முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊர் விசேஷங்கள்...

எச்சரிக்கை (அல்லது) பொருள்: ரொம்ப நாள் கழித்து ஊருக்குப் போனேன். நான் கண்ட மாற்றங்கள், ஊர் சுற்றியதன் பதிவுகள்...

பத்து வருடத்தில் ஊர் மாறிப் போயிருந்தது. செட்டிப்பாளையம் ரோடு - இதன் முடிவில்லா ஓட்டத்தின் மறுபக்கத்தில், தொடுவானத்திற்கப்புறம் இருந்த செட்டிப்பாளையம் வரை ஒரு குஞ்சு குளுவாணி காணாது அப்போது. வயல்களும், முட்புதர்களும், தென்னந்தோப்பும், வெறுமையும் மேடும் பள்ளமுமான அகன்ற நிலப்பரப்பு முழுதும் வியாபித்திருக்கும். நீண்டு வளரும் ஆளற்ற சாலையில் தூரே தெரியும் வீடு, மற்றும் ஒட்டிய தென்னந்தோப்பு -நான் மூன்றாம் வகுப்பில் படித்த தமிழ்க் கதையில் வரும் ஏழைக் குடியானவன் இந்த வீட்டில் தான் வசிப்பான் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டேன். நண்பர்களை வீட்டுக்கு அழைத்தால் அவர்களை ஒரு நடை இந்தச் சாலையில் 'அடித்துப் பிடுங்கும்' பாலம் வரையில் அழைத்துச் சென்று, அங்கே உட்கார்ந்து தூரே தெரியும் கோவையின் கட்டிடங்களை இனம் காணத் தலைப்படுவோம். அருமையான, சில சமயம் பலமான காற்று எப்போதும் இருக்கும். இதுவே எங்களூரின் சுற்றுலாத் தன்மை மிக்க அம்சம். இப்போது சாலை நெடுகிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு வீடுகள், கடைகள், ஜெபக்கூடங்கள், சமத்துவபுரம், இன்ன பிற.

முன்பு குடியிருந்த வீட்டுப் பக்கம் போனேன். தார் ரோடுகள், தெருப்பெயர்ப் பலகைகள் மேலும் மேலும் வீடுகள் என்று கொஞ்சம் தொலைந்து போனேன். பழக்கப்பட்ட பன்றி மேயும் மைதானத்தின் மணம் மாறாதிருந்ததில் கோ-ஆர்டினேட்ஸ் திரும்பக் கிடைக்கப் பெற்றேன். மற்றபடி ஒரு நாளைக்கு ஒரே தடவை வரும் பொள்ளாச்சி பேஸஞ்சர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், ராமேச்வரம் எக்ஸ்பிரஸ் என்ற நிலை போய், மணிக்கொரு மதுரை இண்டர் சிடி. ரவி ரேடியோ ரிப்பேர் இருந்த இடத்தில் டிஷ்நெட் ஹப் வைத்து ஹைஸ்பீட் இன்ட்ர்நெட் பிரவுசிங். சிங்கப்பூர், பாம்பே சலூன்கள் இடம் பெயரவில்லை. மீன்கடை சந்தில் பல புதிய 'நகர்' கள். பழைய ரேஷன் கடையைக் காணவில்லை, ஸ்டேட் பாங்க் ஏடிஎம் வந்திருக்கிறது. ஆல்வின் ஜோசப் அண்ணாச்சி கடை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியிருந்தது, கிரெடிட் கார்ட் வசதியுடன். (தம்மண்ணன் மளிகை மாறவில்லையாம்) கிரிக்கெட் விளையாடிப் பழகிய சர்ச் கிரவுண்ட் பக்கம் நடந்து போனேன் - தொலைந்த பந்தைத் தேட வந்து கள்ளிப் பழம் சாப்பிட்ட இடத்தில் ஏதோ ரெயில்வே ஆடிட்டோரியம், பளிச்சென்று. அந்தப் பக்கம் கம்பியூட்டரைஸ்ட் ரெயில்வே ரிஸர்வேஷன் மையம் ஒன்று புதிதாக.

எங்கள் காம்பவுண்ட் மளிகைக் கடை நாயுடு கடையை ஏரைகட்டிவிட்டுப் பக்கத்தில் புதுவீடு கட்டிக் கொண்டு மகனுடன் வசிக்கிறார். புளிய மரத்தடியில் என் தம்பிகளுடன் மூக்கொழுக மண்ணில் புரண்டு விளையாடிய அன்னபூரணிக்குக் கல்யாணம் ஆகி சாயிபாபா காலனியில் செட்டில் ஆகிவிட்டாள். புளியமரத்தை வெட்டிவிட்டு, அங்கே ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வர உள்ளது. 55A பஸ் கண்டக்டர் பையன் இப்போது ஆளாகிவிட்டார் - நரை முடியெல்லாம் வந்திருக்கிறது. யாருக்கும் அடையாளம் தெரியாமல், மாறுவேடம் போடாமலே நான் incognito வாக ஊரை வலம் வந்தேன்!

இதுதான் போத்தனூர் விசேடம்...

கருத்துகள்

Kasi Arumugam இவ்வாறு கூறியுள்ளார்…
என்னமோ பத்து வருஷம் கழிச்சுப் போனமாதிரி பில்டப் பண்ணின மாதிரி இருக்கு. எல்லாம் சாதாரண வளர்ச்சிதானெ கண்ணா?
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
காசிலிங்கம் சார்,

ஊரை விட்டு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆச்சு. நடுவில் அப்பப்போ flying visits அல்லாமல் இப்படி நடந்து ஊர் சுற்றவில்லை. அது இப்பொ தான் முடிஞ்சது. ஏனோ இந்த வாட்டி ரொம்ப nostalgic ஆ போயிடுச்சு...

மற்றபடி 'பில்டப்' தான் :-))
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
Even if it is a "Buildup", படிக்க நல்லாயிருந்தது! நானும் 4 வருடம் (GCT-இல் படிக்கச்சே தான்!) கோயமுத்தூர்லே குப்பை கொட்டியிருக்கேன். என் Blog-இல் GCT visit (after 17 years) பற்றி எழுதியிருக்கேன்! படிச்சுட்டு பின்னூட்டமிடுங்க!
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Balaganesan,

Thanks for your comments!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க