முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தை பாடிய தாலாட்டு

சிதார் - மகிழ்ச்சியான தருணங்களுக்கான இசைக்கருவி. அடித்துப் பெய்யும் பெருமழை போல, சலசலத்து ஓடும் அருவி போன்ற குதூகலத்துடனேயே இதன் இசையும் நம்மை நொடிப்பொழுதில் நனைத்து விடக்கூடியது. அதுபோலவே சரோத் அழுத்தமான இசையையும் சாரங்கி தனிமையை உணர்த்துவதும், ஷெனாய் துயரத்தையும் பொழிவதுமாய் எனக்குத் தோன்றும்.

சிதார் ஒலிக்கும் இந்தப் பாடலோ நிராசையைச் சொல்லுகிற பாடல். இது எப்படி மகிழ்ச்சியானதாக இருக்க முடியும்?

ஒருதலைக் காதல் விடலைத்தனமாக (இப்போது) தோன்றினாலும் எப்போதும் கைகூடும் சாத்தியமில்லாத சில மன வேட்கைகள் நம்மை அழுத்தக்கூடியனவே. இயலாமையை, கையறுநிலையை, நிராசையை, தணிக்கச் சாத்தியமில்லாத வேட்கைகளை எப்படி எதிர்கொள்வது? இது மேற்கில் தோன்றும் உதயம் போலவென மனத்தைத் தேற்றிக் கொள்கிறான் ஒருவன். அவ்வாறான அசாத்தியங்களை அவன் பட்டியலிடுகிறான் - நடை மறந்த கால்களிரண்டின் தடயம், உயிரிழந்த்கருவைக் கொண்ட கவிதை, இப்படி விரியும் கற்பனையில் இலயிக்கிறான். நினைக்க நினைக்க இம்மாதிரியான உருவகங்கள் அவன் மனத்திலும் வேடிக்கையாய் விரிகின்றன, நிகழ்கின்றன. வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுத்தால் எப்படியிருக்கும்? இது தாற்காலிகமாய் மனத்தை அமைதிப்படுத்துவதுடன், சாமான்ய அறிவைப் பகடி செய்வதில் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சி நிலைக்காதுதான், ஆனால் கோடைமழை போல நிலத்தையும் உள்ளங்களையும் ஒருங்கே சிலநேரத்திற்கேனும் குளிர்விக்க வல்லது. 

அப்படியொரு கோடைமழையாய் சிதார் இசையைப் பொழிகிறது.

கழவிரக்கத்தில் உழலுவதானாலும் உயர்ந்த மொழிரசனையின் உருவகங்கள் இதை ஆரோக்கியமான இளைப்பாறலாகச் செய்கிறது. தமிழ் மணக்கிறது! 

வெறும் நாரில் கரம் கொண்டு - இங்கே வரும் சிதாரின் அந்த ஒற்றை மீட்டல் பொதிந்திருக்கும் துயரத்தை விரலில் தீற்றிக் காட்டுகிறது. 

உறவறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது - மலையாளிகள் சொல்லும் 'பைங்கிளித்தனமாக' இருந்தாலும் உயர்ந்த மொழிக் கையாளல் இந்த வரிக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது.

தேஷ் இராகத்தில் அமைந்த பாடலின் இசையும், பாடிய பாலுவின் குரல் வளமும் இப்பாடலை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது. 

டி.இராஜேந்தரின் பாடல்கள் பொதுவில் நீளமானவை. ஒரு வித நாடகத்தன்மையுள்ள மொழியைக் கொண்டவை. அவர் காலத்துப் பாடலாசிரியர்களின் மொழியினின்றும் அழகாக வேறுபட்டது. அதனாலேயே தொடை நயம், உவமை, கற்பனைவளம், மற்றும் மொழிக்கையாளல் என்று சிறப்பாக இருந்த அவர் பாடல் மொழியும், அவர் வரிகளும் வரவேற்புக்குரிய மாற்றமாக இருந்தது.  ‘மாதவி எழிலாள் மாதுளம் இதழாள் மாங்கனி நிறத்தாள் அம்மம்மா’ என்றெல்லாம் பல் உடையாமல் பாடுவதும் எளிதல்ல.  அவர் இயற்றிய பல பாடல்களின் நீளத்துக்கு இன்றைக்கு ஒவ்வொரு பாடலையும் இரண்டு முழுப்பாடலகளாகச் செய்துவிட முடியும். அப்புறம் அவரே ஒரு நேர்முகத்தின்போது சொன்னதைப்போல் அன்றைக்கு அவர் பாடல்களில் பல சரணங்கள் இயற்றி, அவற்றுள் சிலவற்றையே பாட வைத்தார் என்று கேட்கும்போது படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்தார் என்றே கொள்ளவேண்டும். 

எனக்கு இப்போது தோன்றுகிறது: இராஜேந்தரின் உச்சம் இது - மிகச்சிலரே இதை அடைந்துள்ளனர். அவரே தாண்டாத உச்சமுமே இது. 

பாடல் : 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...