முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீ....ண்ட இடைவேளைக்குப் பின்

இப்படியாக ஒரு வருடம் ஓடி விட்டது - வயதும் ஏறிவிட்டது. ரொம்ப நாளாக ஒரு மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். பல பொருட்களை வைத்து இதில் திணிக்க வேண்டியுள்ளது - மிகவும் ஆயாஸமாக இருக்கிறது. ஒன்றை அமுக்கித் திணிக்கும்போது இன்னொன்றோ, பலவோ அந்தப்பக்கம் பிதுங்கி வெளியேறி விடுகிறது. ரொம்பப் பிரயத்தனம் செய்து ஒரு மாதிரி கட்டும் நிலைமைக்கு வந்தால், கயிறு பற்றவில்லை, இல்லையென்றால் கையில் இருந்து வழுக்குகிறது. சரி, சில சாமான்களை விட்டு விடலாம் என்று கட்டப் புறப்பட்டால், மனது விட்டதையே நினைத்துச் சலிக்கிறது. நொந்துபோய்க் கொஞ்ச நாள் சும்மா விட்டால் சாமான்கள் கிடந்து எங்கும் இறைகிறது - இதைச் சேர்த்துப் பொறுக்குவது பெரும்பாடு. கவனம் சிறிதே தவறினாலோ, அவிழ்த்த நெல்லிக்காய் மூட்டைதான்.

வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும், அதன் போக்கின் திசைதிருப்பிகளாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் தெளிவாக இலக்கு தெரிந்தாலும், நான் அதன் பக்கமாகத் திரும்ப துடுப்பை ஒருபக்கம் துழாவுகிறேன், விதி தன் துடுப்பை எதிர்ப்பக்கம் துழாவி, போக்கை மாற்றுகிறது. இலக்கை எட்டுவதை விட, பிரயாணத்தை எப்படி நடத்துகிறோம் என்பதில் தான் நாட்கள் அதிகம் ஓடுகின்றன என்று தெரிகிறது.

இந்த வருடத்தில் நான் செய்ய நினைத்தவை( டாப் - 5), மற்றும் அதன் நிலவரம் கீழ்வருமாறு:

1. நேரத்தோடு அலுவலகம் வந்து நேரத்தோடு வீடு போய்ச் சேர்வது : - காலையில் 9 மணிக்கு அலுவலகத்திற்கு வரப் பழகிக்கொண்டேன். ஆனால் நினைத்தபடி வீடு போய்ச்சேர முடியவில்லை
2. பண்டிகைகள், பிறந்தநாள் மாதிரி நாட்களில் குழந்தைகள் காப்பகம் அல்லது முதியோர் இல்லங்களுக்குச் சென்று சமயம் செலவிட வேண்டும் என்று:- சென்ற புத்தாண்டின் போது 2 கிலோ இனிப்பு வாங்கிகொண்டு ஒரு குழந்தைகள் காப்பகத்திற்குப் போனால், குழந்தைகளை விளையாட வெளியே அழைத்துச் சென்றிருந்தனர். கொஞ்சம் நன்கொடையும், இனிப்பும் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். அதற்கப்புறம் பண்டிகை நாட்களில், வீட்டில் "கவுந்தடிச்சுப்" படுத்திருந்தேன்.
3. இருக்கும் புத்தகங்களைப் படித்துத் தீர்க்காமல், மேலும் புத்தகங்கள் வாங்கிச் சேர்ப்பதில்லை என்று தீர்மானம் பண்ணிக்கொண்டேன் :- இதை இந்தமாதம் வரையில் "அடுத்த மாதம் முதல்" என்று தள்ளிப் போடு, நிறையப் புத்தகம் வாங்கிவிட்டேன், சிலவற்றை இன்னும் திறந்தே பார்க்கவில்லை.
4. புதிய மொழி ஒன்றைக் (ஜெர்மன் அல்லது பிரஞ்சு மொழி) கற்க வேண்டும் என்று நினைத்தேன் - அப்புறம், சமஸ்கிருதத்தில் கரைகண்ட என் அப்பா வீட்டில் இருந்தும், அவரிடம் ஒன்றும் கற்றுக் கொள்ளாமல் வெளியில் என்ன கிழிக்கப்போகிறேன் என்று விட்டுவிட்டேன். இன்னும் அப்பாவிடம் அரைமணி உட்கார நேரம் கிடைக்கவில்லை.
5. வாழ்க்கையில் ஒரு நேர்த்தி வர யோகாசனம் பயில வேண்டும் என்று நினைத்தேன். காலை முதல் மாலை வரை அலுவலக குளிர்பதனத்தில், இருக்கையை அரக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்துவிட்டு, வீட்டில் டிவியின் முன் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி குந்திவிடுவதால், சிலநேரம் பனியன் போட்டுக்கொள்ளும்போது கூட தசை பிடித்துக்கொள்கிறது.RSI (Repititive strain Injury) யின் காரணத்தால், நல்ல புத்தி வந்து, கடந்த நான்கு மாதங்களாக யோகாசனம் பண்ணுகிறேன்.

இனி அடுத்த வருடம் சொந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில், கொஞ்சமேனும் லோகோபகாரமாக ஏதாவது செய்ய எண்ணம். உங்கள் எல்லோருக்கும் வரும் புத்தாண்டு மேம்பட்டதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வாழ்த்துக்கள்.

வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ!

கருத்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்க்கையில் பல நிகழ்வுகளுக்கிடையே ஒரு கட்டினைத் தேடும் முயற்சியை, தவிப்பை நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள் கண்ணன். வரும் புத்தாண்டில் உங்கள் முயற்சியில் இன்னும் சிறிது வெற்றியடைய வாழ்த்துக்கள். முழு வெற்றி என்பது கிட்டுவது சிரமம் என்றாலும் அந்த இலக்கை நோக்கிய நம் பயணம் அயராமல் தொடரவேண்டும் தான்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி செல்வராஜ்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க