முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருமதி, அழகிய உள்ளம் படைத்தவளே...

இவள் காதலுற்றிருக்கிறாள். ஆபரணங்கள் அணிந்தொருங்கித் தன் காதல் நாயகன் வரவுக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். அவன் இவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்த வலி தாளாமல் ஆறுதலுக்காகத் தன் ஆருயிர்த்தோழியை நாடுகிறாள். வெறும் வார்த்தைகள் ஆறுதல் தருமோ? இவள் துயர் காணப் பொறுக்காமல், தேற்றும் நோக்கில் தோழி ஒரு ஆற்றாமைப் பாடலைப் பாடுகிறாள்.

“அழகிய உள்ளம் படைத்தவளே, சாருமதி,
இன்னும் ஏனிந்த அலங்கார உபசாரங்கள்?
உன் துயர் தீர வழியென்ன?

காதலன் பார்க்காத இந்த ஆபரணங்கள் உனக்கு எதற்கு?
கருணை படைத்தவளே!
மற பெண்ணே, 
விடு கண்ணே

உன்னுயிர்த் தலைவன்
சடுதியில் வருவானோ, வாரானோ!
இன்னும் காத்திராதேயம்மா
நாகக்குழலி (நாகவேணீ)!”

இது பிரிவாற்றாமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்துகிறதா? 

இந்த ஜாவளியை (நேரடிப் பேச்சு வழக்கில் புனையப்பட்ட பாடல்) தெலுங்கில் இயற்றியவர் பட்டாபிராமையா. தமிழ் மொழியாக்கம் எனது கைவேலை - உத்தேசமாகச் சரியாய் இருக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற மேல்ப்பூச்சைக் களையச்சொல்லும் பாடலின் பொருள் போலவே அதன் வரிகளும்  எந்த உபசார வார்த்தைகளும் இல்லாமல் எளிய, நேரடியான  மொழியில் அமைந்துள்ள இப்பாடல்  நம்மை ஆட்கொள்கிறது.  பரிவுடனே தோழி இவளைக் கடிந்து கொள்வதை இசைப்பதில் கானடா இராகம் சரியான தேர்வாய்த்தோன்றுகிறது.

இப்பாடலை ஐதராபாத் சகோதரர்கள் பாடிய  ஒலிப்பதிவு கீழே. வேறு சில பாடகர்கள் இதைப்பாடியிருந்தாலும் இந்த இரட்டையர் பாட்டே எனக்குப்பிடித்தமானது. பெங்களூர் கச்சேரியொன்றில் இதை இவர்கள் பாடி நேரடியாகவே கேட்டிருக்கிறேன் (அன்று மிக அற்புதமாகப் பாடினர்).   பாடலாசிரியர் பற்றிய குறிப்புகள் இணையத்தில் நான் தேடியவரை குறைவாகவே காணப்படுகின்றன. 




பாடல் வரிகளைத் தமிழ்ப்’படுத்தாமல்’ ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

cArumatI upacAramu lETikE
mIrina shOkamulE rIti dhIru


sarasuDu jUDani AbharaNamu lETikE maracEnAtamE karuNAshAli

 vEgamE prANaEshuDu rAgavaDO rADO jAgu jEsunO nAga vEnirO



சாப்பு தாளம் - இது ‘அதீத எடுப்பு’ என்று சொல்லப்படும், தாளச்சுழற்சியின் ஆரம்பத்திற்கு ஒரு தட்டு முன்னதாகவே பாடலை ஆரம்பிக்கும் அமைப்புப்பெற்றது.  என் போன்ற குளியலறைப் பாடகர்களுக்குத் தாளம் போட்டுப் பாடவும் கடினமானது. பட்டாபிராமைய்யா தாள வேலைகள் நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும். அவர்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று அறிகிறேன்) தாள / இலயத்தை மனத்தில் இருத்திய நடனமணிகள் சதிராடிப் பாடியிருக்கவேண்டும். அவர்களை மரியாதையுடன் நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.


"ஜாகு சேயுனோ நாக வேணீரோ!"

விடாமல் துரத்துகின்றன இவ்வரிகள். பரிவும் ஆழ்ந்த காதலும் இல்லாமல் இப்படிப்பட்ட மொழி யாரிடமிருந்தும் வராது. 

இது என்ன மொழி? 

உபசார வார்த்தைகள் இல்லை. அரசியல் ரீதியாகச் சரிபார்க்கப்பட்டதில்லை. அதைப்பற்றிய கவலையும் இல்லை. அன்பு கொண்டவர்களிடத்திலே மட்டும் நாம் பாவிக்கும் அந்தரங்க மொழி இது. இது வலிந்து வரவழைக்கப்பட்டதல்ல - அன்பினாலே இயல்பாய் வருவது. அன்பில், காதலில் கரைந்து, 'கருணைக்கடல் பெருகி, காதலினால் உருகி' வந்த மொழி. 

அப்படித்தான் சொல்கிறாள், 'சேயுனோ'.  'ஓ' என்ற ஒலியில் நெருக்கம் அதிகமாகிறது.

ஆனால் 'வராத காதலனுக்காய்க் காத்திருந்து உன்னை வருத்திக்கொள்ளாதே' என்று பரிவில் சொன்னாலும் காதல் வயப்பட்டவளுக்கு அது கடுமையாகத் தானே தெரியும்? அதனால் உடனே தன் உள்ளத்து அன்பையெல்லாம் திரட்டிச் சொல்லுகிறாள் : 'நாகத்தைப் போன்ற மயிர்ப்பின்னல் உடையவளே'!

அதைச் சொல்லும்போது அவளைத் தாயன்போடு கட்டியணைத்திருப்பாளோ? இயலாமையின் பொருட்டு அப்போது அவள் கண்கள் நிறைந்திருக்குமோ? 

இந்த உணர்ச்சிக்கொந்தளிப்பைப் பாடலின் இசை நன்கு எடுத்துக்காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது . 'வேணீ...ரோ' என்று குழைந்து  இழுத்துக் காட்டுகிறான் கைதேர்ந்த பாட்டுக்காரன். 

இன்னும் இது என்னை விட்டபாடில்லை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...