தூக்கத்தின்போது நாம் காணும் கனவு ஓரற்புதப் படைப்புச் செயல் என்று தோன்றுகிறது.
கனவை எழுதுவதோ அதைப்பற்றிச் சொல்லுவதோ ஒருவிதமான பசப்பு வேலையே. நினைவிலி மனது நிகழ்த்திப் பார்த்துக்கொண்ட வினோத நாடகத்தின் பொழிப்புரையே நாம் கனவைப் பற்றி எழுதுவது. அந்தப் பொழிப்புரைக்கு இயல்பு நடப்புக்களும், நினைவுறு மனம் அடைந்த உண்மை அனுபவங்களுமே அடிப்படை. மேலும் கனவை மனதின் படைப்புச் செயல் என்று கொண்டால் பிரமிள் சொல்லும் "சிருஷ்டி முகூர்த்தம்" கனவின்போதே நிகழ்கிறது. அதை நாம் சொல்லவோ எழுதவோ உட்காரும்பொழுது கல்யாணம் முடிந்து மண்டபத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்துகொண்டிருப்பார்கள். அப்புறம் 'மானே தேனே பொன்மானே' என்று சேர்த்துத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மேலும் நிகழுலகின் ஒழுக்கமும் கோர்வையும் (அல்லது அப்படியிருக்கவேண்டிய நிர்பந்தங்களும்) கனவின்போது இருப்பதில்லை. நமக்கோ கோர்வையும், பொருளொழுங்கும் இல்லாமல் பேசவோ எழுதவோ முடியாதபடிக்கு கற்பிக்கப்பட்டுக் கெட்டுக் குட்டிச்சுவராயிருக்கிறோம்.
முந்தாநாள் இப்படித்தான் ஏதோ கனவு கண்டேன். மிகவும் திறமையாக, உயர்ந்த நகைச்சுவையுடன் கூடிய வாக்கியம் ஒன்றைச் சொல்லி வெடிச்சிரிப்புடன் தூக்கம் கலைந்து கண்விழித்தேன். யோசித்துப் பார்த்ததில் மிக மொக்கையான, மொண்ணையான எதையோ சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. இப்படி நினைவு மனம் எண்ணிப் பார்க்கும் வாக்கியத்தைவிட "அப்பனுக்கும் பொண்ணுக்கும் அப்படியென்ன தூக்கத்தில உளறல்?" என்ற பழிக்குக் காரணமான வாக்கியம் உண்மையில் உயர்ரக நகைச்சுவையாய் இருந்திருக்குமோ?
நினைவிலி மனம் படைக்கும் இக்கனவுகளை எழுதுவது வேறொரு படைப்பு நிகழ்வாகப் பட்டது. படிக்கச் சுவையாக இருப்பதாக நண்பர்கள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். 101 அரேபிய இரவுகள் மாதிரி 101 கனவுகள் என்று தொடங்க எண்ணினேன் - 101 என்பது பாலபாடம் என்பது தலைப்பின் பாடபேதம். கனவுகள் அருகிவிட்டன. அவ்வப்போது தோன்றுவதை இங்கே பதியலாமென்றிருக்கிறேன். படித்து இன்புறுக!
கருத்துகள்