முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எண்ண நரி

டெட்  ஹ்யுக்ஸின் Thought Fox என்ற கவிதையின் சுமாரான மொழிபெயர்ப்பு ஒன்று (இணையத்தில்) கண்ணில் பட்டது. ஒரு கறாரான, நெகிழ்வற்ற  மொழிபெயர்ப்பு முறையைப் பின்பற்றி, எல்லா ஆங்கிலச் சொற்களையும் இயந்திரத்தனமாக மொழிபெயர்த்தது போல் எனக்குத் தோன்றியது. 

இதன் மூலம் இங்கே.  

ஓரு நள்ளிரவில் காட்டில் சந்தடியில்லாமல், அரவமற்று வந்து போகும்  நரியைப் போலவே யாரும் அறியாமல், எதிர்பாராத தருணத்தில் எழுத்தாளருக்குக்  கற்பனை தோன்றி  மறைகிறது. அந்த நழுவும் பொழுதைப் படம்பிடித்துக் காட்டுகிறது இக்கவிதை. மேற்சொன்ன மொழிபெயர்ப்பில் சில "அடாவடிச்" சொற்கள், மற்றும் வரிக்கு வரி நேரான மொழிபெயர்ப்பு  முறை, ஆகியவை அந்த இரவின் அமைதியையும், நரியின் கள்ளத்தனமான வந்துபோக்கையும் குலைத்து விட்டதாகக் தோன்றியதால் இம்முயற்சி. இதுவும் அவற்றையெல்லாம்  சரியாகக் கொணர்ந்ததாகத் தெரியவில்லை. 

எனினும் ஒரு அங்கலாய்ப்பில் வேறுவிதமாக முயன்றிருக்கிறேன். 



எண்ண நரி - டெட் ஹ்யுக்ஸ்  (Thought Fox - By Ted Hughes)


இந்த நள்ளிரவுத் தருணத்தின் காட்டைக் கற்பனை செய்துபார்க்கிறேன்:
கடிகாரத் தனிமைக்கும் 
வெற்றுத் தாளில் நகரும் என் விரல்களுக்கும் அருகில் 
வேறேதோ உயிர்ப்புடன் இருக்கிறது 


என் சன்னலின் வழியே நட்சத்திரம் ஏதும் தெரியவில்லை:
ஏதோவொன்று  மிக அருகில் 
ஆனால் இருட்டின் உள்ளே பொதிந்து 
இத்தனிமையின் உள்ளே நுழைந்துகொண்டிருக்கிறது:


சில்லென்று, மெல்லென இருள் பனியைப்போல 
ஒரு நரியின் மூக்கு சுள்ளியில், இலையில் படுகிறது;
இரண்டு கண்கள் மட்டும் 
ஒரு நகர்வைப் புலப்படுத்துகின்றன, அஃதிதோ  


மீண்டும் இதோ,
இதோ, 
இதோ 


மரங்களுக்கு இடையே திருத்தமான தடங்களை 
உறைபனியில் பதித்து, 
மரத்தண்டுகளிலும் இடைவெளிகளிலும் நீண்டு சுருங்கித் 
தயக்கத்துடன் பின்தங்கிச் செல்லும்
மெல்லிய நிழலைத் தாங்கி    


வெட்டவெளிகளின் ஊடாகத்  
தெளிந்து வரும் உடம்பு,
ஒரு கண்,  


வர வர விரிந்து தீவிரமாகும் பச்சையுடன்,
ஒளிர்ந்து, குவிந்து,
தன் பாட்டிற்கும் வருகிறது


இறுதியில் சட்டென்ற நரியின் காத்திரமான சூடான நெடியுடன் 
அது தலையின் இருண்ட பொந்தில் நுழைகிறது.
சன்னலில் இன்னும் நட்சத்திரங்கள் இல்லை; கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது,
தாள் நிரம்பிவிட்டது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...