முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கழுதைப்புலி, துள்ளுமான் வரிசையில்...

ஒரு அருவமான மிருகத்தைப் பற்றிய பதிவிது.

எல்லா மென்பொருள் நிறுவனங்கள் போலவும், எங்கள் நிறுவனமும் தகவல் திருட்டைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது - அலுவலகத்தில் அடையாள அட்டை மாலையை எப்பொழுதும் கழுத்தில் தொங்க விடவேண்டும் என்பதில் இருந்து, வக்கீல், மருத்துவரிடம் கூட ரகசியங்களைச் சொல்லக் கூடாது என்று முத்திரைத் தாளில் கையொப்பம் வாங்குவது வரை.

இது நிற்க.

அலுவலக வாயிலில் அடையாள அட்டை மாலையைக் கழுத்தில் மாட்டிக்கொள்ள மரியாதையுடன் நினைவுறுத்தும் காப்பாளரிடம் அரை விநாடியில் துளிர்த்த கோபத்துடன் சொல்கிறேன் "அய்யா, உள்ளே சென்றதும் நெற்றியில் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்கிறேன் இந்த அட்டையை". அவர் அதற்கு ஏதோ சமாதானம் சொல்ல வந்ததைப் பொருட்படுத்தாது, முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே நுழைகிறேன். எல்லாம் உள்ளிருக்கும் மிருகம் படுத்தும் பாடு. "எனக்குத் தெரியாதா?" "இவன் யார் சொல்ல?" என்று பலகுரல்களில் அது தன் அதிருப்தியை உணர்த்துகிறது.

பல மணிநேரம் கால்கடுக்க நின்று, ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு செய்யும் வேலையின் monotony தரும் அயற்சி எனக்குப் புரியவில்லையா? கொடுத்த வேலையயைச் செவ்வனே செய்கின்ற அவர்கள் மேல் எரிந்து விழுந்து அவர்களுக்கு உடலயற்சியுடன் மனவயற்சியும் ஏற்படுத்த வேண்டுமா? எப்படியானாலும் கடமையுணர்ச்சியுடன் பணியாற்றியவரிடம் கோபமாகப் பேச எனக்கு என்ன உரிமை / தகுதி இருக்கிறது? இதையெல்லாம் நான் வெட்கத்தோடு நினைத்துக் கொள்ளுகின்ற நேரம் மிருகம் உறங்கிவிட்டிருந்தது...

என்ன பண்ணித் தொலைக்க? தேவர்மகன் கமல் மாதிரி உள்ளுக்குள் இருக்கும் மிருகம் எப்போது தூங்குகிறது, எப்போது விழித்திருக்கிறது என்று தெரிந்தால் அதை ஒரு கட்டுக்குள் வைக்கலாம்...

கருத்துகள்

Vijayakumar இவ்வாறு கூறியுள்ளார்…
முதலில் நானும் செக்யூரிட்டி மக்கள் நிப்பாட்டி அடையாள அட்டையை கேட்கும் போது இப்படி தான் தோன்றியது.

உலகில் மற்ற இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டிய போது தான் இது உலகத்தின் எல்லா தொழில் நுட்ப அலுவலகங்களுக்கும் பொருந்தும் என தோன்றியது.

சிங்கப்பூரில் அடையாள அட்டை மறந்து சென்று விட்டாலோ, பல நாள் பார்த்து குட்மார்னிங் வைக்கும் செக்யூரிட்டி அன்பரே அன்று தெரியாதவர் போல கேள்விகள் கேட்க அலுவலகத்தின் உள்ளே செல்ல என்னுடைய மேலதிகாரியின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் சகஜம் தான்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
விஜய்,
மூர்த்தி,

உங்கள் கருத்துக்கு நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...