முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனது நிறையச் சாப்பாடு

பிரபஞ்சனின் சிறுகதையொன்றில் ஒருவர் கடையில் இட்லி வாங்கிச்சாப்பிடுகிறார். பரிமாறுபவர் கேட்பார்,

 “முதலில் சட்னியா, இல்லை சாம்பாரா? எதை ஊற்றட்டும்?” 

 பாத்திரத்தினூடாகப் பிரபஞ்சனே (வரிகள் நினைவிலிருந்து)   சொல்லுவார்: 

“ இந்தக் கேள்வியே பிடித்திருந்தது. சட்னிக்கும் சாம்பாருக்கும் வெவ்வேறு சுவைகள். இரண்டையும் ஒரே நேரத்தில் ஊற்றிக் கலந்து சாப்பிடுவது எனக்குப்பிடிக்காது” 


உணவைப் பரிமாறுவது சிலருக்கே கைவந்த கலை. 


நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத போது அது நிகழும்:  ஊர் பெயர் தெரியாத ஏதோ ஒரு கடையில், கடனுக்காகத் தலையைக் காட்டின திருமணச் சாப்பாட்டுப்பந்தியில், இப்படி ஏதோ ஓரிடத்தில் சுவையானதுடன் மனதுக்கு நிறைவான சாப்பாடு சில பரிமாறுபவர்களின் தயவால் அமையும்.


'உஸ்தாத் ஓட்டல்' திரைப்படத்தில் திலகன் பேசும்  ஒருவரி  வசனம் நினைவுக்கு வருகிறது: “வயிற்றை நிரப்ப யாராலும் முடியும், ஆனால் சாப்பிடுபவர்களின் மனது நிறைய வேண்டும். அதுதான் சரியான கைப்பக்குவம்”


(படம்: நண்பன் மகேஷ்பாபு எடுத்தது) 



உறங்கும்போதும், உண்ணும் போதும் மனிதர்கள் குழந்தைகள் போலாகிவிடுகிறார்கள். கால்களைப்  பின்னிக்கொண்டும், கையை மேசைமேல் ஊன்றியும், குனிந்தும் நிமிர்ந்தும், அமர்ந்தும், நின்று கொண்டும் மனிதர் சாப்பிடும் போது அவர்களை எப்போதும் வியப்புடன் பார்த்திருக்கிறேன். பாசாங்குகளும்,  வேடங்களும்,  ஒப்பனைகளும் இல்லாமல் மனிதரைப் பச்சையாய் பார்க்க நேருவது இத்தருணங்களில் தான்.   அவ்வேளைகளில் அவர்களை அணைத்துக்கொள்ள வேண்டும் எனத்தோன்றும். இதை முழுதாக உணர்ந்துகொண்டதன், உள்வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடாகச் சிலர் உணவைப் பரிமாறும்போது, அது ஒருவிதமான தாயன்போடு அமைகிறது என்று நினைக்கிறேன். 


சிறுவயதில் பிரைமரி காம்ப்ளெக்ஸ் இருந்ததால் அடிக்கடி போத்தனூர் ஜிடி மருத்துவமனையில் எனக்கு ஊசி போட்டுக்கொள்ளும், இல்லையென்றால் இரத்தம் பரிசோதிக்கும் திருவிழா நடக்கும். அரைமணிநேரம் அழுது புலம்பி அங்கிருக்கும் தாதியர்கள் அனைவருக்கும் தலைவலி வரச்செய்யும் அந்நாட்களில், மருத்துவமனை வாசலில் அனந்தராமன் கடை ஓட்டுப்பக்கோடா தான் அன்றைய  ஒரே நல்ல அம்சமாக அமையும். 


அனந்தராமன்  போத்தனூர் இரயில் நிலையம் கொடிகட்டிப்பறந்த அறுபதுகளில் அங்கிருந்த உணவகத்தில் மேற்பார்வையாளராக இருந்தவர். போத்தனூர் அந்நாளில் இரயில் கோட்டத் தலைமை நிலையமாக இருந்தது. இது  கோவையின் பிரதான நிலையமாக இருந்ததல்லாமல் இங்கே இரயில்வேயின் சமிக்ஞைக் கருவிகளுக்கான பணிமனையும், பயிற்சி நிலையமும், பெரிய ‘லோக்கோ ஷெட்டும்’  இருந்த. அப்புறம் இந்தக்கோட்டமே இடம் மாறிப் பாலக்காடு கோட்டமாக ஆனபிறகு போத்தனூர் நிலையம் களையிழந்து விட்டது. (கோவையின் முதல் தபால் நிலையம் 1886ல் போத்தனுரிலேயே நிறுவப்பட்டது என்பது உட்பட போத்தனுர் விசேடங்கள் அநேகம் )


அதற்கப்புறம் அனந்தராமன் ஜிடி ம.மனை வாசலில் ஒரு தள்ளுவண்டியில் கடைவிரித்தார். சுவற்றை ஒட்டி நிற்கும் வண்டி; அச்சுவற்றிலிருந்தே ஒரு தார்பாயைக் கொண்டு வண்டியை மூடியிருப்பார். வண்டிக்குள் ஒரு கண்ணாடிப் பேழை - மர மூடி கொண்டது. கடையை மூடித்திறக்கும் பலகை வெளியில் நின்று சாப்பிடும் மேசையாகப் பயன்பட்டது. 


தினமும் காலையில் ஆறரை மணிக்கு மிதிவண்டியில் ஒரு தூக்கில் இட்லி மாவு, இன்னுமிரண்டில் சாம்பார் மற்றும் சட்னி, மற்றும் பால் ஆகியவற்றை வீட்டிலிருந்து எடுத்து வருவார். கண்ணாடிப் பேழைக்குள் தூக்குகள் அமரும். 


செவ்வக வடிவில் வெட்டிய வாழையிலையில் சூடான இட்லியைப் பரிமாறுவார். காலையிலேயே வெற்றிலை குதப்பும் வாயுடன் இருப்பார். அவர் பரிமாறும் விதமும் சாம்பாரை ஊற்றும் இலாகவமும் அந்தச் சாம்பாரின் சுவையும் இன்றும் பசியைத் தூண்டக்கூடிய. நீர்க்க இருக்கும் சாம்பாரில் சிறிய காய்கறித்துண்டுகள் அரிதாகக் கிட்டும். சிறிய இட்லிகள் - யாரும் நான்காவது சாப்பிட்டால் தான் ஏதும் உண்டதுபோல் இருக்கும். 


ஊரில் அப்பகுதியில்  இருக்கும் எளியவர் அனைவரும் அங்கேயே சாப்பிடுவர். ம.மனைக்கு வரும் சிலர் தேநீர் அருந்துவர். (கடையில் ஒரு பாய்லர் உண்டு) வீட்டில் அவ்வப்போது இங்கிருந்துதான் சிற்றுண்டி. காலையில் இரண்டு பாத்திரங்களைக் கையில் கொடுத்து “பன்னண்டு இட்லி வாங்கிட்டு வா அனந்தராமன்ட்ட” என்று அம்மா அனுப்புவாள். அன்றைக்கு நாலாணாவுக்கு விற்ற இட்லியின் விலை உணவகங்களில் 75 பைசா முதல் ஒரு ரூபாய் வரை இருந்திருக்கலாம். சாயங்காலங்களில் ஓட்டுப்பக்கோடாவும் தேநீரும் மட்டும் கிடைக்கும்.


நல்ல உணவை எவரும் வாங்கும் விலையில் தந்த அனந்தராமன்  அப்படியே எனக்குத்தெரிந்து இருபது வருடங்கள் கடையை நடத்தினார். விலைவாசிக்கு ஏற்ப இட்லியின் விலையும் கூடினாலும் மற்றவிடங்களைவிடக் குறைவாகவே இருந்தது. என்னைப் போலவே அங்கே வழக்கமாகச் சாப்பிட்ட அனைவரும் இவரின் பரிமாறும் கனிவைத் தெரிந்துகொண்டிருந்தார்கள் என்றே நினைக்கிறேன்.


விலை, சுவையை விட அவர் முகமும் பரிமாறும் விதமுமே இன்னும் மனதில் நிற்கிறது. இன்றைக்கு எத்தனையோ விதங்களில் சமைத்த உணவை ‘அழகுபடுத்திக்’ கொடுக்கிறார்கள். சாப்பிடத்தூண்டுவது இந்த அழகுதானா? கைக்கு அடக்கமான,    செவ்வக  வாழையிலையில் வைத்த இட்லி போன்ற அழகும், அவர் சாம்பார் கரண்டியை ஒருவிதமாகப் பிடித்திருக்கும் அழகும், அந்தக்கரண்டி சாம்பார் தூக்கில் படும் ஒலியின் அழகும் அதற்கப்புறம் கடைகளில் ('கடைகளில்' என்பதை ஒரு பாதுகாப்புக்குச் சேர்த்துக்கொள்கிறேன்) சாப்பிட்ட எதிலும் இல்லை. வேறெதுவும்  இவ்வளவு நாட்களாக மறக்காமல் நினைவிலும் இல்லை. 


மனது நிறையச் சாப்பிடுவது என்னவென்று அனுபவத்தில் தெரிந்துகொள்ள முடிந்ததே மீதம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க