முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடைத்தாத்தாவின் கொடை

குடைத்தாத்தா என்று நாங்கள் (வீட்டின் சிறுவர்பட்டாளம்) பெயர் சூட்டிய மனிதர் ஒருநாள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கோவை, மதுரை என்று ஊர் சுற்றும் 'பஞ்சு ஏஜென்ட்' வேலை என்றார். நான் அவரைப் பார்க்கும்போது அவருக்கு வயது அறுபது இருந்திருக்கும் - எனக்குப் பதிமூன்று. திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிந்து கொண்டேன். பழைய குடும்ப நண்பர் - மாதமொருமுறை கோவை வந்தால் எங்கள் வீட்டில் தங்கிக் கொள்வார். கையில் எப்போதும் ஒரு குடையும் நைந்துபோகும் நிலையிலிருக்கும் பையும் வைத்திருப்பார். பைக்குள் பல காகிதப் பொதிகள் வைத்திருப்பார். ஒரு பொதிக்குள் (பொதிக்குள் பொதியில்) நோட்டும் சில்லறையுமாக காசு வைத்திருப்பார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவ்வப்போது காசோ பொருளோ வீட்டிலே கொடுத்துவிடுவார்.

இவர் இசைப்பித்து பிடித்தவர். பல கலைஞர்களை எனக்கு அறிமுகம் செய்தவர். இசைக்கலைஞர்கள் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கூறூவார். நேரிலோ, ஒலிநாடாவிலோ கேட்கும் இசையில் இருந்திருந்தவாறு மூழ்கி விடுவார். அடிக்கடி கண்ணீர் விட்டு அழுவார் - உடல் சிறிதாகக் குலுங்கி அடங்கும். பேச்சுக்கொடுத்தால் அடுத்தநொடியில் இயல்பாகி விடுவார். வீட்டில் இது குறித்த எள்ளல் இருந்தாலும் "பாவம், நல்ல பாட்டு கேட்டால் கரைஞ்சுடும்" என்ற புரிதலும் இருக்கும்.

எனக்கு இது குறித்து வியப்புதான். எப்படி இசைக்குக் கண்ணீர் உகுக்கமுடியும்? அவ்வளவு தீவிர இலயிப்புக்குப் பின் சட்டென்று இயல்பு நிலைக்கு எப்படி வர முடியும்? இந்தக் குறுகுறுப்பே என்னைக் கருநாடக இசையை அணுகச் செய்தது. இவர் சொல்லும் வேடிக்கைக் கதைகளைக் கேட்டு சிலர் பாட்டைக் கேட்கவாரம்பித்தேன். மதுரை மணி, எம்.டி. ராமநாதன், செம்பை, செம்மங்குடி, பட்டம்மாள், ஜெயராமன், என்று விளையாட்டாய் ஆரம்பித்தது எனக்கும் பித்தாக ஆகிவிட்டது. கோவையில் நடக்கும் சொற்ப கச்சேரிகளுக்குப் போகவாரம்பித்தேன். எந்த ஒரு இசைத்துணுக்கைக் கேட்கநேர்ந்தாலும் உடனே என்னிடம் "என்ன இராகம்" என்பார். சொல்லுவேன்; சரியானால் பாராட்டுவார்; தவறாயிருந்தால் சொல்லிக்கொடுப்பார். இசை என்னை உள்ளிழுத்துக்கொண்டது; ஆட்கொண்டது; பித்துப்பிடிக்கச் செய்தது.

நான் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன். இசை பல இரசாயனங்களை எனக்குள் உற்பத்தி செய்வதாக எனக்குத் தோன்றியது. இன்னதென்று சொல்லமுடியாத, தன்வயமிழக்கவைக்கும் ஒரு போதை; பல வகை உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்று இசை படுத்தியது. ஒரு சில  தருணங்களில் நானும் என்னையறியாமல் கண்ணீர் விடத் துவங்கினேன். குடைத்தாத்தா போல குலுங்கியழாவிட்டாலும் சில தருணங்களில் வாய்விட்டழுதுவிடுவேன் - அப்படியொரு சுகமான வேதனை மனநிலை அது.

இசை கேட்கும்போது குடைத்தாத்தா எப்படிப்பட்ட கட்டங்களில் குலுங்குவார் என்று முன்கூட்டியே ஊகிப்பேன். நான் பாடி அவரை அந்நிலைக்குத்தள்ள வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறியது. "வசந்தமுல்லை போலே வந்து" பாட்டை சிறுவயதில் நன்றாகவே பாடிக்கொண்டிருந்தேன். "மந்திரக்கண்ணாலே தந்திரவலைவீசும்" என்று பாடியபோது தாத்தா கண்ணீர் விட்டார். எனக்கு மிக நிறைவாக இருந்தது.

குடைத்தாத்தாவைப் போலல்லாமல்  பலர் மத்தியில் என்வயமிழக்காமல் இருப்பதில் கவனமாக இருப்பேன். தாத்தாவின் இறுதிக்காலத்தில் மாமா சிலகாலம் அவரை வைத்துப் பார்த்துக் கொண்டார். அப்புறம் வேறு வழியில்லாமல் அவரை அவர் உறவினர்களிடம் அனுப்பிவைத்தோம். அதற்கப்புறம் விரைவிலேயே அவர் இறந்த செய்தி வந்தது.

இசைப்பதை விட இசையை கேட்டு அதில் ஆழ்ந்து அமிழ்ந்து இல்லாமல் போய்விட முடிவது பெரும் பேறு. இதை எனக்கு உணர்த்திய குடைத்தாத்தா எனக்குத் தந்தது பெருங்கொடை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...