முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழில் கிரந்தம் தவிர்ப்பது பற்றி...

தமிழ் எழுதுவதில் இயன்றவரை கிரந்தம் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். இது தமிழ் வெறியினாலோ பிறமொழிக் காழ்ப்பினாலோ உந்தப்பட்டதல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி தமிழல்லாத மொழிகளின் பல சொற்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது பல்லாண்டுகளாக இயல்பாக, பையப்பைய நடந்தது - யாரும் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பது தெரிந்ததே. இம்மொழியின் தொன்மையையோ, செம்மைத் தன்மையையோ, பிற பெருமைகளையோ முதன்மைப்படுத்தாமல், ஒரு தனித்தன்மை வாய்ந்த, (பிறமொழிகளைப்போலவே) நம் தாய்மொழி என்கிற அளவில், நாம் மறந்துவிட்ட தமிழ்ச்சொற்களை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும், அவற்றை நம் புறக்கணிப்பினின்றும் மீட்கவேண்டும் என்பதே என் குறிக்கோள்.

கிரந்தத்தை ஒழித்தலே நம் கடன் என்று எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த முனைவதில் எனக்குச் சில மனத்தடைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது. நாம் நம் பெயர்களைப் பெருமையோடு தாங்குபவர்கள்; தமிழ்ப் பெயர்களையும் பிற பெயர்களையும் பெயருக்குச் சொந்தக்காரர் எழுதுவது போலேயே எழுதவேண்டும் - அது கிரந்தம் கலந்ததானாலும்.  எழுத்துப்பிழைகளையும் ( இருப்பதாக நாம் கருதினாலும்) இலக்கணமீறல்களையும் நாம் பொருட்படுத்தலாகாது. ரவியை இரவி என்று விளிக்க இரவி தன் பெயரை அவ்வாறு அறிவித்திருக்க வேண்டும். இதை மீறி பெயர்களில் கிரந்தம் தவிர்ப்பதென்பது அப்பெயர்களைச் சிதைப்பதும் பெயர் தாங்கியவர்களை அவமதிப்பதும் ஆகும். மொத்தத்தில் பெயர்களுக்கு மொழி கிடையாது என்பது என் துணிபு. மகேஷை மகேசு என்றும், ராஜேஷை இராசேசு என்றும் ஜெயமொகனை செயமோகன் என்றும் விளித்ததற்கு இங்கே மன்னிப்புக் கோருகிறேன்.

அடுத்ததாக, பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் கிரந்தக் கலப்பு இருக்கலாம் என்பது என் நிலைப்பாடு. இம்மாதிரி (கிரந்த) எழுத்துச் சேர்க்கைகள் பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது ஏற்படும் ஒலிப் பற்றாக்குறையைப் போக்கவே என்பதை நினைவில் கொள்ளலாம். ( தமிழரல்லாதோர் சிலர் இவ்வொலிப் பற்றாக்குறையை தமிழின் குறைபாடாகச் சொல்லுவர். தமிழிலேயே பேச, எழுத, தமிழெழுத்துகள் போதுமானவை). இதைச்சொல்லும்போது சிங்கப்பூர் தெம்பனீஸ் கிழக்குச் சமூக மன்றத்தில் "கேப்பி தீபாவளி" என்று வைத்திருந்த தட்டி நினைவுக்கு வருகிறது. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போது அதற்கு இணையான தமிழ்சசொல் இல்லாத / தெரியாத நிலையில் மட்டுமே உகந்தது என்று நம்புகிறேன். இப்படியொரு நிலை வாய்க்கும்பொழுது  நல்ல கலைச்சொல்லகராதியை நாடலாம்.

மற்றபடி கிரந்தம் கலக்காத பிறமொழிச் சொற்கள் தமிழிலே ஏராளமாகப் புழங்குகின்றன. அவற்றை ஒதுக்கி அதற்கான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது (கண்மூடித்தனமான) கிரந்த எதிர்ப்பைக் காட்டிலும் தமிழுக்கு வளம் சேர்க்கும் எனபதும் எனக்கு ஏற்பட்ட தெளிவு.

லாகவம், இலகுவாக, மரணம், பூமி, நதி, ஆகாயம், சிங்கம், சாவதானம், அனாவசியம், அவசியம், அனாயாசம், ஆயாசம், சந்தேகம், பலம், நட்சத்திரம், ராசி, நாடகம், அகம், அவையம், நீதி/அநீதி, அநேகம், நகல், அசல், யதார்த்தம், வீதம், வீரம், மாதம், மதம், வருடம், இச்சை, அனிச்சை, தன்னிச்சை, வாக்கு, வாதம், அர்த்தம், சாமர்தியம், சமர்த்தம், சாவகாசம், சகவாசம்

என்ற சொற்கள் உடன் நினைவுக்கு வருவன. இப்பணியில் இணையத்தில் சில குழுக்கள் இணைந்து செயற்படுகின்றன என்றறிவேன். அவர்களுக்கு என் அன்பும் பாராட்டுகளும். முடிந்தவரையில் அவர்களுடன் இணைந்து என்னாலானதைச் செய்யவும் ஆசை.

கிரந்தக் கலப்பு மற்றும் அதன் புறக்கணிப்பு குறித்து இப்படியொரு தெளிவை அடைந்திருக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றுக்குட்டி

இன்றைக்கு ஆட்டோவில் அலுவலகம் வந்தேன். ஆட்டோ மீட்டரின் துடிப்பும் என் இதயத் துடிப்போடு இணைந்து பதற்றமாகக் கழிகின்றன நாற்பது நிமிடங்கள். அறுபத்தி ஐந்து ரூபாய் காட்டியது மீட்டர். பதினொன்று கி.மீட்டர்களுக்கும் குறைவான தூரம். ஐம்பத்து ஐந்து ரூபாய் சரியாக இருந்திருக்கும். ஒரு புறம் ஆட்டோக்காரனது வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலும், நான் ஏமாற்றப் படுகிறேன் என்பது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைக் கொடுக்கிறது. சரியாக ஓடும் மீட்டர் பொருத்தப் பெற்ற ஆட்டோக்களில் இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நான் சில்லறை பெற்றுக் கொள்வதில்லை. நண்பியுடன் ஆட்டோவில் போகும்போது அவள் பேசுவதைக் கேட்காமல் நான் மீட்டரை எரித்துவிடுவது போலப் பார்ப்பதில் அவள் இப்போதெல்லாம் அதோ பார் அம்புலிமாமா என்கிற ரீதியில் என் கவனத்தை மீட்டரினின்றும் திருப்புகிறாள். என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன். *** மத்தியத் தர வர்க்கத்தின் பிறவிப் பயனை அடையப் போகிறேன். ஆம் - ஒரு வீடு கட்டப்போகிறேன். சுதந்திரம், மற்றும் பாதுகாப்பு கருதி தனி வீட்டுக் குடியிருப்புகள் கட்டித்தரும் நிறுவனம் ஒன்றில் சதுர அடிக்...

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...