முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெள்ளெருக்கு

வயிற்றுப் பிழைப்பு தான் மனிதனின் எல்லாச் செயல்களையும் ஊக்குவிக்கிறது என்று நான் நினைப்பேன். ஒருவேளை மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதன் நிமித்தம் அவன் பாடுபடுவான்? ஒரு வகையில் மனிதனின் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தும் ஒரே தேவை வயிற்றுத் தேவையே. அந்தத் தேவை இல்லாதிருப்பின் மனிதன் பாடு திண்டாட்டம் தான் போலும்.

நான் ஒரு நேர்த்தியான உலகில் வாழ்பவன். சுக ஜீவனம். தேவைகளைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டுள்ளேன். இந்தத் தேவைகளின் அடுக்கில் கீழே, எல்லோருக்குமான அடிப்படைத் தேவை எனக்கும் உள்ளது. இந்த அடுக்கில் ஒவ்வொரு தேவையும் கீழிருக்கும் ஒன்றைச் சார்ந்தது. ஆனால் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய நேரடியான பயம் எனக்கில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான தினசரிப் போராட்ட்ம் பலர் வாழ்வில் நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் நடப்பது என்ன?

***

சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர் தினசரி வாழ்க்கையின் பதிவுகள் இருக்கிறதா? அவை அவர்களின் பழக்கவழக்கங்களை, மகிழ்ச்சியை, அவலங்களை, குடும்ப அமைப்பை ஒரு நம்பகத் தன்மையுடன் தருகிறதா? இதைப் பதிவு செய்பவர் வெளியே நின்றுகொண்டு ஒரு பார்வையாளர் கோணத்தில் செய்கிறாரா? இதையெல்லாம் படித்தபிறகு அந்த சந்தோஷங்களுக்காய் நாமும் இணைந்து மகிழ முடிகிறதா? அவர்கள் துக்கங்களின் பேரில் நமக்கும் மனதிற் துயரம் பிறக்கிறதா? சகமனிதர் என்ற முறையில் அணுக்கம் ஏற்படுகிறதா?

***

கண்மணி குணசேகரன் எழுத்தை இப்போது தான் முதன்முதலாகப் படிக்கிறேன். இவரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு தனி அனுபவம். படித்து உள்வாங்கிச் சிறிது நேரம் அதன் பாதிப்பில் அமிழ்ந்துவிடச் செய்வது ஒவ்வொன்றும். இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை இவரது கதைக்களம் சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர்களின் வாழ்க்கை; இவர் மொழி, அம்மனிதர்களின் கோபங்களும், சந்தோஷங்களும் உள்ளடக்கிய வெளிக்காட்டல்கள்;இவர் தொடும் பிரச்சனைகள் அன்றாடங்காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கைப் போராட்டங்கள்.

வறுமைக்கோட்டிற்கு அருகிலேயே வாழும் மனிதர்களின் தினசரி அவலங்கள், சந்தோஷங்கள், பழக்கவழக்கங்கள் பற்றி எனக்கு யாதொரு கவலையும் இருந்ததில்லை. இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையையும் நான் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இத்தொகுப்பைப் படிக்கப் படிக்க இம்மனிதர்களின் அவலங்கள், சந்தோஷங்களோடு என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது - இவற்றினாலேயே இவர்களில் ஒருவனாய் என்னை இனங்காண முடிந்தது! தம் தொகுப்பில் வரும் கதைகளின் கதைமாந்தர்கள் மூலம் மௌனமாக, ஆனால் அழுத்தமாக இவர்களின் இருப்பைப் பிரகடனப்படுத்துகிறார் குணசேகரன்; இவர்கள் வாழ்க்கையை நாம் ஒரு சாளரத்தின் மூலம் பார்க்க உதவுகிறார்; வாழ்க்கையும் அதன் அவலங்களும் மனிதர்களைப் பொதுமைப் படுத்துவதை உணர்த்துகிறார். கல்லுடைக்கும் (ஜல்லியடிக்கும்) வேலைக்குப் போகும் இருவருக்கிடையே காதல் மலர்ந்து, பெற்றோரை எதிர்த்து மணம் செய்துகொள்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு பிரசவ வேதனை எடுக்கும்போது அவளை நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்க்க முடியாமல், நெரிசலான பேருந்தில் யாரோ "பிளேடு இருந்தா கொடுங்க" என்று அலற, கண்டக்டர் அதைக் கொடுக்க, பேருந்தில் இருக்கும் பெண்கள் அரண் அமைத்து உதவ, குழந்தையை ஈன்றெடுக்கிறாள் பெண்! கண்டக்டர் சொல்கிறார் "நா இதுவரையிலெ டூட்டி பாத்ததுல இது நாலாவது பிரசவம். அனுபவந்தான். அவசரத்துக்கு ஒதவுட்டும்னு பையிலெ ஒரு பிளேடு எப்பவும் போட்டு வச்சிருப்பன்". தண்ணீரை விட்டு இரத்தக் கறைகளைக் கழுவிய பின் பேருந்து புறப்பட்டுப் போகிறது. தொடர்கிறது வாழ்க்கை!

ஒரு குறிப்பிட்ட பிரிவினரில் தாய்மாமன் (அவன் மணமானவனாக இருந்தாலும்) ஒப்பின்றி முறைப்பெண்ணுக்கு கல்யாணம் நடக்காது. அப்படியே நடந்தாலும், தாய்மாமனுக்கு உரிய மரியாதை கொடுத்துச் சீர் செய்யவேண்டும். அது திருப்தி தராவிட்டால் மணவறையிலிருந்து பெண்ணை மாமன் இழுத்துக் கொண்டு போகமுடியும். சிட்டை வேறு இடத்தில் மணமுடிக்க மாமன் சின்னக்காத்தான் ஒப்புக்கொள்கிறான். மணமுடித்து முதலிரவுக்காய் நல்ல நேரம் பார்த்து காத்திருக்கும்போது குடித்துவிட்டு வந்து விருந்தில் பன்றியின் ஈரலும் ரத்தமும் சுண்டி இலையில் வைக்கவில்லை என்றும், சீர்ப்பணத்தில் ஒரு நூறு ரூபாய் நோட்டு செல்லாதது என்றும் பெண்ணை இழுத்துப் போக எத்தனிக்கிறான். ஊர்க்காரர்கள் கூடி சமாதானம் செய்து, இரவோடிரவாக மீண்டும் பன்றியடித்துச் சமைத்து விருந்து கொடுக்கிறார்கள். விடியும் நேரம் சிட்டைப் பாசத்தோடு மாப்பிள்ளை இருக்கும் அறைக்குப் போகச் சொல்கிறான் மாமன். சிட்டு ஒன்றும் பேசாமல் சாணியைக் கரைத்துக் கொண்டுவந்து வாசல் தெளிக்க ஆரம்பிக்கிறாள். அதன் துளிகள் எல்லோர் மேலும் கொஞ்சம் படுகிறது.

சின்ன வானம் பார்த்த பூமியில் கொஞ்சமாய்ப் பயிரிட்டு அதை பக்கத்து ஊரிலிருந்து அவிழ்த்துவிடும் மாடுகள் மேயாமல் காவல் காக்கின்றனர் ஒரு ஊரினர். காவலையும் மீறி மாடுகள் தோட்டத்திற் புகுந்து பயத்தஞ்செடிகளையும், பாகற்கொடிகளையும், முருங்கை நாற்றுகளையும் துவம்சம் செய்கின்றன. ஊரில் மாடுகளைப் பிடித்துக் கட்டி வைத்தால் யாரேனும் தேடுக் கொண்டுவரும்போது அவிழ்த்துக் கொண்டு போவார்கள். சில மாடுகளைத் தேடி யாரும் வருவதில்லை. வெள்ளையனுக்கு இப்படியாக மாடு வளர்க்க இஷ்டமில்லை. அவன் சகாக்கள் ஒரு திட்டம் போடுகிறார்கள் - ஊருக்குள் மேய வரும் மாடுகளை வெட்டுவதற்கு கொண்டு போய்விடுவதென. இப்படியாக இரண்டு மாடுகளை இரவோடிரவாக இழுத்துச் செல்லும்போது வெள்ளையன் சினை மாட்டை ஒன்றும் செய்யவேண்டாமென்றும், மனிதர்கள் செய்யும் அக்குறும்புகளுக்கு வாயில்லாச் சீவன்களை வதைத்தல் பாவம் என்றெல்லாம் சொல்லிப் போராடி, மாடுகளை விடுவிக்கிறான். இல்லாதவனிடம் மிளிரும் மனிதம் நமக்கு நாம் சார்ந்த உலகின் மீது எவ்வளவு நம்பிக்கை வரச் செய்கிறது!

பல நவீனங்கள் புழக்கத்திற்கு வந்ததில் தொழில் நலிவடைந்த கொல்லன் அடுத்தவேளை உணவிற்கும் வழியில்லாமல் தவிக்கிறான். அப்போது அதிசயமாக இரண்டொரு வேலைகள் அவனுக்குக் கிடைக்கின்றன. ஆனால் உலை பற்றவைக்கக் கரி இல்லை! அடுப்புக் கரியாவது எங்கேயாவது கிடைக்குமா என்று அலைகிறான். கடைசியாக, ஊரடங்கியிருக்கும் நடு இரவில் சுடுகாட்டிற்குச் சென்று பிணம் எரிந்த சிதையில் இருந்து கரி எடுத்து வந்து வேலையை முடிக்கிறான். அதை எடுக்கச் செல்லும்போது அவனுக்குப் பேய்கள், பிணங்கள் பற்றிய பயமில்லை. பசிக்கே அவன் பெரிதும் பயப்படுவான்! இப்படியாக பலதரப்பட்டவர்களின்

வாழ்க்கையில் ஒரு தருணத்தை உடன் வாழ்ந்து அவதானித்த ஒரு வாசிப்பு அனுபவம் தரும் கதைகள் இவை! நல்ல மொழியாளுமையும் சோர்வில்லாத நடையும், இந்நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் உயிர்ப்பித்து நம்முன்னே நடமாட விடுதலால் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டார் கண்மணி குணசேகரன்.

தமிழினி இத்தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது. இதைப் படித்துவிட்டு கண்மணி குணசேகரனின் முந்தைய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாங்கிப் படிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.

வெள்ளெருக்கு - கண்மணி குணசேகரன் - தமிழினி, டிசம்பர் 2004

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
NALLAP PUTTHAKANGALAIP PADIPPATHU SUVAIYAANA ANUBAVAM....ATHAIYUMVIDA NALLAP PUTTHAKANGAL KURITTHU MATRAVAR PADITTHUPAARATTUVATHAIP PADIPPATHU.....VAZTTHUKKAL
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ஹமீத்,

உங்களின் சுவையான அனுபவம் குறித்து மகிழ்ச்சி, நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பொருளுள் சிக்கிய மொழியை விடுவித்தல்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்: “வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.” இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள். ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேச...