முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா இறந்தபோது நிம்மதியாயிற்று

 மலையாளக் கவிஞர் கல்பெட்டா நாராயணனின் பேச்சைக் கேட்பது ஒரு சுகம். பேசும் சொற்களை அன்றைக்குதான் கண்டுபிடித்தது போல கண்கள் மின்ன, சொற்-ஸ்வரங்களை நீட்டிச் சுருக்கி, வாக்கியங்களை அவர் இசைப்பார். உள்ளடக்கம் என்னவாயிருந்தாலும் பேசும் பாங்கே எல்லாவற்றையும் சுவாரஸ்யமானதாக்கிவிடும். 

வயநாடு இலக்கிய விழாவில் அவர் பேசும்போது, தாம் எழுதிய 'ஆசுவாஸம்' என்ற கவிதையைச் சொன்னார். மலையாளத்தில்தான் இன்னும் கவிதை 'பாடுகிறார்கள்'. சில கவிதை 'சொல்லல்கள்' இசையுடன் பாட்டாகவே செய்யப்படுவதுண்டு. 


வடமொழிக் கலப்பு இருந்தாலும், தமிழின் 'சென்சிபிலிட்டி'யே மலையாள மொழிக்கும் பொருந்திவருகிறது. இதனாலேயே இக்கவிதைகளை நாம் தமிழக் கவிதைகள் போலவே வாசிக்கலாம், அனுபவிக்கலாம்.


இனி, 'ஆசுவாஸ'த்தின் (என்) மொழிபெயர்ப்பு:


நிம்மதி

 - கல்ப்பெட்டா நாராயணன் (மலையாளம்) 


அம்மா இறந்தபோது 

நிம்மதியாயிற்று. 


இனி நான் இராப்பட்டினி கிடக்கலாம் 

தொல்லை பண்ண யாரும் இல்லை. 


இனி உலர்ந்து காயும்வரை நான் தலைதுவட்ட வேண்டியதில்லை

யாரும் முடிக்கற்றையை விலக்கிப் பார்க்கமாட்டார்கள். 


இனி நான் கிணற்றின் ஆள்மறைவில் உட்கார்ந்து 

தூங்கியாடிக்கொண்டே புத்தகம் படிக்கலாம் 

பாய்ந்தெத்தும் கூக்குரல் என்னை 

திடுக்கிட்டெழச்  செய்யாது.


இனி அந்திநேரங்களில் வெளியே செல்லும்போது 

நான்  டார்ச் எடுத்துச்செல்ல வேண்டாம் 

விஷம் தீண்டி 

ரோமத்துளைகளிலூடே 

இரத்தம் கசிந்து செத்த 

பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து 

உறக்கத்தினின்றும் விதிர்த்தெழுந்திருந்த மனது 

நேற்றைக்கு இல்லாமலானது.


இனி நான் சென்றுசேருமிடத்தில் உறங்கலாம் 

நான் வந்துசேர்த்தால் மட்டுமே 

அணையும் விளக்குள்ள வீடு 

நேற்றைக்கு அணைந்துவிட்டது. 


நான் அனுபவிக்கும் அத்தனையும் தன் குற்றமே 

என்ற கர்ப்பகால நினைப்பிலிருந்து 

அம்மா நேற்று விடுதலையடைந்தாள். 


கடைசியில் அம்மா என்னைப் பெற்றுத் தீர்த்தாள். 


உலகில் உடல்வேதனை காரணத்தாலன்று 

துக்கத்தால் இனியாரும் அழ மாட்டார்கள்.


இது கவிஞர் நினைவிலிருந்து சொல்லியது. இதன் பிரசுர வடிவம் இங்கே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...