முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழிமாற்று இலக்கியங்களும் உரைநடையின் பரிணாமமும்: தமிழுக்கு எங்கே வாய்ப்பு நழுவியது?

Clicked by Magesh (https://www.flickr.com/photos/mageshb/)

சமீபத்தில் நான் பார்த்த/கேட்ட ஒரு நேர்காணலில் மலையாள எழுத்தாளர் ஒருவர் சொன்னார்:

 "என்னை மிகவும் பாதித்த புத்தகம் ரோமெயின் ரோலாந்து எழுதிய 'ஜீன் கிறிஸ்டோப்' (Jean-Christophe) என்ற நாவல்தான்." 

இதை அவர் மலையாளத்திலேயே படித்திருக்கிறார். டி.சி. புக்ஸ் (DC Books) இதனைப் பதிப்பித்திருக்கிறது. மலையாளிகள் சொல்லும் உலக இலக்கியங்களை எல்லாம் அவர்கள் மலையாளத்திலேயே படித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வயிறு எரிகிறது.

இந்த ஆதங்கத்திலிருந்தே மொழி குறித்த சில வரலாற்றுத் தேடல்கள் எனக்குள் தொடங்கின. குறிப்பாக, நவீன உரைநடை உருவாக்கத்தில் மலையாளத்திற்கும் தமிழுக்குமான பயணங்கள் எப்படி வெவ்வேறாக அமைந்தன என்பது பெரும் ஆர்வமூட்டும் ஒரு பேசுபொருளாக இருக்கிறது.


மேற்கண்ட தலைப்பில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடவும் விருப்பம் இருக்கிறது. 


அதற்கான முதற்படியாக, முதல் 'படி'யாக இப்படி என் எண்ணங்களைக் கோர்த்துக்கொள்கிறேன். இதை ஒரு முறையான (formal)  மொழியில் எழுதிப் பார்க்கவும் ஆசை - அப்படியே முயன்றிருக்கிறேன். 

***

மலையாள நவீனமாக்கலின் வித்து

மலையாளத்தின் மொழிமாற்று இலக்கியத்திற்கு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே வந்த வடமொழி ஆக்கங்களின் மொழியாக்கங்கள் பெரும் வளம் சேர்த்தன. 1925-ல் நாளப்பாடு நாராயணன் மேனோன், விக்தர் ஹுகோவின் 'லே மிசராப்ளே' நாவலை 'பாவங்கள்' என்ற பெயரில் மொழிபெயர்த்தார். அதே 1930-40 களில் வள்ளத்தோள், குமாரனாசான் போன்ற கவிஞர்கள் இராமாயணம், மகாபாரதம், காளிதாசன் படைப்புகள் போன்றவற்றை மொழிமாற்றம் செய்தார்கள்.

சமஸ்கிருதத்தின் பிடியில் (மணிப்பிரவாளம்) இருந்த மலையாளத்திற்கு, அம்மொழிக்கேயான தனித்துவத்தையும் பாணியையும் உருவாக்கிக்கொள்ள இந்த மொழிமாற்றங்களும் அவற்றின்பேரில் நடந்த விவாதங்களும் அடிகோலின. Stylistics, foregrounding பற்றி அன்றைக்கே (1940-களில், வேறு பெயர்களில்) ஆய்வு நூல்கள் வந்துள்ளன. சொற்களின் வரிசை பொருளின் அழுத்தத்திற்கு ஏற்ப மாறலாம் என்றும், 'நாடகம் பார்த்தல்' என்பதில் 'ஐ' என்கிற வேற்றுமை உருபைக் களைவது குறித்தும் அன்றைக்கே யோசித்துச் செய்திருக்கிறார்கள்.

(மலையாளப் பேராசிரியர் எம்.என். காரசேரியின் உரைகளையே இங்கே மலையாளம் குறித்த தகவல்களுக்குத் தரவுகளாகக் கொண்டுள்ளேன். செறிவான, தெளிவான இவ்வுரைகள் இணையத்தில் எங்கும் காணக்கிடைப்பன)


மலையாளத்தின் மொழிமாற்று இலக்கியங்களுக்கு அடிப்படையாய் இருந்தது பைபிளின் மொழிமாற்றமும் அச்சுப்பதிப்புமே. 19-ஆம் நூற்றாண்டில் பைபிள் மொழிபெயர்ப்பு செய்த பெஞ்சமின் பெய்லி (Benjamin Bailey), சாமானிய மக்களும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிக எளிய மலையாள உரைநடையை அவர் உருவாக்கினார். மலையாளிகள் இந்தப் புது மொழியை அப்படியே வரிந்துகொண்டார்கள். புதிய அமைப்புகளை உள்வாங்கிக் கொள்வதில் அந்த மொழிக்கு ஒரு நெகிழ்வுத்தன்மை இருந்தது.

20 ஆம் நூற்றாண்டின் மொழிபெயர்ப்புகள் இந்த மொழியையே அடியொற்றி வந்தன. இந்த ஆக்கங்கள் மற்றும் அவற்றின் விமரிசனங்கள் மூல மொழியில் கவனம் செலுத்தும் அதே வேளையில் மாற்று மொழியான மலையாளத்திலும் நேரும் மாற்றங்களை நவீனமயமாக்கலாக அணுகின. 

தமிழில் நிகழ்ந்தது என்ன? 

ஆரம்பகால மொழிபெயர்ப்புகளும், ஐரோப்பியர்களின் வருகையும் தமிழுக்கும் மலையாளத்திற்கும் ஒரே மாதிரியான கருவிகளையே (அச்சு இயந்திரம், உரைநடை, அகராதி) வழங்கின. ஆனால், அவை இரு மொழிகளிலும் ஏற்படுத்திய மாற்றம் வெவ்வேறானது.

தமிழுக்குத் தனக்கென ஒரு நீண்ட செவ்வியல் மரபும், தொல்காப்பியம் போன்ற வலுவான இலக்கண அடித்தளமும் இருந்தது. எனவே, தமிழ் நவீனமடையும்போது வேற்று மொழி நடையை உள்வாங்குவதை விட, வேற்று மொழிச் சொற்களை விலக்கி, தன்னுடைய தூய்மையான வேர்களை நோக்கித் திரும்பும் 'மீட்டெடுத்தல்' பாதையை (தனித்தமிழ் இயக்கம்) தேர்ந்தெடுத்தது.

தமிழின் நவீனமாக்கல் இலக்கியப் படைப்பாளிகளினாலேயே நேர்ந்திருக்கிறது என்பது என் பாமர நம்பிக்கை. வேதாகம மொழியின் மேற்கத்திய தொடரியல் (syntax) மற்றும் அதன் செயற்கையான தொன்மை மரபு காரணமாகத் தமிழர்கள் அந்த நடையைத் தங்கள் இலக்கியப் பாரம்பரியத்திற்கு அந்நியமானதாகவே கருதி நிராகரித்திருக்கலாம். நம் சிக்கல் அப்புது மொழியின் தொடரியல் பற்றியதே ஒழிய, சொற்களைப் பற்றியதல்ல என்பது என் அனுமானம்.

தொடரும் அந்நியத்தன்மையும் விடுபட்ட கண்ணிகளும் 

இதன் விளைவு? 


மலையாளத்தில் இன்று இயல்/பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. ஆனால் தமிழில், இயல் மொழிக்கும் இலக்கிய மொழிக்குமான தொலைவு நிலைத்துவிட்டது. இயல்மொழி ஆக்கங்கள் 'கொச்சை'யாகக் கருதப்பட்டன. இன்றும் எழுத்து மொழி (சங்க இலக்கியங்கள், மரபுக்கவிதைகள்) அந்நியமான ஒன்றாகவே இருக்கிறது. இளைய தலைமுறை இவற்றை ஊன்றிப் படிக்குமா என்கிற கேள்வி எழுகிறது.


பேச்சு மொழியும் எழுத்து மொழியும் வெவ்வேறாக இருப்பது "செடியின் தண்டும் இளம் தளிரும் போல" என என் நண்பன் சொன்னான். ஆனால், தண்டும் வளர வேண்டும் - வளரும், தடித்துப் பருமனாகும் அல்லவா? 


ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் காலத்து மொழிக்கும் 20-ஆம் நூற்றாண்டுப் படைப்புகளுக்கும் ஒரு இயல்பான, தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி (gradual transition) இருக்கிறது. ஆனால் நமக்கு பழைய இலக்கியங்களுக்கும் நவீனப் புதினங்களுக்குமான அந்தத் தொடர் இழை இல்லை.

தமிழர்களாகிய நாம் பழைமையை மார்தட்டிக்கொள்வதையே தொழிலாகச் செய்துவிட்டோமோ? இதன் காரணமாகத் தமிழ்ச் சமூகம் இழந்திருப்பது எவ்வளவு?


மொழிபெயர்ப்புகள் மலையாளத்திற்கு உலக இலக்கியத்தின் வாயிலைத் திறந்தன; மொழிநடையை மரபின் கட்டுகளிலிருந்து விடுவித்து, சமூக-தத்துவ விவாதங்களைத் தூண்டின. தமிழில் இத்தகைய ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பு இயக்கம் இல்லாதது ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு.


தமிழில் மொழிமாற்று இலக்கியங்களின் இந்த வெற்றிடம் குறித்து, ஒரு முறையான ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என்பதே என் தற்போதைய நோக்கம். மொழியியல் மற்றும் மொழி வரலாறு பெரும் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. இந்த முற்றுப்பெறாத, முடிவில்லாத விவாதத்தை இன்னொரு நாள் தொடர்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...