முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெள்ளெருக்கு

வயிற்றுப் பிழைப்பு தான் மனிதனின் எல்லாச் செயல்களையும் ஊக்குவிக்கிறது என்று நான் நினைப்பேன். ஒருவேளை மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதன் நிமித்தம் அவன் பாடுபடுவான்? ஒரு வகையில் மனிதனின் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தும் ஒரே தேவை வயிற்றுத் தேவையே. அந்தத் தேவை இல்லாதிருப்பின் மனிதன் பாடு திண்டாட்டம் தான் போலும்.

நான் ஒரு நேர்த்தியான உலகில் வாழ்பவன். சுக ஜீவனம். தேவைகளைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டுள்ளேன். இந்தத் தேவைகளின் அடுக்கில் கீழே, எல்லோருக்குமான அடிப்படைத் தேவை எனக்கும் உள்ளது. இந்த அடுக்கில் ஒவ்வொரு தேவையும் கீழிருக்கும் ஒன்றைச் சார்ந்தது. ஆனால் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய நேரடியான பயம் எனக்கில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான தினசரிப் போராட்ட்ம் பலர் வாழ்வில் நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் நடப்பது என்ன?

***

சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர் தினசரி வாழ்க்கையின் பதிவுகள் இருக்கிறதா? அவை அவர்களின் பழக்கவழக்கங்களை, மகிழ்ச்சியை, அவலங்களை, குடும்ப அமைப்பை ஒரு நம்பகத் தன்மையுடன் தருகிறதா? இதைப் பதிவு செய்பவர் வெளியே நின்றுகொண்டு ஒரு பார்வையாளர் கோணத்தில் செய்கிறாரா? இதையெல்லாம் படித்தபிறகு அந்த சந்தோஷங்களுக்காய் நாமும் இணைந்து மகிழ முடிகிறதா? அவர்கள் துக்கங்களின் பேரில் நமக்கும் மனதிற் துயரம் பிறக்கிறதா? சகமனிதர் என்ற முறையில் அணுக்கம் ஏற்படுகிறதா?

***

கண்மணி குணசேகரன் எழுத்தை இப்போது தான் முதன்முதலாகப் படிக்கிறேன். இவரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு தனி அனுபவம். படித்து உள்வாங்கிச் சிறிது நேரம் அதன் பாதிப்பில் அமிழ்ந்துவிடச் செய்வது ஒவ்வொன்றும். இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை இவரது கதைக்களம் சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர்களின் வாழ்க்கை; இவர் மொழி, அம்மனிதர்களின் கோபங்களும், சந்தோஷங்களும் உள்ளடக்கிய வெளிக்காட்டல்கள்;இவர் தொடும் பிரச்சனைகள் அன்றாடங்காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கைப் போராட்டங்கள்.

வறுமைக்கோட்டிற்கு அருகிலேயே வாழும் மனிதர்களின் தினசரி அவலங்கள், சந்தோஷங்கள், பழக்கவழக்கங்கள் பற்றி எனக்கு யாதொரு கவலையும் இருந்ததில்லை. இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையையும் நான் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இத்தொகுப்பைப் படிக்கப் படிக்க இம்மனிதர்களின் அவலங்கள், சந்தோஷங்களோடு என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது - இவற்றினாலேயே இவர்களில் ஒருவனாய் என்னை இனங்காண முடிந்தது! தம் தொகுப்பில் வரும் கதைகளின் கதைமாந்தர்கள் மூலம் மௌனமாக, ஆனால் அழுத்தமாக இவர்களின் இருப்பைப் பிரகடனப்படுத்துகிறார் குணசேகரன்; இவர்கள் வாழ்க்கையை நாம் ஒரு சாளரத்தின் மூலம் பார்க்க உதவுகிறார்; வாழ்க்கையும் அதன் அவலங்களும் மனிதர்களைப் பொதுமைப் படுத்துவதை உணர்த்துகிறார். கல்லுடைக்கும் (ஜல்லியடிக்கும்) வேலைக்குப் போகும் இருவருக்கிடையே காதல் மலர்ந்து, பெற்றோரை எதிர்த்து மணம் செய்துகொள்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு பிரசவ வேதனை எடுக்கும்போது அவளை நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்க்க முடியாமல், நெரிசலான பேருந்தில் யாரோ "பிளேடு இருந்தா கொடுங்க" என்று அலற, கண்டக்டர் அதைக் கொடுக்க, பேருந்தில் இருக்கும் பெண்கள் அரண் அமைத்து உதவ, குழந்தையை ஈன்றெடுக்கிறாள் பெண்! கண்டக்டர் சொல்கிறார் "நா இதுவரையிலெ டூட்டி பாத்ததுல இது நாலாவது பிரசவம். அனுபவந்தான். அவசரத்துக்கு ஒதவுட்டும்னு பையிலெ ஒரு பிளேடு எப்பவும் போட்டு வச்சிருப்பன்". தண்ணீரை விட்டு இரத்தக் கறைகளைக் கழுவிய பின் பேருந்து புறப்பட்டுப் போகிறது. தொடர்கிறது வாழ்க்கை!

ஒரு குறிப்பிட்ட பிரிவினரில் தாய்மாமன் (அவன் மணமானவனாக இருந்தாலும்) ஒப்பின்றி முறைப்பெண்ணுக்கு கல்யாணம் நடக்காது. அப்படியே நடந்தாலும், தாய்மாமனுக்கு உரிய மரியாதை கொடுத்துச் சீர் செய்யவேண்டும். அது திருப்தி தராவிட்டால் மணவறையிலிருந்து பெண்ணை மாமன் இழுத்துக் கொண்டு போகமுடியும். சிட்டை வேறு இடத்தில் மணமுடிக்க மாமன் சின்னக்காத்தான் ஒப்புக்கொள்கிறான். மணமுடித்து முதலிரவுக்காய் நல்ல நேரம் பார்த்து காத்திருக்கும்போது குடித்துவிட்டு வந்து விருந்தில் பன்றியின் ஈரலும் ரத்தமும் சுண்டி இலையில் வைக்கவில்லை என்றும், சீர்ப்பணத்தில் ஒரு நூறு ரூபாய் நோட்டு செல்லாதது என்றும் பெண்ணை இழுத்துப் போக எத்தனிக்கிறான். ஊர்க்காரர்கள் கூடி சமாதானம் செய்து, இரவோடிரவாக மீண்டும் பன்றியடித்துச் சமைத்து விருந்து கொடுக்கிறார்கள். விடியும் நேரம் சிட்டைப் பாசத்தோடு மாப்பிள்ளை இருக்கும் அறைக்குப் போகச் சொல்கிறான் மாமன். சிட்டு ஒன்றும் பேசாமல் சாணியைக் கரைத்துக் கொண்டுவந்து வாசல் தெளிக்க ஆரம்பிக்கிறாள். அதன் துளிகள் எல்லோர் மேலும் கொஞ்சம் படுகிறது.

சின்ன வானம் பார்த்த பூமியில் கொஞ்சமாய்ப் பயிரிட்டு அதை பக்கத்து ஊரிலிருந்து அவிழ்த்துவிடும் மாடுகள் மேயாமல் காவல் காக்கின்றனர் ஒரு ஊரினர். காவலையும் மீறி மாடுகள் தோட்டத்திற் புகுந்து பயத்தஞ்செடிகளையும், பாகற்கொடிகளையும், முருங்கை நாற்றுகளையும் துவம்சம் செய்கின்றன. ஊரில் மாடுகளைப் பிடித்துக் கட்டி வைத்தால் யாரேனும் தேடுக் கொண்டுவரும்போது அவிழ்த்துக் கொண்டு போவார்கள். சில மாடுகளைத் தேடி யாரும் வருவதில்லை. வெள்ளையனுக்கு இப்படியாக மாடு வளர்க்க இஷ்டமில்லை. அவன் சகாக்கள் ஒரு திட்டம் போடுகிறார்கள் - ஊருக்குள் மேய வரும் மாடுகளை வெட்டுவதற்கு கொண்டு போய்விடுவதென. இப்படியாக இரண்டு மாடுகளை இரவோடிரவாக இழுத்துச் செல்லும்போது வெள்ளையன் சினை மாட்டை ஒன்றும் செய்யவேண்டாமென்றும், மனிதர்கள் செய்யும் அக்குறும்புகளுக்கு வாயில்லாச் சீவன்களை வதைத்தல் பாவம் என்றெல்லாம் சொல்லிப் போராடி, மாடுகளை விடுவிக்கிறான். இல்லாதவனிடம் மிளிரும் மனிதம் நமக்கு நாம் சார்ந்த உலகின் மீது எவ்வளவு நம்பிக்கை வரச் செய்கிறது!

பல நவீனங்கள் புழக்கத்திற்கு வந்ததில் தொழில் நலிவடைந்த கொல்லன் அடுத்தவேளை உணவிற்கும் வழியில்லாமல் தவிக்கிறான். அப்போது அதிசயமாக இரண்டொரு வேலைகள் அவனுக்குக் கிடைக்கின்றன. ஆனால் உலை பற்றவைக்கக் கரி இல்லை! அடுப்புக் கரியாவது எங்கேயாவது கிடைக்குமா என்று அலைகிறான். கடைசியாக, ஊரடங்கியிருக்கும் நடு இரவில் சுடுகாட்டிற்குச் சென்று பிணம் எரிந்த சிதையில் இருந்து கரி எடுத்து வந்து வேலையை முடிக்கிறான். அதை எடுக்கச் செல்லும்போது அவனுக்குப் பேய்கள், பிணங்கள் பற்றிய பயமில்லை. பசிக்கே அவன் பெரிதும் பயப்படுவான்! இப்படியாக பலதரப்பட்டவர்களின்

வாழ்க்கையில் ஒரு தருணத்தை உடன் வாழ்ந்து அவதானித்த ஒரு வாசிப்பு அனுபவம் தரும் கதைகள் இவை! நல்ல மொழியாளுமையும் சோர்வில்லாத நடையும், இந்நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் உயிர்ப்பித்து நம்முன்னே நடமாட விடுதலால் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டார் கண்மணி குணசேகரன்.

தமிழினி இத்தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது. இதைப் படித்துவிட்டு கண்மணி குணசேகரனின் முந்தைய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாங்கிப் படிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.

வெள்ளெருக்கு - கண்மணி குணசேகரன் - தமிழினி, டிசம்பர் 2004

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
NALLAP PUTTHAKANGALAIP PADIPPATHU SUVAIYAANA ANUBAVAM....ATHAIYUMVIDA NALLAP PUTTHAKANGAL KURITTHU MATRAVAR PADITTHUPAARATTUVATHAIP PADIPPATHU.....VAZTTHUKKAL
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ஹமீத்,

உங்களின் சுவையான அனுபவம் குறித்து மகிழ்ச்சி, நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...