முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - முகவுரை

தூக்கத்தின்போது நாம் காணும் கனவு ஓரற்புதப் படைப்புச் செயல் என்று தோன்றுகிறது. 


கனவை எழுதுவதோ அதைப்பற்றிச் சொல்லுவதோ ஒருவிதமான பசப்பு வேலையே. நினைவிலி மனது நிகழ்த்திப் பார்த்துக்கொண்ட வினோத நாடகத்தின் பொழிப்புரையே நாம் கனவைப் பற்றி எழுதுவது. அந்தப் பொழிப்புரைக்கு இயல்பு நடப்புக்களும், நினைவுறு மனம் அடைந்த உண்மை அனுபவங்களுமே அடிப்படை. மேலும் கனவை மனதின் படைப்புச் செயல் என்று கொண்டால் பிரமிள் சொல்லும் "சிருஷ்டி முகூர்த்தம்" கனவின்போதே நிகழ்கிறது. அதை நாம் சொல்லவோ எழுதவோ உட்காரும்பொழுது கல்யாணம் முடிந்து மண்டபத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்துகொண்டிருப்பார்கள். அப்புறம் 'மானே தேனே பொன்மானே' என்று சேர்த்துத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மேலும் நிகழுலகின் ஒழுக்கமும் கோர்வையும் (அல்லது அப்படியிருக்கவேண்டிய நிர்பந்தங்களும்) கனவின்போது இருப்பதில்லை. நமக்கோ கோர்வையும், பொருளொழுங்கும் இல்லாமல் பேசவோ எழுதவோ முடியாதபடிக்கு கற்பிக்கப்பட்டுக் கெட்டுக் குட்டிச்சுவராயிருக்கிறோம். 

முந்தாநாள் இப்படித்தான் ஏதோ கனவு கண்டேன். மிகவும் திறமையாக, உயர்ந்த நகைச்சுவையுடன் கூடிய வாக்கியம் ஒன்றைச் சொல்லி வெடிச்சிரிப்புடன் தூக்கம் கலைந்து கண்விழித்தேன். யோசித்துப் பார்த்ததில் மிக மொக்கையான, மொண்ணையான எதையோ சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. இப்படி நினைவு மனம் எண்ணிப் பார்க்கும் வாக்கியத்தைவிட "அப்பனுக்கும் பொண்ணுக்கும் அப்படியென்ன தூக்கத்தில உளறல்?" என்ற பழிக்குக் காரணமான வாக்கியம் உண்மையில் உயர்ரக நகைச்சுவையாய் இருந்திருக்குமோ? 

நினைவிலி மனம் படைக்கும் இக்கனவுகளை எழுதுவது வேறொரு படைப்பு நிகழ்வாகப் பட்டது. படிக்கச் சுவையாக இருப்பதாக நண்பர்கள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். 101 அரேபிய இரவுகள் மாதிரி 101 கனவுகள் என்று தொடங்க எண்ணினேன் - 101 என்பது பாலபாடம்  என்பது தலைப்பின் பாடபேதம். கனவுகள் அருகிவிட்டன.  அவ்வப்போது தோன்றுவதை இங்கே பதியலாமென்றிருக்கிறேன். படித்து இன்புறுக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...