முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?

செயமோகனின் கட்டுரையை முன்வைத்து:

செயமோகனின் கட்டுரைகளில் காணப்படும் பொதுமைப்படுத்தல்கள், தம் சொந்தக் கருத்துகளை முடிவான உண்மைகளாக முன்வைத்தல், பேசுபொருள் எதுவானாலும் தன்னையே முன்வைத்தல், தற்பெருமை பேசுதல், என்பவற்றைக் கடந்து, என்னால் அவர் கருத்துகளை சமனான மனநிலையில் அணுக முடிவதில்லை. எழுத்துச்சிக்கனமின்மையும் அவரைப் வாசிப்பதில் எனக்கொரு இடரே. இவற்றைத் தாண்டி இக்கட்டுரையை முழுதும் படித்து முடித்தேன். செயமோகனின் நீண்ட கட்டுரையில் சில விசயங்களில் எனக்கு நல்ல உடன்பாடு உண்டு. அதில் முக்கியமானது இது:

“பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.”

கட்டுரையின் பல விசயங்களில் விமரிசனமுண்டு என்றாலும், அதை மேற்சொன்ன - எனக்குச் செயமோகனை வாசிப்பதில் உள்ள பிரச்சனை - சார்ந்தது என்பதால் அதைச் சொல்லப்போனால் இது செயமோக வெறுப்பு ஆகிவிடும். வெறுப்புக்கும் காழ்ப்புக்கும் எதிராகத் தானே இப்போது நம் நிலைப்பாடு?

ஆனாலும் இதை முன்வைத்துப் பொதுவாக பிராமணர் குறித்த சில வருத்தங்களைச் சொல்லுகிறேன்.

இந்தப் பலகால பிராமண எதிர்ப்பு / வெறுப்பினால் அவர்கள் அதிகாரத்தினின்றும் விரட்டப்பட்டிருக்கலாம், சமூகத்தில் அவமரியாதைகளையும் வசைகளையும் நேரிட்டிருக்கலாம், நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கலாம், பண்பாட்டைத் தக்கவைக்க அனுமதிக்கப்படாமலும் ஆகியிருக்கலாம். ஆனால் இக்காலம் தோறும் தம் சாதிக்குள்ளே எந்த விதமான சுயவிமரிசனங்களை, சீர்திருத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்? தங்களுக்கு மறுக்கபடும் உரிமைகளை ஏற்கெனவே இழந்து காலம் காலமாக ஒடுக்கப்படும் சாதியினரைச் சரிசமமாக நடத்தவும், அவ்வுரிமைகள் மற்றவர்களுக்கும் உடைத்தானவொன்று என்கிற பக்குவத்திற்கு வந்துவிட்டார்களா? இல்லை ‘தருக்கரீதியாக முன்னெடுக்கப்படும் பிராமண எதிர்ப்பு அரசியலுக்கு’ அறிவார்ந்த எதிர்வினை ஏதும் புரிந்திருக்கிறார்களா? இப்போது ‘தனிப்பட்ட பண்பாடாக’ அவர்கள் கொண்டாட விழைவது மேட்டிமைத்தனத்தையும், சகமனிதர்களைச் சூத்திரர்களாக விலக்கி வைக்கும் போக்கையும் சேர்த்துத்தானா? தமக்குள்ளேயே பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கும் பிராமண சாதியிலே ஒற்றுமைக்காக ஏதும் செய்திருக்கிறார்களா?

பொதுவில் சாதிவெறுப்பு என்பது (அது பிராமண வெறுப்பானாலும், தலித் வெறுப்பானாலும்) இச்சுமூகத்திற்குக் கேடே. எந்தச் சமூகமும், சாதியும் இப்படிப்பட்ட காழ்ப்பை, வசைகளை எதிர்கொள்ளக்கூடாதுதான். அவ்வகையில் எந்தப் பிரிவினருக்கும் தம் உரிமைகளும், பண்பாட்டு அடையாளங்களும் மறுக்கப்படுவதை எதிர்க்கிறேன். பலவகைச் சாதிகளை ஏற்றத்தாழ்வின்றி, இம்மண்ணின் கலாச்சார, பண்பாட்டுப்பன்மைத்தன்மையின் கூறாகப் பார்க்கவும், இப்பன்மைத்தன்மையைக் கொண்டாடவும் ஒரு மனநிலை எல்லாச் சாதியினருக்கும் வாய்க்குமாயின் அதுவே நன்று. அப்படிப்பட்ட நிலையை எளிதில் அடைந்து மற்ற சமூகத்தினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க பிராமணர்களுக்கு எல்லாச் சாத்தியங்களும் உண்டு - செயமோகன் புகழ்த்திப் பேசும் அவர்களின் கல்வி ‘வழிபாட்டுத்தன்மையை’க் கொண்டு சொல்லுகிறேன். இவ்வளவு கற்ற, கற்பிக்கும் சமூகம் அறிவும் தருக்கமும் கொண்டு ஏற்றத்தாழ்வில்லாத சமூகத்தை ஏற்கவும் அங்கீகரிப்பதற்கும் ஏது தடை? இப்படிப்பட்ட நிலையை அடைந்துவிட்டு ஒட்டுமொத்த ஒடுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் தோள்கொடுக்க ஆளில்லாமல் போகுமா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...