முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூர் டயரி - 3

எனக்கு சந்தோஷ் குருவுடன் பேசுவது என்பது ஒரு உரையாடல் இல்லை. இந்த மாதிரிப் பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன். அவருக்கு நல்ல பொறுமை. இதைப் பின்னால் நானே யோசித்துப் பார்த்தபோது கிளைத்துக் கிளைத்துப் பரந்த பேச்சில் கோர்வையாக ஒரு இழைகூட இருக்காது. கிடைக்கும் இரண்டு மணிநேரத்தில் எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்ற நோக்கிலோ என்னவோ தாவித் தாவிப் போகும் பேச்சில் எந்த ஒரு விஷயமும் மையச் சரடுக்கு மீள்வதில்லை. எல்லா விஷயங்களும் ஆங்காங்கே தொக்கி நிற்கும்.

***

இப்படியாகப் போனவாரம் ஒரு இழை நவீன ஓவியங்கள், நாடகங்கள், எழுத்து, இவற்றில் குறியீடுகளைப் (symbolism?) புரிந்து கொள்ளுதல் பற்றி நீண்டது. ஒரு விஷயத்தை எந்த முறையாலும் முழுமையாக, நம் திருப்திக்கேற்ப வெளிக்காட்ட முடியாதது எவ்வளவு அவஸ்தையைக் கொடுக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க முடிகிறது. மொழி extensible இல்லை. அதை ஒரு வெளிக்காட்டு முறையாகப் பயன் படுத்தும் போது எழுத்துகள் தரும் மேலார்ந்த பொருள்களுக்கு அப்பால் ஒன்ற உணர்த்த அந்த basic set ஐ வைத்துக் கொண்டே தகிடுதத்தம் பண்ண வேண்டியிருக்கிறது. சாதாரணமானவற்றைத் தாண்டிச் சிலவற்றைச் சொல்லத் தேவை இருப்பவர்களுக்கும், அம்மாதிரி விஷயங்களைக் கேட்டுக் கொள்ள விழைபவர்களுக்கும், எப்படியோ இந்த protocol synch ஆகிறது. சன்னாசியின் இந்தப் பதிவைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது. ஆனால் ப்ரத்யேக மொழிக்கான (Private Language) தேவைகள் புரிகிறதே ஒழிய, அம்மொழிகளையும் இன்ன பிற குறியீடுகளையும் கண்டு கொள்ள முடிவதில்லை. எழுத்துக்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு இன்னும் சலிக்கவில்லை போலும். அதனால தான் எழுதப்பட்டவைகளையே ஒரு விடமுடியாத ஆசையுடன் பார்க்கிறது போல இருக்கிறது. எழுத்துக்களும், உத்திகளும், எதைக் குறிக்கிறதோ அதை நேராகப் படிக்க, உணர, இந்தக் கருவிகளின் பால் உள்ள மோகத்தை இன்னும் தாண்ட முடிவதில்லை. 'வார்தைகளின் வசீகரம்' எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை!

***

சந்தோஷ் குருவின் சகவாச தோஷத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் நான்கு வெங்கட் சாமிநாதன் புத்தகங்களும், ஆதவனின் காகித மலர்களும் வாங்கினேன். பர்ஸை எவ்வளவு காலியாக வைத்திருந்தும், கிரெடிட், டெபிட் என்று என்ன அட்டையாக இருந்தாலும் தேய்த்துக் கொள்வோம் என்று அங்கே சொல்வார்கள் என்று தெரியாமல் போயிற்று. முத்துலிங்கத்தின் ஒரு கட்டுரைத் தொகுப்பும் வாங்கினேன். காவ்யா பதிப்பகம் கடை விரிக்காதது ஆச்சரியமாக இருந்தது. சன்னாசியின் மேற்சொன்ன பதிவைப் படித்ததில் இருந்து நகுலனின் தொகுப்பை வாங்கிவிட வேண்டுமென்று இருந்தேன். காவ்யாவின் வெளியீடுகளை காலச்சுவடு ஸ்டாலில் வைத்திருந்தார்கள். நகுலனின் கவிதைத் தொகுப்பு மட்டுமே இருந்தது - சத்தமில்லாமல் அதை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டேன். கிழக்கு பதிப்பகத்தில் இருந்தவரிடம் "பத்ரி திரும்பிப் போயிட்டாரா" என்று பெரிய 'இவன்' மாதிரி நான் விசாரித்தது எனக்கே அப்புறம் சிரிப்பை வரவழைத்தது.

கருத்துகள்

ஒரு பொடிச்சி இவ்வாறு கூறியுள்ளார்…
//...'வார்தைகளின் வசீகரம்' எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை!//
அழகா இருக்கு!
--------
ஆவியின்மீதும் வசீகரம் இருக்கிறது.
என்றாலும்
/வார்த்தைகளை வாந்தியெடுக்க/ நண்பர்கள் இருக்கும்போது private language பற்றிய தேவை இருக்காதோ...!
;-)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பொடிச்சி,

நன்றி!

வாந்தி அதிகமானால் நண்பர்கள் நம்மை வசைபாட அதி-Private Language அவசியமே!
:-)
Jayaprakash Sampath இவ்வாறு கூறியுள்ளார்…
//பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன்.//

ரைட்... :-)

//சன்னாசியின் இந்தப் பதிவைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது ......................
................................................ எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை! //

உங்களுக்குச் சொல்ல வருது... சொல்லிட்டீங்க... எனக்கு வரலை.. அதனால், உங்க பின்னூட்டுப் பொட்டியில வந்து ஆமாஞ்சாமின்னு ஒத்து ஊதறேன்...
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
// உங்களுக்குச் சொல்ல வருது... சொல்லிட்டீங்க //

பிரகாஷ்,

ஒண்ணும் புரியலைன்னு தானே சொல்லியிருக்கேன். எனக்கு இதை ரொம்ப நல்லாச் சொல்ல வரும் - பல வருடப் பயிற்சி

:-)
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்த மாதிரிப் பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன். அவருக்கு நல்ல பொறுமை. //

ஆங்.. நானும் உங்களைப் பத்தி இப்படித்தானே நினைச்சுக்கிட்டு இருந்தேன் :).

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கிச்சா பாறைகள்!

Screenshot from https://www.poetryfoundation.org/poems/42839/i-know-a-man பாண்டியில் படித்துக்கொண்டிருக்கும்போது (இது அந்தக்காலத்திற்கான இடுகுறிச் சொற்றொடர் - உண்மையில் ‘படித்த’ நினைவு இல்லை) ஒரு பின்னந்திப்பொழுதில் தெருத்தெருவாகச் சுற்றித்திரிந்தபோது கிச்சா, இதரர்களுடன் ஒரு கோவிலுக்குள் போன நினைவிருக்கிறது. மறுநாள் ம்யுபி என்ற மைக்ரோகபுராசஸர் இழவுத் தேர்வு இருந்தது பல்கலையில். கோவிலில் ஓ எஸ் தியாகராஜன் கச்சேரி என்று தட்டி வைத்திருந்தார்கள். ஓ எஸ் டி பின்னாட்களில்  கச்சேரி பண்ணுகிறேன் என்ற பெயரில் ஒப்பேத்தல் மன்னராக இருந்தாலும்  (இதைச் சொன்னதற்காக என்னை அடிக்க வராதீர்கள்) அருமையான பாடாந்தரம், வெண்கலக்குரல், களையான கச்சேரிகள், என்று 93ல் என் விருப்பத்திற்குரியவராகவே இருந்தார்.   நான் தட்டியைப்பார்த்துப் பரபரத்தேன். “ஓ எஸ் டி பாடறாரு மச்சான் - என்ன, எங்கன்னு விசாரிப்போம்”. இந்தவிடத்தில் கிச்சா அவனுடைய பாணியில் என்னைத் தடுத்தாட்கொண்டான்.  “ ஓ எஸ் தியாகராஜனையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், நாம  இப்ப ம்யுபி தியாகராஜனை கவனிப்போம்”... (முதுநிலைப் படிப்பில் அந்த அர...