முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தை பாடிய தாலாட்டு

சிதார் - மகிழ்ச்சியான தருணங்களுக்கான இசைக்கருவி. அடித்துப் பெய்யும் பெருமழை போல, சலசலத்து ஓடும் அருவி போன்ற குதூகலத்துடனேயே இதன் இசையும் நம்மை நொடிப்பொழுதில் நனைத்து விடக்கூடியது. அதுபோலவே சரோத் அழுத்தமான இசையையும் சாரங்கி தனிமையை உணர்த்துவதும், ஷெனாய் துயரத்தையும் பொழிவதுமாய் எனக்குத் தோன்றும்.

சிதார் ஒலிக்கும் இந்தப் பாடலோ நிராசையைச் சொல்லுகிற பாடல். இது எப்படி மகிழ்ச்சியானதாக இருக்க முடியும்?

ஒருதலைக் காதல் விடலைத்தனமாக (இப்போது) தோன்றினாலும் எப்போதும் கைகூடும் சாத்தியமில்லாத சில மன வேட்கைகள் நம்மை அழுத்தக்கூடியனவே. இயலாமையை, கையறுநிலையை, நிராசையை, தணிக்கச் சாத்தியமில்லாத வேட்கைகளை எப்படி எதிர்கொள்வது? இது மேற்கில் தோன்றும் உதயம் போலவென மனத்தைத் தேற்றிக் கொள்கிறான் ஒருவன். அவ்வாறான அசாத்தியங்களை அவன் பட்டியலிடுகிறான் - நடை மறந்த கால்களிரண்டின் தடயம், உயிரிழந்த்கருவைக் கொண்ட கவிதை, இப்படி விரியும் கற்பனையில் இலயிக்கிறான். நினைக்க நினைக்க இம்மாதிரியான உருவகங்கள் அவன் மனத்திலும் வேடிக்கையாய் விரிகின்றன, நிகழ்கின்றன. வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுத்தால் எப்படியிருக்கும்? இது தாற்காலிகமாய் மனத்தை அமைதிப்படுத்துவதுடன், சாமான்ய அறிவைப் பகடி செய்வதில் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சி நிலைக்காதுதான், ஆனால் கோடைமழை போல நிலத்தையும் உள்ளங்களையும் ஒருங்கே சிலநேரத்திற்கேனும் குளிர்விக்க வல்லது. 

அப்படியொரு கோடைமழையாய் சிதார் இசையைப் பொழிகிறது.

கழவிரக்கத்தில் உழலுவதானாலும் உயர்ந்த மொழிரசனையின் உருவகங்கள் இதை ஆரோக்கியமான இளைப்பாறலாகச் செய்கிறது. தமிழ் மணக்கிறது! 

வெறும் நாரில் கரம் கொண்டு - இங்கே வரும் சிதாரின் அந்த ஒற்றை மீட்டல் பொதிந்திருக்கும் துயரத்தை விரலில் தீற்றிக் காட்டுகிறது. 

உறவறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது - மலையாளிகள் சொல்லும் 'பைங்கிளித்தனமாக' இருந்தாலும் உயர்ந்த மொழிக் கையாளல் இந்த வரிக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது.

தேஷ் இராகத்தில் அமைந்த பாடலின் இசையும், பாடிய பாலுவின் குரல் வளமும் இப்பாடலை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது. 

டி.இராஜேந்தரின் பாடல்கள் பொதுவில் நீளமானவை. ஒரு வித நாடகத்தன்மையுள்ள மொழியைக் கொண்டவை. அவர் காலத்துப் பாடலாசிரியர்களின் மொழியினின்றும் அழகாக வேறுபட்டது. அதனாலேயே தொடை நயம், உவமை, கற்பனைவளம், மற்றும் மொழிக்கையாளல் என்று சிறப்பாக இருந்த அவர் பாடல் மொழியும், அவர் வரிகளும் வரவேற்புக்குரிய மாற்றமாக இருந்தது.  ‘மாதவி எழிலாள் மாதுளம் இதழாள் மாங்கனி நிறத்தாள் அம்மம்மா’ என்றெல்லாம் பல் உடையாமல் பாடுவதும் எளிதல்ல.  அவர் இயற்றிய பல பாடல்களின் நீளத்துக்கு இன்றைக்கு ஒவ்வொரு பாடலையும் இரண்டு முழுப்பாடலகளாகச் செய்துவிட முடியும். அப்புறம் அவரே ஒரு நேர்முகத்தின்போது சொன்னதைப்போல் அன்றைக்கு அவர் பாடல்களில் பல சரணங்கள் இயற்றி, அவற்றுள் சிலவற்றையே பாட வைத்தார் என்று கேட்கும்போது படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்தார் என்றே கொள்ளவேண்டும். 

எனக்கு இப்போது தோன்றுகிறது: இராஜேந்தரின் உச்சம் இது - மிகச்சிலரே இதை அடைந்துள்ளனர். அவரே தாண்டாத உச்சமுமே இது. 

பாடல் : 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...