முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடைத்தாத்தாவின் கொடை

குடைத்தாத்தா என்று நாங்கள் (வீட்டின் சிறுவர்பட்டாளம்) பெயர் சூட்டிய மனிதர் ஒருநாள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கோவை, மதுரை என்று ஊர் சுற்றும் 'பஞ்சு ஏஜென்ட்' வேலை என்றார். நான் அவரைப் பார்க்கும்போது அவருக்கு வயது அறுபது இருந்திருக்கும் - எனக்குப் பதிமூன்று. திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிந்து கொண்டேன். பழைய குடும்ப நண்பர் - மாதமொருமுறை கோவை வந்தால் எங்கள் வீட்டில் தங்கிக் கொள்வார். கையில் எப்போதும் ஒரு குடையும் நைந்துபோகும் நிலையிலிருக்கும் பையும் வைத்திருப்பார். பைக்குள் பல காகிதப் பொதிகள் வைத்திருப்பார். ஒரு பொதிக்குள் (பொதிக்குள் பொதியில்) நோட்டும் சில்லறையுமாக காசு வைத்திருப்பார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவ்வப்போது காசோ பொருளோ வீட்டிலே கொடுத்துவிடுவார்.

இவர் இசைப்பித்து பிடித்தவர். பல கலைஞர்களை எனக்கு அறிமுகம் செய்தவர். இசைக்கலைஞர்கள் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கூறூவார். நேரிலோ, ஒலிநாடாவிலோ கேட்கும் இசையில் இருந்திருந்தவாறு மூழ்கி விடுவார். அடிக்கடி கண்ணீர் விட்டு அழுவார் - உடல் சிறிதாகக் குலுங்கி அடங்கும். பேச்சுக்கொடுத்தால் அடுத்தநொடியில் இயல்பாகி விடுவார். வீட்டில் இது குறித்த எள்ளல் இருந்தாலும் "பாவம், நல்ல பாட்டு கேட்டால் கரைஞ்சுடும்" என்ற புரிதலும் இருக்கும்.

எனக்கு இது குறித்து வியப்புதான். எப்படி இசைக்குக் கண்ணீர் உகுக்கமுடியும்? அவ்வளவு தீவிர இலயிப்புக்குப் பின் சட்டென்று இயல்பு நிலைக்கு எப்படி வர முடியும்? இந்தக் குறுகுறுப்பே என்னைக் கருநாடக இசையை அணுகச் செய்தது. இவர் சொல்லும் வேடிக்கைக் கதைகளைக் கேட்டு சிலர் பாட்டைக் கேட்கவாரம்பித்தேன். மதுரை மணி, எம்.டி. ராமநாதன், செம்பை, செம்மங்குடி, பட்டம்மாள், ஜெயராமன், என்று விளையாட்டாய் ஆரம்பித்தது எனக்கும் பித்தாக ஆகிவிட்டது. கோவையில் நடக்கும் சொற்ப கச்சேரிகளுக்குப் போகவாரம்பித்தேன். எந்த ஒரு இசைத்துணுக்கைக் கேட்கநேர்ந்தாலும் உடனே என்னிடம் "என்ன இராகம்" என்பார். சொல்லுவேன்; சரியானால் பாராட்டுவார்; தவறாயிருந்தால் சொல்லிக்கொடுப்பார். இசை என்னை உள்ளிழுத்துக்கொண்டது; ஆட்கொண்டது; பித்துப்பிடிக்கச் செய்தது.

நான் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன். இசை பல இரசாயனங்களை எனக்குள் உற்பத்தி செய்வதாக எனக்குத் தோன்றியது. இன்னதென்று சொல்லமுடியாத, தன்வயமிழக்கவைக்கும் ஒரு போதை; பல வகை உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்று இசை படுத்தியது. ஒரு சில  தருணங்களில் நானும் என்னையறியாமல் கண்ணீர் விடத் துவங்கினேன். குடைத்தாத்தா போல குலுங்கியழாவிட்டாலும் சில தருணங்களில் வாய்விட்டழுதுவிடுவேன் - அப்படியொரு சுகமான வேதனை மனநிலை அது.

இசை கேட்கும்போது குடைத்தாத்தா எப்படிப்பட்ட கட்டங்களில் குலுங்குவார் என்று முன்கூட்டியே ஊகிப்பேன். நான் பாடி அவரை அந்நிலைக்குத்தள்ள வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறியது. "வசந்தமுல்லை போலே வந்து" பாட்டை சிறுவயதில் நன்றாகவே பாடிக்கொண்டிருந்தேன். "மந்திரக்கண்ணாலே தந்திரவலைவீசும்" என்று பாடியபோது தாத்தா கண்ணீர் விட்டார். எனக்கு மிக நிறைவாக இருந்தது.

குடைத்தாத்தாவைப் போலல்லாமல்  பலர் மத்தியில் என்வயமிழக்காமல் இருப்பதில் கவனமாக இருப்பேன். தாத்தாவின் இறுதிக்காலத்தில் மாமா சிலகாலம் அவரை வைத்துப் பார்த்துக் கொண்டார். அப்புறம் வேறு வழியில்லாமல் அவரை அவர் உறவினர்களிடம் அனுப்பிவைத்தோம். அதற்கப்புறம் விரைவிலேயே அவர் இறந்த செய்தி வந்தது.

இசைப்பதை விட இசையை கேட்டு அதில் ஆழ்ந்து அமிழ்ந்து இல்லாமல் போய்விட முடிவது பெரும் பேறு. இதை எனக்கு உணர்த்திய குடைத்தாத்தா எனக்குத் தந்தது பெருங்கொடை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க