முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - 4. கி பி 2050



பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க “hovercraft” ஒன்றைச் சோதனை செய்து வருகிறார்கள் என்ற செய்தியைப் படித்த நினைவு இருந்தது.

சாலையில் எனக்கு முன்னால் ஒரு கரும்பச்சைக் கண்டெயினர் (பெட்டி மட்டும்) காற்றில் மிதந்துகொண்டு சென்றது. சில இடங்களில் சாலையை விட்டு நன்றாக மேலெழும்பியும் சிலவிடங்களில் சாலையைத் தேய்த்துக்கொண்டும் போனது.

இதைத் திடீரென்று ஒரு நாற்சந்தியில் நிறுத்தி வண்டியைத்திறந்து ஒரு வினோத உயிரினத்தை வெளியில் இறக்கினார்கள். 

ஒரு பெண்ணும் உடன் இறங்கி வந்து “வாருங்கள் எல்லோரும் இதைக் கொஞ்சுங்கள்” என்று அதட்டினார்.

மாடு மாதிரி இருந்தாலும் மனித முகமும் கொம்புமாக படுபயங்கரமாக இருந்தது. இதை எப்படிக் கொஞ்சுவது? பெரியவர் ஒருவர் அருகில் சென்று வருடிக்கொடுத்தார். உடனே அது சிலுப்பிக்கொண்டு ஏதோ மொழியில் திட்டிக்கொண்டே அவரை முட்டித்தீர்த்துவிட்டது. 

எனக்கு அளவில்லாத ஆத்திரம். எப்படிப் பொதுவிடத்தில் இப்படிச் செய்யலாம்? உடன் இருந்தவர் சொன்னார், இதுவும் “hovercraft” செய்யும் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கண்டுபிடிப்பாம்’. ‘எந்திர’ வாழ்க்கை வாழும் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையற்று, பேசிக்கொள்ளுவதற்கும் நேரமில்லாமல் ஓடுவதனால் அரசு முன்னெடுக்கும் ‘socializing initiatives’ இன் பாகமாக இந்தப் புதிய உயிரினத்தை வெள்ளோட்டம் பார்க்கிறார்கள். இதென்ன கொடுமை என்று தலையிலடித்துக்கொண்டேன். 

இன்னும் கடுப்பாகி எல்லோரையும் முட்டித்தள்ளிக் கொண்டிருந்த அது என்னையும் பார்த்துவிட்டது. எதற்கும் முயன்று பார்ப்போம், அடியில்லாமல் பிழைத்தால் போதுமென்று என் காலால் அதன் விலாவில் சொறிந்து கொடுத்தேன். அப்போதுதான் அதன் முகத்தைக் கவனித்தேன். மீசை வைத்த ஒராள் முகம் அது. நான் சொறியச்சொறியக் கண்ணை மூடி அது அனத்திக்கொண்டே கோணியது. அதற்கு மேலும் பார்க்கச் சகிக்காமல் அருவெறுப்பில் அதை எட்டி ஓர் உதை விட்டேன்.

கால் எங்கோ பட்டு வலித்தாலும் அது கனவுதான் என்ற நிம்மதியில் வலியுடனே மறுபடி உறங்கிவிட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பொருளுள் சிக்கிய மொழியை விடுவித்தல்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்: “வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.” இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள். ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேச...