MD இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அவர் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன்!
பாட்டில் இலயித்திருந்து, தாளத்தை மனத்திலிருத்தி எப்போதாவது கையில் தட்டிக்காட்டுவது அவர் வழக்கம். இதை மலைப்புடனேயே பார்த்திருக்கிறேன் - இதைத் தேர்ந்த இசைக்கலைஞர் அனைவரிடமும் கவனித்திருக்கிறேன்.
எனக்கோ, வலுவாகத் தொடையில் தட்டித் தாளம் போட்டாலும் பாட்டு தாளத்தில் நிற்காது. நான் சற்றும் பொறுமை இல்லாதவன். சோம்பேறி வேறு. சிறுவயதில் நன்றாகப் பாட வந்தது. எந்தப்பாட்டைக்கேட்டாலும் அதை அப்படியே திருப்பிப் பாடிவிடுவேன்.
நாட்பட குரலைப் பழக்குதல் பாடுதலுக்கு இன்றியமையாதது என்று புரிந்தது. நானோ கள்ளக்குரலில் பாடியே பல நாட்கள் சமாளித்து விட்டேன். குளியலறையில் உரக்கப் பாடுவது தவிர வேறொன்றும் இப்போது செய்வதில்லை. இதில் உள்ள பிரச்சனை நீண்ட நேரம் பாடினால் தொண்டை வரண்டு வலி கண்டு விடுவதுதான்.
எப்படிக் குரலைப் பழக்குவது? பெரியவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் - வாயைத் திறந்து பாடச் சொல்லி. முடியவில்லை, முயலவும் இல்லை.
இப்போது இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அலட்சியமாக அவர் பாட்டுக்கு அவ்வப்போது கையில் தாளத்தைப் போட்டுக்கொண்டிருந்தேன். அலட்சியம் வெளித்தோற்றத்தில் இருந்தாலும் மனது பதற்றமாக தாளத்தில் ஒருமிக்க முயன்றுகொண்டிருந்தது.
MDR பாட்டை நிறுத்திவிட்டு நான் அவ்வாறு தாளம் போடுவது ஏனென்று கேட்டார். நான் “நீங்கள் மட்டும் தாளம் போடாமல் இப்படிச் செய்கிறீர்களே?” என்று அவர் மாதிரியே நான் பாடும் “ஸா ம நி க ம ஜசுதாமய” வை ஸ்வராக்ஷரமாக இழுத்துப் பாடிக்காட்டினேன். அவர் சிரித்துக்கொண்டார்.
அப்புறம் நான் ஏதோ சினிமாத்தனமாகச் சொன்னேன்:
“என்கிட்ட உங்களுக்குக் கொடுக்கும்படியான தட்க்ஷணை ஏதுமில்லை. ஆனாலும் ரெண்டு சந்தேகம் கேட்டுக்கணும்”
அவர் “தட்க்ஷணை” பற்றி நான் சொன்னதை ஏதோ அசட்டுத்தனமானதாகப் புறந்தள்ளிவிட்டுக் கேள்வியைக் கேட்கச் சொன்னார்.
நான் கேட்டேன்:
“நீங்க இப்படி ஒடம்பே தாளமா இருக்கீங்க. எனக்குப் பாட்டு தாளத்தில நிக்கிறதில்ல. இந்தப் பக்குவத்த எப்படி அடையறது?
அப்புறம், குரலை வாத்தியமா எப்படிப் பழக்கறது?”
MDR சிரித்துக்கொண்டு பதில் சொல்ல ஆயத்தமானார். நானோ மனத்தின் ஒருமையெல்லாம் திரட்டி ஒன்றி கவனிக்கத் தயாரானேன்.
அந்த கவனக்குவிப்பில் கண்விழித்து எழுந்து விட்டேன். MDR இடம் யாரும் அப்படி நேரடியாக கேட்டிருப்பார்களா என்று தெரியாது. கனவாக இருந்தாலும் பதிலைக் கேட்காமல் விட்டதன் துயரம் எழுந்த பின்னும்...
(மே 20 இராமநாதன் பிறந்தநாள். 'இசைக்கலைஞர்களின் இசைக்கலைஞர்' இங்கே ஒரு பாடலை அவருக்கே உரித்தான நிதான கதியில் பாடுகிறார் - கௌரி மனோகரி இராகப்பாடல். இதற்குச் 'சின்னசிறு திலகம் வைத்து, சிங்காரமாய்ப் புருவம் தீட்டி' அலங்காரம் செய்து உலவ விடுகிறார். காலம் இவர் பாட்டுக்கு இயைந்து பைய நகர்கிறது.)
கருத்துகள்