முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராமநாதம் (வேறு)

MD இராமனாதன் தோடியில் ஒரு விருத்தம் பாடுகிறார். பாடும்போதே அவ்வப்போது பாடலின் கவியின்பத்தை விளக்குகிறார். முடிவில் அவையில் ஒருவர் அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். அதற்கிணங்கி இராமனாதன் ஆங்கிலத்தில் அதை விளக்குகிறார். 

அவை குலுங்குகிறது. 

ஒருவர் சொல்லுகிறார் "Sir, the meaning was as beautiful as your Thodi!" அதற்கு ஒரு குழந்தைச் சிரிப்பு சிரிக்கிறார் MDR! 

'“மற்றவர்கள் வாதாபி கணபதிம் பாடும்போது அன்னப்பறவை நீந்துவது போல இருக்கும். நீங்கள் பாடுகிறபோது யானை நடப்பதுபோல இருக்கிறது” என்று சொன்னபோது எம்.டி.ஆரின் ஒன்றரைக் கண்ணில் ஒரு முதிர்ந்த குழந்தையின் சிரிப்பு’ என்று கவிஞர் சுகுமாரன் தனது MDR சந்திப்பு குறித்து ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வந்தது. 

YouTube சுட்டி இப்போது வேலை செய்யவில்லை :( இருந்தால் அந்த தோடி விருத்தத்தின் கடைசி ஒரு நிமிடமும் இராமநாதனின் பாடல் விளக்கத்தையும் கேட்டிருக்கலாம். அப்புறம் என்னை மிகவும் பாதித்த அந்த பத்து நொடி உரையாடலும்... கலைஞனிடம் இப்படி நெருங்கி அவன் கலையைப் பற்றிச் சிலாகித்தலும் கலைஞன் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுதலும்...

   

படைப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் முற்றிலும் மாறுபட்ட மனிதனாகிவிடுகிறான் என்று நான் நினைப்பேன். கலையைப் பற்றிய கலைஞனின் ஊடாடல்கள் படைப்பின் மூலமே நிகழ்கின்றன.

மேடையில் பாடும்போது சபையினர் கைத்தட்டலாம், பாராட்டலாம்; ஆனால் அவையாவும் கலைஞனிடம் பெரும் சலனத்தை ஏற்படுத்துவதில்லை. சுருங்கச் சொன்னால் பாம்பு இரையை விழுங்கும் நேரத்தில் எவ்வளவு பலவீனமாகவும், பாதிப்புக்கு ஆளாகும் நிலையிலும் இருக்கிறதோ அப்படியே படைப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் நிலையும் என்றே தோன்றும். 

இராமநாதன் மேடையில் பாடும்போதே சபையினரிடம் சாதாரணமாகப் பேசக்கூடியவர். ஆனால் அது இரசிகருடனான உரையாடல் அல்ல. அவர் கலைவெளிப்பாட்டின் ஓர் அங்கமே. 

ஆனால் இங்கே கலையைப் பிரசவிக்கும் ‘பச்சையான’ தருணத்தில் ஒருவன் சாமர்த்தியமாக கலையைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னதும், மிகவும் அரிதான இந்த ஊடாட்டத் திறப்பில் கலைஞன் அதை அங்கீகரித்ததும் ஏனோ என்னைக் கண்கலங்கச்செய்தது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...