பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க “hovercraft” ஒன்றைச் சோதனை செய்து வருகிறார்கள் என்ற செய்தியைப் படித்த நினைவு இருந்தது.
சாலையில் எனக்கு முன்னால் ஒரு கரும்பச்சைக் கண்டெயினர் (பெட்டி மட்டும்) காற்றில் மிதந்துகொண்டு சென்றது. சில இடங்களில் சாலையை விட்டு நன்றாக மேலெழும்பியும் சிலவிடங்களில் சாலையைத் தேய்த்துக்கொண்டும் போனது.
இதைத் திடீரென்று ஒரு நாற்சந்தியில் நிறுத்தி வண்டியைத்திறந்து ஒரு வினோத உயிரினத்தை வெளியில் இறக்கினார்கள்.
ஒரு பெண்ணும் உடன் இறங்கி வந்து “வாருங்கள் எல்லோரும் இதைக் கொஞ்சுங்கள்” என்று அதட்டினார்.
மாடு மாதிரி இருந்தாலும் மனித முகமும் கொம்புமாக படுபயங்கரமாக இருந்தது. இதை எப்படிக் கொஞ்சுவது? பெரியவர் ஒருவர் அருகில் சென்று வருடிக்கொடுத்தார். உடனே அது சிலுப்பிக்கொண்டு ஏதோ மொழியில் திட்டிக்கொண்டே அவரை முட்டித்தீர்த்துவிட்டது.
எனக்கு அளவில்லாத ஆத்திரம். எப்படிப் பொதுவிடத்தில் இப்படிச் செய்யலாம்? உடன் இருந்தவர் சொன்னார், இதுவும் “hovercraft” செய்யும் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கண்டுபிடிப்பாம்’. ‘எந்திர’ வாழ்க்கை வாழும் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையற்று, பேசிக்கொள்ளுவதற்கும் நேரமில்லாமல் ஓடுவதனால் அரசு முன்னெடுக்கும் ‘socializing initiatives’ இன் பாகமாக இந்தப் புதிய உயிரினத்தை வெள்ளோட்டம் பார்க்கிறார்கள். இதென்ன கொடுமை என்று தலையிலடித்துக்கொண்டேன்.
இன்னும் கடுப்பாகி எல்லோரையும் முட்டித்தள்ளிக் கொண்டிருந்த அது என்னையும் பார்த்துவிட்டது. எதற்கும் முயன்று பார்ப்போம், அடியில்லாமல் பிழைத்தால் போதுமென்று என் காலால் அதன் விலாவில் சொறிந்து கொடுத்தேன். அப்போதுதான் அதன் முகத்தைக் கவனித்தேன். மீசை வைத்த ஒராள் முகம் அது. நான் சொறியச்சொறியக் கண்ணை மூடி அது அனத்திக்கொண்டே கோணியது. அதற்கு மேலும் பார்க்கச் சகிக்காமல் அருவெறுப்பில் அதை எட்டி ஓர் உதை விட்டேன்.
கால் எங்கோ பட்டு வலித்தாலும் அது கனவுதான் என்ற நிம்மதியில் வலியுடனே மறுபடி உறங்கிவிட்டேன்.
கருத்துகள்