முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரஜினி, இரஞ்சித், அரசியல்

கபாலி வெளியாவதற்கு முன்னால் இயக்குனர் பா. இரஞ்சித்தின் நேர்காணல் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. கபாலி உருவான கதையையும் அதைப்பற்றிய சில தகவல்களையும் சொன்னார். கபாலிக்கு முன்னான அவரின் இரு படங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலைப் பேசுவதாகவே இருந்திருக்கின்றன - வெகு சினிமாவிற்குள்ளேயே இதைச் செய்திருப்பதே இரஞ்சித்தின் கலை என்று நான் நினைக்கிறேன். அப்படியல்லாமல் இருந்திருந்தால் அந்தப் படங்கள் ஆவணப்படங்கள் போலாகியிருக்கும். எல்லோரும் துய்க்கும் வண்ணமே அவர் கலைப் படைப்புகள் இருப்பதால், அவை சொல்லும் செய்தி எல்லோருக்கும் எட்டுகிறது.

இது நிற்க.



"பொழுதுபோக்கு அம்சங்கள்” என்று சினிமாக்காரர்களே வகுத்திருக்கும் சமன்பாடு ஒன்றிருக்கிறது - சண்டை, நகைச்சுவை, நடனம், பாடல்கள், குத்தாட்டம் (ஐயிட்டம் சாங்), என்று. இப்படியான ‘வசூல்’ குவிக்கும் படங்களின் அதிக விலை போகும் சந்தைப்பொருளாக இரஜினி ஆகிவிட்டார்.   அப்படியான நட்சத்திர மதிப்பீடு உள்ள நடிகரை வைத்துப் படமெடுப்பதில் சில சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட எந்த சமரசங்களையும் தாம் செய்துகொள்ளவில்லை என்று இரஞ்சித் தன் செவ்வியின்போது சொன்னார். 

இரஞ்சித்தின் அடுத்த படைப்பில் இரஜினி இணைகிறார் என்று கேட்டதுமே (அப்போது ‘கபாலி’ என்ற தலைப்பே அறிவிக்கப்படவில்லை) என் நினைவுக்கு வந்தது முள்ளும் மலரும் காளி தான். வாட்சாப்பில் அப்போது ‘இரஞ்சித் காளியை மீட்டெடுப்பார் என்று நம்புவோம்’ என்று நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.    முள்ளும் மலரும் படத்தில் இரஜினியின் நடிப்பினால் மிகவும் கவரப்பட்டதாகவும் அந்த இரஜினியை முடிந்த வரையில் மீட்டெடுக்க விழைந்ததாகவும் அவர் சொன்னது, என் போன்ற இரஜினி வெறியர்களின் ஏகோபித்த விழைவுகளின் சாரமே. மேலும், இரஞ்சித்தும் என்னைப்போல் காளியையே யோசித்திருந்ததும் வியப்பாக இருந்தது. 

சரிதான், கன்னங்கரேலென்ற நிறத்துடன் இருக்கின்ற, சமூக மற்றும் பொருளாதார அடுக்கின் கீழிருக்கும் காளிக்கும், வெள்ளைவெளேரன்ற, சமூக அடுக்கின் உச்சியிலிருக்கும், பொருளாதார அளவில் காளியை விட மிக உயர்ந்த நிலையில் இருக்கும் இஞ்சினியருக்குமான அதிகாரப் போராகவே அப்படைப்பை (முள்ளும் மலரும்) வாசிக்க முடிந்தது. வெளிப்படையாச் சொல்லாவிட்டாலும், நிற, சமூக, மற்றும் பூடகமான சாதி அரசியல், மற்றும் போராட்டத்தின் குறியீடாகவே அது தெரிந்தது. அப்படியான சமூகச்செல்வாக்கு உடையவர்களின் கையிலே அதிகாரமும் தங்கியிருந்ததும்,  அந்த அதிகாரத்திற்கும், ஒடுக்குதலுக்கும் அடிபணியாத, எந்தச் சூழலிலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவனாகக் காளி இருந்ததும் எனக்குள் (பலருக்கும்) பெரும் தாக்கத்தை உண்டு செய்திருந்தது. “நீங்கள் என்னை உடல்ரீதியாகத் துன்புறுத்தினாலும், என் மரியாதையையும், மதிப்பையும் நீங்கள் பலவந்தமாகப் பெற முடியாது” என்கிற நிலையிலேயே காந்திய அகிம்சைப் போராட்டம் இருந்தது. காளியிடமும் இந்த இறுமாப்பு இருந்தும், தங்கையை இஞ்சினியர் தன் அனுமதியின்றி மணக்கும் நிலை வரும்போது இடிந்து போகிறான். அது ஒரு வகையான அதிகாரத்தின் பெயரிலான அத்துமீறலாகத் தெரிகிறது. கடைசி நேரத்தில் தங்கை “எனக்கு என் அண்ணன் போதும்” என்று வந்துவிடும் போது சுயமரியாதை மீட்டெடுக்கப்படுகிறது. அப்போது காளி திமிருடன் சொல்கிறான்:  “இப்ப உங்க மூஞ்சிய எல்லாம் எங்கடா கொண்டுபோய் வச்சுக்கப்போறீங்க?” - இரஜினி ஒளிர்ந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.

இதனாலேயே ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் பேசும் கலைஞரின் இயக்கத்தில் இரஜினி நடிக்கப்போகிறார் என்றவுடன் காளி பலரின் நினைவுக்கு வந்திருக்கக்கூடும். கபாலியைத் தொடர்ந்து காலாவும்   இரஜினி என்ற  கலைஞனை மீட்டெடுக்கும் என்று நம்புவோம். 

இரஜினியைப் பொறுத்தவரையில் தாம் நடிக்கும் திரைப்படங்களின் அரசியலுக்கும் தமக்கும் எத்தொடர்பும் இல்லையென நிரூபித்து வருகிறார். இதுவும் நல்லதுதான். அவர்  அரசியலில் பெரிதும் பொருட்படுத்தப்பட வேண்டியவர்  அல்ல என்பதே என் கருத்து. மறைந்த  சோ, மற்றும்  குருமூர்த்தி முதலானவர்கள் ஆலோசனைப்படி நடப்பது அவர் அரசியலில் அழிவை விரைவில் தேடித்தரும் என்றும் நம்புகிறேன்.

தமிழக அரசியலில் தன்னளவில்  வலுவான திராவிடக் கட்சியே (திமுக)  மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்று விழைகிறேன். பிராந்தியக் கட்சிகளே மாநிலங்களில் ஆளவேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே முகம் என்ற  பன்மைத்தன்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட   மத்தியக் கட்சிகளைத் தமிழகத்தில் அண்டவிடக் கூடாது என்பதே இப்போது முக்கியமானது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...