பாடித் தன்னையே எப்படிக் கரைத்துக் கொள்வது?
ஒரு கடினமான தாளக் கட்டு உடைய இந்தச் சிறிய பாடல் - அம்மையிடம் தன்னைக் காக்கும்படி இறைஞ்சுகிறது. சிந்தை கூராகி, குரலுடன் இயைந்து உடலே தாளக் கட்டில் இயங்குகிறது - கையிலே தட்டிக் காட்டுவது பக்கவாத்தியக்காரர்களுக்கு மட்டுமே - இப்படியான இசைவு கற்பனைகளுக்குத் தளம் அமைக்கிறது. சுரங்கள் தத்தம் இடங்களிலே, தாள இலயம் தன் பாட்டிலே. இலக்கணங்கள் ஒரு பெரும்பொருட்டில்லை; அவை சிறிய கருவிகள் மட்டுமே. இவற்றை முடுக்கிவிட்டால் பின்னணியில் கலையாது இயங்கும்.
இப்போது பாட்டினுள்ளே இறங்கியாகிவிட்டது.
ஒவ்வொரு சொல்லும் கொண்டாட்டத்திற்கு உரியதாகிறது. அவற்றை ஆசைதீரத் தடவிப் பார்த்து, உச்சி முகர்ந்த்து, உருகி, சிரித்து, களித்து அவற்றுடன் ஒன்ற முடிகிறது.
திரிலோக மாதா, என்னைக் காப்பாய் - “அம்...பா” என்று சிணுங்கிக் குழைந்து... குழந்தை கையிலே கிடைத்த கிலுகிலுப்பையாய் “நின்னு நம்மியுண்டகா” பற்பல முறை ஆட்டிப்பார்த்துக் கொள்கிறது. ஒவ்வொறு ஆட்டலும் புதிதாய் மகிழ்விக்கிறது.
கண்கள் விரிந்து ”கனமுக...”, கைகளை முறுக்கி, “அதி கனமுக...” என்ற இறுக்கமான மௌனம் களைய “கோரி கோரி ஏமி...” என்று இறைஞ்சுதல்...
ஐந்து நிமிட ’பறத்தல்’ முடிந்து தரையிறங்கியாயிற்று. ஐந்து நிமிடங்களுக்குள் தன்னுள்ளே காணாமல் போக முடியுமா? இதுதான் செப்பிடு வித்தையா?
இராமனாதா, கொல்லாதே!
கருத்துகள்