Monday, December 01, 2008

கட்டற்ற...

இந்த வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து இன்னொரு முறை வாழ நேர்ந்தால் என்ன செய்வேன்? என்று கேட்டால் 'ஒண்ணையும் மாத்த மாட்டேன்' என்று ஒரு புனைச் சுருட்டும் காட்ட மாட்டேன். அசட்டுத் தனங்களின், ஏமாற்றங்களின், விரக்திகளின், தணியா வேட்கைகளின், மற்றும் இந்தமாதிரி பலவற்றின் தொகுப்பாகவே தெரிகிறது வாழ்க்கை. நம்மைப் பற்றிய நமதானதும் பிறரதுமான எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்வதே பக்குவப்படலின் ஒரு முக்கிய அலகாகத் தெரிகிறது இப்போது. இந்த அனுபவ ஞானத்தோடு இன்னொரு முறை வாழ்ந்தால் தான் என்ன கேடு?

~~~

சுசீலா, சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கி, கண்ணாயிரம் பெருமாள் என்று நீளும் "மன நிழல்களின்" பாரம்பரியத்தில் நானும் மாதவக் கைமள், கோவிந்தன் நம்பூதிரி என்று (ஏனோ மலையாளப் பெயர்களே நினைவுக்கு வருகிறது) ஒன்றிரண்டை அவிழ்த்து விடுவோமா என்று யோசிப்பதுண்டு. நீரும் நெருப்பும் - இரண்டு எம்.ஜி.ஆர் - ஒருவன் முரடன், ஒருவன் சாது. இல்லை - தெரியாமல் "பாரம்பரியம்" என்று வந்துவிட்டது. "அதைக் காப்பியடித்து" என்று வைத்துக்கொள்வது தான் சரி.

~~~

மேலே தட்டச்சுவது கடினமாக இருக்கிறது - தூக்கம் வருகிறது. கொஞ்ச நாளாக சோடாவில் எலுமிச்சை உப்பு போட்டுக் குடிப்பது பழக்கமாகி விட்டது. நல்ல தாகமாக இருக்கிறது - குளிர்ந்த சோடா கேட்கிறது.

Sunday, November 02, 2008

எம்.டி.ஆர்

சுகுமாரனின் ”தனிமையின் வழி” படித்துக் கொண்டிருக்கிறேன். கோவை விஜயா பதிப்பகக் கடையில் வாங்கியது - ஒரு காரணம் எம்.டி.ராமனாதன் பற்றிய உயிர்மைக் கட்டுரை இதிலே இருந்தது (இன்னொன்று கோவைக்காரர் என்பது) நண்பன் ஒருவன் இதன் பக்கங்களை உயிர்மையில் வந்தவுடன் ஸ்கான் செய்து அனுப்பியதை ஒரு பொக்கிஷமாகவே இன்னும் வைத்திருக்கிறேன். பொதுவில் எம்.டி.ராமனாதன் பற்றிய எதுவும் பத்திரிகைகளிலோ இணையத்தளங்களிலோ கிடைப்பதில்லை. ஆனால் எம்.டி.ராமனாதனின் இசைக்கச்சேரியை நேரிலமர்ந்து பார்த்தது மட்டுமல்லாமல், அவரைச் சந்தித்துப் பேசவும் செய்திருக்கிறார் சுகுமாரன். பொறாமையாக இருக்கிறது.

எண்பதுகளுக்கு முன்னால் (தென்னிந்திய மரபு) இசையை அறிந்து, கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அம்மாதிரிப் பழைய கச்சேரி அனுபவஸ்த்தர்கள் தரும் சின்னச் சின்னத் தகவல்களின் தொகுப்பே ராமனாதன் பற்றி எனக்குத் தெரிந்த சொற்பம். பணமும், செல்வாக்கும், கோஷ்டியும், மோசடியும், கபடமும் நிறைந்த புதுச் சந்நியாசிகளின் நடுவே எல்லாம் துறந்து, தன்னையறிந்து கொண்ட, கண்டுகொள்ளப்படாத, தன்வழியே போகிற பரதேசிச் சாமியாரின் நிலைதான் ராமனாதனுக்கு இசை உலகம் மற்றும் இசை ரசிகர்களின் மத்தியிலே. பக்தி, ஆன்மீகம் என்கிற மிகையுணர்ச்சிகளின் தாக்கத்துக்கு உட்பட்ட இம்மரபிசையிலே கலைசார்ந்த ஆக்க வெளியீடுகளும், தேடுதல்களும் இரண்டாம்பட்சமாகவே இருந்து வருகின்றன.

இதிலே கலையை போஷிக்கிற, மேன்மைப்படுத்துகிற, அருமையான சிருஷ்டித்தன்மை கொண்டவராக இருந்த ராமனாதன் புறக்கணிக்கப் பட்டது என்னை பாதித்தது. இந்தப் புறக்கணிப்பே எனக்கு அவர்மேல் இன்னும் மரியாதையும், அவரைப்பற்றிய தகவல்களை அறிய ஆவலையும் ஏற்படுத்தியது. மரபார்ந்த வழைமைகள் மாறுதலுக்குட்படுத்தப்படும் போது ஏற்படுகிற எதிர்ப்பும், புறக்கணிப்புமே ராமனாதன் எதிர்கொண்டது. ”தனி வழி நடப்பவனின் எல்லா துக்கங்களையும் அவமதிப்புக்ளையும் எம்.டி.ஆர் அனுபவித்திருக்கிறார்” என்கிறார் சுகுமாரன். உண்மை. அவரைப் பற்றைய எதிர்மறையான எல்லாக் கருத்துகளும் எனக்கு அவர்மேல் மதிப்பையே ஏற்படச் செய்கின்றன.

”அவன் பாடும்போது ஒரு நெலைக்கண்ணாடியத் தான் முன்னாடி வைக்கணும்” என்று பாட்டி சொல்கிறபோதும், கச்சேரிக்கு வாசிக்கவென்று அழைக்கவரும்போது ”இழு இழுன்னு இழுப்பான். இவனுக்கு வாசிக்க முடியாது” என்று மிருதங்கக் கலைஞன் ஒளிந்து கொள்ளும் கதை கேட்டபோதும், ”அவர் பாடுகிற சுருதிக்கு வயலின் கம்பியெல்லாம் தளர்த்தி, தொளதொளன்னு, சத்தமே வராது”, மற்றும் “அவர் பாட ஆரமிச்ச ஒடனே மொதல் வரிசையில ஒரு குழந்தை பயந்து அழுதது” என்ற எள்ளலுக்கும் மனத்தில் மதிப்பே.

ஒரு பெரிய தொகையைச் செலவழித்திருக்கிறேன் - அவர் பழைய கச்சேரிகள் பலவற்றைச் சேமிக்கவென்று. இப்போது நாற்பதற்கும் மேற்பட்ட கச்சேரிகளை வட்டுகளில் சேமித்திருகிறேன். நினைத்தபோது ஒரு கச்சேரியை கேட்பது என்றிருப்பது வசதியான வாழ்க்கையின் உச்சம் போலிருக்கிறது. ”’மற்றவர்கள் வாதாபி கணபதிம் பாடும்போது அன்னப்பறவை நீந்துவது போல இருக்கும். நீங்கள் பாடுகிறபோது யானை நடப்பதுபோல இருக்கிறது’ என்று சொன்னபோது எம்.டி.ஆரின் ஒன்றரைக் கண்ணில் ஒரு முதிர்ந்த குழந்தையின் சிரிப்பு” என்று சுகுமாரன் எழுதியதை அறிந்து கொள்ள எம்.டி.ஆரின் ஒரு பழைய நிகழ்ச்சி ஒளி-ஒலி வடிவில் வைத்திருக்கிறேன். நெளிநெளியாகப் போகும் மங்கலான படத்தை மீறி அதை ரசிக்கிறேன். இது ஒரு பெரிய பொக்கிஷம்.

“ராமனாதனின் இசையும், நல்ல விஸ்கியும் உயிர்வாழப் போதுமானது” என்கிற மாதிரி ஒரு கேரளத் திரைப்பட இயக்குனர் சொல்வாராம். என்னவிருந்தாலும் மலையாளிகள் ரசனை மிகுந்தவர்கள்...

தனிமையின் வழி - சுகுமாரன், உயிர்மை பதிப்பகம்

Sunday, October 26, 2008

இன்னுமொரு புத்தக மீம்

ராம்கி அழைத்ததும் நீண்ட நாட்களாய் எழுதாமலிருக்கும் ப்ளாகை தூசு தட்டிப் புதுப்பிக்கலாமென்று கிளம்பிவிட்டேன். ஆனாலும் 32 கேள்விகள் கையை உடைத்துவிடும்போல இருந்ததால் நிறையக் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டேன்.

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

பாக்கெட் நாவல், மாலை மதி என்று ”சாணி சாணியாக” பல்ப் படித்திருக்கிறேன். அம்மா அரசுயர் பள்ளி நூலகத்திலிருந்து கொண்டு வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா
மோகனாம்பாள் விவரம் தெரிந்து படித்த முதல் நாவல்.

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

பள்ளி நாட்களிலிருந்து.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
பொதுவாக நாவல் என்கிற வடிவத்தில் ஒரு பிடிப்பு இல்லாததால், படிக்கிற நாவல்களில் ரகம் பிரிப்பதில்லை. பொதுவில் பாத்திரப்படைப்பிற்கும் கதைக் களனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிற நாவல்கள் மனதில் நிலைக்கின்றன. இருந்தாலும், வரலாற்றுக் கலப்புடன் எழுதப்பட்ட நாவல்கள் எனக்கு விருப்பமானவை.

4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
பரிந்துரைகளின் பேரிலேயே நாவல்களைத் தேர்ந்தெடுகிறேன். அதிக நாவல்களை நாடிப் படிக்கும் வழக்கம் இல்லை.

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
இலக்கிய வரலாறு தெரியாவிட்டாலும், கதை சொல்லுதல் என்கிற பழைமையான மரபில் இருந்து நாவல் வடிவம் இயற்கையாகப் பொருந்தி வந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. புதிய உத்திகள், நடை, வட்டார வழக்கு, என்பவை இவ்வடிவத்தை இன்னும் மெருகேற்றியுள்ளன என்றாலும், கதைப்போக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவையாகவே உள்ளன நாவல்கள்.

சிறுகதை என்கிற சிறிய வடிவில் வாழ்க்கையின் ஒரு தெறிப்பை/ஒரு பரிமாணத்தை/ஒரு மனநிலையை/ஒரு நிகழ்வை/ஒரு குழப்பத்தை/ஒரு உணர்வை அவை தரும் புதிய அர்த்தங்களையும் புரிதல்களையும் சேர்த்துக் கொடுப்பது ஒரு சாகசமாகவே தோன்றுகிறது. என்னைப் பொருத்த வரையில் இது கொண்டாடப் படவேண்டிய ஒரு வடிவம்.

6. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
தெரியவில்லை.

7. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
மகிழ்ச்சியாக இருக்கும்.

8.நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
இல்லை

9. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
குறிப்பிட்ட நேரம் இல்லையானாலும், படுக்கப்போகும்போது ஆரம்பித்து, சில நேரம் அதிகாலை வரை வாசிப்பதுண்டு.

10. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?
அதிகம் இல்லை. அரசூர் வம்சம் ஏனென்று தெரியவில்லை.

11. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
ஒன்றும் இல்லை.

12. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
விஷ்ணுபுரம் - நண்பன் பரிந்துரைத்தது.

13. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
மொத்தமாகவே பத்து நாவல்கள் தான் தேறும் என்று நினைக்கிறேன். மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, மானுடம் வெல்லும், வானம் வசப்படும், மகாநதி, வாடிவாசல், காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன், புலிநகக் கொன்றை.

14. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
பிறமொழி நாவல்கள் எதுவும் படித்ததில்லை

15. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
ஆங்கிலத்தில் பல குப்பைகளை வாசித்திருந்தாலும் ‘கனமான’பிறநாட்டு நாவல்கள் எதுவும் படித்ததில்லை (வெ.ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில் அந்நியன் தவிர)

16. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
அம்மா வந்தாள், மரப்பசு...

17. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
உண்டு.

18. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் Bertram Wooster போல வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்து, கொஞ்சம் நாள் கனவும் கண்டதுண்டு.

Tuesday, July 22, 2008

எழுத்து ஊக்கிகள்


எங்களூர் நூலகத்தின் பழைய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். நானும் கால்கடுக்க மூன்று மணி நேரம் செலவிட்டதில் நான்கைந்து புத்தகங்கள் தேறின. அதிலே தமிழிலே ஸ்ரீரங்கத்து தேவதைகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது நண்பன் ஒருவன் பழைய புத்தகக் கடையிலிருந்து இதை வாங்கி வந்திருந்தான். ரொம்ப நாட்கள் அதை வைத்திருந்து இரவல் கொடுத்ததிலோ வீடு மாற்றியதிலோ தொலைந்து விட்டது. இப்போது இது கிடைத்ததும் உற்சாகமாகி விட்டேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்கிற தொகுப்பு 'தேவதைகள்' உட்பட மேலும் சில கதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தொலைத்த, பழைய தொகுப்பு கிட்டியது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.

சில எழுத்துகள் படித்ததும் அலையலையான நினைவுகளைக் கிளறிவிட வல்லன. ஸ்ரீரங்கத்து தேவதைகள் அவ்வாறான ஒன்று. சுஜாதாவின் மிக அருமையான படைப்பென்றே இதைச் சொல்லுவேன். நம் இளமைக்காலத்தின் நினைவுகளோடு பொருத்திப் பார்க்க முடிவதாலும், சொந்த அனுபவங்களை ஒத்திருப்பதாலும், இன்னும் சில மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை, காலங்களை நினைவு படுத்துவதாலும் இது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் மேலாக சுஜாதாவின் தனித்தன்மை வாய்ந்த துள்ளலும், எள்ளலும், self-deprecating humor உம் தான் இதை ஒரு ஒப்பற்ற வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறது.

======
இன்னும் சில எழுத்துகளை வாசித்தபின் எண்ணங்கள் குறுகலான முட்டுச் சந்துகளை விட்டு விசாலமான ஒரு பெருவெளிக்கு விடுதலை பெற்றுப் போகின்றன. ஒவ்வொரு முறையும் இப்படி மூச்சு முட்டியிருக்கையிலே புதிய சாத்தியங்களுக்கான வெளிகள் வாசிப்பிலிருந்தே கிட்டிவிடுகின்றன. கொடுமையான கனவு உறக்கம் கலைத்தபின் நிகழ்வாழ்வின் போதம் தரும் ஆசுவாசம் போல இவை பொதுவில் வாழ்வில் புது நம்பிக்கை கொள்ளச் செய்வன.

======

Principles of good writing என்கிற கட்டுரை பள்ளியிலே ஆங்கிலப் பாடத்தில் இருந்தது. அதிலே நல்ல எழுத்துக்கு perspiration 99%, inspiration 1% என்றும், தெளிவான சிந்தனையே தெளிவான எழுத்துக்கு வழி செய்யும் என்றும் சொல்லியிருந்தது. மேலும், ஒரு குறிப்புப் புத்தகமும், பென்சிலும் எப்போதும் கைவசமிருக்கவேண்டும் என்றும், ஏதேனும் நல்ல கருத்தோ, சொற்றொடரோ, எழுத ஏதுவான எதுவோ தோன்றியவுடன் இக்குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்டுரையிலே இருந்தது. தற்சமயம் தெளிவான எண்ணங்கள் இல்லை; குறிப்புப் புத்தகமும் இல்லை. இருந்திருந்தால் கடந்த சில தினங்களில் எழுதத் தூண்டிய சில விஷயங்கள் பற்றியும், அலையலையாக அப்போது கிளர்ந்தெழுந்த நினைவுகளையும் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாம். இப்போது அடித்தும் திருத்தியும் எழுதிப்போகும் இக்கணம் நிலவும் கற்பனை வறட்சியும் அதனால் ஏற்படும் சோர்வும் இல்லாமல் இருந்திருக்கலாம்.

சிந்திக்க, எழுதத் தூண்டிய அத்தகைய ஒரு விஷயம்: அருளின் மெய்யியல் / புன்னகையில் மின்சாரம் பற்றிய பதிவு. இப்போதைக்கு எஸ்கேப்.