முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிலாக்கணம்

இரண்டு மாதங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் என் மோட்டார் சைக்கிள் யாரோ கழுத்தைத் திருகியது போல நின்றுவிட்டது. கடந்த ஒருவருடமாகவே அவ்வப்பொழுது சின்னதாக பிரச்சனைகள் கொடுத்து வந்தாலும், இப்படி ஒன்றும் செய்ய இயலாத படிக்கு நின்றதில்லை. ஐயாயிரம் ரூபாய் கொடுத்துப் பழுது பார்த்தேன். ஒரு மாதம் ஓடியபின் மீண்டும் கழுத்து நெரிபட்டது போல நின்று விட்டது. இதை இன்னும் பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அது பண விரயமே என்று தோன்றுகிறது.

பத்து வருடங்கள், அறுபதினாயிரம் கிலோமீட்டர்கள்...

மிகவும் நன்றி கெட்டவனாக உணருகிறேன் - இதைப் பிரிவதற்குத் தயாராகிவிட்டேன்.

ஒரு அற்புத விளக்கு கையைவிட்டுப் போவது போலவும், இதனால் இதுவரை கிட்டிய அதிட்டங்களும் இனிமேல் கிட்டாது போலவும் தோன்றுகிறது. எல்லா நல்ல விடயங்களுக்கும் முடிவு உறுதி போலும். இதைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பழைய வேகத்தையும் உற்சாகத்தையும், வேட்கையையும் மீட்க முடியும் என்று நம்புகிறேன். எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கிட்டுமோ இளமை? (எனக்கும் அதற்கும்)

வாழ்க்கையின் கடிவாளமிப்படாத பகுதியின் முடிவை, புதிய, கடினமான அத்தியாயம் ஒன்றின் துவக்கத்தை இது உணர்த்துகிறதோ? நீண்ட நாளைய நட்பின் பிரிதல் போலவே இது எனக்குத் துன்பம் அளிக்கிறது. எத்தகைய நட்பு அது! எத்தனை இன்பங்கள், எத்தனை காதல்கள், எத்தனை உளைச்சல்களை இது தாங்கிச் சென்றிருக்கிறது? 'பழையன கழிதலும் புதியன புகுதலும்வழுவில கால வகையினானே' என்பது நட்புக்கும் பொருந்துமா?

தெளிந்த நீர்ப்பரப்பு போல மனது களங்கமற்றிருந்த பொழுதில் என் வாழ்வில் புகுந்த அது, அப்பரப்பில் பிம்பமாய்ப் படிந்தது. பத்து வருடங்களில் நன்றாய்க் க(ள)லங்கி விட்ட பரப்பில் தெளிவின் அத்தாட்சியாய் நின்ற பிம்பமும் உடைந்து தானே போகும்? இனி ஒரு வாழ்க்கைக் காலம் முழுதும் மனதில் காவிக்கொண்டு நடக்கக் கொஞ்சம் நினைவுகள் மட்டுமே மிஞ்சும்.

கருத்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
உடல் தானேங்க? ஆன்மா உங்க கூடத் தானே இருக்கும். வேற உடலுக்கு மாற்றிடுங்க. :-)

(கை பூரா மை ஆனாலும் விடாமல் நான் வைத்திருந்த பள்ளி நாள் பேனாவை எல்லாம் நினைவு படுத்துகிறீர்கள்!)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
செல்வா,
வண்டி பேயா மாறி வந்து பழிவாங்காம இருந்தா சரிதான்.
:-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

உங்களின் அலட்டல் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாத இயல்பான நடை ரொம்பவும் இதமாக இருக்கிறது. தமிழில் வலைப்பதிவுகள் துவங்கிய காலத்தில் எழுதியவர்களிடையே (இன்னமும்) இம்மாதிரியான மொழியைப் பார்க்கமுடியும். இப்போதெல்லாம் தமிழ்மனத்தில் அதிரடியாளர்களுக்குத் தான் மவுசு.
அவைகளுக்கிடையில் உங்களின் எழுத்தை சுகமான இளம்காற்றாக உணர்கிறேன்.

--வினோபா.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
வினோ,

உங்கள் பின்னூட்டம் பார்க்க மகிழ்ச்சியாயிருக்கிறது.

தொடர்ந்து இங்கே வருவதற்கும் ஊக்கம் கொடுப்பதற்கும் மிக்க நன்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...