முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தை மனசுக்காரன்

'மானத்தைக் காக்கவோர் நாலு
முழத்துணி வாங்கித் தர வேணும்
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கித்
தரவும் கடனாண்டே ! '
(கண்ணன் என் ஆண்டான்)

ஹிந்துவில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொண்ணூறு வயது நிரம்பிய பெரியவர் ஒருவர் பாரதியுடனான ஒரு பரிச்சியத்தைப் பகிர்ந்து கொண்டார். (சுட்டியைத் தேடித் தோற்றுவிட்டேன் - இதை எழுதியவர் பெயர், மற்றும் விபரங்கள் நினைவில்லை. சம்பவம் மட்டும் மனதிற்பதிந்து விட்டது)

இவரின் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டை அடுத்த தன் உறவினர் (மாமா என்று நினைவு) வீட்டில் சில காலம் இருந்திருக்கிறார். ஒருநாள் செல்லம்மாள் இவரின் மாமியிடம் ஏதோ கடன் கேட்டு வரும்போது, பாரதி அந்த மாதத்திற்கான செலவிற்கு சம்பளப் பணம் ஒன்றும் தரவில்லையென்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். மாமா உடனே பாரதியிடம் சென்று விசாரிக்கிறார். பாரதி அன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ரிக்ஷாவில் வந்திருக்கிறார்.

ஒரு திசை திருப்பு: பாரதியார் கதைகள் என்ற திரட்டு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். அவர் தினசரி வாழ்க்கையை அறியத்தரும் ஒரு சின்ன ஜன்னல் இது! பல சுவாரசியமான விடயங்கள் உள்ளது. வித்தியாசமான விடயங்கள் கூறிக்கொண்டு வரும் ஒரு குடுகுடுப்பைக்காரன் (புதிய கோணங்கி), ஒரு மார்கழி காலைக் குளிரில் திருச்சாழல் பாடி வரும் பண்டாரம், இப்படி பலதரப் பட்டவரை கூப்பிட்டு வீட்டுத் திண்ணையில் இருத்தி அவர்களிடம் அவர்கள் வாழ்க்கை, இதர விடயங்கள் குறித்துக் கதைப்பது இவருக்கு வழக்கம். இயல்பில் மனித வாஞ்சை மிக்கவராக இருந்தவர் என்று தெரிகிறது. "எளிமை கண்டிரங்குவாய்" என்பது அவர் வாழ்வில் நடைமுறை.

இப்படியாகத்தானே அவர் மேற்படி ரிக்ஷாவில் வரும்போது ரிக்ஷாக்காரருடன் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். ரிக்ஷாக்காரர் புலம்பிய புலம்பலில் "நம் தேவையை விட அவன் தேவை அதிகம் என்று தோன்றியது" என்று சொல்லி, தன் மாதச் சம்பளம் முழுவதையும் அவரிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார். மாமா அந்த ரிக்ஷாக்காரரைத் தேடிப் பிடித்து, அவர் செலவு செய்தது போக மீதியை மீட்டுக் கொடுத்தாராம்.

இதைப் படித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். மேலே குறிப்பிட்ட ஆண்டான் பாடலில், தனக்கு நாலுமுழத்துணி போதுமென்றும், அதற்கே வழியில்லாத நிலை இருந்தாலும் தானம் கொடுக்க வேட்டி வேண்டும் என்று கேட்க என்ன மனது வேண்டும்! மேலும் பாருங்கள்:

'பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமைய்யே
அண்டை அயலுக்கென்னால் உபகாரங்கள்
ஆகிட வேண்டுமைய்யே!'

பொருள் இல்லார்க்கு (பாவனைகள்) எதுவும் இல்லை. எளிமை இருக்குமிடத்தே தான் மனிதமும் மிளிர்கிறது. தனக்கே ஒன்றும் இல்லாத போது, மற்றவருக்குக் கொடுக்க வேண்டித் தனக்குத் தருமாறு எப்படி ஒருவன் கேட்க முடியும்? வேட்டி இருந்தால், பொருள் இருந்தால் அவனும் அவன் பெண்டு பிள்ளைகளும் வயிராற உண்டு சுகமாக இருக்கலாமே!

தன் வீட்டின் இல்லாமை தெரிந்திருந்தும், வறியவன் ஒருவன் புலம்பக் கேட்டவுடன் தனக்கென்று ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் தயங்காமல் கொடுத்தவன் பைத்தியக்காரன் இல்லை, குழந்தை மனதுக்காரன்!

கருத்துகள்

Sud Gopal இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.

எங்கேயிருந்து தான் இந்த மாதிரிச் செய்திகள் உங்கள் கண்களுக்கு மட்டும் மாட்டுதோ தெரியலை கண்ணன்.

கலக்குவதைத் தொடரவும்.
Badri Seshadri இவ்வாறு கூறியுள்ளார்…
நெகிழ்ச்சியான பதிவு. ஒரு சிலர் பாரதி தன் குடும்பத்தை அவ்வளவாகக் கவனிக்காமல் பிறரது - மனிதராயினும் குருவிகளாயினும் - நிலைமை கண்டு இறைஞ்சி தன் கையில் இருப்பதைத் தந்துவிடுவதைக் குறை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் தன் குடும்பத்தாரையும் பிற மனிதர்களையும் ஒரே படியில் வைத்து ஒரே மாதிரியாகப் பார்த்து யார் தேவை அதிகமாக இருக்கிறதோ அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வது எளிதான விஷயமில்லை.

அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்?
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சுதர்சன்,

இது ஹிந்துவில் ஒரு ஞாயிறு அன்று இணைப்புப் பக்கத்தில் ஒரு முழுப் பக்கம் வந்ததாக ஞாபகம். அந்த வகையில் எல்லார் கண்ணுக்கும் இது மாட்டியிருக்கும் :-)

யாராவது இதன் சுட்டியை மீட்டுக் கொடுத்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.


பத்ரி,

//அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்? //

உண்மை!
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
kannan,

nijamavE kalakkaRIngka, BOSS !
vAZththukkaL, oru arumaiyAna pathiviRku ! Pl. keep it up.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா,

மிக்க நன்றி!
Chandravathanaa இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
yOsikka vaiththathu kannan.

Thanks.

-Mathy
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சந்திரவதனா,

நீங்கள் இங்கே அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது குறித்து மகிழ்ச்சி.

மதி,

வாருங்கோ, ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க இந்தப் பக்கம் ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிரதியாகிய நானும், வாசகியாகிய நீயும்

  சிட் கார்மனின் "It isn't for want" என்ற கவிதை  படித்ததும் மொழிபெயர்க்கத் தூண்டியது.  ஆங்கிலக்கவிதை இங்கே . Photo by Magesh Babu என் மொழிபெயர்ப்பு: எதையும் பேசவோ  உன்னிடம் சொல்லவோ   உனக்கு அறியத்தரவோ  வேண்டும் என்பதனாலல்ல - போக முடியாதபடி    உன்னை நிறுத்தி வைக்கவே -   இங்கு நான் நானாகிறேன்  நீ இருக்கும் வரை - நீ இருக்கும் வரை --- கவியின் / கவிதையின் (இப்படியான) வாசிப்பவருடனான நேரடி உரையாடல் அரிதானது.  ஆங்கிலப் பிரதியில் பலமுறை தோன்றும்  you   தமிழின் வேற்றுமை உருபுகளால் வெவ்வேறு வடிவங்களைக் கொள்கின்றது. ஆனால் அது அவ்வாறு வருவது ஒரு மந்திர உச்சாடனை போல கவிதையின் ஒலியமைப்புக்கு அழகு சேர்க்கிறது. இவ்வளவு ' நீ ' இருக்குமிடத்தில் ' நான் ' ஆங்கிலத்தில் மறைந்தேயிருக்கிறது. தமிழில் 'நான்' இல்லாமல் மொழிபெயர்க்க முடியுமானாலும் அந்த வரி தட்டையாகவே அமையும்.  நான் இங்கே முக்கியமல்ல - நீயே இங்கு நிறைந்திருக்கிறாய். உன்னைச் சுற்றியே எல்லா இயக்கமும்.  'நான்' பிரதி / கவி என்பது ஒரு வாசிப்பு. ஆனால் எவ்வளவு சாத்தியங்களை உள...