முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராமநாதம் (வேறு)

MD இராமனாதன் தோடியில் ஒரு விருத்தம் பாடுகிறார். பாடும்போதே அவ்வப்போது பாடலின் கவியின்பத்தை விளக்குகிறார். முடிவில் அவையில் ஒருவர் அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். அதற்கிணங்கி இராமனாதன் ஆங்கிலத்தில் அதை விளக்குகிறார். 

அவை குலுங்குகிறது. 

ஒருவர் சொல்லுகிறார் "Sir, the meaning was as beautiful as your Thodi!" அதற்கு ஒரு குழந்தைச் சிரிப்பு சிரிக்கிறார் MDR! 

'“மற்றவர்கள் வாதாபி கணபதிம் பாடும்போது அன்னப்பறவை நீந்துவது போல இருக்கும். நீங்கள் பாடுகிறபோது யானை நடப்பதுபோல இருக்கிறது” என்று சொன்னபோது எம்.டி.ஆரின் ஒன்றரைக் கண்ணில் ஒரு முதிர்ந்த குழந்தையின் சிரிப்பு’ என்று கவிஞர் சுகுமாரன் தனது MDR சந்திப்பு குறித்து ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வந்தது. 

YouTube சுட்டி இப்போது வேலை செய்யவில்லை :( இருந்தால் அந்த தோடி விருத்தத்தின் கடைசி ஒரு நிமிடமும் இராமநாதனின் பாடல் விளக்கத்தையும் கேட்டிருக்கலாம். அப்புறம் என்னை மிகவும் பாதித்த அந்த பத்து நொடி உரையாடலும்... கலைஞனிடம் இப்படி நெருங்கி அவன் கலையைப் பற்றிச் சிலாகித்தலும் கலைஞன் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுதலும்...

   

படைப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் முற்றிலும் மாறுபட்ட மனிதனாகிவிடுகிறான் என்று நான் நினைப்பேன். கலையைப் பற்றிய கலைஞனின் ஊடாடல்கள் படைப்பின் மூலமே நிகழ்கின்றன.

மேடையில் பாடும்போது சபையினர் கைத்தட்டலாம், பாராட்டலாம்; ஆனால் அவையாவும் கலைஞனிடம் பெரும் சலனத்தை ஏற்படுத்துவதில்லை. சுருங்கச் சொன்னால் பாம்பு இரையை விழுங்கும் நேரத்தில் எவ்வளவு பலவீனமாகவும், பாதிப்புக்கு ஆளாகும் நிலையிலும் இருக்கிறதோ அப்படியே படைப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் நிலையும் என்றே தோன்றும். 

இராமநாதன் மேடையில் பாடும்போதே சபையினரிடம் சாதாரணமாகப் பேசக்கூடியவர். ஆனால் அது இரசிகருடனான உரையாடல் அல்ல. அவர் கலைவெளிப்பாட்டின் ஓர் அங்கமே. 

ஆனால் இங்கே கலையைப் பிரசவிக்கும் ‘பச்சையான’ தருணத்தில் ஒருவன் சாமர்த்தியமாக கலையைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னதும், மிகவும் அரிதான இந்த ஊடாட்டத் திறப்பில் கலைஞன் அதை அங்கீகரித்ததும் ஏனோ என்னைக் கண்கலங்கச்செய்தது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...