முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"கௌரியம்ம புறத்தாயி"

பல்கலையில் முதுகலைப் பட்டப்படிப்பு ‘படித்துக்கொண்டிருந்த’ போது தங்குவிடுதியில் இருந்த மலையாளி மாணவனிடம் என் மலையாள அறிவைப் பீற்றிக்கொள்ளும் விதமாக ஊர் விசேடங்களை எனக்குத் தெரிந்த மலையாளத்தில் கேட்டேன். அவன் சொன்னான்:


 “கௌரியம்மயெப் புறத்தாக்கி”. 


எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கேரள அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சர், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் (அப்போது) மேலாக மக்கள் பணியாற்றிய கே. ஆர். கௌரியம்மயைப் பற்றித்தான் சொல்கிறான் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. 1994ல் அவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினின்றும் விலக்கப்பட்டார்.

எனக்கு அரசியல் சாய்வோ, முதிர்ச்சியோ இல்லாமலிருந்த காலம். என்னையொத்த பலருக்கும் அந்த வயதில் தீவீர அரசியல் நிலைப்பாடுகள் தோன்றவாரம்பித்திருக்கலாம். எனக்கு அவ்வாறில்லாமல் இருந்ததற்கு என்னுடைய மத்தியவர்க்கக் குடும்பச்சூழல் காரணமாயிருக்கலாம். அன்றைக்கு எப்படியோ சிரித்து சமாளித்துக்கொண்டாலும், ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரைக்  கட்சியிலிருந்து நீக்கியதை பெரிய செய்தியாக என் வயதொத்தவன் சொன்னது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.  “கௌரியம்மயெப் புறத்தாக்கி” என்பது மனதில் அப்படியே தங்கிவிட்டது. அதை ஒரு நகைச்சுவையாகப் பலரிடம் பகிர்ந்திருக்கிறேன் ("நான் ஏதோ எனக்குத் தெரிந்த கன்னடத்தில் 'சென்னாகிதீரா?' என்று கேட்கப்போக, அவன் இதுதாண்டா சாக்கென்று கன்னடத்தில் 'ஹள்ளி-கிள்ளி, ஹௌது-பௌது' என்று பொளந்து கட்டிவிட்டான்" - என்பது போன்ற அனுபவப் பகிர்தல் சந்தர்ப்பங்களில் என்னுடைய அனுபவக் கதை நல்ல வரவேற்பைப் பெற்றது).

1990ல் வெளியான லால் சலாம் என்ற திரைப்படத்தைப் (1994 க்கு அப்புறம்) பார்க்க நேர்த்தபோது, அத்திரைப்படம்  கேரள கம்யூனிஸ்ட் இயக்கம், மற்றும் தலைவர்களின் சரித்திரம் சார்ந்த  புனைவு  என்றும், சகாவு சேதுலட்சுமி என்கிற கதாபாத்திரம் கௌரியம்மையைக் குறிக்கிறது என்று  தெரிந்தது. பின்னால் என் மலையாள நண்பர்களிடம் அவரைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டேன்.  இத்திரைப்படத்தை முதலில் பார்த்த போது, நான் எதிர்பார்த்த பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லையென்ற ஏமாற்றம் இருந்தது. நானும் என் தம்பியும்  விளையாட்டாக (அப்படத்தில் வரும் வசனம் ஒன்றை வைத்து) "பீடியுண்டோ சகாவே, தீப்பெட்டியெடுக்காம்" என்றும் "தீப்பெட்டியுண்டோ சாகவே, ஒரு பீடியெடுக்காம்" என்றும், பீடி, தீப்பெட்டியை மாற்றி வேறு பலவற்றை வைத்து - இன்று வடிவேல் காமெடி வசனங்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதுபோல் - கேலியாகப் பேசிக்கொள்வோம். 


ஆனால், இத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க எதுவோ தூண்டியது. ஒரு கம்யூனிஸ்ட் 'கல்ட்' நிலையை அது அடைந்திருந்தது என்று போகப் போகத்தான் புரிந்தது. சுதந்திரத்துக்கு முன்னான கேரளம் நிலவுடைமைக்காரர்கள் ஆதிக்கத்தில் இருந்ததும் (1922 என்கிற படத்தையும் முன்னர் அறியாத வயதில் பார்த்திருந்தேன் - நம்பூதிரிகளின் முன்னால்  மாராப்பு அணிந்து செல்லக்கூடாது என்பது தொடங்கிய பல சாதிய அடக்குமுறைகளை சித்தரித்தது) அவர்களை எதிர்த்து உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், பொதுவுடைமைக் கொள்கைகளை முன்னிறுத்தியும் பணியாற்றிய கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் முதலாளிகளின், மற்றும் பொது சமுகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டது; அவ்வியக்கத்தினர் ஒளிந்தும் பதுங்கியும் செயல்பட்டது; சுதந்திரத்திற்குப் பின்னல் அவ்வியக்கம் அரசியல் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியது என்பதெல்லாம் விளங்கியது. 

திரைப்படத்தில் பார்த்த சகாவு சேதுலட்சுமி செல்வம் நிறைந்த 'தரவாட்டில் ' பிறந்தாலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து பணியாற்றுகிறாள். பெண்களுக்கென்ற கட்டுப்பாடுகள் எதுவும் அவளைத் தடுப்பதில்லை - தனக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்யும்  / பேசும் சுதந்திரத்தை அவள் விரும்புகிறாள். இயக்கத்தில் சகாவான ஆண்டனியிடம் காதல் வயப்படுகிறாள் - அவர்கள் தினமும் அவள் வீட்டில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரும் இரவு நெடுநேரம் வரையில் அவள் படுக்கையறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். சேது இயக்கச் செயல்படுகளில் மூழ்குகிறாள். மறியல் தொடங்கிய போராட்டங்களில் பங்குகொள்கிறாள், சிறை செல்கிறாள்; இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக முன்னேறுகிறாள். 

திரைப்படம் மூலமான புரிதலானாலும், அக்காலக் கம்யூனிஸ்ட் இயக்கத்தினரின் கொள்கைப்பிடிப்பும், அவர்கள் தாம் சார்ந்த இயக்கத்தின்பால் காட்டிய தீவிர பிடிப்பு, தன்னலம் தாண்டி பிறருக்காக உழைக்கும், அவ்வுழைப்பையே வாழ்க்கையின் குறிக்கோளாக்கிக்கொண்ட  பரந்த பொது  நோக்கு, கட்டுக்கோப்பான இயக்க / கட்சி அமைப்பு, இவையெல்லாம் பிரமிப்பு தருவதுடன்,  ஒரு கனாக்காலம் போல, கைவிட்டுப்போன நல்ல வாழ்க்கை பகுதிகளைப்  போல ஓர் ஏக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

அனால் இந்தச் சித்திரம் மிகையின்றி கௌரியம்மைக்கும் பொருந்தும் (கதை முழுதும் புனைவானாலும்). கௌரியம்ம சட்டம் பயின்றவர்; வழக்குரைஞராகப் பணியாற்றியவர்; பெண்களுக்கு அன்றைக்கு மறுக்கப்பட்டிருந்த, பெண்கள் அதிகம் இல்லாத அரசியல் உள்ளிட்ட வெளியில் காலூன்றி, பணியாற்றி வெற்றிபெற்றவர். பலமுறை கேரளச் சட்டமன்றத்த்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பல அமைசரவைகளில் அமைச்சராகப் பணியாற்றியவர்.

97 வயதில் அவர் மனோரமா டிவிக்கு அளித்த பேட்டி இங்கே. (வயதால் கனிந்திருந்தாலும், மனவுறுதி மாறாமல் இருக்கிறார். இன்னும் மக்கள்ப்பணியாற்ற விழைவும்  உற்சாகமும் கொண்டிருக்கிறார்) :


 

சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்களின் தன்னிறைவான இந்தியக் கனவு  எப்படியிருந்திருக்கும்? அந்நியர் ஆக்கிரமிப்பை சாதியால் பிரிந்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து 

"ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? "

என்று எதிர்த்து, சுதந்திரம் பெற்ற பின்னால் இந்த ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒன்றாயிருப்போம் என்று கனவு கண்டிருப்பார்களோ? உண்மையான சுதந்திரம் சாதிப்பாகுபாடுகளைக் களைந்தாலே சாத்தியம் என்று உணர்ந்திருப்பார்களோ?

எப்படியானாலும், சுதந்திரத்திற்கு முன்னான இயக்கத்தவர்களின்  அர்ப்பணிப்பையும், எல்லோருக்கும் நன்மை என்கிற விழைவினையும் மறுப்பதற்கில்லை. கௌரியம்மா 1919ல் பிறந்தவர். சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்தாரா என்று தெரியாது, அனால், எல்லோருக்குமான அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறார்.  இந்தக் காலத்தில் வாழ்ந்த, தம்மாலான பொதுச் சேவையை (தலைவர்களாகவோ, தொண்டர்களாகவோ, இயக்கம் சார்ந்தோ, அன்றியோ) செய்தவர்களின் தலைமுறை இல்லாமல் போய்விட்டது.  கைவிட்டு எண்ணிவிடக்கூடிய மனிதர்களே இன்னும் உயிரோடிருக்கிறார்கள். இவர்கள் உழைப்புக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? இவர்கள் கனவுகளுக்கு இன்று என்ன விலை? 

அதே சாதீயப்பாகுபாடுகளுடன், இருப்போர், மற்றும்  இல்லாதாருக்குமான ஆகப்பெரும் பொருளாதார இடைவெளியின் காலத்தில் இருக்கிறோம். தன்னிறைவான இந்திய 75ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கபோகிறது. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்ற நிலை இல்லாவிட்டாலும், எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைகூட இல்லை! காடுகளை அழித்திருக்கிறோம்; பரந்துபட்ட மக்கள் நலனை இன்னும் முக்கியமாய் கருதுவதில்லை. எதிலும் ஒரு நடுத்தரத்தன்மையையே பெரிய பேறாக நினைக்கத்தொடங்கிவிட்டோம். இதற்காகத்தான் தம் வாழ்க்கையைக் கணிசம் பேர்கள்  தியாகம் செய்தார்கள் என்று நினைக்க மனம் கலங்குகிறது.

மூத்த பத்திரிக்கையாளர் பி சாய்நாத் இன்னும் உயிரோடிருக்கும் சுதந்திரப்போராட்டத் தியாகிகளைத் தேடி அவர்களின் தற்கால வாழ்வையும் கருத்துக்களையும் ஆவணப்படுத்தி வருகிறார். ராமச்சந்திர ஸ்ரீபதி லத் பாவு என்கிற மராத்தியத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் சொல்கிறார்: "நாங்கள் தன்னிறைவுக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்டோம்; தன்னிறைவை அடைந்து விட்டோம்"

101 வயது நிரம்பிய கே. ஆர். கௌரியம்ம மே 11, 2021 அன்று உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.




-------


பிற்சேர்க்கை: கேரள அரசியல் குறித்த தகவல்கள் என் நண்பர்கள் மூலமாகவும், நான் பார்க்கும் சொற்ப காட்சியூடகங்களிலிருந்தும் தெரிந்துகொண்டது. மேலே சொன்னவற்றில் தகவல் பிழைகள் இருக்கலாம் - பொறுக்கவும். ஜெயமோகனின் இந்த அஞ்சலிக் கட்டுரை  விரிவானதுடன், சரியான  தகவல்களைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க