முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செத்த பாம்பு

நேற்று இரவு பொதிகையில் 'அலசல்' நிகழ்ச்சியில் அசோகமித்திரன் செவ்வி. 'அந்த'க் கேள்வியும் கேட்கப்பட்டது. ஏதோ வழவழாவென்று எதையோ சொல்லிவைத்தார், பாவம்.

நாய்ப் பேச்சிற்குப் பிறகு ஜெயகாந்தன் நிலைமையும் மோசமாகிவிட்டது. ஈழநாதன் ஜெயகாந்தனின் இந்தப் பேச்சை தூசு தட்டி எடுத்திருக்கிறார். ஜெயகாந்தனும் பாவம் தான்.

இலக்கியவாதிகள் இன்று இரு தளங்களில் இயங்குபவர்கள் என்று தோன்றுகிறது. நிஜமான, சுய உணர்வுடன் இயங்கும் ஒரு சகஜ நிலைத் தளம். இன்னொன்று, அவர்களுக்கு வசப்பட்ட ஒரு கலையை, ஒழிந்த நேரத்தில் பயிலவும், அதனால் மனநிறைவும் ஓய்வும் பெறவோ, பின்னர் அதையே வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யவோ இயங்குவது - ஒரு கற்பனைத் தளம்.

அவர்களின் வாழ்க்கை நெறி, சமூக விழுமியங்கள் பற்றிய பார்வைகளை அவர்கள் படைப்புக்களில் அவ்வப்போது முன்வைப்பார்கள். வாசகனுக்கு ஒரு எழுத்தாளனின் இவ்வகை வெளியீடுகள் அந்த எழுத்தாளன் சார்ந்துள்ள நெறிகளை, விழுமியங்களைக் குறித்த ஒரு பார்வையை, காலப்போக்கில் உருவாக்கிக் கொள்ளப் பயன்படுகிறது. இது வாசகன் உருவாக்கிக் கொள்ளுகிற கருத்தேயன்றி எழுத்தாளன் சார்ந்த நெறி குறித்த துல்லியமான கணிப்பன்று. இதனால் நம் ஆதர்ச புருஷர்கள் சகஜ நிலையில் சிலவற்றைச் சொல்லும்போது நாம் உருவாக்கிய பிம்பங்கள் உடையலாம். இதற்கு முழுப்பொறுப்பையும் நாமே தான் ஏற்க வேண்டும்.

இப்படியல்லாமல், பொது இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களால் இந்த இரண்டு தளங்களையும் ஒன்றாகக் காண முடிகிறது. இவர்கள் தம் ஆதர்ச நெறிகளைத் தழுவியே எப்போதும் இயங்கத் தலைப்படுதலால் இவர்கள் பேச்சிற்கும் படைப்புகளுக்கும் வாழ்க்கைமுறைகளுக்கும் இடையே எந்த முரணும் ஏற்படுவதில்லை. இதனாலேயே இவர்கள் தீவிரவாதிகளாகவோ, பைத்தியக்காரர்களாகவோ(பாரதி), புரட்சிக்காரர்களாகவோ(சே) அறியப்படுகிறார்கள். இவர்கள் வாழ்வதே பொது வாழ்க்கை.

உன்னதமான, உண்மையான கலைஞனுக்கும் இப்படியான இரண்டு தளங்கள் கிடையாது என்று தோன்றுகிறது. அவனது உலகம் தனித்துவமானது. இவன் தன்னைத் தன் படைப்புக்கள் மூலம் மட்டுமே வெளிக்காட்டுவான். செவ்வியெல்லாம் கிடைக்காது.

இந்தப் பிரிவினரில் யார் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுகொள்ளும் திறன் நமக்கு இருக்கிறது. இதனால் யாரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதும் நமக்குத்தெரியும். முதல் பிரிவினர் நம்மைப் போன்ற சாதாரணரே. நம்மில் சிலருக்கு படங்கள் வரையும் திறனும், பாடும் திறனும், நாக்கால் மூக்கைத் தொடும் திறனும் இருப்பது போல சிலருக்கு எழுத்தும் இருக்கலாம். நாம் அனுபவங்களில் இருந்தும், வாசிப்பில் இருந்தும், வாழ்க்கையில் இருந்தும் தினம்தினம் கற்றுச் செறிவுகொள்வது போலத் தான் அவர்களும் முயல்கிறார்கள். இவர்கள் படைப்புக்களை மட்டும் ரசிக்காமல் அவர்களது முரண்களை சந்திக்கு இழுத்து அவர்களை வசைபாடுவதும் சாட்டையால் அடிப்பதும் செத்த பாம்பை அடிப்பதற்குச் சமம் தானே?

கருத்துகள்

Thangamani இவ்வாறு கூறியுள்ளார்…
கலையோ அல்லது ஒருவனது அக உலகோ அவனது ஏதோ ஒரு தேவையினாலேயே திறக்கிறது, தேடலின் மூலம் கூர்மை பெறுகிறது. இங்கு அத்தேடலை நான் ஆன்மீக மயமானதென்றே சொல்லுவேன். அது தான் யார் என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமென்ப்பதில்லை, ஆனால் நிச்சயம் தனக்கும் இந்த உலகுக்கும் இடையில் இருக்கிற உறவின் தளத்திலேயே எல்லா தேடலும் நடக்கிறது. இத்தேடலில் நேர்மையும், வைராக்கியமுமே முக்கியமாகிறது. பெரிதினும் பெரிது கேள் என்று பெரிதை நோக்கியே போய்க்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது; ஆனால் அதையும் 100% சுயதேவையின் பெயரிலேயே செய்யவேண்டும். நடுவில் இதுதான் அது என்று மயங்கி நிற்க எவ்வளவோ சாத்தியங்கள் உண்டு.

நம்மைப் பற்றிய அடையாளங்களாக நாம் எதை கொள்கிறோமோ அதைச் சார்ந்து மனமும், தன் முனைப்பும் உற்பத்தியாகின்றன. அடையாளங்களுக்கும் தேடுகிறவனுக்கும் இடையில் இருக்கிற மிக நுட்பமான வித்தியாசத்தைக் கண்டுகொள்கிற கூர்மையும், வைராக்கியமும் தேவை.. இப்படி அது போய்க்கொண்டே இருக்கிறது. இதில் நடுவில் பாரதியும் சாத்தியமாகிறது, பாலகுமாரனும் சாத்தியமாகிறது..
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
முழுதாக கிரகித்துக் கொள்ள மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியிருந்தது.

நன்றி தங்கமணி
இளங்கோ-டிசே இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், நல்ல பதிவு. நீங்கள் எழுதிய விதம் பிடித்திருந்தது.
//நிச்சயம் தனக்கும் இந்த உலகுக்கும் இடையில் இருக்கிற உறவின் தளத்திலேயே எல்லா தேடலும் நடக்கிறது. இத்தேடலில் நேர்மையும், வைராக்கியமுமே முக்கியமாகிறது//
//இப்படி அது போய்க்கொண்டே இருக்கிறது. இதில் நடுவில் பாரதியும் சாத்தியமாகிறது, பாலகுமாரனும் சாத்தியமாகிறது..//
தங்கமணி எழுதிய பின்னூட்டத்தில் உள்ள கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
இளங்கோ-டிசே இவ்வாறு கூறியுள்ளார்…
காருண்யன், தங்கமணியின் தளத்திற்கு இந்த முகவரியில் சென்று பார்க்கலாம்....
http://www.ntmani.blogspot.com/
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
டிசே,

நன்றி.
மு. சுந்தரமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,
எனக்கும் கிட்டத்தட்ட இதே கருத்து தான். முரண்படுவது பிம்ப உற்பத்திக்குக் காரணம் வாசகர்கள் மட்டும் தான் என்பதில். பொதுவாக எழுத்தாளர்களை "படைப்பாளி", எழுத்தை "படைப்பு" என்றெல்லாம் பிரம்மாவின் பீடத்தில் உட்காரவைப்பது, அவர்களும் தங்கள் எழுத்தை "தேடல்", "ஆத்ம திருப்தி" என்று பெரிய வார்த்தைகளைச் சொல்லி பயமுறுத்துவது, போதாதுக்கு அவர்களின் நண்பர்கள் எழுதும் நீண்ட முன்னுரைகளும், புகழுரைகள் போன்றவற்றை வைத்தே வாசகர்கள் எழுத்தாளர்களை தங்களின் இலட்சியப் புருஷர்களாக்கிக் கொள்கிறார்கள். அதில் எழுத்துக்கும் அவர்களுடைய நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள கோடு அழிக்கப்பட்டுவிடுகிறது. அந்த வகையில் "தீவிர" இலக்கிய வாசகர்களின் மனநிலைக்கும், தீவிர சினிமா ரசிகர்களுக்கும் வித்தியாசம் அதிகமில்லை. புத்தக விளையாட்டின் போது நான் கிண்டலாக எழுதியதற்குக் கூட சிலபேர் உணர்ச்சிவசப்பட்டார்கள். ஜெகா, அமி போன்றவர்கள் நிஜவாழ்க்கை விஷயங்களில் உதிர்க்கும் கருத்துக்களைக் குறித்து கேள்விகேட்டால் எம்.ஜி.ஆர்., ரஜனி ரசிகர்களைப்போல சிலர் உணர்ச்சிவசப்படுகிறார்கள். சினிமா ரசிகர்கள் கொஞ்சம் கரடுமுரடாக இருக்கலாம். இலக்கிய வாசகர்கள் sophisticated ஆகத் தெரியலாம். ஆனாலும் இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அ-புனைவு எழுதுபவர்களுக்கு இப்படி ரசிகர் மன்றமும் இருக்காது. அமிக்கு நேர்ந்தது போல பிம்ப விபத்தும் நேராது. அரசியல்வாதிகளைப் போல அவர்கள் மீதும் அவ்வப்போதே பூக்களும், புழுதியும் வீசப்பட்டுவிடுவதால் இந்த பிம்பப் பிரச்சினையில்லை.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சுந்தரமூர்த்தி,

கருத்திற்கு நன்றி.


மற்றபடி,

//இலக்கிய வாசகர்கள் sophisticated ஆகத் தெரியலாம். ஆனாலும் இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பது என் தாழ்மையான கருத்து//

இந்தக் கருத்தில் தாழ்மையே இல்லை. சொல்லப்போனால் ரசனைகளில் ஏற்றத்தாழ்வு என்பது நம்மால் கற்பிக்கப் படத்தே. ஒருவரின் விருப்பு, மனநிலை மற்றும் ஈர்ப்புத் திறன் சார்ந்தே சில விடயங்கள் அவரைப் போய்ச் சேர்கின்றன - அது அவரது ரசனையாகிறது. பிடி சாமி ரசிகர்களும், மார்க்குவேஸ் ரசிகர்களும் (அவர்கள் ரசிக்கும் விடயத்தின் பரப்பில் வித்தியாசம் இருந்தாலும்,) ரசனை என்ற அம்சத்தில் ஒரே நிலை தானே?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
kannan,

//உன்னதமான, உண்மையான கலைஞனுக்கும் இப்படியான இரண்டு தளங்கள் கிடையாது என்று தோன்றுகிறது. அவனது உலகம் தனித்துவமானது. இவன் தன்னைத் தன் படைப்புக்கள் மூலம் மட்டுமே வெளிக்காட்டுவான். செவ்வியெல்லாம் கிடைக்காது.//

//முதல் பிரிவினர் நம்மைப் போன்ற சாதாரணரே. நம்மில் சிலருக்கு படங்கள் வரையும் திறனும், பாடும் திறனும், நாக்கால் மூக்கைத் தொடும் திறனும் இருப்பது போல சிலருக்கு எழுத்தும் இருக்கலாம். //

Very well said.

-- Vinobha.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...