முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராமநாதம் (வேறு)

MD இராமனாதன் தோடியில் ஒரு விருத்தம் பாடுகிறார். பாடும்போதே அவ்வப்போது பாடலின் கவியின்பத்தை விளக்குகிறார். முடிவில் அவையில் ஒருவர் அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். அதற்கிணங்கி இராமனாதன் ஆங்கிலத்தில் அதை விளக்குகிறார். 

அவை குலுங்குகிறது. 

ஒருவர் சொல்லுகிறார் "Sir, the meaning was as beautiful as your Thodi!" அதற்கு ஒரு குழந்தைச் சிரிப்பு சிரிக்கிறார் MDR! 

'“மற்றவர்கள் வாதாபி கணபதிம் பாடும்போது அன்னப்பறவை நீந்துவது போல இருக்கும். நீங்கள் பாடுகிறபோது யானை நடப்பதுபோல இருக்கிறது” என்று சொன்னபோது எம்.டி.ஆரின் ஒன்றரைக் கண்ணில் ஒரு முதிர்ந்த குழந்தையின் சிரிப்பு’ என்று கவிஞர் சுகுமாரன் தனது MDR சந்திப்பு குறித்து ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வந்தது. 

YouTube சுட்டி இப்போது வேலை செய்யவில்லை :( இருந்தால் அந்த தோடி விருத்தத்தின் கடைசி ஒரு நிமிடமும் இராமநாதனின் பாடல் விளக்கத்தையும் கேட்டிருக்கலாம். அப்புறம் என்னை மிகவும் பாதித்த அந்த பத்து நொடி உரையாடலும்... கலைஞனிடம் இப்படி நெருங்கி அவன் கலையைப் பற்றிச் சிலாகித்தலும் கலைஞன் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுதலும்...

   

படைப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் முற்றிலும் மாறுபட்ட மனிதனாகிவிடுகிறான் என்று நான் நினைப்பேன். கலையைப் பற்றிய கலைஞனின் ஊடாடல்கள் படைப்பின் மூலமே நிகழ்கின்றன.

மேடையில் பாடும்போது சபையினர் கைத்தட்டலாம், பாராட்டலாம்; ஆனால் அவையாவும் கலைஞனிடம் பெரும் சலனத்தை ஏற்படுத்துவதில்லை. சுருங்கச் சொன்னால் பாம்பு இரையை விழுங்கும் நேரத்தில் எவ்வளவு பலவீனமாகவும், பாதிப்புக்கு ஆளாகும் நிலையிலும் இருக்கிறதோ அப்படியே படைப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் நிலையும் என்றே தோன்றும். 

இராமநாதன் மேடையில் பாடும்போதே சபையினரிடம் சாதாரணமாகப் பேசக்கூடியவர். ஆனால் அது இரசிகருடனான உரையாடல் அல்ல. அவர் கலைவெளிப்பாட்டின் ஓர் அங்கமே. 

ஆனால் இங்கே கலையைப் பிரசவிக்கும் ‘பச்சையான’ தருணத்தில் ஒருவன் சாமர்த்தியமாக கலையைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னதும், மிகவும் அரிதான இந்த ஊடாட்டத் திறப்பில் கலைஞன் அதை அங்கீகரித்ததும் ஏனோ என்னைக் கண்கலங்கச்செய்தது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...

Procrastination

மனம் பார்க்க விரும்புவதையே கண் பார்க்கிறது. கொட்டை எழுத்தில் வருமான வரி Returns சமர்ப்பிக்கக் கடைசித் தேதி நீட்டிப்பு என்று இந்தச் செய்தித் துணுக்கில் படித்த போது, விபரங்களையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்திருக்கலாம். அப்படிப் பார்த்திருந்தால் அந்நீட்டிப்பு குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு மட்டுமே என்ற உண்மை தெரிந்திருக்கும். இப்போது கடைசித் தேதியைத் தவறவிட்டாயிற்று. எல்லாம் ஒரு மெத்தனம் தான் - என்ன ஆனாலும் ஒரு மாதத்திற்காவது இதை நீட்டிப்பார்கள் என்று. வருமான வரியைச் சரியாகக் கட்டியும், உரிய நேரத்திற்கு இதைச் சமர்ப்பிக்காததில் அபராதம் கட்ட வேண்டி வரும் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அபராதம் இருக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று ஒரு வேலையை ஒரு காரணமும் இன்றித் தள்ளிப் போடுவதைத் தடுக்க என்ன செய்வது? Procrastination என்ற இதை வெற்றி கொள்வது எப்படி என்று ஒரு புத்தகம் கூட வாங்கி விட்டேன். வழக்கம் போல, இதைப் படிப்பதையும் ஒத்தி வைப்பு செய்தாயிற்று! எந்த மாறுதலையும் வெளியிலிருந்து திணிக்க முடியாது. மாற்றத்தின் தேவை உள்ளிலிருந்து வர வேண்டும். புத்தகங்கள் படித்தும் யாதொரு பிரயோஜனமுமில்...