முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெண்பா வாரம்

மரபுக் கவிதைகள் மேலே புதிய ஆர்வம். யாப்பிலக்கணத்தைப் பார்த்தால் 'கோலம் வரைந்தபின் இடப்பட்ட புள்ளிகள்' என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் (கவிதை) மரபை மீற விழைந்தவர்களுக்கு யாப்பு ஒரு ஆயத்த வடிவமாகவும் (template) கவிதை எழுதுதல் என்பது இந்த வடிவத்திலே சொற்களைச் சொருகி நிரப்புவதாகவும் இருக்கிறது. இதிலே 'சிருஷ்டி முகூர்த்தத்தின் லயம் தப்பாமல்' மனம் ஓடிய திக்கெல்லாம் ஓடி கவிதையைப் பிரசவிக்கும் உன்னத 'முகூர்த்தத்திலே' கணக்கு பிணக்கு சுணக்கு என்று தொடைகளைத் தேடி ஆயத்தவடிவத்தில் சொற்களை எப்போது சொருகுவது? அப்படிச் செய்வது கவிதையை மலினப்படுத்திவிடாதா?

பிரமிள் எழுதியது:
"பாரதி, யாப்பு அணிகளை மனசில் சப்பி, பிறகு குந்தியிருந்து வார்த்தைகளை அங்கங்கே கொட்டிப்பிரித்து 'பாட்டுக்கட்ட' வில்லை. காளமேகமோ யாரோ ஒரு தடவை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சோழ நாட்டுத் திருக்குடந்தையைச் சேர்ந்த முன்குடுமிக்காரனின் எச்சில் சோறு தன் இலையில் அவன் பிசகால் விழுந்ததற்கோ எதற்கோ சுர்ரென்று கோபம் வர,

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குதிர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனையொருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்

என்று திட்டினது உங்களுக்குத் தெரித்திருக்கலாம். அந்தக் கவிஞர் இலையை விட்டு எழுத்துபோய் ஏடும் ஆணியும் வைத்து, 'பாட்டுக்கட்ட'வில்லை. உணர்ச்சி, அடிமன ஓட்டத்தின் வீச்சினால் உந்தப்பட்டு வார்த்தையில் பாயும்போது ஜனிக்கும் வெறிதான் மேற்சொன்னது"

மேலே சொன்ன அந்த வெறி; யாப்பிலக்கணம் ஏற்படுமுன் கவிஞர்களின் மனங்களிலே அடிநாதமாய் ஓடிய மொழியின் இசைநயம்; எப்படி இது உருவாகியிருக்கும்? இயற்சீர் வெண்டளை, மற்றும் வெண்சீர் வெண்டளைகளே வெண்பாவிற்கு உரித்தான தளைகள் என்பது இயல்பாகவே எப்படிக் கைகூடியது? இதுதான் மரபுக் கவிதைகள் மேல் புதிய ஆர்வம் ஏற்படக்காரணம். மரபுக் கவிதையில் பொருளை விட்டுவிட்டு சொற்களைப் பிடித்தே தொங்கிக்கொண்டிருந்தேன். பழங்கவிதைகளின் ஓசைநயங்களை மட்டுமே வைத்துப் பார்த்தால் இசைக்கும் மொழிக்கும் இடையே இருந்த பிணைப்பு புலனாகிறது. அடிப்படைச் சொல்லிலக்கணம் கூட meter ஐ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதோ  என்று தோன்றுகிறது.

இப்படியான ஒரு மன அவசத்திலே, சில காலைகளில் நாம் கேட்க நேரும் ஒரு பாட்டு நாள் முழுதும் மனதிலே அரைபட்டுக் கொண்டிருப்பதைப் போல, வெண்பா இலக்கணம் ஒரு வாரத்திற்கு என்னை அலைக்கழித்தது. மனம் தளை வாய்ப்பாட்டையே எப்போதும் பாடிக்கொண்டிருந்தது. மனத்தில் யோசிக்கும் எதுவும் இயற்சீர் வெண்டளைகளாக ஒரே இம்சையாகிப்போனது.

ஆஸ்பத் திரியில்
அம்மா கிடப்பு
சுருண்டொரு சாணித்
துணியது போலே
தேய்த்துக் குளித்தால்
அழுக்கது போகும்
ஒழுக்கம் விழுப்பம்
கற்க கசடற
மரபுக் கவிதை
அரபுக் குதிரை
ரோகம் பயங்கரம்
தேகம் இதுசுமை

தூங்கித் தூங்கி எழுந்தாலும் குரங்கு மனம் அதை விடவில்லை. இப்படியே ஒரு வாரம் போனது. இப்போது அதிலிருந்து மீண்டுவிட்டேன். இதையெல்லாம் எழுதிப் பார்க்க வேண்டும் போலிருந்தது...


உபரியாக, சில பல வெண்பாக்களை விளையாட்டாக எழுதிப் பார்த்துக் கொண்டேன். நண்பர்களுக்கு அனுப்பி அவர்களைப் படுத்தினேன். அவற்றில் இரண்டு இங்கே:

வெண்பா எழுதலாம் என்று புறப்பட்டேன்
நண்பா அதுமுதல் தானே தினந்தோறும்
தேமா எதிர்நிரை யென்றே யலையும்காய்
முன்மா வெனவென் நினைப்பு

பாரடி கண்ணேநாம் வெண்பா எழுதுங்கால்
நேரடி போதாது சிந்தடி காணாது
ஈரடிப் பாவில் திருமறை தந்தனன்
யாரடி ஐயன் நிகர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

தோற்றோர், நேசிப்போர், வெல்வோர்

  எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது! வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன். பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே. John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம். இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...