முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - “Why லெனின்?”

முன் குறிப்பு

அப்பாவிடம் நண்பனை அறிமுகம் செய்து வைத்தேன். 

“அப்பா, இது லெனின்”

அவர் அவனைப் பார்த்து முதலில் சொன்னது:

“Why லெனின்?”

லெனின் சிரித்துக்கொண்டே “அப்பா வச்ச பேர் uncle” என்று சொன்னான். இது நடந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னும் அப்பாவை நலம் விசாரிக்கும் போது அவன் “why லெனின்”ஐ மறப்பதேயில்லை.


*******
நானும் லெனினும் எனக்கு அறிமுகமில்லாத வேறொருவரும் ஓர் அறையில் உட்கார்ந்துகொண்டு Galapagos போன்ற மனிதர் அண்டியிராத தீவுகளின் உயிரினங்கள் பற்றியும், லெனின் வாழும் ஆஸ்த்ரேலியாவில்  உணவுப்பொருட்கள், பழங்கள், விதைகளின் இறக்குமதிக்கு இருக்கும் கெடுபிடிகளைப் பற்றி இணைத்துப் பேசிக்கொண்டிருந்தோம்.

பேசிக்கொண்டே லெனின் எழுந்து toilet paper ஒன்றை இயல்பாகப் பற்றியிழுத்துக் கிழித்து, துடைத்துக்கொண்டு வெளியிலே போய்விட்டான்.

எனக்கு அது எந்த மாதிரியான அறை என்பது அப்போதுதான் உறைத்தது!

பொதுக் கழிப்பிடம் என்பதை “ஸாமூஹிக மூத்ரவிஸர்ஜனே”  என்று கன்னடத்தில் மொழிபெயர்த்து வைத்திருப்பதைக் கிண்டல் செய்திருக்கிறேன் - ‘இதென்ன எல்லோரும் கூடிச் செய்யும் செயலா?’ என்று.

மேலும் மனிதன் தனிமையில் தன்னுடன் மட்டுமே இருக்கும் இடம் கழிப்பிடம் என்றும் அதனால் உள்ளேயிருப்பவரைக் கூப்பிடுவதும் கூடாது என்று நம்பும் நான், இப்படிக் ‘கூடிக் கழிக்கும்’ நிலையை அடைந்ததன் அதிர்ச்சியை விட வேறொன்றுதான் என் மனத்தில் ஆழமாகத் தங்கிவிட்டது.

“அவன் எப்படி ஒரே சீந்துக் காகித்ததில் ஒரே இழுப்பில் துடைத்துக்கொண்டு விட்டான்?” என்பதுதான் அது!

******
பின்குறிப்பு

இந்தக் கனவு பற்றி என் அம்மணியிடம் சொன்னேன். வழக்கம்போல் தலையில் அடித்துக்கொண்டாலும் அப்புறம் ஒரு கேள்வி கேட்டாள்

“Why லெனின்?” 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...