முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீ....ண்ட இடைவேளைக்குப் பின்

இப்படியாக ஒரு வருடம் ஓடி விட்டது - வயதும் ஏறிவிட்டது. ரொம்ப நாளாக ஒரு மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். பல பொருட்களை வைத்து இதில் திணிக்க வேண்டியுள்ளது - மிகவும் ஆயாஸமாக இருக்கிறது. ஒன்றை அமுக்கித் திணிக்கும்போது இன்னொன்றோ, பலவோ அந்தப்பக்கம் பிதுங்கி வெளியேறி விடுகிறது. ரொம்பப் பிரயத்தனம் செய்து ஒரு மாதிரி கட்டும் நிலைமைக்கு வந்தால், கயிறு பற்றவில்லை, இல்லையென்றால் கையில் இருந்து வழுக்குகிறது. சரி, சில சாமான்களை விட்டு விடலாம் என்று கட்டப் புறப்பட்டால், மனது விட்டதையே நினைத்துச் சலிக்கிறது. நொந்துபோய்க் கொஞ்ச நாள் சும்மா விட்டால் சாமான்கள் கிடந்து எங்கும் இறைகிறது - இதைச் சேர்த்துப் பொறுக்குவது பெரும்பாடு. கவனம் சிறிதே தவறினாலோ, அவிழ்த்த நெல்லிக்காய் மூட்டைதான்.

வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும், அதன் போக்கின் திசைதிருப்பிகளாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் தெளிவாக இலக்கு தெரிந்தாலும், நான் அதன் பக்கமாகத் திரும்ப துடுப்பை ஒருபக்கம் துழாவுகிறேன், விதி தன் துடுப்பை எதிர்ப்பக்கம் துழாவி, போக்கை மாற்றுகிறது. இலக்கை எட்டுவதை விட, பிரயாணத்தை எப்படி நடத்துகிறோம் என்பதில் தான் நாட்கள் அதிகம் ஓடுகின்றன என்று தெரிகிறது.

இந்த வருடத்தில் நான் செய்ய நினைத்தவை( டாப் - 5), மற்றும் அதன் நிலவரம் கீழ்வருமாறு:

1. நேரத்தோடு அலுவலகம் வந்து நேரத்தோடு வீடு போய்ச் சேர்வது : - காலையில் 9 மணிக்கு அலுவலகத்திற்கு வரப் பழகிக்கொண்டேன். ஆனால் நினைத்தபடி வீடு போய்ச்சேர முடியவில்லை
2. பண்டிகைகள், பிறந்தநாள் மாதிரி நாட்களில் குழந்தைகள் காப்பகம் அல்லது முதியோர் இல்லங்களுக்குச் சென்று சமயம் செலவிட வேண்டும் என்று:- சென்ற புத்தாண்டின் போது 2 கிலோ இனிப்பு வாங்கிகொண்டு ஒரு குழந்தைகள் காப்பகத்திற்குப் போனால், குழந்தைகளை விளையாட வெளியே அழைத்துச் சென்றிருந்தனர். கொஞ்சம் நன்கொடையும், இனிப்பும் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். அதற்கப்புறம் பண்டிகை நாட்களில், வீட்டில் "கவுந்தடிச்சுப்" படுத்திருந்தேன்.
3. இருக்கும் புத்தகங்களைப் படித்துத் தீர்க்காமல், மேலும் புத்தகங்கள் வாங்கிச் சேர்ப்பதில்லை என்று தீர்மானம் பண்ணிக்கொண்டேன் :- இதை இந்தமாதம் வரையில் "அடுத்த மாதம் முதல்" என்று தள்ளிப் போடு, நிறையப் புத்தகம் வாங்கிவிட்டேன், சிலவற்றை இன்னும் திறந்தே பார்க்கவில்லை.
4. புதிய மொழி ஒன்றைக் (ஜெர்மன் அல்லது பிரஞ்சு மொழி) கற்க வேண்டும் என்று நினைத்தேன் - அப்புறம், சமஸ்கிருதத்தில் கரைகண்ட என் அப்பா வீட்டில் இருந்தும், அவரிடம் ஒன்றும் கற்றுக் கொள்ளாமல் வெளியில் என்ன கிழிக்கப்போகிறேன் என்று விட்டுவிட்டேன். இன்னும் அப்பாவிடம் அரைமணி உட்கார நேரம் கிடைக்கவில்லை.
5. வாழ்க்கையில் ஒரு நேர்த்தி வர யோகாசனம் பயில வேண்டும் என்று நினைத்தேன். காலை முதல் மாலை வரை அலுவலக குளிர்பதனத்தில், இருக்கையை அரக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்துவிட்டு, வீட்டில் டிவியின் முன் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி குந்திவிடுவதால், சிலநேரம் பனியன் போட்டுக்கொள்ளும்போது கூட தசை பிடித்துக்கொள்கிறது.RSI (Repititive strain Injury) யின் காரணத்தால், நல்ல புத்தி வந்து, கடந்த நான்கு மாதங்களாக யோகாசனம் பண்ணுகிறேன்.

இனி அடுத்த வருடம் சொந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில், கொஞ்சமேனும் லோகோபகாரமாக ஏதாவது செய்ய எண்ணம். உங்கள் எல்லோருக்கும் வரும் புத்தாண்டு மேம்பட்டதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வாழ்த்துக்கள்.

வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ!

கருத்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்க்கையில் பல நிகழ்வுகளுக்கிடையே ஒரு கட்டினைத் தேடும் முயற்சியை, தவிப்பை நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள் கண்ணன். வரும் புத்தாண்டில் உங்கள் முயற்சியில் இன்னும் சிறிது வெற்றியடைய வாழ்த்துக்கள். முழு வெற்றி என்பது கிட்டுவது சிரமம் என்றாலும் அந்த இலக்கை நோக்கிய நம் பயணம் அயராமல் தொடரவேண்டும் தான்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி செல்வராஜ்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...