முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ச்சீ... இந்த ஜால்ரா புளிக்கும்!"

"யாரைக் காணொம்?..."

"...சாமியைக் காணொம்"

"சாமியைக் கண்டால்?..."

"...மோட்சம் கிட்டும்"

சின்ன வயதில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் ஐயப்பமார் சரணம் விளிக்கும்போது சொல்வது. ரொம்ப நாளைக் கப்புறம் தான் அது மலையாளத்தில் உள்ள விளி என்று தெரிந்தது. "ஆரைக் காணான்?" (யாரைப் பார்க்க?) என்பதை, "யாரைக் காணவில்லை?" என்று புரிந்து கொண்டதற்குக் காரணம் குட்டன் என்று அறியப்படும் கோவில் வேலையாள். கருப்பான, நெடிந்த திரேகம் - தாடியின் அடர்த்தியில் கூராகத் தெரியும் கண்கள் என்று ஒரு தீவிரத்துவம் உள்ள முகம் ஆதலால் நாங்கள் (பொடிப் பசங்க) எல்லோரும் அவனைக் கண்டு பயப்படுவோம். அவந்தான் இப்படி தப்புத் தப்பாகச் சரணம் விளிப்பவன்.

வேலையில் கடந்த அரையாண்டில் என் பங்களிப்பு பற்றிய பின்னூட்டம் கொடுத்த மேனேஜரிடம் பலமுறை பதவி உயர்வு வேண்டுவது பற்றி நினைவூட்டினேன். இப்போது கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன்.
" உங்கள் பங்களிப்பு நம் நிறுவனத்திற்கு பெரும் உதவியாய் இருந்த்துள்ளது; ஆனால் இன்னும் அடுத்த நிலைக்கான அனுபவம் போதுமா என்று சந்தேகம்; உங்களுக்கு அது போதிய அளவில் வருவதற்காக மூன்று மாதங்கள் ஒரு புதிய காரியத்தைச் செய்ய ஒதுக்கி உள்ளேன். இதே கவனத்துடன் செய்யுங்கள் - நிறுவனத்தின் முக்கியமான பணியாளர்களில் நீங்களும் ஒருவர்" என்று அனுப்பிவிட்டார். (கருணாநிதி, "மந்திரி சபையில் இடமில்லையென்றால் என்ன? என் மனத்தில் இடம் அளித்துவிட்டேன்" என்கிற மாதிரி)

இந்தக் குட்டனை எனக்குச் சுத்தமாய் பிடிக்காமல் போனது ஒரு கோயில் பஜனையின் போது. அப்போதெல்லாம் பஜனை, காலட்சேபம், கச்சேரி என்றால் முதல் வரிசையில் ஆஜராகி, முடிந்தபின் சுண்டல் பஞ்சாமிருதம் வாங்கிச் சாப்பிட்டுத்தான் வீடு திரும்புவேன். பஜனையில் குட்டன் ஜால்ரா (சய்ன் சக், கிண்ணாரம் என்றெல்லாம் சொல்லலாம்) வாசித்து(?)க் கொண்டிருந்தான். எனக்கு அதன்மேல் ரொம்ப நாளாக ஒரு கண். வீட்டில் எனக்கு அது மாதிரி ஒன்று வாங்கிக் கொடுக்கும்படி அடம் பிடித்தேன் - செல்லுபடியாகவில்லை. அன்று என் அம்மாவிடம் அழுது சாட்டியம் பிடித்ததில், குட்டனிடம் சிபாரிசு செய்து ஜால்ரா என் கைக்கு வந்தது. சந்தோஷப் பட்டு, அதை வாங்கிக்கொண்டு, அருகில் இருக்கும் வீட்டுக்கு ஓடினேன். உட்கார்ந்து, ஆசையாய் ஒருதடவை க்ளிங் என்று தட்டினதுதான் தாமதம், முன்னால் குட்டன் வந்து நின்றான். "ஜால்ரா வேணும்னா கோவில்ல வந்து அடி, வீட்டுக்கெல்லாம் எடுத்துகிட்டு வரக்கூடாது" என்றான். நானோ வீட்டில் நான் மட்டும் அதை ஒலிப்பேன் என்றும், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாதென்றும் அழுதேன். குட்டன் என் கையிலிருந்து அதைப் பிடுங்க வந்தான்; வந்த கோபத்தில் ஜால்ராவை வாசலில் விட்டெறிந்தேன். குட்டன் நாக்கை மடக்கி என் பின்புறத்தில் ஒரு அடி கொடுத்து விட்டு, ஜால்ராவை பொறுக்கிக் கொண்டு போனான். அப்போது கறுவிக் கொண்டேன் - பெரியவன் ஆனதும் நிறைய ஜால்ராக்கள் வாங்கி வீட்டில் அடுக்குவது; குட்டனைத் திருப்பி அடிப்பது எனறு.(இரண்டும் நடக்கவில்லை)

பதவி உயர்வு இல்லையென்றாலும் புதிய வேலையில் நான் ரொம்ப முக்கியமான ஆளாக இருக்கிறாற்போல் தெரிந்தது. எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடிந்ததின் சுதந்திரமும் அதிகாரமும் ஒரு மப்பைக் கொடுத்தது. இந்தச் சமயத்தில் மேலாளர் மறுபடி கூப்பிட்டனுப்பினார், போய் நின்றேன். "நீ பொறுப்பேற்றிருக்கும் இந்தக் காரியம் முக்கியமானது; இதன் வெற்றி நிறுவனத்திற்கு இன்றியமையாதது. இந்தப் பொறுப்பை நீ தனியாக சமாளிப்பது உன் திறமையைக் காட்டுகிறது" எனறு நிறுத்தினார். நமக்கு ஒரே புளகாங்கிதம். "இருந்தாலும் இதன் கஷ்டத்தை மனத்தில் கொண்டு, ரவியையும் உன்னோடு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது என் விருப்பம் - நீங்கள் வேலையை உங்கள் விருப்பப் படி பங்கீடு செய்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் ரவிக்கும் இது ஒரு நல்ல அனுபவம் தரும் இல்லையா? உங்கள் அபிப்பிராயம் ?" என்றார். குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாய் ஆனதே என்று "சப்"பென்று போனது - கோபம் வந்தது. நான் சொன்னேன் " ஐயா, நானே உங்களிடம் சொல்லலாமென்றிருந்தேன்; சில சொந்தப் பிரச்சனைகளால் சரிவர வேலை செய்ய முடியவில்லை. இரண்டு வார விடுப்பில் போக வேண்டுமென்றிருந்தேன். நல்ல வேளையாக ரவி பற்றிச் சொன்னீர்கள். என்னால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது - பழைய வேலையே இப்போது செய்கிறேன். இதை ரவியே முழுவதுமாகப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று.

(யாரது, "அட முட்டாளே" என்று சொல்வது? தைரியமிருந்தால் என் முன்னே வாருங்கள்!)

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். வேற ஒண்ணு தான் சொல்வோம்.

"ஆஃபீஸ்ல இதெல்லாம் சகஜமப்பா :-D"
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
KVR,

அப்படீன்றீங்க?
சரி :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...