சிதார் - மகிழ்ச்சியான தருணங்களுக்கான இசைக்கருவி. அடித்துப் பெய்யும் பெருமழை போல, சலசலத்து ஓடும் அருவி போன்ற குதூகலத்துடனேயே இதன் இசையும் நம்மை நொடிப்பொழுதில் நனைத்து விடக்கூடியது. அதுபோலவே சரோத் அழுத்தமான இசையையும் சாரங்கி தனிமையை உணர்த்துவதும், ஷெனாய் துயரத்தையும் பொழிவதுமாய் எனக்குத் தோன்றும்.
டி.இராஜேந்தரின் பாடல்கள் பொதுவில் நீளமானவை. ஒரு வித நாடகத்தன்மையுள்ள மொழியைக் கொண்டவை. அவர் காலத்துப் பாடலாசிரியர்களின் மொழியினின்றும் அழகாக வேறுபட்டது. அதனாலேயே தொடை நயம், உவமை, கற்பனைவளம், மற்றும் மொழிக்கையாளல் என்று சிறப்பாக இருந்த அவர் பாடல் மொழியும், அவர் வரிகளும் வரவேற்புக்குரிய மாற்றமாக இருந்தது. ‘மாதவி எழிலாள் மாதுளம் இதழாள் மாங்கனி நிறத்தாள் அம்மம்மா’ என்றெல்லாம் பல் உடையாமல் பாடுவதும் எளிதல்ல. அவர் இயற்றிய பல பாடல்களின் நீளத்துக்கு இன்றைக்கு ஒவ்வொரு பாடலையும் இரண்டு முழுப்பாடலகளாகச் செய்துவிட முடியும். அப்புறம் அவரே ஒரு நேர்முகத்தின்போது சொன்னதைப்போல் அன்றைக்கு அவர் பாடல்களில் பல சரணங்கள் இயற்றி, அவற்றுள் சிலவற்றையே பாட வைத்தார் என்று கேட்கும்போது படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்தார் என்றே கொள்ளவேண்டும்.
சிதார் ஒலிக்கும் இந்தப் பாடலோ நிராசையைச் சொல்லுகிற பாடல். இது எப்படி மகிழ்ச்சியானதாக இருக்க முடியும்?
ஒருதலைக் காதல் விடலைத்தனமாக (இப்போது) தோன்றினாலும் எப்போதும் கைகூடும் சாத்தியமில்லாத சில மன வேட்கைகள் நம்மை அழுத்தக்கூடியனவே. இயலாமையை, கையறுநிலையை, நிராசையை, தணிக்கச் சாத்தியமில்லாத வேட்கைகளை எப்படி எதிர்கொள்வது? இது மேற்கில் தோன்றும் உதயம் போலவென மனத்தைத் தேற்றிக் கொள்கிறான் ஒருவன். அவ்வாறான அசாத்தியங்களை அவன் பட்டியலிடுகிறான் - நடை மறந்த கால்களிரண்டின் தடயம், உயிரிழந்த்கருவைக் கொண்ட கவிதை, இப்படி விரியும் கற்பனையில் இலயிக்கிறான். நினைக்க நினைக்க இம்மாதிரியான உருவகங்கள் அவன் மனத்திலும் வேடிக்கையாய் விரிகின்றன, நிகழ்கின்றன. வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுத்தால் எப்படியிருக்கும்? இது தாற்காலிகமாய் மனத்தை அமைதிப்படுத்துவதுடன், சாமான்ய அறிவைப் பகடி செய்வதில் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சி நிலைக்காதுதான், ஆனால் கோடைமழை போல நிலத்தையும் உள்ளங்களையும் ஒருங்கே சிலநேரத்திற்கேனும் குளிர்விக்க வல்லது.
அப்படியொரு கோடைமழையாய் சிதார் இசையைப் பொழிகிறது.
கழவிரக்கத்தில் உழலுவதானாலும் உயர்ந்த மொழிரசனையின் உருவகங்கள் இதை ஆரோக்கியமான இளைப்பாறலாகச் செய்கிறது. தமிழ் மணக்கிறது!
வெறும் நாரில் கரம் கொண்டு - இங்கே வரும் சிதாரின் அந்த ஒற்றை மீட்டல் பொதிந்திருக்கும் துயரத்தை விரலில் தீற்றிக் காட்டுகிறது.
உறவறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது - மலையாளிகள் சொல்லும் 'பைங்கிளித்தனமாக' இருந்தாலும் உயர்ந்த மொழிக் கையாளல் இந்த வரிக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது.
தேஷ் இராகத்தில் அமைந்த பாடலின் இசையும், பாடிய பாலுவின் குரல் வளமும் இப்பாடலை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது.
டி.இராஜேந்தரின் பாடல்கள் பொதுவில் நீளமானவை. ஒரு வித நாடகத்தன்மையுள்ள மொழியைக் கொண்டவை. அவர் காலத்துப் பாடலாசிரியர்களின் மொழியினின்றும் அழகாக வேறுபட்டது. அதனாலேயே தொடை நயம், உவமை, கற்பனைவளம், மற்றும் மொழிக்கையாளல் என்று சிறப்பாக இருந்த அவர் பாடல் மொழியும், அவர் வரிகளும் வரவேற்புக்குரிய மாற்றமாக இருந்தது. ‘மாதவி எழிலாள் மாதுளம் இதழாள் மாங்கனி நிறத்தாள் அம்மம்மா’ என்றெல்லாம் பல் உடையாமல் பாடுவதும் எளிதல்ல. அவர் இயற்றிய பல பாடல்களின் நீளத்துக்கு இன்றைக்கு ஒவ்வொரு பாடலையும் இரண்டு முழுப்பாடலகளாகச் செய்துவிட முடியும். அப்புறம் அவரே ஒரு நேர்முகத்தின்போது சொன்னதைப்போல் அன்றைக்கு அவர் பாடல்களில் பல சரணங்கள் இயற்றி, அவற்றுள் சிலவற்றையே பாட வைத்தார் என்று கேட்கும்போது படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்தார் என்றே கொள்ளவேண்டும்.
எனக்கு இப்போது தோன்றுகிறது: இராஜேந்தரின் உச்சம் இது - மிகச்சிலரே இதை அடைந்துள்ளனர். அவரே தாண்டாத உச்சமுமே இது.
பாடல் :
கருத்துகள்