முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துணைக்கண்டத்தின் கவாஸ்கர்கள்

தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனை செய்ய என்ன தகுதி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. தெளிவான ஆங்கில உச்சரிப்பு, ஆட்டத்தின் நெளிவு-சுளிவுகள் தெரிந்திருத்தல், மற்றும் ஆட்டத்தைப் பற்றிய நடுநிலையான கருத்தை முன்வைக்கும் கண்ணியம் ஆகியன அடிப்படைத் தகுதிகள் என்று வைத்துக் கொள்ளலாமா? இதுபோக, கடந்த 10-15 ஆண்டுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகள், அவற்றின் முக்கிய நிகழ்வுகள் என்று ஞாபகம் வைத்துக் கொள்வது விரும்பத்தக்கது. இத்தோடு கொஞ்சூண்டு நகைச்சுவை உணர்வு இருந்தால் எதேஷ்டம்.

பழைய ஆட்டக்காரர்கள் இதற்கு வருவது வழமையாகிவிட்ட ஒன்று. இதில் ரிச்சி பெனாட், டோனி க்ரேக், டீன் ஜோன்ஸ், ஹோல்டிங், டேவிட் கோவர் ஆகியோரின் வர்ணனை எனக்குப் பிடிக்கும். இந்தியத் துணைக்கண்டத்தில் இருப்பவர்களில், ரவி சாஸ்திரி, சிவராமகிருஷ்ணன் ஆகியோரின் வர்ணனைகள் நல்ல தரம் வாய்ந்தது என்று எனக்கு அபிப்பிராயம். மீதி சஞ்சய், மற்றும் கோஷ்டிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நவஜோத் சிங் சித்துவை இந்த விளையாட்டில் நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.

ஆனால், இந்த கவாஸ்கர், ரமீஸ் ராஜா, மற்றும் ரஞ்சித் ஃபெர்னாண்டோ ஆகியோரின் வர்ணனை இருக்கிறதே, இது தனி ரகம். மூவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். வர்ணனையால் கிச்சுக்கிச்சு மூட்டுபவர்கள். இரண்டு அணிகள் ஆடினாலும், இவர்கள் தங்கள் அணியின் விளையாட்டையே சிலாகிப்பார்கள். தங்கள் அணி ஜெயிக்கும் நிலையிலிருந்தால் சந்தோஷமான வர்ணனை வரும். தோற்கும் நிலையில் இருந்தால், அணியில் இருப்பவர்களை ஆதியோடந்தமாகத் திட்டித் தீர்ப்பார்கள் - அணியின் பயிற்சியாளர், மேலாளர், அணியைத் தேர்ந்தெடுத்தவர்கள் என்று எல்லாரையும் சாடும் இவர்கள், எதிர் அணியின் ஆட்டத்தைப் பற்றி இரண்டொரு நல்ல வார்த்தை சொல்ல வேண்டும் என்ற தார்மிக பொறுப்பையும் மறப்பர்.

கவாஸ்கர் இந்த மாதிரி நம்மாட்கள் மேல் விழுந்து பிராண்டுவதைப் பார்க்கும் போது, இப்போது வாய் கிழியப் பேசும் இவர், அந்தக் காலத்தில் மட்டும் என்ன கிழித்தார் என்ற எண்ணம் வரவே செய்கிறது. இந்த மூவருமே, கொஞ்சம் அளுகுணிகள். அதிலும் கவாஸ்கர், நடுவர் நமக்கு எதிரான தீர்ப்பு கொடுத்தால், கய்யா முய்யாவென்று கதறுவார். இதற்குப் பிறகு நம்மாட்கள் சோதா மாதிரி தோற்றால் கேட்கவே வேண்டாம். இது போதாமல், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் ஆடும்போது, பந்துவீச்சாளர்கள் வாய்க்கு வந்தபடி மட்டையாளரைத் திட்டுவார்கள் (இதற்கு மட்டையாளர்கள் பெரும்பாலும் சுஜாதா சொல்கிறமாதிரி "ஞானம் பெற்ற புத்தர்கள்" மாதிரி நின்று கொண்டிருப்பர்) இதையெல்லாம் எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னால் அது மரியாதை - ஒரு காரியம் நமக்கு ஏற்புடையதல்ல என்று மற்றவர்களுக்குப் புரியவைக்க, ஆணித்தரமாக ஒரு முறை சொன்னாலே போதும். இவர் ரொம்பவும் அளுகுணி (whining) செய்வது சோர்வையே அளிக்கிறது.
நேற்று பாகிஸ்தான்-இலங்கை ஆட்டத்தில், யூசஃப் யுஹானா ரங்கன ஹெராத்தின் பந்தை நெம்பினார். அது ஹெராத்தின் வலப் பக்கமாய் வர,த்தைப் பிடிக்கத் தாவும் போது இந்தப்பக்கம் இருந்த ஷோயப் மாலிக் மீது மோதிக் கொண்டார். மோதவில்லையானாலும் பிடிக்கக் கொஞ்சம் கஷ்டமே. ரஞ்சித் உடனே சொன்னார், மாலிக் குறுக்கே வந்ததால் தான் பிடிக்க முடியவில்லை என்று. இன்னொரு பந்து, யுஹானாவின் மட்டையிலிருந்து, அவர் காலணியில் பட்டு எழும்ப முபாரக் அதைப் பிடித்தார். ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுக்கவில்லை. இதைப் பற்றி ரஞ்சித் புலம்பித் தள்ளினார். இத்தனைக்கும் இலங்கை 201 ஓட்ட வித்தியாசத்தில் ஜெயித்தது!

நகைச்சுவை உணர்வு பற்றிச் சொன்னேன். ரஞ்சித் ஃபெர்னாண்டோ, ரமீஸ் ஆகியோரின் ஆங்கிலமே இதைப் பறை சாற்றும். இரண்டு பேரும் உளறிக் கொட்டுவதில் மன்னர்கள். அதிலும் ரமீஸ் சமீப காலமாக ஒரு புதிய உச்சரிப்பைக் கையாளுகிறார் - இப்படி நிறைய உழைப்புள்ள காமெடி அது. அன்றைக்கு நம்மாட்கள் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், யாரோ (வழக்கம் போல) ஆட்டமிழக்க, எதிரணியினர் சிரித்து அதைக் கொண்டாடினர். கவாஸ்கருக்கு இது பொறுக்கவில்லை - உடனே அவருக்கு வயது 12 க்கும் குறைந்து "சிரிங்க பா சிரிங்க, கடைசியில் சிரிக்க போறது யார்னு பார்ப்போம்" என்று எதிரணிக்கு அறைகூவல் விட்டார். (கடைசியில் நாம் தான் சிரித்தோம்) அன்று டெண்டுல்கர் வழக்கமாக ஆடும் நேர் விளாசல் (ஸ்ரெய்ட் றைவ்) ஆடினார். கவாஸ்கர் "இந்த மாதிரி அடிகளுக்கு மும்பையில் நாங்கள் என்ன சொல்வோம் தெரியுமா?" என்று கேட்டு, "ஒஹொஹொஹொஹொஹோஓஓஓ..." என்று ஆதிவாசி மாதிரி ஓலமெழுப்பினார். ஸ்டீவ் வா பந்தை வெட்டி வெட்டி ஆடும் போதும், அந்தப் பாகிஸ்தான் பொடியன் இம்ரான் நஸிர் அனாயாசமாகச் சுழற்றி அடிக்கும் போதும், மும்பையில் அதற்கெல்லாம் சரியான சொற் பிரயோகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லையாதலால் அமைதி காப்பார். யார் செய்த செலவு என்று தெரியவில்லை, கவாஸ்கரை சரத்தேச கிரிக்கெட் கவுன்சிலின் "டெக்னிகல்" ஆலோசகராகப் போட்டது. இதையும் குறித்துப் பீற்றிக் கொண்டார்.

நேற்று இலங்கை பாகிஸ்தான் ஆட்டத்தில், ரமீஸும் ஃபெர்னாண்டோவும் ஜோடி சேர்ந்து நம்மைக் குதூகலப் படுத்தினார்கள். அப்போது யோசித்தேன், கவாஸ்கரையும் சேர்த்து இந்த மூவரின் உத்திகளில் உள்ள ஒற்றுமையைப் பற்றி.ரமீஸுக்கும், ஃபெர்னாண்டோவுக்கும் பாகிஸ்தான், மற்றும் இலங்கையின் கவாஸ்கர் என்ற பட்டத்தைக் கொடுக்கலாம் - மேற்சொன்ன குணங்களில் கவாஸ்கருக்கே அவை நிறைந்து இருப்பதால்...

கவாஸ்கர் அந்நாளில் நாட்கணக்கில் ஆடுகளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, கட்டை போட்டு சதமடித்தாலும், சர்வதேச அளவில் (பிராட்மென் சாதனையை முதன் முதலில் முறியடித்து) நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்தவர் என்ற மதிப்பு உள்ளது. அதையெல்லாம் இவர் பேசியே கெடுத்துக் கொள்வார் என்று பயமாக இருக்கிறது. இப்போது சிறப்பு ஆலோசகராக இந்திய அணியில் உள்ளார் - வர்ணனைப் பெட்டியில் சொன்னதையெல்லாம் அணிப் பயிற்சியின் போது சொல்லி, அணிக்கு பலம் சேர்த்தால் போதும். வர்ணனையை, அதைச் சிறப்பாய்ச் செய்பவர்களுக்கு விட்டு விடலாம்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,
Very interesting to read. Superb sense of humour.
niinggaL Bayanggara cricket Arvalar ena ninaikkiReen!!
என்றென்றும் அன்புடன்
பாலா
Indianstockpickr இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

நல்ல பதிவு. ஆனாலும் நம்ம கவாஸ்கரை ரொம்பத்தான் வாருரீங்க. நடுநிலை வர்ணனையாளர்களை இந்த காலத்தில் கண்பது அரிது. இதில் கைதேர்ந்தவர்கள் ஆஸ்திரேலிய channel 9 வர்ணனை டீம்: டொனி க்ரேக், மார்க் டைலர், மற்றும் இயன் ஹீலி :2003 இந்திய பயணத்தின் போது இவர்கள் புலம்பித்தள்ளியது கேட்க தேனாக இருந்தாலும், அவர்களின் one sided views கொஞ்சம் ஓவராகவே இருந்தது. இங்கிலாந்து sky tv/channel 4 வர்ணனையும் இந்த வகையே. முக்கியமாக இயன் போதம். 2002 இந்தியா-இங்கிலாந்து தொடரில் கவாஸ்கர் நேர்த்தியாக இவர்களை தாக்குபிடித்தார்! இந்த லிச்ட்'ல் இம்ரான் கான், வாசிம் அக்ரம் இருவரையும் நிச்சியமாக சேர்க்கலாம்.

ஒரளவுக்கு (கவனிக்கவும்:ஒரளவுக்கு) நடுநிலை வர்ணனையாளர்களாக நான் கருதுவது ரவி சாஸ்திரி, சிவா, பாப் வில்லிஸ், மைக்கேல் ஹோல்டிங், பால் அல்லாட், ரிச்சி பெனாட், டீன் ஜோன்ஸ், மைக்கேல் ஸ்லேட்டர், ஹென்ரி ப்லோபீல்ட், டேவிட் கோவர், இயன் பிஷப் போன்றோர்.

தன் சொந்த நாட்டின்மீது இவர்களுக்கு இருக்கும் ஒரு soft corner'ஐ கொஞ்சம் மன்னிப்போமாக!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...