முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழிமாற்று இலக்கியங்களும் உரைநடையின் பரிணாமமும்: தமிழுக்கு எங்கே வாய்ப்பு நழுவியது?

Clicked by Magesh (https://www.flickr.com/photos/mageshb/)

சமீபத்தில் நான் பார்த்த/கேட்ட ஒரு நேர்காணலில் மலையாள எழுத்தாளர் ஒருவர் சொன்னார்:

 "என்னை மிகவும் பாதித்த புத்தகம் ரோமெயின் ரோலாந்து எழுதிய 'ஜீன் கிறிஸ்டோப்' (Jean-Christophe) என்ற நாவல்தான்." 

இதை அவர் மலையாளத்திலேயே படித்திருக்கிறார். டி.சி. புக்ஸ் (DC Books) இதனைப் பதிப்பித்திருக்கிறது. மலையாளிகள் சொல்லும் உலக இலக்கியங்களை எல்லாம் அவர்கள் மலையாளத்திலேயே படித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வயிறு எரிகிறது.

இந்த ஆதங்கத்திலிருந்தே மொழி குறித்த சில வரலாற்றுத் தேடல்கள் எனக்குள் தொடங்கின. குறிப்பாக, நவீன உரைநடை உருவாக்கத்தில் மலையாளத்திற்கும் தமிழுக்குமான பயணங்கள் எப்படி வெவ்வேறாக அமைந்தன என்பது பெரும் ஆர்வமூட்டும் ஒரு பேசுபொருளாக இருக்கிறது.


மேற்கண்ட தலைப்பில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடவும் விருப்பம் இருக்கிறது. 


அதற்கான முதற்படியாக, முதல் 'படி'யாக இப்படி என் எண்ணங்களைக் கோர்த்துக்கொள்கிறேன். இதை ஒரு முறையான (formal)  மொழியில் எழுதிப் பார்க்கவும் ஆசை - அப்படியே முயன்றிருக்கிறேன். 

***

மலையாள நவீனமாக்கலின் வித்து

மலையாளத்தின் மொழிமாற்று இலக்கியத்திற்கு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே வந்த வடமொழி ஆக்கங்களின் மொழியாக்கங்கள் பெரும் வளம் சேர்த்தன. 1925-ல் நாளப்பாடு நாராயணன் மேனோன், விக்தர் ஹுகோவின் 'லே மிசராப்ளே' நாவலை 'பாவங்கள்' என்ற பெயரில் மொழிபெயர்த்தார். அதே 1930-40 களில் வள்ளத்தோள், குமாரனாசான் போன்ற கவிஞர்கள் இராமாயணம், மகாபாரதம், காளிதாசன் படைப்புகள் போன்றவற்றை மொழிமாற்றம் செய்தார்கள்.

சமஸ்கிருதத்தின் பிடியில் (மணிப்பிரவாளம்) இருந்த மலையாளத்திற்கு, அம்மொழிக்கேயான தனித்துவத்தையும் பாணியையும் உருவாக்கிக்கொள்ள இந்த மொழிமாற்றங்களும் அவற்றின்பேரில் நடந்த விவாதங்களும் அடிகோலின. Stylistics, foregrounding பற்றி அன்றைக்கே (1940-களில், வேறு பெயர்களில்) ஆய்வு நூல்கள் வந்துள்ளன. சொற்களின் வரிசை பொருளின் அழுத்தத்திற்கு ஏற்ப மாறலாம் என்றும், 'நாடகம் பார்த்தல்' என்பதில் 'ஐ' என்கிற வேற்றுமை உருபைக் களைவது குறித்தும் அன்றைக்கே யோசித்துச் செய்திருக்கிறார்கள்.

(மலையாளப் பேராசிரியர் எம்.என். காரசேரியின் உரைகளையே இங்கே மலையாளம் குறித்த தகவல்களுக்குத் தரவுகளாகக் கொண்டுள்ளேன். செறிவான, தெளிவான இவ்வுரைகள் இணையத்தில் எங்கும் காணக்கிடைப்பன)


மலையாளத்தின் மொழிமாற்று இலக்கியங்களுக்கு அடிப்படையாய் இருந்தது பைபிளின் மொழிமாற்றமும் அச்சுப்பதிப்புமே. 19-ஆம் நூற்றாண்டில் பைபிள் மொழிபெயர்ப்பு செய்த பெஞ்சமின் பெய்லி (Benjamin Bailey), சாமானிய மக்களும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிக எளிய மலையாள உரைநடையை அவர் உருவாக்கினார். மலையாளிகள் இந்தப் புது மொழியை அப்படியே வரிந்துகொண்டார்கள். புதிய அமைப்புகளை உள்வாங்கிக் கொள்வதில் அந்த மொழிக்கு ஒரு நெகிழ்வுத்தன்மை இருந்தது.

20 ஆம் நூற்றாண்டின் மொழிபெயர்ப்புகள் இந்த மொழியையே அடியொற்றி வந்தன. இந்த ஆக்கங்கள் மற்றும் அவற்றின் விமரிசனங்கள் மூல மொழியில் கவனம் செலுத்தும் அதே வேளையில் மாற்று மொழியான மலையாளத்திலும் நேரும் மாற்றங்களை நவீனமயமாக்கலாக அணுகின. 

தமிழில் நிகழ்ந்தது என்ன? 

ஆரம்பகால மொழிபெயர்ப்புகளும், ஐரோப்பியர்களின் வருகையும் தமிழுக்கும் மலையாளத்திற்கும் ஒரே மாதிரியான கருவிகளையே (அச்சு இயந்திரம், உரைநடை, அகராதி) வழங்கின. ஆனால், அவை இரு மொழிகளிலும் ஏற்படுத்திய மாற்றம் வெவ்வேறானது.

தமிழுக்குத் தனக்கென ஒரு நீண்ட செவ்வியல் மரபும், தொல்காப்பியம் போன்ற வலுவான இலக்கண அடித்தளமும் இருந்தது. எனவே, தமிழ் நவீனமடையும்போது வேற்று மொழி நடையை உள்வாங்குவதை விட, வேற்று மொழிச் சொற்களை விலக்கி, தன்னுடைய தூய்மையான வேர்களை நோக்கித் திரும்பும் 'மீட்டெடுத்தல்' பாதையை (தனித்தமிழ் இயக்கம்) தேர்ந்தெடுத்தது.

தமிழின் நவீனமாக்கல் இலக்கியப் படைப்பாளிகளினாலேயே நேர்ந்திருக்கிறது என்பது என் பாமர நம்பிக்கை. வேதாகம மொழியின் மேற்கத்திய தொடரியல் (syntax) மற்றும் அதன் செயற்கையான தொன்மை மரபு காரணமாகத் தமிழர்கள் அந்த நடையைத் தங்கள் இலக்கியப் பாரம்பரியத்திற்கு அந்நியமானதாகவே கருதி நிராகரித்திருக்கலாம். நம் சிக்கல் அப்புது மொழியின் தொடரியல் பற்றியதே ஒழிய, சொற்களைப் பற்றியதல்ல என்பது என் அனுமானம்.

தொடரும் அந்நியத்தன்மையும் விடுபட்ட கண்ணிகளும் 

இதன் விளைவு? 


மலையாளத்தில் இன்று இயல்/பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. ஆனால் தமிழில், இயல் மொழிக்கும் இலக்கிய மொழிக்குமான தொலைவு நிலைத்துவிட்டது. இயல்மொழி ஆக்கங்கள் 'கொச்சை'யாகக் கருதப்பட்டன. இன்றும் எழுத்து மொழி (சங்க இலக்கியங்கள், மரபுக்கவிதைகள்) அந்நியமான ஒன்றாகவே இருக்கிறது. இளைய தலைமுறை இவற்றை ஊன்றிப் படிக்குமா என்கிற கேள்வி எழுகிறது.


பேச்சு மொழியும் எழுத்து மொழியும் வெவ்வேறாக இருப்பது "செடியின் தண்டும் இளம் தளிரும் போல" என என் நண்பன் சொன்னான். ஆனால், தண்டும் வளர வேண்டும் - வளரும், தடித்துப் பருமனாகும் அல்லவா? 


ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் காலத்து மொழிக்கும் 20-ஆம் நூற்றாண்டுப் படைப்புகளுக்கும் ஒரு இயல்பான, தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி (gradual transition) இருக்கிறது. ஆனால் நமக்கு பழைய இலக்கியங்களுக்கும் நவீனப் புதினங்களுக்குமான அந்தத் தொடர் இழை இல்லை.

தமிழர்களாகிய நாம் பழைமையை மார்தட்டிக்கொள்வதையே தொழிலாகச் செய்துவிட்டோமோ? இதன் காரணமாகத் தமிழ்ச் சமூகம் இழந்திருப்பது எவ்வளவு?


மொழிபெயர்ப்புகள் மலையாளத்திற்கு உலக இலக்கியத்தின் வாயிலைத் திறந்தன; மொழிநடையை மரபின் கட்டுகளிலிருந்து விடுவித்து, சமூக-தத்துவ விவாதங்களைத் தூண்டின. தமிழில் இத்தகைய ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பு இயக்கம் இல்லாதது ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு.


தமிழில் மொழிமாற்று இலக்கியங்களின் இந்த வெற்றிடம் குறித்து, ஒரு முறையான ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என்பதே என் தற்போதைய நோக்கம். மொழியியல் மற்றும் மொழி வரலாறு பெரும் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. இந்த முற்றுப்பெறாத, முடிவில்லாத விவாதத்தை இன்னொரு நாள் தொடர்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தோற்றோர், நேசிப்போர், வெல்வோர்

  எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது! வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன். பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே. John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம். இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

மழித்தலும் நீட்டலும் (வேறு)

மரியான் மூர் (Marianne Moore) தமது poetry என்ற கவிதையை ஐம்பது ஆண்டுகளூடாக எழுபது முறை திருத்தினார் என்றறிகிறோம். எட்டாண்டுகளாக மனதில் இருக்கும் இது, (கவிதையென்றே வீரத்துடன் பறைசாற்றுகிறேன்) இந்த வடிவில், இப்போதைக்கு நிறைவாய் அமைந்திருக்கிறது. படம் தந்து உதவியது நண்பன்  மகேஷ் உடையாத் தளைகள் ஆஸ்பத் திரியில் அம்மா கிடப்பு சுருண்டொரு சாணித் துணியது போலே ஒன்றாத்   தளைகள் அறுவது   மில்லை தேய்த்துக் குளித்தால் அழுக்கது போகும் ஒழுக்கம் விழுப்பம் கற்க கசடற மரபுக் கவிதை அரபுக் குதிரை ரோகம் பயங்கரம் தேகம் இதுசுமை