முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?

செயமோகனின் கட்டுரையை முன்வைத்து:

செயமோகனின் கட்டுரைகளில் காணப்படும் பொதுமைப்படுத்தல்கள், தம் சொந்தக் கருத்துகளை முடிவான உண்மைகளாக முன்வைத்தல், பேசுபொருள் எதுவானாலும் தன்னையே முன்வைத்தல், தற்பெருமை பேசுதல், என்பவற்றைக் கடந்து, என்னால் அவர் கருத்துகளை சமனான மனநிலையில் அணுக முடிவதில்லை. எழுத்துச்சிக்கனமின்மையும் அவரைப் வாசிப்பதில் எனக்கொரு இடரே. இவற்றைத் தாண்டி இக்கட்டுரையை முழுதும் படித்து முடித்தேன். செயமோகனின் நீண்ட கட்டுரையில் சில விசயங்களில் எனக்கு நல்ல உடன்பாடு உண்டு. அதில் முக்கியமானது இது:

“பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.”

கட்டுரையின் பல விசயங்களில் விமரிசனமுண்டு என்றாலும், அதை மேற்சொன்ன - எனக்குச் செயமோகனை வாசிப்பதில் உள்ள பிரச்சனை - சார்ந்தது என்பதால் அதைச் சொல்லப்போனால் இது செயமோக வெறுப்பு ஆகிவிடும். வெறுப்புக்கும் காழ்ப்புக்கும் எதிராகத் தானே இப்போது நம் நிலைப்பாடு?

ஆனாலும் இதை முன்வைத்துப் பொதுவாக பிராமணர் குறித்த சில வருத்தங்களைச் சொல்லுகிறேன்.

இந்தப் பலகால பிராமண எதிர்ப்பு / வெறுப்பினால் அவர்கள் அதிகாரத்தினின்றும் விரட்டப்பட்டிருக்கலாம், சமூகத்தில் அவமரியாதைகளையும் வசைகளையும் நேரிட்டிருக்கலாம், நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கலாம், பண்பாட்டைத் தக்கவைக்க அனுமதிக்கப்படாமலும் ஆகியிருக்கலாம். ஆனால் இக்காலம் தோறும் தம் சாதிக்குள்ளே எந்த விதமான சுயவிமரிசனங்களை, சீர்திருத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்? தங்களுக்கு மறுக்கபடும் உரிமைகளை ஏற்கெனவே இழந்து காலம் காலமாக ஒடுக்கப்படும் சாதியினரைச் சரிசமமாக நடத்தவும், அவ்வுரிமைகள் மற்றவர்களுக்கும் உடைத்தானவொன்று என்கிற பக்குவத்திற்கு வந்துவிட்டார்களா? இல்லை ‘தருக்கரீதியாக முன்னெடுக்கப்படும் பிராமண எதிர்ப்பு அரசியலுக்கு’ அறிவார்ந்த எதிர்வினை ஏதும் புரிந்திருக்கிறார்களா? இப்போது ‘தனிப்பட்ட பண்பாடாக’ அவர்கள் கொண்டாட விழைவது மேட்டிமைத்தனத்தையும், சகமனிதர்களைச் சூத்திரர்களாக விலக்கி வைக்கும் போக்கையும் சேர்த்துத்தானா? தமக்குள்ளேயே பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கும் பிராமண சாதியிலே ஒற்றுமைக்காக ஏதும் செய்திருக்கிறார்களா?

பொதுவில் சாதிவெறுப்பு என்பது (அது பிராமண வெறுப்பானாலும், தலித் வெறுப்பானாலும்) இச்சுமூகத்திற்குக் கேடே. எந்தச் சமூகமும், சாதியும் இப்படிப்பட்ட காழ்ப்பை, வசைகளை எதிர்கொள்ளக்கூடாதுதான். அவ்வகையில் எந்தப் பிரிவினருக்கும் தம் உரிமைகளும், பண்பாட்டு அடையாளங்களும் மறுக்கப்படுவதை எதிர்க்கிறேன். பலவகைச் சாதிகளை ஏற்றத்தாழ்வின்றி, இம்மண்ணின் கலாச்சார, பண்பாட்டுப்பன்மைத்தன்மையின் கூறாகப் பார்க்கவும், இப்பன்மைத்தன்மையைக் கொண்டாடவும் ஒரு மனநிலை எல்லாச் சாதியினருக்கும் வாய்க்குமாயின் அதுவே நன்று. அப்படிப்பட்ட நிலையை எளிதில் அடைந்து மற்ற சமூகத்தினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க பிராமணர்களுக்கு எல்லாச் சாத்தியங்களும் உண்டு - செயமோகன் புகழ்த்திப் பேசும் அவர்களின் கல்வி ‘வழிபாட்டுத்தன்மையை’க் கொண்டு சொல்லுகிறேன். இவ்வளவு கற்ற, கற்பிக்கும் சமூகம் அறிவும் தருக்கமும் கொண்டு ஏற்றத்தாழ்வில்லாத சமூகத்தை ஏற்கவும் அங்கீகரிப்பதற்கும் ஏது தடை? இப்படிப்பட்ட நிலையை அடைந்துவிட்டு ஒட்டுமொத்த ஒடுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் தோள்கொடுக்க ஆளில்லாமல் போகுமா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க