முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோற்றோர், நேசிப்போர், வெல்வோர்

 


எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது!

வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன்.

பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே.

John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம்.

இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…



வாழ்க்கையின் பேறு பொருளாதாரத் சிறப்பில்தான் இருக்கிறதென்று ஆகிவிட்டது காலமும் சமூகமும். சந்தையும் வர்த்தகமுமே இன்று உலகின் ஆகப்பெரிய சக்தியாயிருக்கிறது. ஒரு சமூகத்தின் சீரழிவையோ, அதன் வேட்க்கையையோ, அது கொண்டாடுவதையோ , அந்தச் சமூகத்தின் கல்வியமைப்பு பிரதிபலிக்கும் (இதுவும் பேச்சாளர் சொன்னதே).

அப்படிப் பொருள்முதல்வாதம் இல்லாத (அப்படியொரு காலம் இருக்குமா என்பது ஐயமே — ஆனாலும் பொருளுக்கு அப்பாற்பட்ட விழுமியங்கள் நிலைத்திருந்த) காலக்கடத்தின் வறிய புலவர்களும் கவிஞர்களும் அதை பெரு பொருட்டாக எண்ணியிருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

வறுமை கொடிதே, ஆனால் அது தவிர்க்கமுடியாத தொல்லையாகவே இருந்திருக்குமோ?




ஓ வி விஜயனின் பழைய நேர்காணல் ஒன்றைக் காண நேர்ந்தது. திருவனந்தபுரம் தொலைக்காட்சி நிலையம் படைத்தது. நேர்காணல் செய்கிறவர் நரேந்திர பிரசாத் — இவரை எனக்கு மலையாளப்பட வில்லனாகத்தான் தெரியும். அவருக்கு ஒரு இலக்கிய / பத்திரிக்கை முகம் இருந்ததென்று தெரியாது. பாரதி சொல்லும் ‘பரதேசியைக்கண்டால் கும்பிடு — யார் எந்த வடிவில் இருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது” நினைவில் வந்துபோனது. அதேபோல இந்தப் பழைய தொலைக்காட்சிப் படைப்புகள் — சில அருமையான, நினைவில் நிற்கும் அம்மாதிரியானவை இப்போது முற்றிலும் இல்லாமல் போய்விட்டன.

இருக்கட்டும். விஜயனின் காசாக்கின்டெ இதிஹாசம் முதலான நாவல்கள் குறித்தாயிருந்தது நேர்முகம். விஜயன் சொன்ன ஒன்றை பகிர்ந்துகொள்ளவே இது (கொஞ்சம் புரிகின்ற மலையாளமும், அவரே ஆங்கிலத்தில் சொன்னதும் சேர்த்து — இல்லாவிட்டால் இது என் கருத்தாகிவிடும்!):

“நம்முடைய கதைகளில் வரும் நாயக சங்கல்பங்கள் நமக்கு மேற்கத்திய இறக்குமதியாயிருக்கிறது. நம்முடையதான நாயக சங்கல்பம் ஹைந்தவ (இந்துத்துவ) பாரம்பரியத்தைச் சார்ந்தது. மத பரம்பரியத்தைச் சொல்லவில்லை, கலாச்சாரப் பாரம்பரியத்தைச் சொல்கிறேன். நான் சொல்லுவது — the process of a hero — நம்முடையவை மேற்கினின்றும் முற்றிலும் மாறுபட்டது; மார்குவேசின் தென்னமெரிக்கப் பாரம்பரியம் இவையிரண்டினின்றும் வேறுபட்டது. இந்த நாயகனைப் படைக்க முயன்றிருக்கிறேன்”

இதைப்பற்றி யோசித்தபோது, மேற்கத்திய நாயகன் புறவுலகின் சிக்கல்களை எதிர்கொண்டு அவற்றை முறியடித்து வெற்றி காணும் ஒருவனாகவும், நம்முடைய நாயகன் புறவுலகில் அதையே செய்தாலும், அவற்றை வெறும் சின்னங்களாக உபயோகித்து அகத்தெளிவு பெறும் ஒருவனாக, ‘தன்னை’ வெல்கின்றவனாகவும் தெரிகிறான்.

இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள விஜயனின் நாவல்களைப் படிக்கவேண்டும். அதற்குத் தேவையான மலையாளம் இன்னும் வசப்படவில்லை!


முக்கி முக்கி பாத்தும்மாவின் ஆடு முதல் அத்தியாயம் தான் முடிந்திருக்கிறது. எழுத்துக்களில் கவனம் குவிந்ததில் மொழியை வேண்டும்விதம் நுகர முடியவில்லை. மீண்டும் எழுத்தில் தடுக்கிவிழாமல் வாசிக்க வேண்டும்


இது வெறுப்பவர்களுக்கான, வெறுப்பவர்களினாலான, வெறுப்பவர்களினால் இயங்கும் உலகம். வெறுப்பும் காழ்ப்பும் மனிதரின் ஆயுளை நீட்டிக்கின்றன. இப்பாரையும் இதன் உயிரினங்களையும் நேசிப்பவர்களை மரணம் இங்கிருந்து பிடுங்கிக்கொள்கிறது. படைப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது போலவும், அதை உடனே சமன் செய்வது போலவும்…

கவிதைக்குழுவில் இருக்கும் ஒரு எழுபது வயதுத் தோழிக்குப் புற்றுநோய். இப்போது முற்றி, ஆஸ்பத்திரியில்… துள்ளலும், வேகமும், நிறைந்தவள். எதையும் எப்போதும் பேச அஞ்சாதவள். வாழ்க்கையை மிகவும் நேசிப்பவள். உடலைச் செயலிழக்கச் செய்வதைவிடவும், நம் ஆற்றலை, உணர்ச்சியை, காதலை, தீவிரத்தை, இச்சாசக்தியை வீழ்த்துவதில் புற்றுநோய் வெற்றி காண்கிறது. அற்பப்பதர். கோழை.

(படங்கள் உபாயம்: நண்பன் மகேஷ் )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...