர்கள் படுகொலைக்கும் ஆளாகிறார்கள். இதுவரையில் பாலியல் வன்கொடுமை ஒரு இன அழிப்பிற்கு முக்கியமான ஆயுதமாகப் பயன் படுத்தப் படுவது நான் கேள்வியுறாதது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்தேறி வரும் இந்த கோரத்திற்கு சுடான் அரசு மறைமுகமாகத் துணை போவதுடன், உதவிக்குச் செல்லும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு உரிய ஒத்துழைப்பையும் நல்குவதில்லை. சர்வதேச அளவில் ஓட்டரசியல் நடத்தும் வல்லரசுகளுக்கு இதில் தலையிட அரசியல் ஆதாயம் இல்லாமல் போகலாம். ஐ நா வின் மென்மையான வலியுறுத்தல்கள் நிலைமையை பெரிய அளவில் மாற்றியமைக்கப் போவதில்லை. மனித உயிர்கள் மிகப் பகிரங்கமாக துச்சமாக மதிக்கப் படுவதும், அவமானப் படுத்தப் படுவதும் மனித உரிமை மீறலின் புதிய எல்லைகளைத் தொடுகின்றனவாகும்.

ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் பார்த்த பிறகே எனக்கு 94-95 களில் நடந்தேறிய ருவாண்டாவின் கோரம் ஓரளவிற்கு இப்போது புரிந்தது. இப்போது அதையும் தாண்டுகின்ற மனித உரிமை மீறல் நம் கண்முன்னே நடந்தேறுகிறது. இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும்.

இந்த அநியாயம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவே இப்பதிவு.

நன்றி: திண்ணையில் ஆசாரகீனன் கட்டுரை (டர்ஃபூர் பிரச்சனை குறித்து ஹிந்து மூலமே முதலில் தெரிந்து கொண்டேன். இது குறித்த அவர்கள் தலையங்கமும், அதற்கு இந்திய சுடான் தூதரகம் வெளியிட்ட மறுப்பும் சுமார் 4 மாதங்களுக்கு முன்னால் பிரசுரமாகியது. இதையும் தவிர இப்பிரச்சனை குறித்த மூன்று-நான்கு கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன என்ததை ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லி வைக்கிறேன்)

சில சுட்டிகள் (ஆசாரகீனன் கட்டுரையில் இருந்து):

Darfur : A Genocide We Can Stop

Save Darfur

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...