முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா?

ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு.

இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டிலும், செய்யாமல் விட்டால் என்ன வந்துவிடுமோ என்கிற பயத்தில் உந்தப்படும்போது, கடைபிடிக்கப்படும்போது, பொதுவில் தம்மீதும் பிறர்மீதும் நம்பிக்கையிழந்த தன்மையையே குறிக்கிறது என்று நினைக்கிறேன். அன்புவார்த்தைகளை ஒரு சடங்காய் நீ சொல்லக் கேட்பது பெரும் அவலம்! எந்த நிர்பந்தமும் இல்லாத இயற்கையான வெளிப்பாடே நான் விரும்புவது. உணர்வுகள் வார்தைகளை நம்பியில்லை - நாம் இப்போது வெறும் வார்த்தைகளை நம்பியிருப்பதிலே இந்தத் தொல்லை துவங்கியுள்ளது. ஆனால் சில நேரம் மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை என்று இப்போதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது.

கருத்துகள்

சத்தியா இவ்வாறு கூறியுள்ளார்…
சில நேரம் மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை என்று இப்போதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது.

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீங்கள்.
ஒரு பொடிச்சி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல உரையாடல்..
ஆமா சம்பிரதாயமான சில வார்த்தைகள் (சடங்குகள் போல) பொழுதுகளில் தேவையாவே இருக்கின்றன.

ஆனா
மௌனம் = தனிமை(யால்) என்றால் - தனிமைக்கு உயிரில்லை (Or அது உயிருள்ள பிணம்!).
உரையாடல்கள் சாத்தியமான இடத்தில்தான், மௌனம் ஆழமாக புரிந்துகொள்ளப்படவேண்டியது என நினைக்கிறேன்.
தொலை தூரங்களிலோ, நிறுவனப்பட்ட குடும்பம் போன்ற அமைப்பிலோ நபருகளுக்கிடையில் ஏற்படுகிற மௌனம் glorify பண்ண முடியாதது.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சத்தியா.


பொடிச்சி,
//உரையாடல்கள் சாத்தியமான இடத்தில்தான், மௌனம் ஆழமாக புரிந்துகொள்ளப்படவேண்டியது என நினைக்கிறேன்.
தொலை தூரங்களிலோ, நிறுவனப்பட்ட குடும்பம் போன்ற அமைப்பிலோ நபருகளுக்கிடையில் ஏற்படுகிற மௌனம் glorify பண்ண முடியாதது.//

அருமை. இன்னும் தெளிந்தேன், நன்றி.
வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
//மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை //

அருமை. ஆனால் எதிரிலுள்ளவருக்கு அது புரியாமல் போவதுதான் பிரச்னையே. :)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுதர்சன்.
Suka இவ்வாறு கூறியுள்ளார்…
நன்று கண்ணன்.. வார்த்தைகள் வரையறுக்கப்பட்டவை.. அவற்றால் ஒரு போதும் உணர்வுகளைத் துல்லியமாய்க் காட்ட முடியாது.. எழுத்தை விட .. ஓவியங்களும் ..அவற்றைவிட நாடகங்களும் உயிரோட்டமாய் ஓரளவுக்கு துல்லியமாய் உணர்வை வெளிப்படுத்துவதே இதற்கு சாட்சி.

உங்களின் கருத்தே நான் இங்கே http://sukas.blogspot.com/2005/12/blog-post.html எழுதியதின் கருத்தும். ஆனால் சிலரை வேறு மாதிரியாகப் பாதித்து விட்டதாக உணருகிறேன்.

சுகா
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுகா.
மாயவரத்தான் இவ்வாறு கூறியுள்ளார்…
About ur blog in today's dinamalar...

http://www.dinamalar.com/2006Mar04/flash.asp

In Thenkoodu webportal...

http://www.thenkoodu.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பொருளுள் சிக்கிய மொழியை விடுவித்தல்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்: “வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.” இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள். ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேச...