முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - 6. இராமநாதம்

MD இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அவர் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன்!

பாட்டில் இலயித்திருந்து, தாளத்தை மனத்திலிருத்தி எப்போதாவது கையில் தட்டிக்காட்டுவது அவர் வழக்கம். இதை மலைப்புடனேயே பார்த்திருக்கிறேன் - இதைத் தேர்ந்த இசைக்கலைஞர் அனைவரிடமும் கவனித்திருக்கிறேன். 

எனக்கோ, வலுவாகத் தொடையில் தட்டித் தாளம் போட்டாலும் பாட்டு தாளத்தில் நிற்காது. நான் சற்றும் பொறுமை இல்லாதவன். சோம்பேறி வேறு. சிறுவயதில் நன்றாகப் பாட வந்தது. எந்தப்பாட்டைக்கேட்டாலும் அதை அப்படியே திருப்பிப் பாடிவிடுவேன்.

நாட்பட குரலைப் பழக்குதல் பாடுதலுக்கு இன்றியமையாதது என்று புரிந்தது. நானோ கள்ளக்குரலில் பாடியே பல நாட்கள் சமாளித்து விட்டேன். குளியலறையில் உரக்கப் பாடுவது தவிர வேறொன்றும் இப்போது செய்வதில்லை. இதில் உள்ள பிரச்சனை நீண்ட நேரம் பாடினால் தொண்டை வரண்டு வலி கண்டு விடுவதுதான். 

எப்படிக் குரலைப் பழக்குவது? பெரியவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் - வாயைத் திறந்து பாடச் சொல்லி. முடியவில்லை, முயலவும் இல்லை. 

இப்போது இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அலட்சியமாக அவர் பாட்டுக்கு அவ்வப்போது கையில் தாளத்தைப் போட்டுக்கொண்டிருந்தேன். அலட்சியம் வெளித்தோற்றத்தில் இருந்தாலும் மனது பதற்றமாக தாளத்தில் ஒருமிக்க முயன்றுகொண்டிருந்தது. 

MDR பாட்டை நிறுத்திவிட்டு நான் அவ்வாறு தாளம் போடுவது ஏனென்று கேட்டார். நான் “நீங்கள் மட்டும் தாளம் போடாமல்  இப்படிச் செய்கிறீர்களே?” என்று அவர் மாதிரியே நான் பாடும் “ஸா ம நி க ம ஜசுதாமய” வை ஸ்வராக்ஷரமாக இழுத்துப் பாடிக்காட்டினேன். அவர் சிரித்துக்கொண்டார்.

அப்புறம் நான் ஏதோ சினிமாத்தனமாகச் சொன்னேன்:

“என்கிட்ட உங்களுக்குக் கொடுக்கும்படியான தட்க்ஷணை ஏதுமில்லை. ஆனாலும் ரெண்டு சந்தேகம் கேட்டுக்கணும்”

அவர் “ட்க்ஷணை” பற்றி நான் சொன்னதை ஏதோ அசட்டுத்தனமானதாகப் புறந்தள்ளிவிட்டுக் கேள்வியைக் கேட்கச் சொன்னார்.

நான் கேட்டேன்:

“நீங்க இப்படி ஒடம்பே தாளமா இருக்கீங்க. எனக்குப் பாட்டு தாளத்தில நிக்கிறதில்ல. இந்தப் பக்குவத்த எப்படி அடையறது?

அப்புறம், குரலை வாத்தியமா எப்படிப் பழக்கறது?”

MDR சிரித்துக்கொண்டு பதில் சொல்ல ஆயத்தமானார். நானோ மனத்தின் ஒருமையெல்லாம் திரட்டி ஒன்றி கவனிக்கத் தயாரானேன்.

அந்த கவனக்குவிப்பில் கண்விழித்து எழுந்து விட்டேன். MDR இடம் யாரும் அப்படி நேரடியாக கேட்டிருப்பார்களா என்று தெரியாது. கனவாக இருந்தாலும் பதிலைக் கேட்காமல் விட்டதன் துயரம் எழுந்த பின்னும்...

(மே 20 இராமநாதன் பிறந்தநாள். 'இசைக்கலைஞர்களின் இசைக்கலைஞர்' இங்கே ஒரு பாடலை அவருக்கே உரித்தான நிதான கதியில் பாடுகிறார் - கௌரி மனோகரி இராகப்பாடல். இதற்குச் 'சின்னசிறு திலகம் வைத்து, சிங்காரமாய்ப் புருவம் தீட்டி' அலங்காரம் செய்து உலவ விடுகிறார். காலம் இவர் பாட்டுக்கு இயைந்து பைய நகர்கிறது.)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...