முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருமதி, அழகிய உள்ளம் படைத்தவளே...

இவள் காதலுற்றிருக்கிறாள். ஆபரணங்கள் அணிந்தொருங்கித் தன் காதல் நாயகன் வரவுக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். அவன் இவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்த வலி தாளாமல் ஆறுதலுக்காகத் தன் ஆருயிர்த்தோழியை நாடுகிறாள். வெறும் வார்த்தைகள் ஆறுதல் தருமோ? இவள் துயர் காணப் பொறுக்காமல், தேற்றும் நோக்கில் தோழி ஒரு ஆற்றாமைப் பாடலைப் பாடுகிறாள்.

“அழகிய உள்ளம் படைத்தவளே, சாருமதி,
இன்னும் ஏனிந்த அலங்கார உபசாரங்கள்?
உன் துயர் தீர வழியென்ன?

காதலன் பார்க்காத இந்த ஆபரணங்கள் உனக்கு எதற்கு?
கருணை படைத்தவளே!
மற பெண்ணே, 
விடு கண்ணே

உன்னுயிர்த் தலைவன்
சடுதியில் வருவானோ, வாரானோ!
இன்னும் காத்திராதேயம்மா
நாகக்குழலி (நாகவேணீ)!”

இது பிரிவாற்றாமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்துகிறதா? 

இந்த ஜாவளியை (நேரடிப் பேச்சு வழக்கில் புனையப்பட்ட பாடல்) தெலுங்கில் இயற்றியவர் பட்டாபிராமையா. தமிழ் மொழியாக்கம் எனது கைவேலை - உத்தேசமாகச் சரியாய் இருக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற மேல்ப்பூச்சைக் களையச்சொல்லும் பாடலின் பொருள் போலவே அதன் வரிகளும்  எந்த உபசார வார்த்தைகளும் இல்லாமல் எளிய, நேரடியான  மொழியில் அமைந்துள்ள இப்பாடல்  நம்மை ஆட்கொள்கிறது.  பரிவுடனே தோழி இவளைக் கடிந்து கொள்வதை இசைப்பதில் கானடா இராகம் சரியான தேர்வாய்த்தோன்றுகிறது.

இப்பாடலை ஐதராபாத் சகோதரர்கள் பாடிய  ஒலிப்பதிவு கீழே. வேறு சில பாடகர்கள் இதைப்பாடியிருந்தாலும் இந்த இரட்டையர் பாட்டே எனக்குப்பிடித்தமானது. பெங்களூர் கச்சேரியொன்றில் இதை இவர்கள் பாடி நேரடியாகவே கேட்டிருக்கிறேன் (அன்று மிக அற்புதமாகப் பாடினர்).   பாடலாசிரியர் பற்றிய குறிப்புகள் இணையத்தில் நான் தேடியவரை குறைவாகவே காணப்படுகின்றன. 




பாடல் வரிகளைத் தமிழ்ப்’படுத்தாமல்’ ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

cArumatI upacAramu lETikE
mIrina shOkamulE rIti dhIru


sarasuDu jUDani AbharaNamu lETikE maracEnAtamE karuNAshAli

 vEgamE prANaEshuDu rAgavaDO rADO jAgu jEsunO nAga vEnirO



சாப்பு தாளம் - இது ‘அதீத எடுப்பு’ என்று சொல்லப்படும், தாளச்சுழற்சியின் ஆரம்பத்திற்கு ஒரு தட்டு முன்னதாகவே பாடலை ஆரம்பிக்கும் அமைப்புப்பெற்றது.  என் போன்ற குளியலறைப் பாடகர்களுக்குத் தாளம் போட்டுப் பாடவும் கடினமானது. பட்டாபிராமைய்யா தாள வேலைகள் நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும். அவர்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று அறிகிறேன்) தாள / இலயத்தை மனத்தில் இருத்திய நடனமணிகள் சதிராடிப் பாடியிருக்கவேண்டும். அவர்களை மரியாதையுடன் நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.


"ஜாகு சேயுனோ நாக வேணீரோ!"

விடாமல் துரத்துகின்றன இவ்வரிகள். பரிவும் ஆழ்ந்த காதலும் இல்லாமல் இப்படிப்பட்ட மொழி யாரிடமிருந்தும் வராது. 

இது என்ன மொழி? 

உபசார வார்த்தைகள் இல்லை. அரசியல் ரீதியாகச் சரிபார்க்கப்பட்டதில்லை. அதைப்பற்றிய கவலையும் இல்லை. அன்பு கொண்டவர்களிடத்திலே மட்டும் நாம் பாவிக்கும் அந்தரங்க மொழி இது. இது வலிந்து வரவழைக்கப்பட்டதல்ல - அன்பினாலே இயல்பாய் வருவது. அன்பில், காதலில் கரைந்து, 'கருணைக்கடல் பெருகி, காதலினால் உருகி' வந்த மொழி. 

அப்படித்தான் சொல்கிறாள், 'சேயுனோ'.  'ஓ' என்ற ஒலியில் நெருக்கம் அதிகமாகிறது.

ஆனால் 'வராத காதலனுக்காய்க் காத்திருந்து உன்னை வருத்திக்கொள்ளாதே' என்று பரிவில் சொன்னாலும் காதல் வயப்பட்டவளுக்கு அது கடுமையாகத் தானே தெரியும்? அதனால் உடனே தன் உள்ளத்து அன்பையெல்லாம் திரட்டிச் சொல்லுகிறாள் : 'நாகத்தைப் போன்ற மயிர்ப்பின்னல் உடையவளே'!

அதைச் சொல்லும்போது அவளைத் தாயன்போடு கட்டியணைத்திருப்பாளோ? இயலாமையின் பொருட்டு அப்போது அவள் கண்கள் நிறைந்திருக்குமோ? 

இந்த உணர்ச்சிக்கொந்தளிப்பைப் பாடலின் இசை நன்கு எடுத்துக்காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது . 'வேணீ...ரோ' என்று குழைந்து  இழுத்துக் காட்டுகிறான் கைதேர்ந்த பாட்டுக்காரன். 

இன்னும் இது என்னை விட்டபாடில்லை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...