முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தை பாடிய தாலாட்டு

சிதார் - மகிழ்ச்சியான தருணங்களுக்கான இசைக்கருவி. அடித்துப் பெய்யும் பெருமழை போல, சலசலத்து ஓடும் அருவி போன்ற குதூகலத்துடனேயே இதன் இசையும் நம்மை நொடிப்பொழுதில் நனைத்து விடக்கூடியது. அதுபோலவே சரோத் அழுத்தமான இசையையும் சாரங்கி தனிமையை உணர்த்துவதும், ஷெனாய் துயரத்தையும் பொழிவதுமாய் எனக்குத் தோன்றும்.

சிதார் ஒலிக்கும் இந்தப் பாடலோ நிராசையைச் சொல்லுகிற பாடல். இது எப்படி மகிழ்ச்சியானதாக இருக்க முடியும்?

ஒருதலைக் காதல் விடலைத்தனமாக (இப்போது) தோன்றினாலும் எப்போதும் கைகூடும் சாத்தியமில்லாத சில மன வேட்கைகள் நம்மை அழுத்தக்கூடியனவே. இயலாமையை, கையறுநிலையை, நிராசையை, தணிக்கச் சாத்தியமில்லாத வேட்கைகளை எப்படி எதிர்கொள்வது? இது மேற்கில் தோன்றும் உதயம் போலவென மனத்தைத் தேற்றிக் கொள்கிறான் ஒருவன். அவ்வாறான அசாத்தியங்களை அவன் பட்டியலிடுகிறான் - நடை மறந்த கால்களிரண்டின் தடயம், உயிரிழந்த்கருவைக் கொண்ட கவிதை, இப்படி விரியும் கற்பனையில் இலயிக்கிறான். நினைக்க நினைக்க இம்மாதிரியான உருவகங்கள் அவன் மனத்திலும் வேடிக்கையாய் விரிகின்றன, நிகழ்கின்றன. வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுத்தால் எப்படியிருக்கும்? இது தாற்காலிகமாய் மனத்தை அமைதிப்படுத்துவதுடன், சாமான்ய அறிவைப் பகடி செய்வதில் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சி நிலைக்காதுதான், ஆனால் கோடைமழை போல நிலத்தையும் உள்ளங்களையும் ஒருங்கே சிலநேரத்திற்கேனும் குளிர்விக்க வல்லது. 

அப்படியொரு கோடைமழையாய் சிதார் இசையைப் பொழிகிறது.

கழவிரக்கத்தில் உழலுவதானாலும் உயர்ந்த மொழிரசனையின் உருவகங்கள் இதை ஆரோக்கியமான இளைப்பாறலாகச் செய்கிறது. தமிழ் மணக்கிறது! 

வெறும் நாரில் கரம் கொண்டு - இங்கே வரும் சிதாரின் அந்த ஒற்றை மீட்டல் பொதிந்திருக்கும் துயரத்தை விரலில் தீற்றிக் காட்டுகிறது. 

உறவறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது - மலையாளிகள் சொல்லும் 'பைங்கிளித்தனமாக' இருந்தாலும் உயர்ந்த மொழிக் கையாளல் இந்த வரிக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது.

தேஷ் இராகத்தில் அமைந்த பாடலின் இசையும், பாடிய பாலுவின் குரல் வளமும் இப்பாடலை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது. 

டி.இராஜேந்தரின் பாடல்கள் பொதுவில் நீளமானவை. ஒரு வித நாடகத்தன்மையுள்ள மொழியைக் கொண்டவை. அவர் காலத்துப் பாடலாசிரியர்களின் மொழியினின்றும் அழகாக வேறுபட்டது. அதனாலேயே தொடை நயம், உவமை, கற்பனைவளம், மற்றும் மொழிக்கையாளல் என்று சிறப்பாக இருந்த அவர் பாடல் மொழியும், அவர் வரிகளும் வரவேற்புக்குரிய மாற்றமாக இருந்தது.  ‘மாதவி எழிலாள் மாதுளம் இதழாள் மாங்கனி நிறத்தாள் அம்மம்மா’ என்றெல்லாம் பல் உடையாமல் பாடுவதும் எளிதல்ல.  அவர் இயற்றிய பல பாடல்களின் நீளத்துக்கு இன்றைக்கு ஒவ்வொரு பாடலையும் இரண்டு முழுப்பாடலகளாகச் செய்துவிட முடியும். அப்புறம் அவரே ஒரு நேர்முகத்தின்போது சொன்னதைப்போல் அன்றைக்கு அவர் பாடல்களில் பல சரணங்கள் இயற்றி, அவற்றுள் சிலவற்றையே பாட வைத்தார் என்று கேட்கும்போது படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்தார் என்றே கொள்ளவேண்டும். 

எனக்கு இப்போது தோன்றுகிறது: இராஜேந்தரின் உச்சம் இது - மிகச்சிலரே இதை அடைந்துள்ளனர். அவரே தாண்டாத உச்சமுமே இது. 

பாடல் : 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க