Friday, March 04, 2011

சினிமா பிரபலம் மறைவுக்கு எழுத்தாளர் அறிவுக்குஞ்சு இரங்கல்

நேற்று மதியம் நண்பர் ஜாலி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் - யோகி மாமா நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நான் சாதாரணமாகச் செல்பேசியை உபயோகிப்பதில்லை. இப்போதெல்லாம் விமானத்தில் ஏறி சென்னையில் இறங்கும் போது என்னைக் கொணர வருபவர்கள் அழைப்பதற்காக இதை வைத்திருக்கிறேன். என் ஏழு வயது மகன் பராந்தகன் தான் குறுஞ்செய்தி வந்த விபரத்தைக் கூறினான். நான் உடனடி காரில் ஏறிக்கொண்டு கொச்சி விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் கிளம்பிவிட்டேன். இன்று காலை ஜாலி மறுபடியும் தொலைபேசி யோகி மாமா காலமாகிவிட்டதைத் தெரிவித்தார். நான் மலையாள இயக்குனர் பிஜாயோடு இருந்தேன் - இருவரும் யோகியின் இழப்பை துக்கம் கொண்டாடினோம்.

யோகி நெகிழ்த்தவைக்கும் கலைக்குச் சொந்தக்காரர். ஜாலியின் சமீபத்திய கட்டுரை ஒன்றே யோகியின் கண்டுகொள்ளப்படாத கடைசி நாட்களில் அவரது தன்னம்பிக்கையை மீட்டு, தன்னை மாபெரும் கலைஞனாக கருதிக்கொள்ள வைத்தது. அந்த வகையில் இக்கலைஞனை ஒற்றைக்கட்டுரையில் மீட்டெடுத்த பெருமை ஜாலியைச் சேரும். அதற்காக அவருக்கு என் நன்றிகள். மிகையுணர்ச்சிக்கும், கலையடர்த்திக்கும் இடைப்பட்ட ஒரு மெல்லிழையை யோகி பிடித்துக் கொண்டார். இதனாலேயே இவர் சாமானியர்களின் கொண்ட்டாட்டத்திற்கு உரியவராகிறார். ஆழ்ந்த கலையுணர்ச்சியின் தர்க்கத்தையோ, கலையும் வாழ்க்கையும் இணையும் அரிதான புள்ளிகளையோ கண்டுகொள்ள முடியாதவர் இவர் என்று புறவயமாகச் சிந்திப்பவர் எவரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம். இவரின் கலைவெளிப்பாடுகள் அழுத்தமில்லாத மெல்லுணர்ச்சிகளால் ஆனது என்று ஜாலி தனது கட்டுரையில் எழுதியிருப்பார். கலையாளுமை நுகர்வுப் பரப்பை அணுகும் இந்த நுண்ணிய சரடை ஜாலி போல யாரும் படம் பிடித்துக் காட்டியதில்லை. தமிழ்ச் சூழலில் இது பற்றிய உரையாடல்களோ அலசல்களோ ஜாலிக்கு முன்னால் எவரும் செய்ததில்லை. ஜேம்ஸ் பாஸ்வெல் சாமுவேல் ஜான்ஸன் என்ற கலைஞனின் வாழ்க்கையை ஆவணப்படுத்திய "ஜான்ஸனின் வாழ்க்கை" மட்டுமே ஜாலியின் கட்டுரைக்கு இணையானது.

யோகியின் மறைவு ஒரு மாபெரும் இழப்பு.

- அ.கு.

Friday, September 24, 2010

’பருப்’பிசை

திரையிசையை (பரப்பிசை என்று சொல்லமாட்டேன் - இப்படியாகத்தானே அப்பிரகாம் பண்டிதர் வழிவந்தவர்கள் இசைக்கான தமிழ்வார்த்தைகள் மட்டுமல்லாது, தற்காலத்தமிழே அவர்கள் கண்டெத்தியதுதான் என்று பீற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கமாட்டேன்) மரபிசை இலக்கணங்களைக் கொண்டு அளவிடவோ விமர்சிக்கவோ கூடாது என்பது தெளிவானவொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மரபிசை ரசனையை / அனுபவத்தை புறவயமான புண்ணாக்கு இலக்கணம் சார்ந்தது மட்டுமே என்று குறுக்குவது என்னே மடமை. மரபிசையோ மறுப்பிசையோ (நான் மட்டும் தமிழிசைக் கலைச்சொல்லகராதிப் புகழ் பெறவேண்டாமா?) எதுவானாலும், நுகர்வுத்தன்மையும் அதனாலான உணர்வெழுச்சியும் அந்தரங்கமாகவே நடைபெறுகிறது. ’மச்சானைப்பாத்தீங்களா’ வுக்கு பேருந்தினின்றும் இறங்கவைக்கும் உணர்வெழுச்சிதான் மரபிசை கேட்டுக் கண்ணீர்மல்கவும் வைக்கிறது. இலக்கணம் தெரிந்ததால் மட்டுமே மரபிசையை விமரிசிக்கவோ அனுபவிக்கவோ முடியாது. இன்னும், எந்த இசைவடிவமும் சில அடிப்படை இலக்கண ஒழுங்குகளுக்குள்ளாகவே அமைகிறது - அதனாலேயே இசை இசையாகிறது. ஆக, இசை நுகர்வும் விமர்சனமும் மரபிசை, திரையிசை பேதமின்றி தன்னனுபவம் சார்ந்த வ்யக்திபரமான (அகவயம் என்றெழுதக் கூசுகிறது) அள்வுகோல்களினாலேயே அமைகிறது என்பது எம் துணிபு. தொடர்புள்ள சுட்டி: http://www.jeyamohan.in/?p=8221

Tuesday, June 22, 2010

எழவு

அதாகப்பட்டது, இவர் தன்னை சமூகப் போராளியாகவும், ஜனநாயக (பஹுஜன) விரோதியாகவும் காட்டிக் கொள்வதால், இவரின் பிரதி சந்தேகதிற்குரியதாகியும், அதற்கு இவர் பெற்ற புக்கர் பரிசானது இவர்தம் கருத்த சுருண்ட தலைமுடி மற்றும் செம்பொன் வண்ணக் கண்களைக் காட்டி மயக்கி வாங்கியதெனவும் ஆகின்றது தெரிந்ததே. இப்பவும் இவர் இந்தத் தகாத செயல்களைச் செய்வதில், இவரது தழுவிஎழுதும் படைப்புத் திறன் கூட பாதிக்கப்பட்டிருப்பது இவர் இன்னொரு புத்தகத்தைத் தழுவி எழுதாததிலிருந்து புலனாகிறது.

மற்றபடி தழுவல் கொழுவல் சமாசாரங்களில் உண்மை இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை. ஆனால் விமரிசனங்கள் என்பன என்னைப் பொறுத்த வரையில் தனி நபர் விருப்பு வெறுப்பு சார்ந்தவை - அதாவது இந்த படைப்பாளியாகிய நபரைப் பற்றிய விருப்பு வெறுப்பு சார்ந்தவை என்பது என்னுடைய இந்த சொத்தைப் பதிவிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நம் சொந்தக் காரியங்கள் சுமூகமாக நடக்கும் வரையில், எதைப்பற்றியும் தீவிரமான ஈடுபாடோ எதிர்ப்போ இல்லாத ஜனநாயக அணுக்கப் போக்கு இருந்தால் படைப்புத் திறனும் பெருகும், நாடும் சுபிக்ஷமாக இருக்கும்.

என்ன எழவுடா...

Friday, December 04, 2009

சும்மா ...

வேலைத் திரக்கிலையோ இல்லை அந்த சாக்கிலையோ  - தினமும் மறக்காமக் கைத்தொலைப்பேசியில கூப்பிட்டு “சும்மா தான் மச்சான் அடிச்சேன்” ன்னு சொல்லற நண்பன் அழைப்பையே எடுக்க முடியல. அப்புறம் கூடடைந்து குஞ்சு குளுவான்களோட குலாவறதுல இன்ன பிற நட்புகள், சொந்தங்கள் யாருக்கும் ஒரு தொலைபேசியோ கடுதாசோ கூடப் போடுறதில்லை. இதுகூடப் பரவாயில்லை - பேருந்து நிலையங்கள், இல்லை பேரங்காடிகளின் முன்னால நடந்து போறவன நிறுத்தி கடன் அட்டை விக்கவோ, நிதி திரட்டவோ வேண்டி ‘எப்படியிருக்கீங்க இன்னைக்கு?” ன்னு கேக்கிறவன் கிட்டக் கூட ‘நான் அவசரமாப் போறேன்’ ன்னு சொல்லாமச் சொல்லி...

இப்படி மனுசங்க கூடப் பேசறதுக்குண்டான வாய்ப்புகளை எல்லாம் விட்டிட்டு, புது ப்ளாகு மட்டும் நெறையத் திறந்து, ட்விட்டர் அக்கவுண்டு வைச்சு என்னத்தப் பண்ண?

Posted via email from Kannan's posterous