முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருமதி, அழகிய உள்ளம் படைத்தவளே...

இவள் காதலுற்றிருக்கிறாள். ஆபரணங்கள் அணிந்தொருங்கித் தன் காதல் நாயகன் வரவுக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். அவன் இவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்த வலி தாளாமல் ஆறுதலுக்காகத் தன் ஆருயிர்த்தோழியை நாடுகிறாள். வெறும் வார்த்தைகள் ஆறுதல் தருமோ? இவள் துயர் காணப் பொறுக்காமல், தேற்றும் நோக்கில் தோழி ஒரு ஆற்றாமைப் பாடலைப் பாடுகிறாள்.

“அழகிய உள்ளம் படைத்தவளே, சாருமதி,
இன்னும் ஏனிந்த அலங்கார உபசாரங்கள்?
உன் துயர் தீர வழியென்ன?

காதலன் பார்க்காத இந்த ஆபரணங்கள் உனக்கு எதற்கு?
கருணை படைத்தவளே!
மற பெண்ணே, 
விடு கண்ணே

உன்னுயிர்த் தலைவன்
சடுதியில் வருவானோ, வாரானோ!
இன்னும் காத்திராதேயம்மா
நாகக்குழலி (நாகவேணீ)!”

இது பிரிவாற்றாமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்துகிறதா? 

இந்த ஜாவளியை (நேரடிப் பேச்சு வழக்கில் புனையப்பட்ட பாடல்) தெலுங்கில் இயற்றியவர் பட்டாபிராமையா. தமிழ் மொழியாக்கம் எனது கைவேலை - உத்தேசமாகச் சரியாய் இருக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற மேல்ப்பூச்சைக் களையச்சொல்லும் பாடலின் பொருள் போலவே அதன் வரிகளும்  எந்த உபசார வார்த்தைகளும் இல்லாமல் எளிய, நேரடியான  மொழியில் அமைந்துள்ள இப்பாடல்  நம்மை ஆட்கொள்கிறது.  பரிவுடனே தோழி இவளைக் கடிந்து கொள்வதை இசைப்பதில் கானடா இராகம் சரியான தேர்வாய்த்தோன்றுகிறது.

இப்பாடலை ஐதராபாத் சகோதரர்கள் பாடிய  ஒலிப்பதிவு கீழே. வேறு சில பாடகர்கள் இதைப்பாடியிருந்தாலும் இந்த இரட்டையர் பாட்டே எனக்குப்பிடித்தமானது. பெங்களூர் கச்சேரியொன்றில் இதை இவர்கள் பாடி நேரடியாகவே கேட்டிருக்கிறேன் (அன்று மிக அற்புதமாகப் பாடினர்).   பாடலாசிரியர் பற்றிய குறிப்புகள் இணையத்தில் நான் தேடியவரை குறைவாகவே காணப்படுகின்றன. 




பாடல் வரிகளைத் தமிழ்ப்’படுத்தாமல்’ ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

cArumatI upacAramu lETikE
mIrina shOkamulE rIti dhIru


sarasuDu jUDani AbharaNamu lETikE maracEnAtamE karuNAshAli

 vEgamE prANaEshuDu rAgavaDO rADO jAgu jEsunO nAga vEnirO



சாப்பு தாளம் - இது ‘அதீத எடுப்பு’ என்று சொல்லப்படும், தாளச்சுழற்சியின் ஆரம்பத்திற்கு ஒரு தட்டு முன்னதாகவே பாடலை ஆரம்பிக்கும் அமைப்புப்பெற்றது.  என் போன்ற குளியலறைப் பாடகர்களுக்குத் தாளம் போட்டுப் பாடவும் கடினமானது. பட்டாபிராமைய்யா தாள வேலைகள் நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும். அவர்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று அறிகிறேன்) தாள / இலயத்தை மனத்தில் இருத்திய நடனமணிகள் சதிராடிப் பாடியிருக்கவேண்டும். அவர்களை மரியாதையுடன் நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.


"ஜாகு சேயுனோ நாக வேணீரோ!"

விடாமல் துரத்துகின்றன இவ்வரிகள். பரிவும் ஆழ்ந்த காதலும் இல்லாமல் இப்படிப்பட்ட மொழி யாரிடமிருந்தும் வராது. 

இது என்ன மொழி? 

உபசார வார்த்தைகள் இல்லை. அரசியல் ரீதியாகச் சரிபார்க்கப்பட்டதில்லை. அதைப்பற்றிய கவலையும் இல்லை. அன்பு கொண்டவர்களிடத்திலே மட்டும் நாம் பாவிக்கும் அந்தரங்க மொழி இது. இது வலிந்து வரவழைக்கப்பட்டதல்ல - அன்பினாலே இயல்பாய் வருவது. அன்பில், காதலில் கரைந்து, 'கருணைக்கடல் பெருகி, காதலினால் உருகி' வந்த மொழி. 

அப்படித்தான் சொல்கிறாள், 'சேயுனோ'.  'ஓ' என்ற ஒலியில் நெருக்கம் அதிகமாகிறது.

ஆனால் 'வராத காதலனுக்காய்க் காத்திருந்து உன்னை வருத்திக்கொள்ளாதே' என்று பரிவில் சொன்னாலும் காதல் வயப்பட்டவளுக்கு அது கடுமையாகத் தானே தெரியும்? அதனால் உடனே தன் உள்ளத்து அன்பையெல்லாம் திரட்டிச் சொல்லுகிறாள் : 'நாகத்தைப் போன்ற மயிர்ப்பின்னல் உடையவளே'!

அதைச் சொல்லும்போது அவளைத் தாயன்போடு கட்டியணைத்திருப்பாளோ? இயலாமையின் பொருட்டு அப்போது அவள் கண்கள் நிறைந்திருக்குமோ? 

இந்த உணர்ச்சிக்கொந்தளிப்பைப் பாடலின் இசை நன்கு எடுத்துக்காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது . 'வேணீ...ரோ' என்று குழைந்து  இழுத்துக் காட்டுகிறான் கைதேர்ந்த பாட்டுக்காரன். 

இன்னும் இது என்னை விட்டபாடில்லை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க