முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நமக்கான பிரத்யேக இடங்கள்

கண்ணே கண்ணம்ம!

ஆறடி நிலமே சொந்தமடா என்று தத்துவார்த்தமாகப் பாடினாலும், நமக்கான பிரத்யேக இடங்கள் நமக்கே சொந்தம். இவைகளை அளக்க முடிவதில்லை. பேருந்து இருக்கைகளிலும், இன்ன பிற உட்காருமிடங்களிலும் ஒடுங்கி உட்கார்ந்ததில் ஒல்லியான உடம்புக்காரனாக இருக்கிறேன். இனி இதை ஒரு மரபணுச் செய்தியாக அடுத்த தலைமுறைகளுக்கும் அனுப்பச் சித்தமாகிவிட்டது உடம்பு. இனி வருவோரெல்லாம் எங்கும் உடம்பைக் குறுக்கிக் கொள்ளுதலை இயல்பாகக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சொற்பமான இடமே எனது தேவை. ஆனால நாம் இயங்க, உழல, சூக்குமமான இடங்கள் தாராளமாகத் தேவைப் படுகின்றன.

நம் சிந்தனைகள், கோட்பாடுகள், அன்பு, காதல், விருப்பு-வெறுப்புகள், சுதந்திரம், சுயமரியாதை போன்றவற்றை இந்த இடத்திலே சேமித்திருக்கிறோம். யாரும் இந்த இடங்களை ஆக்கிரமிப்புச் செய்தால் நாம் இயங்குவதற்கு நெருக்கடியாகிவிடுகிறது; மூச்சு முட்டுகிறது. அது நம்மை இயல்பாக இருக்கவிடுவதில்லை. மலர்களும், புட்களும், வண்ணத்துப் பூச்சிகளும் தத்தம் இயல்பான இடங்களிலே இருப்பதில் தானே மிளிர்கின்றன? என் இடம் என்வசமிருப்பதினாலேயே நான் நானாகிறேன். நம் ஒருவருக்கொருவர் மீதான மதிப்பும், மற்றவர் இடங்களைப் புரிந்துகொள்வதில் தானே இருக்கிறது?

நட்பும், காதலும், திருமணமும் இந்தப் பிரத்யேக இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வதற்கான அனுமதிச் சீட்டுக்கள் இல்லை என்பதை நீ அறிவாய். ஆனாலும் சில நேரங்களில் நம் இடங்களை இவைகளின் (நட்பு, காதல்) பொருட்டு விட்டுக்கொடுக்கக் கூடாதா என்று சிறுபிள்ளைத்தனமாக ஏங்குதலும், கோபித்துக் கொள்ளுதலும் இயல்பே. ஆனால்...

நான் உன்னை முழுமையாக நேசிக்கிறேன். உனக்கே உனக்கான இடத்தை அங்கீகாரம் செய்கிறேன்; அதை மதிக்கிறேன்.

தோழமை என்பது இதுதானே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கிச்சா பாறைகள்!

Screenshot from https://www.poetryfoundation.org/poems/42839/i-know-a-man பாண்டியில் படித்துக்கொண்டிருக்கும்போது (இது அந்தக்காலத்திற்கான இடுகுறிச் சொற்றொடர் - உண்மையில் ‘படித்த’ நினைவு இல்லை) ஒரு பின்னந்திப்பொழுதில் தெருத்தெருவாகச் சுற்றித்திரிந்தபோது கிச்சா, இதரர்களுடன் ஒரு கோவிலுக்குள் போன நினைவிருக்கிறது. மறுநாள் ம்யுபி என்ற மைக்ரோகபுராசஸர் இழவுத் தேர்வு இருந்தது பல்கலையில். கோவிலில் ஓ எஸ் தியாகராஜன் கச்சேரி என்று தட்டி வைத்திருந்தார்கள். ஓ எஸ் டி பின்னாட்களில்  கச்சேரி பண்ணுகிறேன் என்ற பெயரில் ஒப்பேத்தல் மன்னராக இருந்தாலும்  (இதைச் சொன்னதற்காக என்னை அடிக்க வராதீர்கள்) அருமையான பாடாந்தரம், வெண்கலக்குரல், களையான கச்சேரிகள், என்று 93ல் என் விருப்பத்திற்குரியவராகவே இருந்தார்.   நான் தட்டியைப்பார்த்துப் பரபரத்தேன். “ஓ எஸ் டி பாடறாரு மச்சான் - என்ன, எங்கன்னு விசாரிப்போம்”. இந்தவிடத்தில் கிச்சா அவனுடைய பாணியில் என்னைத் தடுத்தாட்கொண்டான்.  “ ஓ எஸ் தியாகராஜனையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், நாம  இப்ப ம்யுபி தியாகராஜனை கவனிப்போம்”... (முதுநிலைப் படிப்பில் அந்த அர...