முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தை மனசுக்காரன்

'மானத்தைக் காக்கவோர் நாலு
முழத்துணி வாங்கித் தர வேணும்
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கித்
தரவும் கடனாண்டே ! '
(கண்ணன் என் ஆண்டான்)

ஹிந்துவில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொண்ணூறு வயது நிரம்பிய பெரியவர் ஒருவர் பாரதியுடனான ஒரு பரிச்சியத்தைப் பகிர்ந்து கொண்டார். (சுட்டியைத் தேடித் தோற்றுவிட்டேன் - இதை எழுதியவர் பெயர், மற்றும் விபரங்கள் நினைவில்லை. சம்பவம் மட்டும் மனதிற்பதிந்து விட்டது)

இவரின் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டை அடுத்த தன் உறவினர் (மாமா என்று நினைவு) வீட்டில் சில காலம் இருந்திருக்கிறார். ஒருநாள் செல்லம்மாள் இவரின் மாமியிடம் ஏதோ கடன் கேட்டு வரும்போது, பாரதி அந்த மாதத்திற்கான செலவிற்கு சம்பளப் பணம் ஒன்றும் தரவில்லையென்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். மாமா உடனே பாரதியிடம் சென்று விசாரிக்கிறார். பாரதி அன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ரிக்ஷாவில் வந்திருக்கிறார்.

ஒரு திசை திருப்பு: பாரதியார் கதைகள் என்ற திரட்டு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். அவர் தினசரி வாழ்க்கையை அறியத்தரும் ஒரு சின்ன ஜன்னல் இது! பல சுவாரசியமான விடயங்கள் உள்ளது. வித்தியாசமான விடயங்கள் கூறிக்கொண்டு வரும் ஒரு குடுகுடுப்பைக்காரன் (புதிய கோணங்கி), ஒரு மார்கழி காலைக் குளிரில் திருச்சாழல் பாடி வரும் பண்டாரம், இப்படி பலதரப் பட்டவரை கூப்பிட்டு வீட்டுத் திண்ணையில் இருத்தி அவர்களிடம் அவர்கள் வாழ்க்கை, இதர விடயங்கள் குறித்துக் கதைப்பது இவருக்கு வழக்கம். இயல்பில் மனித வாஞ்சை மிக்கவராக இருந்தவர் என்று தெரிகிறது. "எளிமை கண்டிரங்குவாய்" என்பது அவர் வாழ்வில் நடைமுறை.

இப்படியாகத்தானே அவர் மேற்படி ரிக்ஷாவில் வரும்போது ரிக்ஷாக்காரருடன் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். ரிக்ஷாக்காரர் புலம்பிய புலம்பலில் "நம் தேவையை விட அவன் தேவை அதிகம் என்று தோன்றியது" என்று சொல்லி, தன் மாதச் சம்பளம் முழுவதையும் அவரிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார். மாமா அந்த ரிக்ஷாக்காரரைத் தேடிப் பிடித்து, அவர் செலவு செய்தது போக மீதியை மீட்டுக் கொடுத்தாராம்.

இதைப் படித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். மேலே குறிப்பிட்ட ஆண்டான் பாடலில், தனக்கு நாலுமுழத்துணி போதுமென்றும், அதற்கே வழியில்லாத நிலை இருந்தாலும் தானம் கொடுக்க வேட்டி வேண்டும் என்று கேட்க என்ன மனது வேண்டும்! மேலும் பாருங்கள்:

'பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமைய்யே
அண்டை அயலுக்கென்னால் உபகாரங்கள்
ஆகிட வேண்டுமைய்யே!'

பொருள் இல்லார்க்கு (பாவனைகள்) எதுவும் இல்லை. எளிமை இருக்குமிடத்தே தான் மனிதமும் மிளிர்கிறது. தனக்கே ஒன்றும் இல்லாத போது, மற்றவருக்குக் கொடுக்க வேண்டித் தனக்குத் தருமாறு எப்படி ஒருவன் கேட்க முடியும்? வேட்டி இருந்தால், பொருள் இருந்தால் அவனும் அவன் பெண்டு பிள்ளைகளும் வயிராற உண்டு சுகமாக இருக்கலாமே!

தன் வீட்டின் இல்லாமை தெரிந்திருந்தும், வறியவன் ஒருவன் புலம்பக் கேட்டவுடன் தனக்கென்று ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் தயங்காமல் கொடுத்தவன் பைத்தியக்காரன் இல்லை, குழந்தை மனதுக்காரன்!

கருத்துகள்

Sud Gopal இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.

எங்கேயிருந்து தான் இந்த மாதிரிச் செய்திகள் உங்கள் கண்களுக்கு மட்டும் மாட்டுதோ தெரியலை கண்ணன்.

கலக்குவதைத் தொடரவும்.
Badri Seshadri இவ்வாறு கூறியுள்ளார்…
நெகிழ்ச்சியான பதிவு. ஒரு சிலர் பாரதி தன் குடும்பத்தை அவ்வளவாகக் கவனிக்காமல் பிறரது - மனிதராயினும் குருவிகளாயினும் - நிலைமை கண்டு இறைஞ்சி தன் கையில் இருப்பதைத் தந்துவிடுவதைக் குறை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் தன் குடும்பத்தாரையும் பிற மனிதர்களையும் ஒரே படியில் வைத்து ஒரே மாதிரியாகப் பார்த்து யார் தேவை அதிகமாக இருக்கிறதோ அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வது எளிதான விஷயமில்லை.

அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்?
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சுதர்சன்,

இது ஹிந்துவில் ஒரு ஞாயிறு அன்று இணைப்புப் பக்கத்தில் ஒரு முழுப் பக்கம் வந்ததாக ஞாபகம். அந்த வகையில் எல்லார் கண்ணுக்கும் இது மாட்டியிருக்கும் :-)

யாராவது இதன் சுட்டியை மீட்டுக் கொடுத்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.


பத்ரி,

//அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்? //

உண்மை!
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
kannan,

nijamavE kalakkaRIngka, BOSS !
vAZththukkaL, oru arumaiyAna pathiviRku ! Pl. keep it up.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா,

மிக்க நன்றி!
Chandravathanaa இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
yOsikka vaiththathu kannan.

Thanks.

-Mathy
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சந்திரவதனா,

நீங்கள் இங்கே அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது குறித்து மகிழ்ச்சி.

மதி,

வாருங்கோ, ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க இந்தப் பக்கம் ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...