இது உண்மைதானா?
எதற்கும் சரிபார்த்துக்கொள்வோம் என்று மறுபடியும் எம்பிப் பார்த்தேன். சரிதான்! ஆனாலும் எவ்வளவு நேரத்திற்கு இது தாக்குப்பிடிக்கும்?
கடற்கரையை அடைந்து நீருக்கு மேலாக எம்பிப்பார்த்தேன். நினைத்தபடியே வேலை செய்தது. நடுக்கடலில் பயம் வயிறைச் சுண்டியிழுத்தது. திரும்பிவிடலாம் என்று வலப்புறம் சாய்ந்தேன். சரிப்படவில்லை. இடது புறமாகத் திரும்ப முடிந்தது, அதுவும் கொஞ்சமாக. ஹாண்டில் பார் வளைந்த சைக்கிளை ஒரு மாதிரித் ‘தேற்றி’ ஓட்டிக்கொண்டுபோவதுபோல் இருந்தது.
இதற்குள் அக்கரையை அடைந்துவிட்டேன்.
எங்கள் ஊரில் அந்தக்காலத்தில் பொட்டல்காட்டில் முளைத்த புதிய குடியிருப்பு மாதிரி ஓரிடம். தார் போடாத, மாட்டுவண்டித்தடங்கள் மிகுந்து அதுவே பாதையாகிவிட்ட சிறிய சாலை. இடது பக்கம் பார்த்தால் ஓடு வேய்ந்த கடையின் முன்புறம் வாழைத்தாரும், சணல்க்கயிறும் தொங்கிக்கொண்டிருந்தது.
அட! நம்மூர் மாதிரித்தான் இங்கெல்லாம் இருக்கிறது. ஊர்ப்புறம் வந்தால் தானே உண்மையான ‘வளர்ச்சி’ தெரியும்?
இருந்தாலும் அப்போது நினைத்துக்கொண்டேன் “ஒரு பெருநகரத்தை நேர்த்தியாக கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அந்தப் பாடங்கள் மறந்துவிடுமா? நாளைக்கு இந்த இடங்களும் அதே நேர்த்தியுடன் இருக்கப்போகிறது”. அப்படி நினைத்ததை கண்களால் உறுதி செய்ய மீண்டும் சுற்றிலும் நோட்டம் விட்டேன் - அகலச்சாலைகள், சாக்கடை, இம்மாதிரி ‘திட்டமிட்ட’ கூறுகள் இருக்கிறதா என்று…
சற்று முன்னால் நடந்து போனால் பழைய கடைவீதி மாதிரி ஒன்று. ஒரு டீக்கடையில் நுழைந்து டீ குடித்தேன். ரேடியோவில் அறிவிப்பு ஏதோ புரியாத மொழியில். வெளியே கடைப் பலகையில் பார்த்தால் என்னவோ ‘காட்டோங்’ என்று எழுதியிருக்கிறது. இம்மாதிரி முன்னர் பார்த்ததில்லையே என்று யோசிக்கும்போதே தெரிந்து விட்டது.
இது மலேசியா!
அதனால் தான் ஊர் இப்படிப் “பழையதாக” இருக்கிறது. அடடா, விசா இல்லாமலே வந்து உட்கார்ந்திருக்கிறேன். இப்படி வந்து மாட்டிக்கொண்டேனே!
உடனே கிளம்பிவிட்டேன்.
மீண்டும் கடல். மாலை மங்கலில் அக்கரையில் சீமைக்கட்டிடங்கள் பளீரென்ற விளக்கொளியுடன் கண்ணுக்குப் புலப்பட்டன.
எப்படி யாருக்கும் தெரியாமல் திரும்புவது?
மறுபடி ஹாண்டில் பார் கோணல் சைக்கிள் படுத்தியது. அக்கரையில் நினைத்த இடத்திற்குப் போக முடியவில்லை.
சரியாக ஒரு படகுத் துறையில் குடியுரிமை அதிகாரிகள் கண்முன்பாக வந்து இறங்கினேன். "சரி, உண்மையைச் சொல்லிவிடுவோம் - வேறென்ன வழி?” என்று ஒரு பெண் அதிகாரியை அணுகி, வேறு அதிகாரிகள், பயணிகள் என்று சூழ்ந்திருக்கும் மற்றவர்கள் யாருக்கும் கேட்காத விதத்தில் அவரிடம் சொல்கிறேன்:
“மேடம், எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. எனக்கு திடீரென்று “பறக்க” வந்துவிட்டது. அதைச் சோதிப்பதற்காகக் கடல் மேல் பறந்து பார்த்தேன். சரியாகத் திரும்ப முடியாமலும், நினைத்த இலக்கிற்கு என்னைச் செலுத்த முடியாமலும் போனதில் அப்படியே காற்று வாக்கில் மலேசியா போய்விட்டேன். அங்கே இறங்கியதும் தான் அது மலேசியா என்றே தெரியும்… … …”
கருத்துகள்